மவ்லவிகளுக்குத்தான் பொறுப்பு என்றால் மற்றவர்கள் முஸ்லிம்களில்லையா?
சமூகத்தில் படர்ந்துள்ள அனாச்சார லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது . இறைவனுக்கு வைக்கும் சமாதி வணக்கம்.
இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்து விட்டால் பிற சில்லரை அனாச்சார அனுஷ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்று விடும், அதற்கு போராட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது.
சில்லரை அனாச்சாரங்கள் என்பது, சொறுகப்பட்டிருக்கும் மின்சார பல்புகள் போன்றவை. அவைகளை உடைத்து விடுவதால் பயனில்லை. வேறு பல்பு மாட்டி விடப்படலாம். எரிவதற்கு இயங்க வைக்கும் இயந்திரம் வேறிடத்தில் இருக்கிறது. அது மெயின் சுட்ச். இதை இயங்காமல் செய்து விடுவதால் மட்டுமே தான் கருதிய பலன் கைகூடும். இந்த மூலத்தை இரகசியத்தை உணர்வதில்லை.
சில்லரை அனாச்சார செய்கைகளை கண்டிக்கவும், திருத்தவும் ஈடுபடுகிறோம். அவை வீண் வேலை! பலிபீடம் அங்கல்ல! தர்கா மணிமண்டபங்களுக்குள் இருக்கின்றது. அவைதான் முதலில் தகர்க்கப்பட வேண்டும். அப்படித் தகர்த்துவிட்டால் ஏகத்துவ தன்மைக்கு இழிவம் பாதகமும் ஏற்படாது. சமூகம் தாழ்ந்து கொண்டே போகாது.
இந்த உண்மையை உணர்ந்து கொண்ட உணர்ச்சி மிகுந்த தொண்டர்கள் பலர், கல்லரை வணக்க ஒழிப்புப் பணியில் கருத்தை செலுத்துகிறார்கள். இத்தகைய புனிதமும் ஜீவாதாரமுமான தொண்டு புரிய இலாயக்குள்ளோர் மதகுருமார்களான மெளலவிகள் தான் என்பது நம்மிடை நிலவி வரும் தவறான கருத்து – நம்பிக்கை முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். இம்முறையில் அந்த தொண்டு பரிபவன் தூற்றப்படுகிறான், மிரட்டப்படுகிறான். மார்க்கப் புலமையற்ற மடயா, இந்த பணி புரிந்திடலாமோடா? எனப் பரிகசிக்கப்படுகிறான். கண்டிக்கப்படுகிறான்! காராசாரமாக!
அனாச்சாரங்களை கண்டிக்கும் இலட்சியத்தோடு அறப்போர் புரிபவன் மிஷ்காத்தை கரைத்துக் கடித்தவனாக இருக்க வேண்டியதில்லை 5,7,10 ஆண்டுகள் என்று அரபி மதரஸாக்களில் கற்றுத் தேர்ந்து படாடோபங்களோடு காட்சி தர வேண்டியதில்லை. கலைகள் பலவற்றில் சட்ட நுணுக்க வல்லுனர்களாக ஆராய்ந்தறிந்த சாஸ்திரியாக இருக்கத்தான் வேண்டுமென்ற விதியும் இல்லை. அனைவராலும் அது முடியக்கூடிய காரியமா? இஸ்லாம் அப்படி ஏதேனும் சட்டம் விதிக்கவில்லை. ஒவ்வொருவனுக்கும் மதப்பணியைக் கடமையாக்கி இருக்கிறது.
“லாஇலாஹ இல்லல்லாஹு” (ஆண்டவன் ஒருவன். இல்லை அவனைத் தவிர்த்து வேறு ஆண்டவர்கள்.)
இந்தக் கலிமா மந்திரத்தை ஓதி விட்டாலே போதுமே. கல்லறை வணக்கம். ஆண்டவனுக்கு இணை வைக்கும் இழிசெயல் இஸ்லாத்துக்கு ஆகாது. அது விலக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பெற – அதைச் செயலாக்கிக்காட்டும் துணிவைப் பெற, இதற்காக மார்க்க ஞானங்களை எல்லாம் துருவிப்பார்க்க வேண்டியதில்லையே! அதன் மூலம் சன்னதுகள் தேவையில்லையே!
ஓர் கல்யாண வீடு என்று வைத்துக் கொள்வோம். பாடகர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பாகவத சிகாமணி, மயானகாண்ட ஒப்பாரி மாலை பாடுகிறார். கூடியிருந்து கேட்டார் கனன்றெழுந்து ஓய்! பாகவதரே, உன்பாடலை நிறுத்தும்! நீயும் ஒரு பாடகனா? காலமுணர்ந்து கடமையாற்றும் இசைவாணனா? மங்களகரமான விழாவில் கல்யாணிராகம் பாடுவதைவிட்டு, முகாரி பாடலாமா? என்று கேட்கிறார்கள்! என் பாடலை ரசிக்க ரசிக்க வந்த மகாஜனங்களே, உங்களுக்கு ரசிக்கும் தன்மை கிடையாது. நீங்கள் என்னைப் போல் பாகவதர்களா? பட்டம் பெற்றவர்களா? சங்கீதக் கலை கற்றவர்களா? சினிமா – டிராமாவில் நடித்தீர்களா? இந்நிலையில் நீங்கள் என்னைக் கண்டிப்பதா? கனல் கக்கும் விழிகளை உருட்டி மிரட்டிக் காட்டுவதா? இப்படிப் பதறிப் துடித்து பதில் தருகிறார் பாகவதர் என்று கற்பனை செய்து கொள்வோம்.
இந்நிகழ்ச்சிப்படி பாகவதரின் கருத்துப்படி, தவற்றைக் கண்டிக்க முற்பட்டது தகாது – தவறு என விளங்குகிறது.
இது பொருத்தமா? நேர்மையா? பகுத்தறிவுக்கு ஏற்றதா? சங்கீதக் கலை தெரிந்தவர்கள் தான் கண்டிக்க வேண்டும். திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதா? இது முறையா? கூடுமா? முடியக் கூடிய காரியமா? பாகவதரைப் பற்றி என்ன கருத்து உதிக்க முடியும்.
அதேபோல் நம்மில் சில மவுலமிமார்கள் பட்டமும், ஆடை அலங்காரப்பகட்டும் இல்லாத மதப் பணியாளர்களைத் தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்! நம்மைக் குறை கூற இவர்களுக்கென்ன அந்தஸ்துண்டு? உரிமை உண்டு? எனக் கொக்கரிக்கிறார்கள்.
இந்நிலை மாற வேண்டும், மதப் பணிபுரிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிமையிருக்கிறது என்ற உயரிய எண்ணங்கள் கொண்ட இதயஙகள் பெருக வேண்டும். அதற்கு எல்லோருக்கும் வாய்ப்பும் வசதியும் அளிக்கப்பட வேண்டும். அதுவரை ஏமாற்றுவோர், ஏமாற்றப்படுவோர் இருந்தே தான் தீருவார். சமூகம் சீரழிந்து கொண்டே தான் போகும்.
(திருச்சி ‘ரசூல்’ அவர்களால் நடத்தப்பட்ட ‘ஷாஜஹான்’ இதழில் 15-3-54 அன்று வெளியான ஒரு கட்டுரையின் ஒரு பகுதியே இது. 33 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை என்றாலும், இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது)
நன்றி: ஷாஜஹான் 15 – 3 – 54.
தருபவர் : மவ்லவி முஹம்மது அலீ ரஹ்மானீ