இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய!
இந்த நாடு, நாட்டு மக்கள், நாட்டின் வளங்கள் இவற்றின் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு பொறுப்பு ஏற்க உள்ளவர்கள் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.
இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்புபவர்கள் என்ற அடிப்படையில் இவற்றை பகிர்ந்துக்கொள்ள விழைகிறோம்.
இவை பேணப்படும் பட்சம் இறைநம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் மட்டுமல்ல இறைவனின் பொருத்தமும் ஆசியும் அரசுக்கு அமையும் என்றும் நம்புகிறோம்.
1) நாட்டுக்கும் நாட்டு வளங்களுக்கும் மக்களுக்கும் உரிமையாளன் இறைவனே. இவ்வுலகில் காணப்படும் அனைத்துக்கும் சொந்தக்காரன் நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனே. ஆகவே நம் ஒவ்வொரு செயலுக்கும் அந்த இறைவனுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செயல்பட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.
2) மனித குலம் அனைத்தும் ஒரே ஒரு ஆண்-பெண் ஜோடியிலிருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்ற அடிப்படையில் இங்கு வாழும் குடிமக்கள் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்ற அடிப்படையை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் மதம், நிறம், மொழி, பொருளாதார நிலை போன்றவை வேறுபட்டாலும் அவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதையும் அவர்கள் அனைவருக்கும் இந்நாட்டு வளங்களிலும் அரசு வழங்கும் வசதிகளிலும் நியாயமான உரிமைகள் உண்டு என்பதையும் மறக்கக்கூடாது.
முக்கியமாக குடிமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதை சரிவர நிறைவேற்றா விட்டாலோ ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டாலோ அத்துமீறினாலோ அவற்றுக்கான தண்டனைகள் நிச்சயமாக இறைவனிடம் கிடைக்கும்.
3) ஆட்சிப்பொறுப்பு என்பது இறைவன் வழங்கும் அமானிதம் ஆகும். இவ்வளவு பெரிய நாட்டை ஆள இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு பல விதமான உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் பொருள் விரயத்திற்கும் பிறகு வாய்த்துள்ளது என்றாலும் இதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது. நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சொந்தமாக முன்வந்து இப்பொறுப்பை ஏற்றிருப்பதால் அதிகம் அதிகமாக இப்பொறுப்பு பற்றி இறைவனால் விசாரிக்கப்படுவீர்கள்.
4) நாட்டு வளங்களும் அரசின் வருமானங்களும் மக்களின் பொதுச் சொத்தாக இருக்கும் நிலையில் இவற்றை முறையாக கைகாரியம் செய்தால் கண்டிப்பாக அதற்கான நற்கூலி இறைவனிடம் உண்டு. மாறாக சுயநலத்துக்கு ஆட்பட்டு இவை வீண்விரையமோ அபகரிப்போ செய்யப்படுமானால் மோசடி செய்யப்பட்ட அந்த பொருட்கள் சகிதம் இறைவனின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மேற்கூறப்பட்டவை இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் பொதுவான அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இனி இறைவனிடமிருந்து வந்துள்ள இறுதிவேதம் என்று நாங்கள் நம்பும் திருக்குர்ஆனின் அடிப்படையிலும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைகளின் அடிப்படையிலும் மேலும் சில விடயங்களை உங்களோடு சகோதர உணர்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
நீங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து நீங்கள் நாட்டுக்கு செய்யக்கூடிய ஒவ்வொரு தன்னலமற்ற சேவைகளும் நன்மைகளாக அல்லது புண்ணியங்களாக உங்கள் கணக்கில் இறைவனால் பதிவு செய்யப்படுகின்றன. அதே வேளையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு மனித உரிமை மீறல்களும் அநியாய செயல்பாடுகளும் அரசின் தரப்பில் இருந்து ஏற்படும் அத்துமீறல்களும் என ஒவ்வொன்றும் தீமைகளாக அல்லது பாவங்களாகப் பதிவாகின்றன.
நமது செயல்கள் அனைத்தும் அணுவணுவாக இங்கேயே பதிவாகின்றன என்ற உண்மை அறிவியல் வளர்ந்த நிலையில் அனைவரும் உணர்ந்த ஒன்று. ஊடகங்களும் தொடர்புள்ளவர்களும் இவற்றைப் பதிவு செய்யத் தவறினாலும் ஒன்றுவிடாமல் அனைத்து நிகழ்வுகளும் அவற்றோடு தொடர்புள்ள மனிதர்களின் மூளைகளிலும் பதிவாகின்றன என்பதும் அங்கு எழும் ஒலி ஒளி அலைகள் சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மூலமும் பதிவாகின்றன என்பதும் நாம் யாரும் மறுத்துவிடமுடியாது.
அதேபோல நம் ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது உண்டு என்பதும் தொடர்ந்து இவ்வுலகம் ஒரு நாள் முழுமையாக அழிக்கப்படும் என்பதும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மைகள். தொடர்ந்து மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது மனிதர்கள் அனைவரும் நீதிவிசாரணைக்காக எழுப்படுவோம் என்பது இஸ்லாத்தின் உறுதியான நம்பிக்கைகளில் ஒன்று. அதை இங்கு முக்கியமாக பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம்.
இவ்வுலகில் பதிவாகும் நமது வினைகள் அனைத்தும் நமது ஒவ்வொருவரது வாழ்வின் அம்சங்களும் அணுவணுவாக அன்று இறுதித்தீர்ப்பு நாளன்று வெளியிடப்படும்.
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:7,8)
நமது செயல்கள் பதியப்பட்ட புத்தகம் நம் முன்னே கொண்டுவரப்படும். அன்று அநீதி இழைத்தோருக்கும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நீதி பாலித்தவர்களுக்கும் நீதி பாலிக்காதவர்களுக்கும் முழுமையான முறையில் நியாயம் வழங்கப்படும். வழக்குரைஞர்களோ வாதாடுதலோ அங்கு இல்லை.
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)
தீர்ப்பு வழங்கப்பட்டபின் ஒவ்வொருவரது நிலையான தங்குமிடம் தீர்மானிக்கப்படும். அவரவர் செயல்களின் எடைக்கேற்ப அவர் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப்படுவார்.
“எனவே, (அந்நாளில்) எவருடைய நன்மையின் நிறை கனத்ததோ- அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். ஆனால் எவனுடைய நன்மையின் நிறை இலேசாக இருக்கிறதோ- அவன் தங்குமிடம் ”ஹாவியா” (எனும் தீக்கிடங்கு)தான்.” (திருக்குர்ஆன் 101:6-9)
தீர்ப்புநாள் அன்று சத்தியத்தை மறுத்தோரின் நிலை
“(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று சத்திய மறுப்பாளர்கள் எண்ணிக் கொண்டனர்; ”அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் – மேலும் அது இறைவனுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (திருக்குர்ஆன் 64:7)
அந்நாளில் தீங்குசெய்தவர்கள் தங்களின் நிலைகுறித்து துக்கத்தில் ஆழ்வார்கள்.
“அந்நாளில் அநியாயக்காரன் தனது இரு கைகளையும் கடித்துக்கொண்டு; ”அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?”” எனக் கூறுவான். (திருக்குர்ஆன் 25:27)
“நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் – மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை அந்நாளில் கண்டு கொள்வான் – மேலும் சத்தியத்தை மறுத்தவன் ”அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.” (திருக்குர்ஆன் 78:40)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
o நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 7148)
o நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (நபிமொழி நூல்: புகாரி 7138)
எல்லாம் வல்ல இறைவன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர்களை நேர்வழியில் செலுத்துவானாக! இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி தர அவர்களை வழிநடத்துவானாக! நாட்டுமக்கள் உள்ளங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவானாக! அனைவருக்கும் இம்மையும் மறுமையும் செம்மையாய் அமைய அருள்புரிவானாக!
(நபியே!) நீர் கூறுவீராக: “இறைவா! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; (இப்படி செய்வதன் மூலம்) நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” (குர்ஆன் 3:26)
source: http://quranmalar.blogspot.in/