மிக குறுகிய காலமே வாழ்ந்த 16 வயது பாலகர் தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு
சிலரின் வரலாற்று சம்பவங்கள் நம் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் அப்படி மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நபிதோழரின் வரலாறு.
இது மிக குறுகிய காலமே வாழ்ந்த நபி தோழர் தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம்!
16 வயது நிரம்பிய பாலகர் இந்த தஹ்லபா இப்னு அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு மிக அமைதியான குணம், நற்பண்புகள் நிறைந்தவர். பிறர் மீது கண்ணியம் செய்யும் குணம் உடையவர்கள்.
இவர்களின் பணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூறும் செய்திகளை நபித்தோழர்களிடம் கூறிவருவதாகும். அப்பணியை பெரும் பாக்கியமாக கருதி செய்து வந்தார்கள்
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஹ்லபா அவர்களை ஒரு தேவையை கூறி அதை நிறைவேற்ற அனுப்பி வைத்தார்கள்.
தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செல்லும் வழியே ஒரு வீடு ஒன்றை கடக்க முற்பட்டார்கள். அவ்வீடு ஏழ்மையின் காரணமாக கதவுகள் இல்லாமல், மாறாக வீட்டின் முன் துணியால் திரையிடப்பட்டிருந்தது.
அப்போது காற்றில் அவ்வீட்டின் திரை விலகியது அங்கு ஒரு குளியலறையின் இருந்தது அதில் ஒரு பெண் குளித்து கொண்டிருந்தார்கள்.
அச்சமயம் தஹ்லபா அவர்களின் பார்வை அப்பெண்ணின் மீது விழ உடனே தன்பார்வையை திருப்பியவராக தஹ்லாபா ரளியல்லாஹு அன்ஹு “இறைவனிடமிருந்து பாதுகாப்பு தேடுகிறேன்” என்று கூறி அவ்விடத்தை விட்டு கடந்த தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனம் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணியது .
தாம் ஒரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் ஒருவராக இருந்துகொண்டு ஒரு பெரும்பாவத்தை செய்துவிட்டேனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தை பார்க்கும் அளவிற்கு தமக்கு தகுதி இல்லை என்றெண்ணினார்.
மேலும் இறைவன் தன்னை பற்றி வசனம் இறக்கிவிடுவான் .அல்லது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை நயவஞ்சகர்கள் கூட்டத்தில் என்னை சேர்ந்து விடுவார்கள் என்று அச்சப்பட்டார்கள் தான் ஒரு பாவி என அழுதார்கள்.
எங்கே செல்வது? என்ன செய்வது? ஒன்றும் விளங்க வில்லை!
வீட்டிற்கு சென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவர்கள் என்னை தேடி தோழர்களை அனுப்புவார்கள் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காண வேண்டியிருக்கும் என்று எண்ணி நடக்க ஆரம்பித்தார்கள்
அவர்கள் எங்கு சென்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் தஹ்லபாவை தேடின.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்தோழர்களிடம் ” தஹ்லபா எங்கே? என்று கேட்க, தோழர்கள் “தெரிய வில்லையே யா ரசூலுல்லாஹ், அவர்களோ விளையாட்டு பருவமுடையவர் எங்காவது சிறுவர்களுடன் விளையாட சென்றிருப்பார் அல்லது அவர்களின் வீட்டில் இருப்பார் என்று கூறினார்கள் .
நாட்கள் உருண்டோடியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு, சல்மான் பாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரை அழைத்து தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைதேட அனுப்பினார்கள். அத்தோழர்கள் மதீனா மாநகரம் முழுவதும் தேடியும் தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கிடைக்கவில்லை.
இறுதியாக மக்காவிற்கும், மதீனாவிற்கும் இடையே உள்ள மலையின் அடிவாரத்தை அடைந்த தோழர்கள் அங்கு ஆடுமேய்க்கும், மக்களிடம் தஹ்லபாவின் அங்க அடையாளம் மற்றும் வயது கூறி விசாரிக்க அம்மக்களில் ஒருவர் “நீங்கள் அந்த அழுதுகொண்டே இருக்கும் பாலகரையா வினவுகிறீர்கள்? கடந்த 40 நாட்களாக இந்த மலையிலிருந்து அவர் சூரியன் மறையும் நேரத்தில் கடுமையாக அழுது கொண்டே கீழிறங்கி வருவார். நாங்கள் எங்களிடம் உள்ள செம்மறி ஆட்டின் பாலை கொடுப்போம் அதை குடித்துவிட்டு மறுபடியும் அழுதுக்கொண்டே மலைக்கே சென்றுவிடுவார்கள். சத்தியமாக அப்பாலகரிடம் அழுகையை தவிர வேறுஎதையும் நாங்கள் கேட்டதில்லை என்றதும் உமர் ரளியல்லாஹு அன்ஹு திகைத்து போனார்கள்.
மாலைநேரம் ஆகும் வரை தஹலபாவிர்க்காக காத்திருந்த நபி தோழர்கள் அவர்களை பெற்றுக்கொண்டனர்.
அவருடைய அழுகையால் உடல் மெலிந்து நோய்வாய்பட்டவராய் மிக மோசமான உடல் நிலையில் கந்தளான ஆடையுடம் தஹ்லபாவை கண்டனர்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு, சல்மான் பாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு மேலும் இன்ன பிற தோழர்களை கண்ட தஹ்லாபா ரளியல்லாஹு அன்ஹு மலையை நோக்கி நடக்க முற்பட்டார்கள்.
அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தடுத்து நிறுத்தவே தஹ்லாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “உங்களுக்கு என்ன வேண்டும்? “ என வினவ உமர் ரளியல்லாஹு அன்ஹு “உன்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை அழைத்து வர சொன்னார்கள் “ என்றார்கள். .
உடனே தஹ்லாபா ரளியல்லாஹு அன்ஹு “என்னை பற்றி ஏதும் இறைவசனம் இறங்கியதா? அல்லது என்னை நயவஞ்சகளோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சேர்த்து சொன்னார்களா? என்று வினவ, உமர் ரளியல்லாஹு அன்ஹு “நாங்கள் அப்படி ஓன்று அறிய வில்லை உன்னை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலை கொண்டுள்ளார்கள் உன்னை காண ஆவலாக உள்ளார்கள்’ என்று கூறினார்கள்.
அதற்க்கு தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு ‘இல்லை நான் நபிகளாரை சந்திக்கும் அருகதை அற்ற பாவியாக உள்ளேன். என்னை விட்டுவிடுங்கள் நான் இந்த மலையிலேயே கிடந்து இறந்து விடுகிறேன்’ என்று கூறினார்கள் .
அதற்கு நபி தோழர்கள் “இல்லை உன்னை இந்த நிலையில் விட்டு செல்ல முடியாது, உன் உடல்நிலை மோசமாக உள்ளது என்று அவர்களை அப்படியே தூக்கி சென்று அவர்களின் வீட்டில் படுக்கவைத்தனர்.
அப்போதும் தஹ்லாபா ரளியல்லாஹு அன்ஹு அழுது கொண்டே இருந்தார்கள் .
உமர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து “யா ரசூலுல்லாஹ்! தஹல்பாவை நாங்கள் மதீனாவின் மலை பகுதி அடிவாரத்தில் பெற்றுக்கொண்டோம், அவரின் உடல் நிலை மிக மோசமாகஎன்று கூறினார்கள்
உடனே நபிகளார் தஹ்லபாவின் வீட்டிர்க்கு வர நபி வருவதை அறிந்து தஹ்லாபா ரளியல்லாஹு அன்ஹு படுக்கையிலிருந்து தலையை உயர்த்தினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஹ்லபாவின் மிக அருகில் அமர்ந்து தஹ்லபாவின் தலையை நபிகளாரின் திருமடியில் வைத்தார்கள்.
அப்போது தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு “யா ரசூலல்லாஹ்! என் தலையை தரையில் கிடத்திவிடுங்கள். இந்த பாவியின் தலை உங்கள் கண்ணியம் பொருந்திய மடியில் இருக்க அறுகதையற்றது” என்று அழ ஆரம்பித்தார்கள்.
அதற்க்கு நபி களார் முடியாது என மறுத்தார்கள் ,மீண்டும் தஹலாபா ரளியல்லாஹு அன்ஹு யா ரசூலல்லாஹ் ! என் தலையை தரையில் கிடத்திவிடுங்கள்” என கூறி அழுதுகொண்டே இருந்தார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ தஹ்லபா உனக்கு என்ன நேர்ந்தது? என்று வினவ,
தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு “யாரசூலுல்லாஹ் நான் ஒருபெரிய பாவம் செய்து விட்டேன் அதனால் இறைவன் என்னை தண்டிப்பான் என்று அச்சமாக உள்ளது, யா ரசூலுல்லாஹ்! நான் அல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைக்கிறேன் என்றார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹ் உன்னை நிச்சயம் மன்னிப்பான் உனது பாவம் இந்த வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள அளவாக இருந்தாலும் சரியே” என்றார்கள்.
அப்போது தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு “யா ரசூலுல்லாஹ் என் உடலில் எலும்புகளுக்கும், தசைகளுக்கும் இடையே எறும்புகள் ஊர்வதுபோல் உணர்கிறேன் என்றார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நிச்சயமாக அப்படி உணர்கிறாயா தஹ்லபா?” என வியப்புடன் கேட்க,
அதற்கு தஹ்லாபா ரளியல்லாஹு அன்ஹு “ஆம் யாரசூலுல்லாஹ் “என்றார்கள். .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ யா தஹ்லாபா நிச்சயமாக நீ மரணத்தின் சுவையை உணர்ந்துகொண்டிருக்கிராய்!!! என்றதும், தஹ்லாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அஷ்ஹது அல்லாயிலாக இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முகம்மதுர் ரசூளுல்லாஹ்“ என்ற கலிமாவை மொழிய,. மரணம் அவர்களை தழுவிகொண்டது.
வாழ்வில் எந்தவித ஆசைகளையும் நிரவேற்றிகொள்ளாத வயதில் மரணம் அவர்களை தழுவிகொண்டது.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் தன் கரங்களாலேயே கபன் இட்டு தாமே தொழுகையை முன் நின்று நடத்தினார்கள்.
ஜனாஸாவை அடக்கம் செய்ய செல்லும்போது போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இரு பாதங்களின் ஓரங்களை வைத்து கூட்டத்தின் மத்தியில் நடப்பது போல் நடப்பதை கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு,
“யா ரசூலுல்லாஹ்! மக்கள் தான் விலாசமாக வழிவிட்டு செல்கிறார்களே அப்பொழுது ஏன் இப்படி நடந்து வருகிறீர்கள்?” என்று வினவ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியப்புடைன் “ஓ உமரே இந்த தஹலபாவின் நல்லடக்கதிற்கு பல்லாயிரக்கணக்கான வானவர்கள் வந்துள்ளார்கள் அதனால் தான் என் இருகால் பதிக்க இடம் இல்லாமல் நடக்கிறேன்” என்று கூறினார்கள். .
தஹல்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்த ஒரு சிறிய பாவத்தை அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடைபட்ட அளவு பாவமாக கருதி அல்லாஹ்விடம் திருபொருத்தம் நாடி தூயவராக பாவாமீட்சிபெற்று மீண்டார்கள். ஸஹாபாப்பெருமக்கள் எப்படிப்பட்ட அப்பழுக்கற்ற மனிதர்களாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதற்கு இவ்வரலாற்றுச் சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது.
source: https://www.facebook.com/permalink.php?story_fbid=2102539089979108&id=100006691122152