உண்மையான இறை நம்பிக்கை (ஈமான்) கவலைகளை போக்கிவிடும்
தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி
பலர் மகிழ்ச்சி என்ற வார்த்தையை காதால் கேட்டிருப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து, இவர் கவலையாக இருப்பார். பிறர் சிரிப்பதைப் பார்த்து இவர் மனதுக்குள் அழுவார். நாம் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் பலரை துக்கக் கடலில் மூழ்கடித்திருப்பதை காண்கிறோம்.
உலக வாழ்வை பொறுத்த வரை அதில் இன்பமும் துன்பமும் மகிழ்ச்சியும் துக்கமும் இரட்டைக் குழந்தைகளைப் போல் இணைந்தே பிறந்திருந்தாலும் அல்லாஹ்வின் மார்க்கம் கவலைகளை களைவதற்கும் துன்பங்களை மறப்பதற்கும் இன்னல்களிலும் இன்முகத்தோடு இருப்பதற்கும் உடலுக்கு வலியும் வேதனையும் இருந்தாலும் – குடும்பத்தில் வறுமையும் சிரமங்களும் இருந்தாலும் – இதயம் இன்பமாக இருப்பதற்கும் உள்ளம் உற்சாகமாக இருப்பதற்கும் அழகிய போதனைகளை நமக்கு போதிக்கிறது. அதைப் பின்பற்றும்போது நிச்சயம் கவலைகளை வென்று துக்கங்களை தூர தூரத்தி இன்னல்களை அகற்றி இன்பத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழலாம்.
பலர் இஸ்லாமிய வழிகாட்டல்களை அறியாமல் அல்லது அறிந்தும் அவற்றை மதிக்காமல் உலக சிற்றின்பங்களிலும் அல்லது உலகத்தார் கூறுகின்ற வழிகளிலும் மகிழ்ச்சியைத் தேடி இறுதியில் வலையில் சிக்கிய பறவைகளைப் போல் துன்பக் கூண்டுகளில் அடைப்பட்டு போய் மீள வழி தெரியாமல் உயிரை மாய்த்துக் கொன்கின்றனர்.
ஆகவே நீங்கள் கவலையில், துக்கத்தில், துயரத்தில், மனவேதனையில் துவண்டுபோய் சோர்ந்து, திகைத்து, திக்கற்று இருந்தால் இதோ, அப்படிப்பட்ட உள்ளங்களுக்காக இதோ சில அறிவுரைகள்.
இவற்றை சிந்தித்துப் படியுங்கள்!
எடுத்து செயல்படுத்துங்கள்!
பிறகு மகிழ்ச்சியை எங்கும் தொலைக்க மாட்டீர்கள்.
இன்பங்களை இழக்க மாட்டீர்கள்.
நீங்கள் உங்களுக்குள் மகிழ்ச்சியாக இருந்து, பிறரோடும் மகிழ்ச்சியாக இருந்து வாழ்வின் சுகத்தை – இன்பத்தை அனுபவிப்பீர்கள்.
உண்மையான இறை நம்பிக்கை – ஈமான் – கவலைகளை போக்கிவிடும். துக்கங்களை அகற்றிவிடும். இறைநம்பிக்கைதான் கண்குளிர்ச்சியும் மன ஆறுதலுமாகும். ஆகவே இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள், பாதுகாத்துக்கொள். நடந்து முடிந்தது, முடிந்துவிட்டது. சென்று விட்டது இறந்து போன ஒன்று. ஆகவே, அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்காதே.
இறைவனால் முடிவு செய்யப்பட்ட விதியை, அவனால் நிர்ணயிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை பொருந்திக்கொள். எல்லாம் விதியின்படிதான் நடக்கும். எனவே, சடைந்து கொள்ளாதே! சஞ்சலப்படாதே!
இறை நினைவை அதிகப்படுத்து! அதன் மூலம்தான் உள்ளங்கள் நிம்மதியடையும்; பாவங்கள் மன்னிக்கப்டும். அல்லாஹ்வின் திருப்தியும் மகிழ்ச்சியும் அதைக் கொண்டுதான் கிடைட்ககப் பெறும். இறை நினைவின் மூலம்தான் துன்பங்கள் நீங்கும், துக்கங்கள்களையும்.
காலையில் இருக்கும்போது மாலையை எதிர் பார்க்காதே! இன்று என்னவோ அதைப் பற்றி மட்டும் சிந்தித்து வாழ். இன்றைய பொழுதை சீர்செய்ய முயற்சி செய்!
பிறர் நன்றி செலுத்த வேண்டும் என எதிர்பார்க்காதே! அல்லாஹ் உனக்கு கொடுக்கும் நற்கூலி போதுமானது. நன்றிகெட்டோர், பொறாமைப்படுவோர், குரோதம் கொள்வோர் பற்றி பொருட்படுத்தாதே!
நீயும் உன் உள்ளத்தை பொறாமை, குரோதம், பகைமையை விட்டு சுத்தமாக வைத்துக கொள்! வெறுப்பையும், தப்பெண்ணத்தையும் உள்ளத்தை விட்டு வெளியேற்றி விடு!
நன்மையான விசயங்களில் மட்டும் மக்களுடன் சேர்ந்திரு! உன் வீட்டில் அதிகமாக இரு! உன் வேலையை கவனி! மக்களோடு அதிகம் பழகுவதை குறைத்துக் கொள்!
நல்ல நூல்களே சிறந்த நண்பர்கள். ஆகவே புத்தகங் களோடு இரவைக் கழி! கல்வியுடன் நட்பு கொள்! அறிவை தோழனாக்கிக் கொள்!
உலகம் ஓர் அமைப்பில்தான் படைக்கப்பட்டுள்ளது. எனவே உன் உடை, வீடு, உனது அலுவலகம், உன் கடமைகள் என அனைத்திலும் ஒழுங்கு முறைகளைப் பின்பற்று!
(லா தஹ்ஸன் – கவலைப்படாதே! என்ற நூலிலிருந்து)
source: http://islam-bdmhaja.blogspot.com/2016/09/happy-part1.html