கட்டாயக்கடமையான நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள்
இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளன.
தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு விட்டு வேறு மாதங்களில் நோன்பு நோற்று விட வேண்டும்.
நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள் வேறு மாதங்களில் கூட அதை நிறைவேற்றத் தேவையில்லை. இவர்கள் ஒவ்வொரு நோன்பை விடுவதற்காக ஒரு ஏழைக்கு உணவளிப்பதே போதுமானதாகும். அவர்கள்,
1. தள்ளாத வயதினர்,
2. நோயாளிகள்,
3. பயணிகள்
1. தள்ளாத வயதினர்
இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் போது, இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். (நூல்: புகாரி 4505)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால் தான் முழு விளக்கம் பெற முடியும்.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப்பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; விரும்பினால் நோன்பை விட்டு விட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பது தான் அந்தச் சலுகை!
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள் கூட நோன்புக்குப் பதிலாக ஏழைக்கு உணவளித்து வந்தனர்.
பின்னர், ரமளானை அடைபவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டு விட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத் தான் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொறுத்த வரை மாற்றப்பட்டாலும், தள்ளாத வயதினரைப் பொறுத்த வரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்றால் எதை உணவாக அளிப்பது? எந்த அளவுக்கு அளிப்பது? இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறை எதையும் செய்யவில்லை.
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் என்பதால் இதை வரையறை செய்யாமல் விட்டிருப்பது தான் பொருத்தமானதாகும்.
ஒவ்வொரு பகுதியினரும் எதைத் தமது உணவாக உட்கொள்கின்றனரோ அதை வழங்க வேண்டும் என்பதால் தான் இது குறித்து விரிவாகப் பேசப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் தினசரி மூன்று வேளை உணவு உட்கொள்ளும் பழக்கம் இருக்கலாம். சில பகுதிகளில் இரு வேளை உணவுப் பழக்கம் இருக்கலாம். ஒரே ஒரு வேளை உணவுப் பழக்கம் கொண்ட பகுதிகளும் இருக்கலாம்.
நமது நாட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாகும். எனவே ஒரு நோன்பை விட்டதற்காக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான வழிமுறையாகும்.
ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளித்தல் என்பது வசதியுள்ளவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் தான் சாத்தியமாகும். சாத்தியமில்லாதவர்கள் சமுதாயத்தில் கணிசமாக உள்ளனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை என்று அல்லாஹ்வே கூறியுள்ளான். (பார்க்க: அல்குர்ஆன் 6:152, 7:42, 23:62, 2:286, 65:7, 2:223)
ஒரு நபித்தோழர் வேண்டுமென்றே நோன்பை முறித்து விட்டு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது, அவரிடம் பரிகாரம் செய்ய ஏதுமில்லை என்பதை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள்.
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையிலும், இந்த நபிவழியின் அடிப்படையிலும் நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள், ஏழைக்கு உணவளிக்கவும் சக்தி பெறவில்லை என்றால் அவர்கள் எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை. அவர்கள் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள்.
ஆரோக்கியமான காலகட்டத்தில் அவர்கள் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடித்து வந்திருந்தால் தள்ளாத வயதில் நோன்பு நோற்காதிருந்தாலும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.
நாங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம். அப்போது நபியவர்கள், மதீனாவில் சிலர் உள்ளனர். உங்களின் கூலியில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2839, 4423)
இறைவன், அடியார்கள் விஷயத்தில் எவ்வளவு கருணையுடையவன் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. முதுமையின் காரணமாகத் தான் நோன்பை விட்டு விட்டார்கள் என்றால் அவர்களது நல்ல எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர் எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.
2. நோயாளிகள்
நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.
தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.
நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:184)
நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளாமல் அல்லாஹ் வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
நோன்பு வைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும்.
இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள்.
பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.
தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். இவர்கள் விட்ட நோன்பிற்காக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நேரடியான ஆதாரம் ஏதுமில்லை.
ஆயினும் முதியவர்களின் நிலையுடன் இவர்களது நிலை ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் பேணுதலுக்காக இதை ஏற்றுச் செயல்படலாம்.
3. பயணிகள்
பயணிகளுக்கு அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான்.
நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:184)
இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பயணங்கள் சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும்.
பயணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டது குறித்து விரிவான பல செய்திகள் உள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பயணிகள் என்றால் ரயிலிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருப்பவர் மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் பயணிகள் தான் என்றாலும், இன்னும் பலரையும் பயணிகள் பட்டியலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சேர்த்துள்ளார்கள்.
ஒருவர் சொந்த ஊரிலேயே இருக்கிறார். நாளை காலை பத்து மணிக்கு வெளியூர் செல்வதாகத் தீர்மானிக்கிறார். இவரும் பயணி என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்.
பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா என்ற நபித்தோழருடன் கப்பலில் ஏறினேன். அப்போது காலை உணவைக் கொண்டு வரச் செய்தார்கள். என்னையும் அருகில் வரச் சொன்னார்கள். அப்போது நான், நீங்கள் ஊருக்குள் தானே இருக்கிறீர்கள்? (ஊரின் எல்லையைக் கடக்கவில்லையே) என்று கேட்டேன். அதற்கவர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை நீர் புறக்கணிக்கப் போகிறீரா? என்று திருப்பிக் கேட்டார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ஜப்ர், நூல்கள்: அஹ்மத் 25974, அபூதாவூத் 2059)
ஒருவர் ஊரின் எல்லையைத் தாண்டாவிட்டாலும், பயணத்திற்கு ஆயத்தமாகி விட்டாலே அவரும் பயணியாகி விடுகின்றார். பயணிகளுக்குரிய சலுகையை அவரும் பெற்றுக் கொள்கிறார் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் நோன்பு நோற்றவராக இருக்கும் போது பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. வைத்த நோன்பை முறித்து விட இவருக்கு அனுமதி உண்டு. இதனால் எந்தக் குற்றமும் ஏற்படாது.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களுடன் சென்ற மக்களும் நோன்பு நோற்றிருந்தார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தை அடைந்த போது, நோன்பு மக்களுக்குச் சிரமமாக உள்ளதால் உங்கள் முடிவைத் தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நபியவர்களிடம் கூறப்பட்டது. அஸர் தொழுகைக்குப் பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரச் செய்தார்கள். மக்கள் பார்க்கும் விதமாக அருந்தினார்கள். அதைக் கண்ட சிலர் நோன்பை விட்டனர். வேறு சிலர் நோன்பைத் தொடர்ந்தனர். சிலர் மட்டும் நோன்பைத் தொடர்வது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிய வந்த போது,அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1878)
ரமளான் நோன்பை நோற்ற பின் பயணம் மேற்கொண்டால் அந்த நோன்பை முறிக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த ஹதீஸ் அவர்களின் கருத்துக்கு எதிராக நிற்கின்றது. இதனால் அவர்கள் இந்த ஹதீசுக்குப் புதுமையான ஒரு விளக்கம் தந்து தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் மேற்கொண்ட பின் (பயணத்திலேயே) நோன்பு நோற்றிருப்பார்கள். பயணத்தில் நோற்ற நோன்பு என்பதால் தான் முறித்தார்கள். மதீனாவிலேயே நோற்ற நோன்பு என்றால் அதை முறித்திருக்க மாட்டார்கள் என்பது தான் இவர்களின் விளக்கம். இந்த விளக்கம் முற்றிலும் தவறாகும்.
ஹதீஸின் ஆரம்பத்தைக் கவனித்தால் நோன்பு வைத்தவர்களாகத் தான் புறப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இடையில், வழியில் நோன்பு நோற்றார்கள் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸின் துவக்கம் இடம் தரவில்லை.
மேலும் குராவுல் கமீம் என்ற இடம் மதீனாவுக்கு அருகில் உள்ள இடமாகும். மதீனாவிலிருந்து புறப்பட்டு இரவில் தங்கி விட்டு, மறுநாள் அடையும் தொலைவில் குராவுல் கமீம் என்ற இடம் அமைந்திருக்கவில்லை. காலையில் புறப்பட்டு அஸர் நேரத்தில் வந்து சேர்ந்து விடக் கூடிய அளவுக்கு அருகில் தான் உள்ளது. எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பாளியாகத் தான் புறப்பட்டார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாததாகும்.
எனவே பயணத்தில் நோற்ற நோன்பாக இருந்தாலும், அல்லது ஊரில் நோன்பு நோற்று விட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் இரண்டு நோன்பையும் முறித்து விட அனுமதி இருக்கிறது என்பதே சரியான கருத்தாகும்.
பயணத்தில் நோன்பை விட்டு விடுவது அனுமதிக்கப்பட்டதா? அல்லது கண்டிப்பாக விட்டு விட வேண்டுமா?
மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில், நோன்பை முறிக்காத மக்களைப் பற்றி குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பயணத்தில் நோன்பைக் கட்டாயம் முறித்தாக வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வாறு வாதம் புரிவதற்கு ஏற்ற வகையில் அந்த ஹதீஸ் அமைந்திருப்பது உண்மை தான். ஆயினும் வேறு பல சான்றுகளைக் காணும் போது அவ்வாறு கருத முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டு விடு என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1943)
நான் அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் நோன்பு நோற்றவர்களாக மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். ஒரு இடத்தில் இளைப்பாறினோம்.
அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் எதிரிகளை நெருங்கி விட்டீர்கள். எனவே நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலமாக இருக்கும் என்று கூறினார்கள். (விட்டு விடுங்கள் என்று கட்டளையாகக் கூறாததால்) இதைச் சலுகையாகக் கருதிக் கொண்டோம்.
சிலர் நோன்பு நோற்றோம். வேறு சிலர் நோன்பை விட்டு விட்டோம். பின்னர் மற்றோர் இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், விடிந்தால் நீங்கள் எதிரிகளைச் சந்திக்கவுள்ளீர்கள். நோன்பை விடுவதே உங்கள் உடலுக்குப் பலம் சேர்க்கும். எனவே நோன்பை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.
அவர்கள் கட்டளையிட்டதால் இப்போது அனைவருமே நோன்பை விட்டு விட்டோம். இதன் பிறகு (பல சந்தர்ப்பங்களில்) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நோன்பு நோற்றவர்களாகப் பயணம் செய்துள்ளோம் என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஸ்ஆ, நூல்: முஸ்லிம் 1888)
நோன்பை முறிக்காதவர்களைக் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தப் பயணத்தின் போது கூறினார்களோ அதே பயணத்தின் தொடர்ச்சியைத் தான் அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு விளக்குகின்றார்கள். இதன் பிறகு பல பயணங்களில் நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என்று கூறுகிறார்கள்.
பயணத்தில் நோன்பு நோற்பது குற்றமென்றால் இதன் பிறகு நபிகள் நாயகத்துடன் மேற்கொண்ட பயணங்களின் போது நோன்பு நோற்றிருக்க மாட்டார்கள். மேலும் இந்தப் பயணத்தின் தொடர்ச்சியிலேயே நபித்தோழர்களில் சிலர் நோன்பு நோற்றுள்ளனர் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது. பயணத்தில் நோன்பை விடுவது சலுகை தானே தவிர கட்டாயமில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
source: http://onlinepj.com/books/nonbu/