ஷாஜஹானின் மகள் ஜஹானாராவும் ஒளரங்கசீப்பின் மகள் ஜெய்புன்நிசாவும்
மொகலாய வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட பெண் மும்தாஜ். உலகெங்கும் தாஜ்மகாலின் வழியாக நினைவுகொள்ளப்படுகிறார். ஆனால், பேசப்படப்படாமல் போன முக்கியமான இரண்டு பெண்கள் இருக்கின்றனர்.
ஒருவர் ஷாஜகானின் மூத்த மகளும், திருமணம் செய்துகொள்ளாமல் அரசாட்சியில் மன்னருக்குத் துணை நின்றவளும், மிகச் சிறந்த படிப்பாளியான ஜஹானாரா பேகம்.
இன்னொருவர் ஒளரங்கசீப்பின் மகளும் மெய்யியல் கவிஞருமான ஜெய்புன்நிசா. இந்த இரண்டு பெண்களும் சரித்திர வானில் தனித்து ஒளிரும் இரட்டை நட்சத்திரங்கள்.
இன்று, தாஜ்மகாலைப் பார்க்கப் போகிறவர்களில் எத்தனை பேருக்கு மும்தாஜின் இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், அவள் 13 குழந்தைகளின் தாய், தனது 14-வது பிரசவத்தில் இறந்து போனாள் என்பது தெரியும்?
14 பிள்ளைகளைப் பெற்ற மும்தாஜின் நினைவாக, தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதைத் தாய்மையின் சின்னம் என்றோ, சிறந்த மனைவியின் நினைவுச் சின்னம் என்றுதானே நியாயமாக அழைக்க வேண்டும்?
ஜஹானாரா பேகம், குரால்னிசா, தாரா ஷ§கோ, முகமது சுல்தான்ஷா, ரோஷனாரா, ஒளரங்கசீப், உமித்பக்ஷி, சுரையா பானு, சுல்தான் முராத், கௌஹரா எனும் மும்தாஜின் பிள்ளைகள் பெயர்கள்கூட தாஜ்மகாலுக்குள் போகிறவர்களுக்குத் தெரியாது என்பதுதானே நிஜம்.
ஷாஜஹானின் மகள் ஜஹானாரா
ஷாஜகானின் மூன்றாவது மனைவி மும்தாஜ். 1612-ம் ஆண்டு மே 10-ம் தேதி அவளது திருமணம் நடந்தது. அப்போது, அவளுக்கு வயது 19. மும்தாஜ் இறந்துபோனது 1631 ஜுன் 17-ம் தேதி. அப்போது அவளுக்கு வயது 38. அதாவது, 19 வருஷ இல்லறத்தில் 14 குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். தொடர் பிரசவங்களால் உடல்நலிவுற்றுத்தான் இறந்துபோனாள்.
பிரசவ வலியில் அவள் விட்ட கண்ணீரும் வேதனைக் குரலும் தாஜ்மகாலுக்குள் கேட்கக்கூடுமா என்ன? தனி மனிதர்களின் துயரமும் வலியும் காலத்தின் முன்பு பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. காலம் எல்லாவற்றையும் உருமாற்றிவிடுகிறது. அவளது மரணத்தின்போது ஜஹானாராவுக்கு வயது 17.
மனைவியை இழந்து துக்கத்தில் வாடிய தந்தைக்கு உறுதுணையாக இருந்தாள் ஜஹானாரா. தனிமையிலும் வேதனையிலும் ஷாஜகான் வாடிய காரணத்தால், அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருந்தது. அதைச் சரிசெய்யத் தானே அரசு ஆணைகளை பிறப்பிக்கவும், அரசரின் ஆலோசனையின் பெயரில்முக்கிய முடிவுகளை எடுக்கவும் துரிதமாகச் செயல்பட்டாள் ஜஹானாரா.
நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை ஜஹானாராவுக்கு வழங்கினார் ஷாஜஹான். அது அவரது மற்ற இரண்டு மனைவிகளுக்கும், ஜஹானாராவின் சொந்த சகோதரிகளுக்கும்கூடப் பொறாமையை ஏற்படுத்தியது.
தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுவும், ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தந்தைக்குத் தன்னைத் தவிர வேறு துணை இல்லை என்பதால், தன் வாழ்நாளை அப்பாவின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறாள்.
மும்தாஜ் இறந்த பிறகு ஜஹானாராவுக்கு ஒரு முக்கியக் கடமை இருந்தது. தனது சகோதரன் தாரா ஷ§கோவுக்கு நதிரா பானுவோடு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நடத்தியாக வேண்டும். அது, அம்மாவின் இறுதி ஆசை. எனவே, அதைச் செயல்படுத்த தீவிரமாக முயன்றாள்.
தாராவுக்கும் அவளுக்குமான சகோதர பாசம் அளப்பறியது. அவள், தாரா ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினாள். அது, ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை, தனது நாட்குறிப்பில் ‘வெள்ளைப் பாம்பு’ என்று குறிப்பிடுகிறார் ஒளரங்கசீப்.
அந்தக் கோபம் ஜஹானாராவைவிட மூன்று வயது இளைய அவளது தங்கை ரோஷனாவுக்கும் இருந்தது. அவள் நேரடியாக ஜஹானாராவிடமே தனது வெறுப்பைக் காட்டினாள். ஒளரங்கசீப்போடு சேர்ந்துகொண்டு ஜஹானாராவின் பதவியைப் பறிக்கச் சதி வலைகளைப் பின்னினாள்.
ஆனால் மன்னரின் விருப்பத்துக்குரிய மகள் என்பதால், ஜஹானாராவின் அதிகாரத்தை எவராலும் பறிக்க முடியவில்லை. ஷாஜஹான் காலகட்டத்தில் அரசின் ஆண்டு வருவாய் 60 லட்ச ரூபாய். ஆனால், செலவோ ஒரு கோடிக்கும் மேல்! ஆகவே, அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக ஷாஜஹான் நிறையத் திட்டங்களைத் தீட்டி நாட்டின் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்திக் காட்டினார். செலவினத்தை மிகவும் குறைத்தார்.
இந்தச் செயல்பாடு காரணமாக அரண்மனையிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருந்தது. அதைச் சமாளிப்பதுதான் ஜஹானாராவின் முக்கியப் பணியாக இருந்தது.
இன்னொரு பக்கம், ஷாஜகானுக்குப் பிறகு அரியணைக்கு யார் வருவது என்பதில் தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் கடுமையான பகை வளர்ந்திருந்தது. தாரா பலவீனமானவன். அவனால் ஆட்சி செய்ய முடியாது என்று ஒளரங்கசீப் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தனக்கான ஆட்களைத் திரட்டி ஆட்சியைப் பிடிக்கும் ஏற்பாட்டில் இருந்தார். ஆனால், தாராவுக்கே பதவி கிடைக்க வேண்டும் என்று ஜஹானாரா உறுதியாக இருந்தாள். பதவிச் சண்டை குடும்பத்தில் கடும் பூசல்களை உருவாக்கியது.
தாரா, லாகூரின் புகழ்பெற்ற சூபி ஞானியான மையன்மிரின் சீடன். இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்காக உபநிஷத்துகளை, பாரசீக மொழியில் தாரா மொழி பெயர்த்து இருக்கிறார். அவரது சிறந்த நூலான மஜ்மஉல்பஹ்ரெயின் எனும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம், சூஃபியிசத்துக்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்குமான பொதுத் தன்மையைப் பேசுகிறது.
ஸர்மத் என்ற ஞானியையும் பின்பற்றினார் தாரா. ஸர்மத் பிறப்பால் ஒரு யூதர். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். அத்துடன் ராம லட்சுமணர்களின் பக்தர். அவரது சீடனாகத் தாரா இருப்பதை ஒளரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மத விரோதச் செயல் என்று கண்டித்தார். இந்தச் சகோதரச் சண்டைக்கு நடுவில் ஜஹானாரா மாட்டிக்கொண்டு தவித்தாள்.
இப்போது உள்ள ‘பழைய தில்லி’ அன்று ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. அந்த நகரை வடிவமைக்கும்போது ஜஹானாரா ஐந்து முக்கிய இடங்களை தானே முன்னின்று வடிவமைத்துத் தந்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சாந்தினி சௌக்.
1644 மார்ச் 29-ம் தேதி தாராவின் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டு இருந்தபோது ஜஹானாராவின் மெல்லிய பட்டு மேலாடையில் தீப்பற்றி அவளது தாடையிலும் பின் கழுத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
அவளது அழகான முகம் சிதைந்துபோனதை ஷாஜகானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை செய்யப் பல நாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனாலும், இளவரசியின் சிதைந்த முகத்தை முன்பு போல பொலிவுறச் செய்ய முடியவில்லை.
நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சை நடந்தது. இந்த நாட்களில், தனது மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தினமும் 1,000 வெள்ளி நாணயங்களை ஏழைகளுக்கு தானம் அளித்ததோடு, துறவிகளையும் ஞானிகளையும் வரவழைத்து பிரார்த்தனையும் செய்துவந்தார் ஷாஜகான். பல நாட்கள், மகளின் அருகில் அமர்ந்து வேதனையோடு கண்ணீர்விட்டார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
எட்டு மாதத் தொடர் சிகிச்சை நடந்தது. ஈரானிய மருத்துவரின் முயற்சியால் அவள் குணம் அடைந்தாள் என்றும், ஆங்கில மருத்துவர் ஒருவரின் உதவியால் ஜஹானாரா நலமடைந்தாள் என்றும் இரண்டு விதத் தகவல்கள் கூறப்படுகின்றன. இரண்டையுமே உறுதி செய்யும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அவள் நலமடைந்த சந்தோஷத்தில், 80,000 ரூபாய் தானத்துக்காகச் செலவிடப்பட்டது என்றும், மாமன்னர் தன் மகளுக்கு 139 அரிய வகை முத்துக்களையும் அரிய வைரம் ஒன்றையும் பரிசளித்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களோடு சூரத் துறைமுகத்தின் வரி வசூல் முழுவதும் அவளது வருவாயின் கீழ் கொண்டு வரப்பட்டது என்றொரு துணைத் தகவலும் காணப் படுகிறது.
ஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் வாழ்க்கை!
இதைத்தான் பெர்னர் போன்ற ஆய்வாளர்கள் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தன் மகளைக் குணப்படுத்திய ஆங்கிலேய மருத்துவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக, சூரத் துறைமுகத்தில் வரி இல்லாமல் பொருட்களை வணிகம் செய்துகொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார் மன்னர் ஷாஜஹான். அப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது வணிகத்தை ஸ்தாபிக்கத் தொடங்கியது என்கிறார்கள்.
ஜஹானாரா, தனது தாய் இறந்த பிறகு, அவளது சொத்தில் பாதியை உரிமையாகப் பெற்றிருந்தாள். அந்தப் பணத்தை, டச்சு வணிகர்களுடன் சேர்ந்து கப்பல் வணிகம் செய்தாள் என்றும் மகாஜன் வித்யாதரின் குறிப்பு கூறுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலேயருக்கு அவள் வணிகம் செய்ய உதவி இருக்கக்கூடும்.
மன்னரோடு மாளிகையில் வாழாமல் தனியே தனக்கென ஓர் அரண்மனை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜஹானாரா. தனிமையில் வாழ்ந்த அழகியான ஜஹானாராவை, யூசுப் என்ற கவிஞன் காதலித்தான். அவளும் அவன் மீது மிகுந்த காதலுடன் இருந்தாள். தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், அந்தக் காதல் முறிந்துபோனது என்றொரு கதையும் வரலாற்றில் உலவுகிறது.
1658-ம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமற்றுப்போனார். பதவியைக் கைப்பற்ற நான்கு புதல்வர்கள் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. 1659-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளரங்கசீப்பின் ஆட்கள், தலை வேறு உடல் வேறாக தாராவை வெட்டிக் கொன்றார்கள். வயோதிகத்தைக் காரணம் காட்டி ஷாஜகானைச் சிறையில் அடைத்தார் ஒளரங்கசீப். தனிமையும் நோயுமாக தனது வயோதிகக் காலத்தைக் கழித்த ஷாஜகானுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் மட்டுமே.
அவள், ஷாஜகானின் இறுதி நாள் வரை உடனிருந்து பராமரித்து வந்தாள். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவள் தனித்துவிடப்பட்டாள். ஒளரங்கசீப்பால் துரத்தப்பட்ட அப்பாவின் மற்ற மனைவிகளையும் அரண்மனைப் பெண்களையும் தனது பொறுப்பில் கவனித்தாள். ஒளரங்கசீப் அவள் மீது இரக்கம்கொண்டு மீண்டும் அவளுக்கு அரண் மனையின் உயரிய பதவியான முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்தார்.
அதைப் பெரிதாகக் கருதாமல் 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த ஜஹானாரா, 1681-ம் ஆண்டு இறந்துபோனார். அவளுக்கு, நிஜாமுதீன் தர்காவில் கல்லறை அமைக்கப் பட்டது. ‘என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த் தைகள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.
ஜஹானாரா எழுதிய பெர்ஷியக் கவிதைகளின் தொகுப்பு ஒன்று ஆன்ட்ரியா புடென்ஷோன் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டு, 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. ஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் என்பது போலதான் ஜெய்புன்நிசாவின் வாழ்க்கையும் ஜஹானாரா வாழ்க்கையும் உள்ளது. ஒரு வேளை தனது அத்தையின் பாதிப்புதான் ஜெய்புன்நிசாவினை இப்படி ஆக்கியதோ என்னவோ?
மாமன்னர் ஒளரங்கசீப்பின் விருப்பத்துக்குரிய மகள் ஜெய்புன்நிசா பேகம்
மாமன்னர் ஒளரங்கசீப்பின் விருப்பத்துக்குரிய மகள் ஜெய்புன்நிசா. இந்த ஒரு விஷயத்தில் ஒளரங்கசீபுக்கு தனது மகள் மீது தீராத பாசம் இருந்திருக்கிறது.
ஜெய்புன்நிசா 1667-பிறந்தார். பெர்ஷியா, அரபி, உருது மொழிகளைக் கற்றுத்தேர்ந்து, 14 வயதிலேயே பாடல்கள் எழுதத் தொடங்கினார். உஸ்தாத் பயஸ் என்ற அவரது ஆசிரியர் தந்த ஊக்கத்தால் கவிதைகள் எழுதினார். ஜெய்புன்நிசாவின் 21 வயதில் ஒளரங்கசீப் நாட்டின் மாமன்னர் ஆனார். தனது ஆட்சிக் காலத்தில் ஜெய்புன்நிசாவை தனது அரசுப் பணிகளை உடனிருந்து கவனிக்கச் செய்ததோடு, முக்கியப் பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து நியமிக்கும் உரிமையை அவளுக்கு வழங்கி இருந்தார்.
நீதி, வரி வசூல், கொடைகள், அண்டை நாடுகளின் உறவு போன்றவற்றைப் பற்றி விவாதிக்கும்போது தன்னுடன் ஜெய்புன்நிசாவை ஒளரங்கசீப் வைத்துக்கொண்டதோடு அவளது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். தனது அத்தையைப் போலவே இவரும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.
கலைகள், வானவியல், மொழி, தத்துவம், மெய்யியல் என்று ஆழ்ந்து பயின்ற ஜெய்புன்நிசா சிறந்த கவிஞராக விளங்கினார்.
‘நீர்வீழ்ச்சியே
உனக்கென்ன துயரம்,
எந்த வேதனை என்னைப்போல
கல்லில் தலை மோதி இரவெல்லாம்
உன்னையும் இப்படி விம்மியழச் செய்கிறது?’
–
என்ற ஜெய்புன்நிசாவின் கவிதையில் வெளிப்படும் கவித்துவம் எவ்வளவு அழகாக இருக்கிறது!
ஒளரங்கசீப் தீவிரமான மதப் பற்றாளர். ஆனால், அவரது ஒழுக்க நெறிகளின் கடுமைகளை ஏற்றுக்கொள்ளாமல் திறந்த மனதோடு அனைத்து மதக் கருத்துக்களையும் தனதாக்கிக்கொண்டாள் ஜெய்புன்நிசா.
ஒளரங்கசீப்புக்குக் கலைகளில் ஈடுபாடு கிடையாது. ‘இசை கேட்பது காலத்தை விரயம் செய்யும் வேலை’ என்று கடிந்து சொல்லக்கூடியவர். ஆனால், ஜெய்புன்நிசா கலையிலும் இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அரண்மனையைச் சேர்ந்த பெண்கள் பொது விவாதங்களில், இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி கறுப்பு நிற உடை அணிந்து தனது கஜல் பாடல்களை இலக்கிய விழாக் களில் பகிர்ந்துகொண்டார் ஜெய்புன்நிசா.
இவர் பாடிய 400 கஜல் பாடல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே தொகுப்பாக வெளியானது. தனது ரசனைகொண்ட கவிஞர்கள், ஞானிகளைச் சந்தித்து உரையாடுவதற்காக தனி சபை ஒன்றை அமைத்திருந்தார். அந்தச் சபையில் நாட்டின் அத்தனை முக்கியக் கவிஞர்களும் வந்து பாடியிருக்கிறார்கள்.
நிசாவுக்கு நான்கு சகோதரிகள். அவர்களில் ஜீனத் என்ற தங்கையோடு நிசா மிகுந்த நெருக்கமாக இருந்தார். இருவரும் மாறி மாறிக் கவிதைகள் பாடுவது வழக்கம். அகில் கான் ராஷி என்ற கவிஞரை நிசா காதலித்தாள் என்றொரு கட்டுக் கதை உண்டு.
அரண்மனையில் ஒரு நூலகம் அமைத்து, சித்திர எழுத்துகளை எழுதுவோர்களை உடன்வைத்துக் கொண்டு அழகான புத்தகங்களை தானே வடிவமைப்பதும், அரிய புத்தங்களை மொழியாக்கம் செய்துவைப்பதுமாக வாழ்ந்திருக்கிறாள் ஜெய்புன்நிசா.
தனது சேமிப்பில் இருந்து ஆண்டுக்கு நான்கு லட்ச ரூபாயை மெக்கா செல்பவர் களுக்கு உதவிப் பணமாகத் தந்திருக்கிறாள். பிரதி எடுப்பதற்காக காஷ்மீரில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதங் களைக்கொண்டு தினமும் காலை நேரங்களில் தனக்குப் பிடித்தமான கவிதைகளை எழுதுவாள் ஜெய்புன்நிசா.
பிரபலமான கவிஞர்கள் பலரும் தங்களது கவிதைத் தொகுப்புகளை, அவளது மதிப்பீட்டுக்காக அனுப்பி இருக்கின்றனர். அப்படி, அவள் ரசித்த கவிதைகளுக்கு சன்மானமாக முத்துக்களையும் தங்கப் பாளங்களையும் அனுப்பி கவிஞர்களை சிறப்பித்து இருக்கிறாள். இன்று பெண்கள் அணியும் குர்தா, துப்பட்டா ஆகிய வற்றை வடிவமைத்தது ஜெய்புன்நிசாதான். தனக்காக அவள் பிரத்யேகமாக உருவாக்கிக்கொண்ட அந்த ஆடைதான், இந்தியாவில் இன்று பிரபலமாக விளங்குகிறது.
ஒளரங்கசீப் – ஜஹானாரா ஆகிய இருவருக்கும் இடையில் அதிகார அரசியல் காரணமாக உருவான விலகல் போலவே, ஒளரங்கசீப்பின் நான்காவது மகனான முஹம்மதுவுக்கும் அவரது சகோதரியான ஜெய்புன்நிசாவுக்கும் அரசியல் நிலைப்பாடு சார்ந்த பிரச்னை உருவாகி இருந்தது. அப்பாவை எதிர்த்து தன்னைத்தானே, ‘அரசன்’ என்று முஹம்மது கூறிக்கொண்டதை நிசா கண்டித்தார். ஆனால், அவளுக்கு உள்ளூற முஹம்மது மீது தீராத பாசம் இருந்தது.
தங்களுக்கு இடையே உள்ள பிணக்கைத் தீர்த்துவைத்து அன்பு செலுத்தும்படியாக கடவுளிடம் பிரார்த்தனை செய்து இருக்கிறாள். அக்பரோடு சேர்ந்துகொண்டு தனக்கு எதிராக செயல்படுகிறாள் என்று நினைத்த ஒளரங்கசீப், நிசாவைத் தனிமைச் சிறையில் அடைத்து இருக்கிறார். வெற்றுச் சுவரைப் பார்த்தபடியே மனத் துயரில் கவிதைகள் பாடியபடியே நாட்களைக் கழித்து இருக்கிறார் ஜெய்புன்நிசா.
இந்த இரண்டு பெண்களுமே தந்தையை அதிகமாக நேசித்து இருக்கிறார்கள். அவர்கள் பொருட்டு தங்களது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து இருக்கின்றனர். கலைகளும் ஆன்மிக ஈடுபாடும்தான் அவர்களின் உலகமாக இருந்து இருக்கிறது. சிற்றின்ப வாழ்வைவிட, மெய்ஞான பேரின்ப வாழ்வே பெரியது என்று தேடி இருக்கிறார்கள்.
அரண்மனையில் கோடானகோடி செல்வங்களும் சுகங்களும் இருக்க, அதை உதறி வெளியே வந்து எளிய மனிதராக வாழ்வது ஒரு சவால். அதை இருவருமே தங்கள் வாழ்நாளில் செய்து காட்டியிருக்கின்றனர்.
பதவி ஆசை சொந்தச் சகோதரர்களைக் கொன்று குவித்தபோது, ‘நல்லவேளை நான் ஆணாகப் பிறக்கவில்லை. இல்லாவிட்டால், என்றோ நான் பிணமாகி இருப்பேன்!’ என்று ஜஹானாரா சொன்னது 100 சதவீதம் உண்மை.
தனிமையும் வெறுமையுமாக வாழ்ந்து 1701-ம் ஆண்டு ஜெய்புன்நிசா இறந்தாள். அழகான நீருற்றுகள்கொண்ட தோட்டத்தின் நடுவே அவளது கல்லறை உருவாக்கப்பட்டது. டெல்லியின் புதைமேடுகளுக்குள் இரண்டு இளவரசிகளும் புதைந்துபோய்விட்டார்கள்.
வரலாறு அவர்களின் நினைவுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் பெர்ஷியக் கவிதைகள் மீது ஆர்வமான யாரோ ஒரு ரசிகன் கை நிறைய ரோஜாப் பூக்களை அள்ளி வந்து அந்தக் கல்லறைகளில் தூவிக் கவிதைகளைப் பாடிவிட்டுப் போகிறான்.
டெல்லியின் ஏதோ ஒரு வீதியில் ஒரு பக்கீர் தன்னை மறந்து அவர்களின் பாடலை பாடிக்கொண்டே இருக்கிறான். அந்தக் குரலின் வழியே கவிஞர்களாக வாழ்ந்த இரண்டு பெண்களும் நினைவுகொள்ளப்படுகிறார்கள். அவர்களை அறிந்த நிலவு வானில் பழைய நினைவுகளுக்குள் புதைந்தபடியே டெல்லியைப் பார்க்கிறது. விசித்திரங்களின் நீருற்றைப் போல வரலாறு தன் இயல்பில் கொந்தளிப்பதும் உள் அடங்குவதுமாக இருக்கிறது.
குறிப்பு: ”ஜெய்புன்நிசா”வைத்தான் ஜெப்உன்நிசா (Zeb-un-nisa) என்று குறிப்பிடுகிறார்கள்.
source: https://www.facebook.com/smrafi.mohamed.7/posts/1983572625210927