இந்திய தவ்ஹித் ஜமாத் முன்னால் பொது செயலாளர் செங்கிஸ் கான் அவர்கள் மெளத் ஆகி விட்டார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கால் மயக்கம் அடைந்து உள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்து உள்ளது.
02-01-2016 மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை அடக்கத்தலத்தில், செங்கிஸ்கான் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரே இறை, ஒரே மறை, ஒரே தூதரின் பால் உடலில் உயிர் இருக்கும் வரை அழைப்புப்பணியில் அயராது உழைத்தவர். தனக்கு பின் இந்த சீரிய பணியை தொடர்ந்து ஆற்றிவர ஒரு குழுவை உருவாக்கிய உன்னத ஆளுமை. சமுதாயத்திற்கு இந்த பேரிழப்பு ஈடு செய்ய வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக.
அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து சுவனத்தின் உயர்ந்த இடத்தை தந்தருள்வானாக. சமுதாயத்திற்கு சிறந்த “தாயி” யை அருள்வானாக. குடும்பத்தாருக்கு அழகிய பொறுமை தருவானாக. சகோதர அழைப்பாளர்களுக்கு “ஸப்ரன் ஜமீலை” தருவானாக!
சகோதரர் செங்கிஸ்கான் அவர்களின்
முகநூலில் கடைசிபதிவு
விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் !
விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!
கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்த சென்னையா இது ?
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது?
மனசாட்சி கொண்ட மனிதர்களை கண்டோம் வெள்ளத்தில்
மனசாட்சியற்ற மனிதர்களை கண்டோம் புத்தாண்டில் !
சகலத்தையும் இழந்து நிற்கும் சக மனிதன் குறித்த
கவலையின்றி எப்படி கும்மாளம் போட முடிகிறது ?
அறிவுக்கு பொருத்தமில்லாத,
பொருளாதார விரயம் செய்கின்ற
இந்திய கலாசாரத்திற்கு சம்மந்தமில்லாத
ஆண்டுக் கொண்டாட்டம் கும்மாளங்களில் இருந்து
எங்களைக் காத்த இறைவனுக்கே புகழனைத்தும்!
முஸ்லிமல்லாத சகோதார்களே சிந்தியுங்கள் !
உங்களை வெள்ளத்தில் இருந்து காத்த
உங்களின் பசிக்கு உணவளித்த
உங்களுக்கு நிவாரப் பொருட்களை வழங்கிய
உங்களின் வீதிகளில் தூய்மைப்பணி செய்த
எந்த முஸ்லிமையும் இந்தப் புத்தாண்டு
கொண்டாட்டங்களில் பார்க்க முடியாது !
ஏன் எனில்
பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையே
படைத்தவன் எங்களுக்கு கொண்டாட்டமாக
ஆக்கியுள்ளதை எங்களின் இரு பெருநாளிலும்
நீங்கள் கண்கூடாகக் காணலாம் !
குடிப்பதும் வெடிப்பதும் குத்தாட்டம் போடுவதும்
பண்டிகைகள் இல்லை!அதனால் எந்தப் பயனுமில்லை !
இல்லாதவர்க்கு வழங்குதலும்
இறைவனை வணங்குதலுமே
இஸ்லாம் கூறும் பண்டிகைகள் !
விழாக்களின் பெயரால் வீண்விரயமற்ற
ஒழுக்கமுள்ள, மக்களுக்கு பயனுள்ள
ஒரு சமூகத்தை உருவாக்க வாருங்கள் !
-செங்கிஸ்கான்
சென்னை இமிக்ரேசன் அதிகாரியோடு இஸ்லாம் குறித்த ஒரு உரையாடல்!
கடந்த நவம்பர் 26 காலை சென்னையில் இருந்து குவைத் செல்ல சென்னை விமான நிலையத்தில் போர்டிங் முடித்து இமிக்ரேசன் வரிசையில் நின்று கவுண்டரை அடைந்தபோது அவர் பாஸ்போர்ட் எனது முகம், பெயர் எல்லாவற்றையும் மேலும் கீழும் பார்த்து விட்டு எதற்காக அபுதாபி செல்கின்றீர்கள்? என்றார்! நான் அபுதாபி செல்லவில்லை குவைத் செல்கிறேன் அபுதாபி டிரான்சிட் என்றதும், குவைத் எதற்காக செல்கின்றீர்கள்? என்றார்!
நான் ஒரு இஸ்லாமிய அழைப்பாளன் அங்கு சில நிகழ்சிகளில் உரை நிகழ்த்த செல்கிறேன் என்றதும் நீங்கள் எனது உயர் அதிகாரியைப் பாருங்கள் அங்கு சென்று அமருங்கள் என்று கூறிவிட்டு நெக்ஸ்ட் என அடுத்த நபரை அழைத்தார்!
நான் சென்று அவர் சொன்ன இடத்தில் அமர்ந்து இருந்தேன்! உயர் அதிகாரி வந்தார்! அவர் விசாரித்தார் அவரிடமும் முதலில் சொன்னதை சொன்னதும் எந்த நிகழ்ச்சிக்காக செல்கின்றீர்கள் ? அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் இருக்கிறதா? என்றார்! அழைப்பிதழ் ஏதுமில்லை! ஆனால் அது குறித்த போஸ்டர் நோட்டிஸ் உள்ளது என எனது நிகழ்ச்சி குறித்த முகநூல் பதிவை காட்டினேன்!
தமிழா? இங்கிலீஷ் இல்லையா? என்றார் அந்த மலையாள அதிகாரி! இல்லை நான் தமிழில்தான் உரையாற்ற செல்கிறேன் என்றேன்! ஒ அப்படியா நீங்க உருதில் பேச மாட்டீர்களா? என்றார்! எனக்கு உருது தெரியாது தமிழ் மட்டும்தான் தெரியும் என்றேன்!
என்ன மாதிரி தலைப்பில் பேசுகின்றீர்கள் என்றதும் பாபர் மஸ்ஜித் இடிப்பு குறித்த கருத்தரங்கம் ஒன்றிலும் இன்றைய இஸ்லாமிய இளைஞர்களின் நிலை எனும் தலைப்பிலும் பேசுகிறேன் என்றேன்!
இஸ்லாமிய இளைஞர்கள் நிறைய பேர் பயங்கரவாத இயக்கங்களில் சென்று சேர்ந்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்றார்!
பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை! மேலும் அது முஸ்லிம்களிடம் மட்டும் இல்லை உலகில் எங்கெல்லாம் அரச பயங்கரவாதம் உள்ளதோ அங்கெல்லாம் தீவிரவாதக் குழுக்களும் உள்ளது என்று பட்டியல் இட்டதும் அவர் ”இருப்பினும் இராக் ஆப்கன் சிரியா என குண்டு வெடிப்பு, அப்பாவி மக்கள் படுகொலை எனும் செய்திகள் தினமும் வருகிறதே” என்றார்!
அவை எல்லாம் அந்த நாட்டின் வளங்களை அபகரிக்க வந்த அமெரிக்கப் கூட்டுப்படைகளை எதிர்த்து அங்குள்ள மக்கள் நடத்தும் மண்ணுக்கான போரே தவிர அவை மதத்துக்காக நடக்கும் போர்கள் இல்லை! அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை! மேலும் வல்லாதிக்க நாடுகளின் ஆயுத வியாபாரத்துக்காக நடக்கும் சூழ்ச்சியும் உள்ளது, இதைத் தங்களின் ஊடக வலிமையால் எப்படி உலகை நம்பவைக்கின்றனர் என்பதை விரிவாக விளக்கினேன்!
நீங்கள் இதற்குமுன் வெளிநாடு சென்று உள்ளீர்களா என்றார்! நிறையப் போயிருக்கிறேன் என்றதும் இந்த பாஸ்போர்ட்டைபார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்றார்! எனது ஐந்து அடிசனல் பாஸ்போர்ட் புக்லேட்டுகளை எடுத்துக் காட்டியதும் அதில் நிரம்பியிருந்த பல்வேறு நாடுகளின் முத்திரைகளைப் பார்த்ததும் இவ்வளவு முறை வெளிநாடு சென்று உள்ளீர்களா? என்று ஆச்சர்யப்பட்டார்!
நல்லது சார்! உங்களை தாமதிக்க வைத்ததற்கு சாரி! இருப்பினும் இஸ்லாம் குறித்த முஸ்லிம்கள் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்! உங்களோடு உரையாடியதில் சந்தோஷம்! மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்! சென்னையில் உங்களது அலுவலகம் எங்கே உள்ளது? உங்களது கார்டு கிடைக்குமா? என்று கேட்டார்! கார்டைக் கொடுத்ததும் அவர் நேரே கவுண்டருக்கு அழைத்து வந்து நம்மை அனுப்பச் சொன்னார்!
அந்த இமிக்ரேசன் அதிகாரி எனது தோற்றம், பெயர், இஸ்லாமிய உரை நிகழ்த்த செல்கிறேன் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் நம்மை நிறுத்தி வைத்து கேள்விகள் கேட்டாலும் அந்த அரை மணி நேர உரையாடலில் அவருக்கு இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் எடுத்து சொல்வதறகான வாய்ப்பாக அமைந்தது! அல்ஹம்து லில்லாஹ்!
-செங்கிஸ் கான்