அல்குர்ஆன் விடுக்கும் சவால்!
ராஸ்மின் மிஸ்க்
கடந்த ஆயிரத்து நானூறு வருடங்களுக்கும் மேலாக எதிரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வரக் கூடிய ஒரே வேதமாக திருமறைக் குர்ஆன் இருந்து வருவதை வரலாறு நமக்கு தெளிவு படுத்திக் கொண்டிருக்கின்றது.
உலகின் எப்பாகத்தில் வாழும் மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும், எந்த மதத்தையுடையோராக இருந்தாலும் அவர்களை அனைவரின் சிந்தனைக்கும், திறமைக்கும், பேச்சுக்கும் சவால் விடுக்கும் விதமாக உலகில் வாழும் ஒரே வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.
திருமறைக் குர்ஆனை பொய்பித்து இஸ்லாத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற அற்ப ஆசையில் உலாவும் சில மனிதர்கள் அவ்வப்போது திருமறைக் குர்ஆன் தொடர்பாக தமது குறைமதியின் காரணமாக சில விமர்சனங்களை முன்வைத்து, திருமறைக் குர்ஆன் பொய்யான வேதம், இது இறைவனிடம் இருந்து இறக்கப்படவில்லை, முஹம்மது நபியவர்கள் தமது கற்பனையினால் உருவாகியது என்றெல்லாம் பரப்ப முயன்றார்கள், இன்றும் முயற்சி செய்கின்றார்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையின் காரணமாக உலகம் அழிகின்ற வரையில் திருமறைக் குர்ஆன் இறைவனின் வேதம் என்பதை யாராலும் வலுவிழக்கச் செய்ய முடியாத அளவுக்கு இறைவன் தனது பாதுகாப்பையும், அங்கீகாரத்தையும் இவ்வேதத்திற்கு வழங்கி, தன்னைத் தானே இறைவேதம் என்று நிரூபிக்கும் ஆழமான செய்திகளையும் இதில் உள்ளடக்கியுள்ளான்.
இவ்வேதத்தை ஆராயும் யாராக இருந்தாலும் அடிப்படையான சில விஷயங்களை திருமறைக் குர்ஆனில் அனைத்து இடங்களிலும் அதன் போங்கை கவனிக்கும் போது உடனடியாக கண்டு கொள்வார்கள். முரண்பாடுகள் இல்லாத செய்திகள்! ஆபாசம் இல்லாத வார்த்தைகள்! பொய் இல்லாத உயரிய உண்மைகள்! மழுப்பல்களை சொல்லி, நழுவல் போக்கை கையாளாத தன்மை! மன்னர்களையோ, வள்ளல்களையோ அளவுக்கதிகமாக புகழாத போங்கு! போன்றவை குர்ஆனை நடுநிலை கண்ணோட்டத்தில் படிக்கும் யாவரும் அறிந்து கொள்ளும் ஒரு பொதுவான அடிப்படையாகும்.
நடுநிலைக் கண்ணோட்டத்தில் குர்ஆனை ஆய்வு செய்த அனைத்து அறிஞர்களும் குர்ஆனை ஏற்றுக் கொண்டு இஸ்லாமியர;களாக மாறியதும், குர்ஆனை தூற்ற வேண்டும் என்று படித்தவர்கள் கூட குர்ஆனை ஏற்றுக் கொண்டு புகழும் நிலைக்கு மாறியதும் இந்த அடிப்படை தன்மைகளால் கவரப்பட்டதினால் தான்.
சவால் விடுக்கும் சத்திய வேதம். திருமறைக் குர்ஆன் அன்றைய அரபுகளுக்கு மாத்திரமல்ல, இன்றைய இனவாதிகளுக்கும், மறுமை நாள் வரை திருமறைக் குர்ஆனை விமர்சனம் செய்யும் அனைத்து குறைமதியினருக்கும் ஒட்டுமொத்தமாக பகிரங்க சவாலை விடுக்கின்றது.
‘நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.” (அல்குர்ஆன் 02:23,24)
இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார் என்று அவர;கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, இது போன்ற பத்து அத்தியாயங்களைக் கொண்டு வாருங்கள்! (அல்குர்ஆன் 11:13)
இதே போன்று திருமறைக் குர்ஆன் 10:38, 17:88, 28:49, 52:34 ஆகிய வசனங்களிலும் இது போன்ற ஒரு வேதத்தை அல்லது சில வசனங்களையாவது நீங்கள் கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் சவால் விடுக்கின்றது. இன்று வரை இந்த சவால் இருந்து கொண்டே இருக்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மக்கா நகர் என்பது அரபு கவிஞர்களை புகழிடமாக கொண்ட நகரம் அந்நகரத்தில் தான் ஆயிரக் கணக்கான கவிஞர்கள் முன்பு இந்த சவாலை திருமறைக் குர்ஆன் விடுத்தது எந்தவொரு அரபிய கவிஞர்களினாலும் இந்த சவாலை எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டது.
முரண்பாடுகள் அற்ற முதன்மை வேதம். திருமறைக் குர்ஆனைப் போன்றதொரு வேதத்தை அல்லது அது போன்ற சில பகுதிகளை கொண்டு வந்து காட்டுவதின் மூலம் குர்ஆனை பொய்ப்பித்துக் காட்டுங்கள் என்று சவால் விடுத்ததைப் போலவே திருமறைக் குர்ஆனில் ஏதாவது முரன்பாட்டை காட்டுங்கள் பார்க்கலாம் என்று குர்ஆன் இன்னொரு சவாலையும் முன்வைக்கின்றது.
எந்தவொரு மனிதன் எழுதிய புத்தகமாக இருந்தாலும் அதில் ஆயிரமாயிரம் முரன்பாடுகளையும், முன்னுக்குப் பின் முரனான செய்திகளையும் தாராளமாக பார்க்கக் கிடைக்கும், ஒரு காலத்தில் சிறந்த புத்தகம் என்று புகழ் பெற்ற புத்தகங்கள் கூட பிற்காலத்தில் தனது முரன்பட்ட கருத்தியல் காரணமாக கவனிப்பாரற்று காலாவதியாகிவிடும். ஆனால் திருமறைக் குர்ஆன் மாத்திரம் இன்றும் காலத்தால் அழியாத சத்திய வேதமாக முடிந்தால் முரன்பாடுகளை எடுத்துக் காட்டுங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுத்துக் கொண்டிருக்கின்றது.
”அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரன்பாடுகளை கண்டிருப்பார்கள்.” (அல்குர்ஆன் 04:82)
”இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குறிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.” (அல்குர்ஆன் 41:42)
இருபத்தி மூன்று ஆண்டுகளாக இறைவனிடமிருந்து அருளப்பெற்ற திருமறைக் குர்ஆனில் முரன்பட்ட தன்மைகள் இருந்தால் எடுத்துக் காட்டுங்கள் என்று குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியதையே மாற்றிப் பேசும் மனிதத் தன்மைக்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகுக்கு இறை வேதம் என்று அறிமுகம் செய்த திருமறைக் குர்ஆன், முடிந்தால் முரன்பாட்டை காட்டுங்கள் என்று சவால் விடுவதிலிருந்து குர்ஆன் இறை வேதம் தான் என்பது தெளிவாக உணர்த்தப்படுகின்றது.
14 நூற்றாண்டு காலமாக ஒரு முரன்பாட்டைக் கூட காட்ட முடியாத தெளிவாக செய்திகளை உள்ளடக்கிய மனிதர்களுக்கான நேரிய வழிகாட்டியாக இன்றும் குர்ஆன் திகழ்வது அதிசயத்திலும், அதிசயமே! அன்றைய அரபுகளுக்கு மாத்திரமல்ல! இன்றைய இனவாதிகளுக்கும் தான்! திருமறைக் குர்ஆன் விடுக்கும் சவால்கள் அனைத்தும் அன்றைய கால அரபுகளுக்கு மாத்திரமல்ல! இன்றைய இனவாதிகளுக்கும் சேர்த்துத் தான் விடப்படுகின்றது. உலகம் அழியும் வரை இந்த அறை கூவல் இருந்து கொண்டேயிருக்கும்.
இஸ்லாத்தின் அனைத்துத் தரப்பு எதிரிகளாலும் தினமும் விமர்சிக்கப்படும் வேதமாக இருக்கும் திருமறைக் குர்ஆனை இது கால வரை யாராளும் பொய்ப்பிக்கவோ, கலங்கம் சுமத்தவோ முடியாமல் இருப்பது இது இறை வேதம் என்பதற்குறிய நிலையான சான்றாகும்.
எவராலும் குர்ஆனை பொய்ப்பிக்க முடியாது. ”அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அiணைக்க நினைக்கின்றனர் (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்தாமல் விட மாட்டான்.” (அல்குர்ஆன் 09:32)
source: www.rasminmisc.com