Don’t Miss it !
தவ்ஹீத் பிரச்சாரத்தின் தனிப்பெருந் தலைவர்
முஹம்மத் அர்ஷாத் அல்அதரி
அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அல்லாஹ் தனது அருமைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து, ஏகத்துவ இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கட்டளையிடுகின்றான்.
“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.” (அல்குர்ஆன் 16:123)
மேலும், அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தனது உற்ற தோழராக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.”தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.” (அல்குர்ஆன் 04:125)
இன்னும் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முழுமனித சமுதாயத்திற்கும் தலைவர் என்று உலகப்பொதுமறை திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மிக அதிகளவில் கண்ணியப்படுத்திப் பேசுவதற்குக் காரணம்தான் என்ன? இதோ திருமறைக் குர்ஆன் பதிலளிக்கின்றது.
“இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான்” (அல்குர்ஆன் 02:124)
தவ்ஹீதின் தனிப்பெருந் தலைவர் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதனைகள் மலையெனக் குவிந்த போதிலும், சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் தடம் புரண்டுவிடாது, சமரசம் செய்யாது, துவண்டு ஒதுங்கிவிடாது தவ்ஹீதுக்கு நேர் எதிரான இணை வைப்புக் கொள்கைக்கு எரிமலையாய் இருந்ததன் விளைவே இறைவன் தனது திருமறையில் மிக அதிகளவில் சிலாகித்துக் கூறுகின்றான். தியாகச் செம்மல், பகுத்தறிவுப் பகலவன் இமாம் இப்றாஹீம் நபியவர்களின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் இதோ!
“இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு ‘இதுவே என் இறைவன்’ எனக் கூறினார்.
அது மறைந்த போது ‘மறைபவற்றை நான் விரும்பமாட்டேன்’ என்றார்.
சந்திரன் உதிப்பதை அவர் கண்ட போது ‘இதுவே என் இறைவன்’ என்றார். அது மறைந்த போது ‘என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டாவிட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்’ என்றார்.
சூரியன் உதிப்பதை அவர் கண்ட போது ‘இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது’ என்றார். அது மறைந்த போது ‘என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்’ எனக் கூறினார்.
”வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன் (என்றும் கூறினார்). அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். ‘அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) அவன் அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?”
”அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?’ (என்றும் அவர் கூறினார்.)” (அல்குர்ஆன் 06:76-81)
இணை வைப்பின் சாயல் கூடபடாத (பார்க்க அல்குர்ஆன் 16:123) ஏகத்துவப் பெருந்தகை இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை உதாரணம் காட்டி எவ்வித ஆற்றலுமில்லாத கற்களை, மண்ணை, சமாதியை வணங்கி அகிலங்களின் இரட்சகனின் சாபத்திற்குரிய இணைவைப்பை, மூட நம்பிக்கையை தகர்த்தெரிகின்றர்கள்.
அல்லாஹ்வின் சாபத்திற்குரிய சமாதி வழிபாட்டில் ஈடுபடுவோர் பகுத்தறிவுப் பகலவன் இப்றாஹீம் நபியின் அறிவுப்பூர்வமான கேள்விகளை சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
“நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?” என்று அவர் கேட்டார்.” (அல்குர்ஆன் 26:72,73)
இவ்வாறாக, இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைக் கொள்கையாம் தவ்ஹீதை வளையாது, நெளியாது எடுத்துச் சொன்னதன் விளைவு எண்ணற்ற சோதனைகளை எதிர்நோக்குகின்றார்கள்.
பயங்கரமான எதிர்ப்பலைகள் பலகோணங்களில் எழுந்தபோதிலும் சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் சமரசம் செய்யவில்லை இமாமவர்கள். இதோ தொடர்கிறது தனிப்பெருந் தலைவரின் தவ்ஹீத் பிரச்சாரம்:
“நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.. “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார். “நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர். “அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார். “நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர்.
“ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர்.
“அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர்.
“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.
அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.
உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.
பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர்.
“அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்கமாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)” (அல்குர்ஆன் 21:52-67)
இவ்வாறாக, இமாமவர்கள் ஏகத்துவத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்தியம்பியதன் விளைவு வீட்டிலும் எழுகின்றன எதிர்ப்பலைகள்:
“இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகிவிடு!” என்று (தந்தை) கூறினார்.” (அல்குர்ஆன் 19:46)
சமூகப் பகிஷ்காரத்தால் தவித்துக் கொண்டிருக்கையில் சொந்த வீட்டிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் படுகின்றார்கள் தனிப்பெருந்தலைவர் அவர்கள். இப்போதும் சளைத்துவிடவில்லை சன்மார்க்கப் போதகர் இப்றாஹீம் (அலை) அவர்கள். கொடுங்கோல் மன்னனிடம் சென்று தவ்ஹீதை தயவு தாட்சண்யமின்றி எடுத்தியம்புகின்றார்கள். விளைவு நெருப்புக் குண்டத்தில் தூக்கி வீசப்படுகின்றார்கள்.
“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர்.” (அல்குர்ஆன் 21:68)
சிலைகளை நிறுத்திவைத்து வழிபடுவதும், சமாதிகளை படுக்கையில் வைத்து வழிபடுவதும் பகிரங்கமான ‘ஷிர்க்’ என்கின்ற தவ்ஹீத் கொள்கையை உரக்கச் சொன்னதன் விளைவு இமாமவர்கள் தமது தாயகத்தையும் துறந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
“நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்று (இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.” (அல்குர்ஆன் 29:26)
ஏகத்துவ ஏந்தல் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மாத்திரமன்றி அன்னாரின் அருமைத் துணைவியரும் தியாகசீலர்களாகவே திகழ்ந்துள்ளனர்.
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர்.
அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது.
மன்னன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துவரச் செய்து, இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ”என் சகோதரி”, என்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூஃமின்) யாரும் இல்லை, என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள்.
அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து தொழுதுவிட்டு, இறைவா! நான் உன்னையும், உன் தூதரையும் நம்பிக்கைகொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார்.
உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களை உதைத்துக்கொண்டான்.
மன்னனின் நிலையைக் கண்ட சாரா, இறைவா! இவன் செத்து விட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர், என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு, மறுபடியும் சாராவை நெருங்கினான்.
சாரா எழுந்து அங்கசுத்தி செய்து தொழுதுவிட்டு, இறைவா! நான் உன்னையும், உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ளவிடாதே! என்று பிரார்த்தித்தார்.
உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாராஃ, இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர், என்று பிரார்த்தித்தார்.
இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான்.
சாரா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா, என்று கேட்டார்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி-2217)
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை,
1. (அவரை இணை வைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்த போது), நான் நோயுற்றியிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்,
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள், இப்படிச் செய்தது யார் என்று கேட்ட போது), ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும்
3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு) ஒரு நாள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள் அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது.
உடனே, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று, சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள்.
அந்த மன்னன் சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம்) அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய்! நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். உடனே, சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.
பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்! நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.
பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கைகளால் சைகை செய்து, என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவர் அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்… சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர் அலைஹிஸ்ஸலாம்) தான் உங்கள் தாயார்- (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி-3358)
தனிப்பெருந்தலைவர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மேற்கொண்ட தவ்ஹீத் பிரச்சாரம் தொடர்பாகவும் அதனால் அன்னாரும், அன்னாரின் குடும்பத்தினரும் அடைந்த சோதனைகள் குறித்து நோக்கினோம். அத்தோடு முடிந்து விடவில்லை சோதனைகள்.மீண்டும் தொடர் கதையாய் தொடர்கின்றது சோதனைகள் ஏகத்துவ ஏந்தல் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி. மருந்துக்கு கூட மனிதர்கள் இல்லாத பாலைநிலத்தில் அன்பு மனைவியையும் அருமைப் பாலகனையும் விட்டு விடுமாறு இறை கட்டளை வருகின்றது. தளர்ந்து விடவில்லை தனிப்பெருந்தலைவர் அவர்கள்.
அருமை மகனின் பசிக்கொடுமை தாங்காது, தண்ணீருக்காக அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தப் பாலைநிலத்தில் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றார்கள். அப்போது அருளாளன் அழ்ழாஹ்வின் உதவியை அருகாமையிலேயே காண்கின்றார்கள்.
“பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தரப்பிலிருந்துதான். ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்து கொண்டார்கள். பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ‘ஸம்ஸம்’ கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள்.
அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப்பை ஒன்றையும் வைத்தார்கள்.
பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்தொடர்ந்து வந்து, இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரை திரும்பி பார்க்காமல் நடக்கலானார்கள்.
ஆகவே, அவர்களிடம் ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டானா? என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.
அவர்களின் வழியில் ‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள். (அல்குர்ஆன் 14-37)
இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்கு பாலூட்டும் அந்த தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்ப் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்ட போது அவளும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தில்) புரண்டு புரண்டு அழுவதை அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை.
ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத் தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற ஸஃயு (தொங்கோட்டம்) ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, சும்மாயிரு என்று தமக்கே கூறிக்கொண்டார்கள்.
பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போது (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, (அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்) என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். ஸஅல்லது தமது இறக்கையினால் தோண்டினார்; என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்ஸ அதன் விளைவாக தண்ணீர் வெளிப்பட்டது.
உடனே ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையால்) அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி (ஓடிவிடாதே! நில் என்று சைகை செய்து) சொன்னார்கள். இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்னைக்கு கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்ஸ அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால், ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும் என்று சொன்னார்கள் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்.
பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம் நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய்விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னை சார்ந்தோரைக் கைவிடமாட்டான் என்று சொன்னார். இறையில்லமான கஅபா மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.
இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார், அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கதா எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு, இந்தப் பறவை தண்ணீரின் மீது வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள்.
உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார் இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று, நாங்கள் உங்களிடம் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீஙகள் அனுமதியளிப்பீர்களா என்று கேட்க, அவர்கள் ஆம் (அனுமதியளிக்கிறேன்) ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர். (ஜுர்ஹும் குலத்தார் தங்கிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்ஸ என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே, அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும்; குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார்.
பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை.
ஆகவே, இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் முறையிட்டார்.
உடனே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம். அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே, எவரேனும் உங்களிடம் வந்தார்களா? என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘ஆம்’ இப்படிப்பட்ட (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.
என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ‘ஆம்’ உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.
ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்து கொள் என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா?) என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அழ்ழாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், உங்கள் உணவு எது? என்று கேட்க அவர், இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள், உங்கள் பானம் எது? என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.
இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது, உங்களிடம் எவரேனும் வந்தார்களா? என்று கேட்க, அவருடைய மனைவி, ‘ஆம்’ எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா? என்று இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ உஙகளுக்கு ஸலாம் உரைக்கிறார். உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர் என் தந்தை. நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்; என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழ்ழாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள்.
அதன் பிறகு, ஒரு நாள் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும், மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி நடந்துக் கொண்டார்கள் (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்). பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இஸ்மாயீலே! அழ்ழாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்தரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்கள் இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னார்கள்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுதற்கு உதவுவாயா? என்று கேட்க இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அழ்ழாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கற்களை எடுத்து தரலானார்கள்.
”இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்’ (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி ‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக!) நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாவும் இருக்கின்றாய்’ (அல்குர்ஆன் 2-127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவை புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி-3364)
சத்தியப் பிரச்சாரத்தில் இம்மியளவும் வளைந்து கொடுக்காத இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரட்சகன் அல்லாஹ்விடம் ஒரு பிரார்த்தனை செய்கின்றார்கள்.
“எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!” (அல்குர்ஆன் 14:37)
விளைவு, மனித சஞ்சாரமில்லாத பாலைநிலமாக காட்சியளித்த இடத்தின் வரலாறே மாறுகின்றது.
இப்படியாக இருக்கையில் தொடர்கின்றது அடுத்த கட்டச்சோதனை.
பல்லாண்டு காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்து, ஓரிறையிடம் பன்முறை வேண்டி ஈன்றெடுத்த அருமைச் செல்வனை அறுத்துப் பலியிடுமாறு, அகிலத்தின் இரட்சகனிடமிருந்து கனவின் மூலம் ஆணை பிறப்பிக்கப்படுகின்றது.
அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை அருமைத் தூதரவர்கள். நபிமார்களின் கனவில் ஷைத்தான் வரமுடியாது என்பதற்கிணங்க, தனக்கு கனவு மூலம் பிறப்பிக்கப்பட்ட இறைகட்டளையை தனது அருமைச் செல்வன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறுகின்றார்கள். அதற்கு இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ அழகுற பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள்.
“அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.” அல்குர்ஆன் 37:102
பின்னர் தந்தையும், தனையனும் இறை கட்டளையை சிரமேற் கொண்டு செய்ய முனைகையில் மீண்டும் வஹி வருகின்றது.
“இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.” (அல்குர்ஆன் 37:103-107)
தன்னந்தனி மனிதராய் நின்று பகுத்தறிவுப் பகலவன் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதனைகள் மலையெனக் குவிந்த போதிலும் சத்தியக் கொள்கையாம் தவ்ஹீதில் சமரசம் செய்யாது வாழ்ந்து இறைதிருப்தியைப் பெற்றதன் விளைவு அகிலங்களின் இரட்சகன் அல்லாஹ் அருமைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, தனிப்பெருந்தலைவர் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கட்டளையிடுவதோடு, இமாம் அவர்களை தனது உற்ற நண்பராக்கி கொண்டதாகவும், முழுமனித குலத்திற்கும் அவர்களே தலைவர் என்றும் குறிப்பிடுகின்றான்.
சிலைகளை நிறுத்தி வைத்தும், சமாதியை படுக்கையில் வைத்தும் வணங்கி வழிபடுவதன் மூலம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்காளிகளாக ஆக்குவோருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதில் இமாம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அழகிய முன்மாதி உள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.” அல்குர்ஆன் 60:04
எனவே, ஏகத்துவ ஏந்தல் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியில் ‘ஷிர்க்’ எனும் இணைவைத்தலின் சாயல் கூட படாத, தூய ஈமானிய உறுதியுடையவர்களாக வாழ்ந்து மரணிப்பதற்கு அருளாளன் அல்லாஹ் நமக்கு அருள்பாலிப்பானாக!
source: http://dharulathar.com/