மரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா?
மனிதனின் வாழ்வின் க்ளைமாக்ஸ் கட்டம் மரணம் அவனை வந்தடையும் நேரம்! மிகப் பரபரப்பான அந்த நேரத்திலும் கூட அந்த மனிதன் ஒத்துழைத்தால் அவனைக் காப்பாற்றிவிட முடியும்! மரணத்திலிருந்து அல்ல, அதைவிட விபரீதமான வேதனைகளில் இருந்து.
உண்மையில் மரணம் என்பது ஒரு முடிவல்ல. மாறாக ஒரு தொடக்கம் என்பதே பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் கண்டடையும் முடிவாகும்.
இம்மாபெரும் பிரபஞ்சத்தில் மிகமிக நுண்ணிய ஜீவிகளான நாம் நமது நீர்க்குமிழி போன்ற தற்காலிக வாழ்வையும் இயல்புகளையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது இறைத்தூதர்களும் இறைவேதங்களும் சொல்பவை உண்மையே என்பது புலனாகும்.
அதாவது இந்த உலகம் என்ற தற்காலிக பரீட்சைக் கூடத்தில் படைத்த இறைவனுக்கு நன்றி உணர்வோடு அவனுக்குக் கீழ்படிந்து வாழ்வோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு நரகமும் வாய்க்க உள்ளன என்பதே அந்த உண்மை.
ஆக, வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றியடைந்து இதன் அடுத்தகட்டமான மறுமையில் சொர்க்கம் புக வேண்டுமானால் படைத்த இறைவனை அறிந்து அவனை வணங்குவது என்பது முக்கியமான நிபந்தனையாகும்.
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவன் மட்டுமே மனிதர்களின் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்தவன் என்பதும் பகுத்தறிவு நமக்கு உரைக்கும் அடுத்த உண்மையாகும். அவன் அல்லாத அனைத்தும் படைப்பினங்களே. அவற்றை வணங்குவதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பொய்யான கற்பனையும் வீணும் ஆகும். அது உண்மை இறைவன் நமக்கு வழங்கிவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு செய்யும் நன்றிகேடாகும்.
மேலும் அப்படிப்பட்ட ஒரு செயல் இறைவனைப்பற்றிய மதிப்பு மற்றும் மரியாதை உணர்வை மனித மனங்களில் இருந்து போக்கி விடுவதால் இறையச்சம் என்பது இல்லாமல் போகிறது. அதனால் சமூகத்தில் பாவங்கள் அதிகரிக்க காரணமாகிறது. அச்செயல் கடவுளின் பெயரால் இடைத்தரகர்கள் மோசடி நடத்தி மக்களை ஏய்த்துப் பிழைக்க வழிவகுக்கிறது. மனிதகுலத்துள் பிரிவினை உண்டாகவும் அது காரணமாகிறது. பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமான இந்தப் பாவத்தை திருக்குர்ஆனில் இறைவன் வன்மையாகக் கண்டிக்கிறான்.
o நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை (இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை) மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.. (திருக்குர்ஆன் 4:48)
o அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.” (அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 1238)
மரணவேளையில் மனிதனைக் காப்பாற்றும் கலிமா :
மனிதர்கள் யாராயினும் மரணத்திற்கு முன்னராக இந்தப் பாவத்தில் இருந்து மீண்டு “படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன். அவனைத்தவிர யாருமே வணக்கத்திற்கு உரியவர் அல்ல” என்ற உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழிந்தால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கபடுகின்றன. அவர் வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றி பெற்று மறுமையில் சொர்க்கம் செல்கிறார் என்று இஸ்லாம் கூறுகிறது.
‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற அந்த உறுதிமொழி வாசகமே கலிமா என்று இஸ்லாமிய வழக்கில் அறியப் படுகிறது. இதன் பொருள் “வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை” என்பதாகும். அத்துடன் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார்) என்று சேர்த்து சொல்வது கலிமாவின் விரிவாக்கமாகும்.
கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல் :
ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுத்து நினைவூட்ட வேண்டும்.
o “உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1523, 1524)
o “உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு ஹிப்பான் 7/272)
o நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சார்களில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது (அவரை நோக்கி) மாமாவே! லாயிலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்வீராக! எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் (நான் உங்களுக்கு) மாமாவா? சிறிய தந்தையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் மாமாதான் எனக் கூறினார்கள். பிறகு அவர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது எனக்கு நன்மை பயக்குமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்’ஆம்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 12104, 13324)
முஸ்லிமல்லாதவருக்கும் கலிமா சொல்லிக் கொடுத்தல் :
மரணத்தை நெருங்கியவர் முஸ்லிமல்லாதவர் என்றால் நாம் சொல்லிக் கொடுப்பதால் கடைசி நேரத்தில் அவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவராக மரணிக்கக்கூடும் என்று நாம் நம்பினால் அவர்களுக்கும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை அதன் பொருளுடன் சொல்லிக் கொடுப்பது சிறந்ததாகும். அது நபிவழியுமாகும்.
கலிமா மூலம் காப்பாற்றப்பட்ட மனிதர் :
o யூத இளைஞர் ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணியாளராக இருந்தார். அவர் நோயுற்ற போது அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றனர். அவரது தலைக்கு அருகில் அமர்ந்து,” நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே?” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அவர் தனது தந்தையைப் பார்த்தார்.
“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுவதைக் கேள்” என்று அவரது தந்தை கூறினார்.
உடனே அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
“இவரை நரகத்திலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியேறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1356, 5657)
கலிமாவை மறுத்ததால் கரைசேராத தந்தை !
சிறுவயதில் இருந்தே அனாதையாக வாழ்ந்த நபி அவர்களை சிறுவயதில் இருந்து அரவணைத்துப் பாதுகாத்து வளர்த்தவர் அவரது பெரிய தந்தை அபூதாலிப். அவர் இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமல் முன்னோர்கள் மார்க்கமே சரி என்று வாழ்ந்தவர். அவரை மரணத்திற்கு முன் எப்படியாவது கரைசேர்க்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார் நபிகளார்.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் வந்தனர். அங்கே இஸ்லாத்திற்கு விரோதிகளாக இருந்த அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா ஆகியோர் இருந்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “பெரிய தந்தையே! லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையை மொழியுங்கள். அதை வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்கு சாட்சி கூறுகின்றேன்” என்று கூறினார்கள்.
அப்போது அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா இருவரும் “அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீ புறக்கணிக்கப் போகிறாயா?” என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவ்விருவரும் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். முடிவில் “நான் அப்துல் முத்தலிபின் வழியில்தான் இருப்பேன்” என்று அபூ தாலிப் கூறி விட்டார். லாயிலாஹ இல்லல்லாஹ் கூற மறுத்து விட்டார். (அறிவிப்பவர்: முஸய்யிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772)
இவ்வுலகமும் இறைவனும் மரணமும் எப்படி அனைத்து மனிதகுலத்துக்கும் பொதுவானவையோ அவ்வாறே மரணத்திற்குப்பின்னால் தொடரும் மறுமையும் இறுதித்தீர்ப்பும் சொர்க்கமும் நரகமும் பொதுவானவையே. மக்கள் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக வாஸ்தவம் வளைந்து கொடுக்காது. எனவே மாற்றுமத அன்பர்கள் நம்மோடு பழகியவர்களாக இருந்தால் அவர்களுக்குக் கடைசி நேரத்திலாவது சத்தியத்தை எடுத்துச் சொல்லி அவர்களை மீளாத்துயரில் இருந்து காப்பாற்ற வேண்டும். அதுவே உண்மையில் மனித நேயம்.