இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..!
[ இப்பதிவு வஞ்சப்புகழ்ச்சி அணியில் எழுதப்பட்டுள்ளது. வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வது மட்டுமின்றி இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.]
‘அப்த்’ என்ற அரபிப்பெயருக்கு அடிமை என்று பொருள். அப்த்+உல் = ‘அப்துல்’ என்றால் ‘….ன் அடிமை’ என்றாகிறது. ‘அப்த்-உல்-அல்லாஹ்’ அதாவது ‘அப்துல்லாஹ்’ என்றால் ‘இறைவனின் அடிமை’. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் (ரஹ்மான், ரஹீம், லத்தீஃப், ஜலீல், மலிக், ஹமீத், ஹலீம்… என) பற்பல பெயர்கள் உள்ளன.
அப்துல்லாஹ் போலவே… அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம், அப்துல் லத்தீஃப், அப்துல் ஜலீல், அப்துல் மலிக், அப்துல் ஹமீத், அப்துல் ஹலீம்…. என்று நிறைய ‘இறைவனின் ஆணடிமைகளை’ உங்களுக்கு தெரியும்.
ஆனால், அதேநேரம் ‘இறைவனின் பெண் அடிமைகள்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்களோ… ரஹ்மானியா, ரஹீமா, லத்தீஃபா, ஜலீலா, மலிக்கா, ஹமீதா, ஹலீமா… என்று ‘அடிமை-அப்த்’ பெயரை தங்கள் பெயருடன் இணைக்காமால் ‘ஜம்பமாக’ திரிவதைத்தான் பார்த்திருப்பீர்கள். உடனேயே இப்போது உங்களுக்கு தோன்றவில்லையா…? “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!” என்று?
தொழுகை..! தினமும் ஐவேளை நேரம்தவறாமல் இறைவனுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இக்கடமையானதை, சாதாரண நிலையில் ஆண்கள் பள்ளிவாசலுக்கு சென்றுதான் நிறைவேற்ற வேண்டும். ஆனால், பெண்கள்? அது அவர்கள் இஷ்டம்..! நினைத்தால் மசூதிக்கு போகலாம். நினைத்தால் வீட்டிலேயே தொழலாம்..! “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
ஆண்கள் குடும்ப நலனுக்காக… வியாபார வேலை விஷயமாய் கடினமான பாலைவனப்பயணம் அல்லது கடற்பயணம் செய்யும்போது மட்டுமின்றி, இஸ்லாத்திற்காக (ஜிஹாத்)போர்செய்து கொண்டிருக்கும் போது கூட… அது நபியாகவே இருந்தாலும் எச்சலுகையும் இன்றி இஸ்லாத்தில் எக்காலத்திலும் இன்றியமையாதது தொழுகை. ஆனால், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கோ…! கேட்கவே வேண்டாம்…! மூன்று நாளோ… ஏழு நாளோ… அதிலும், குழந்தைபெற்ற தாய்மார்கள் நாற்பது நாள் கூட அல்லது அது முடியும்வரை கூட தொழவே தேவை இல்லை. அதுவும் மென்சஸ் காலம் முடிந்த பின் அதை மீட்டேடுத்தும் தொழத்தேவை இல்லை. அக்காலத்தில் நோன்பும் நோற்கத்தேவை இல்லை. “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
ஹஜ் அல்லது உம்ரா செய்யும்போது இஹ்ராமில் ஆண்கள் மட்டும் தனியாக வெண்மையான தையல் அற்ற இரு துண்டு ஆடைகள் மட்டுமே உடுத்த வேண்டும். மற்ற நாட்களில் வழமையாக ஆண்கள் உடுத்தும் தைத்த ஆடைகளுக்கு அப்போது அனுமதி இல்லை. ஆனால், பெண்கள்? அவர்கள் வழக்கமாய் உடுத்தும் அதே ஆடைகளை உடுத்திக்கொள்ளளாம். பெண்களுக்கு மட்டும் ‘தவாப்’ மற்றும் ‘சயீ’ செய்யும்போது ‘தொங்கோட்டம்'(ரமள்) இல்லை. ஆனால், ஆண்கள் ஓடவேண்டும். ஹஜ்/உம்ரா முடித்து இஹ்ராமிலிருந்து விடுபடும் சமயம் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டியது ஆண்களுக்கு மட்டுமே கடமை..! “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
இஸ்லாத்தில் ஆண்களுக்குத்தான் தங்கள் குடும்பத்திற்காக வெளிச்சென்று, வேலைதேடி, கடல்கடந்தேனும் கஷ்டப்பட்டு வெயில்-மழை-குளிர் என்று பாராமல் உழைத்து பொருளீட்டி தங்கள் மனைவி குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை. ஆனால் பெண்களுக்கு அது கடமை இல்லை? விரும்பினால் ஒரு சேஞ்சுக்கு ஜாலியாய் சம்பாதிக்கலாம். அதை அவர்களுக்கு மட்டுமே செலவும் செய்து கொள்ளலாம். யாருக்கும் தரவேண்டிய கட்டாயமும் இல்லை. அது போரடித்தால், பேசாமல் கணவனின் சம்பளத்தில் ஜாலியாக வீட்டில் உக்கார்ந்து என்ஜாய் பண்ணலாம். “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
இஸ்லாத்தை பிரச்சாரம் பண்ண முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் காலம்தொட்டு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலம் வரை ஆண்களே நபியாக அனுப்பட்டிருக்கிறார்கள். நபி என்றால் ஏதோ ஒரு சொகுசான பதவியா? நிராகரிப்பாளர்களிடம் பிரச்சாரம் செய்யும்போது அவர்களினால் சொல்லமுடியாத இன்னல்கள், தாக்குதல்கள், அவதூறுகள், அடி, உதை, ஊர்நீக்கம், ரத்தம் சிந்த போர், கொலை முயற்சி, அதன்பயனாய் ‘ஹிஜ்ரத் செய்தல்'(நாடுதுறந்து நாடோடியாய் வேறு நாடு செல்லல்) என்று அதனால் ஏற்படும் அனைத்து கொடுமைகளையும் நபியாக இருந்த ஆண்களுக்குத்தான். பெண்களுக்கு அது போன்ற ஒரு பெருஞ்சுமை சுமத்தப்பட்டதா? “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
பெண்ணுக்கு மஹர் (மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆணுக்கு மட்டுமே கட்டாயக்கடமை. எதை, எப்படி, எவ்வளவு மஹர் கொடுப்பது? அதை எல்லாம் தீர்மாணிப்பது மணப்பெண்ணின் உரிமை..! பதிலுக்கு ஆண் ஏதாவது நகை/தொகை/பொருள் என மணப்பெண்ணிடமிருந்து கேட்கலாமா? நோ..! மூச்..! இந்த கலாட்டாவில், மணப்பெண்ணின் ஒப்புதல் இன்றி திருமணம் செல்லாது.”இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
ஆணும் விவாகரத்து செய்யலாம். பெண்ணும் விவாகரத்து செய்யலாம். பின்னர் தாங்கள் விரும்பியோரை மணக்காலம். ஆனால், பெண்ணை ஆண் ‘தலாக்'(விவாகரத்து) செய்யும்போது, திருமணத்தின் போது மலையளவு மஹரை அள்ளி தந்திருந்தாலும் சல்லிக்காசு அதிலிருந்து திருப்பிக்கேட்க முடியாது. மேலும், அந்த பெண், ஊர் ஜமாஅத் மூலம் பேசி அந்த ஆணின் பொருளாதார நிலைக்கேற்ப விவாகரத்து செய்யும் ஆணிடமிருந்து ஒரு ‘லம்பா அமௌன்டை’, ‘சம்ரட்சனை’ (ஜீவனாம்சம்?) என்ற பெயரில் ஒரே தடவையில் கறந்து விடலாம். தலாக் செய்யப்பட்ட அப்பெண்ணுக்கு ‘இத்தா’காலத்தில் பொருளுதவி, அப்போது கருவுற்று இருந்தால், பிரசவம் வரை பொருளுதவி, பிரசவத்திற்கும் பொருளுதவி, அந்த குழந்தைக்கு ஒரு தாயாக இருந்து பாலூட்டுவதற்கு தலாக் செய்யப்பட அப்பெண்ணுக்கு கூலி, அந்த இரண்டு வருட பாலூட்டும் காலத்திற்கும் உணவு/உடை என்று பொருளுதவி … அடா..! அடா..! ஆனால், ஓர் ஆணை ஒரு பெண் ‘குலா'(விவாகரத்து) செய்யும்போது, ‘சம்ரட்சனையாவது’… ‘கிம்ரட்சனையாவது’? மூச்..! “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
ஒரு கற்புள்ள ஒரு பெண் மீது அவதூறு கூறினால், நிரூபிக்க நான்கு சாட்சிகள் கொண்டு வர வேண்டும். ஒன்று குறைந்தாலும் 80 கசையடி இஸ்லாத்தில். அப்போ… கற்புள்ள ஆண் மீது யாரும் பழிசுமத்தினால்…? “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
எந்த ஆணாவது தன் மனைவியை (அப்போதைய அஞ்ஞான வழக்கப்படி) தாயுடன் ஒப்பிட்டுவிட்டால்… போச்சு…! அவன், ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும் அல்லது இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் அல்லது அறுபது ஏழைக்கு உணவிட வேண்டும். அதற்குப்பின்தான் மனைவியை தொட அனுமதி. “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
வரலாற்றுப்புகழ்பெற்ற ஹுதைபியா உடன்படிக்கையின் முக்கிய ஷரத்து என்னவென்றால், மக்கா குறைஷியரிடமிருந்து யாராவது இஸ்லாத்தை ஏற்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசம் மதினா வந்துவிட்டால் அவர்களை மீண்டும் மக்கா குறைஷிக்காபிஃர்களிடமே திருப்பி அனுப்பிவிடவேண்டும். ஆனால், அதேசமயம் மதீனாவிலிருந்துயாராவது முஸ்லிம்கள் சென்று மக்காவில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். இவ்வொப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு சற்று முன்பு மக்காவில் குரைஷி காஃபிர் கொடுமைகள் தாங்காமல் ‘பிழைத்தால் போதும்’ என்று மதினா வந்த அபுஜந்தல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒப்பந்தத்துக்கு பிறகு அதேபோல் முஸ்லிமாகி வந்த அபுபஷிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என ஆண்கள் அனைவரும் மக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆனால், உம்மு குல்தும் ரளியல்லாஹு அன்ஹா என்ற பெண் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து தப்பித்து மதினா வந்தால்… அவர் இஸ்லாத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பப்படமாட்டார். “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
கோடி கோடியாய் சம்பாரித்தாலும், உலகிலேயே பிரம்மாண்ட ஜுவல்லரி-நகைக்கடை வைத்திருந்தாலும்… ஒரு குண்டுமணி அளவுக்குக்கூட ஆண்களுக்கு தங்க நகை அணிய இஸ்லாத்தில் அனுமதி இல்லை. தன் எடையை விட அதிகமாக தங்க நகை போட்டுக்கொண்டாலும் பெண்களை கேட்பார் யாருமில்லை. “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
மொத்த திருபுவனத்தையே சொந்தமாக விலைக்கு வாங்கி விட்டாலும் அதிலிருந்து ஒரு பட்டு வேஷ்டி? ஒரு பட்டு சட்டை? ம்ஹூம்..! அதெல்லாம் அணிய இஸ்லாமிய ஆண்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், பெண்களோ கடையையே வாங்கிக்கொள்ளளாம். தினம் பத்து பட்டுப்புடவைகள் கட்டினாலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை? “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
இஸ்லாமியபாதையில் தம் உயிரை பணயம் வைத்து, தம் உறுப்புகள் இழப்பையும் பொருட்படுத்தாது ஆயுதம் ஏந்தி எதிரிகளுடன் கொதிக்கும் வெயிலில் அனல் பறக்கும் பாலைவனத்தில் புழுதிக்காற்றை சுவாசித்தவண்ணம் பசியுடன் வயிற்றில் கற்களை கட்டிக்கொண்டு போர் (ஜிஹாத்) செய்வது ஆண்களுக்கு மட்டும் கடமை. பெண்களுக்கு இந்த போர் செய்யும் கஷ்டம் எல்லாம் கடமை இல்லை. ஹஜ் செய்வதே பெண்களுக்கான ஜிஹாத். ஆஹா..! பெண்களுக்கு டபுள் நன்மையா ஹஜ் செய்வதில்..! “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
‘நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகுந்த அருகதையானவர் யார்?’ -நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு நபித்தோழர் கேட்கிறார். அதற்கு அண்ணல் அவர்களின் பதில்: ‘உங்கள் தாய்..!’ பிறகு யார்? ‘உங்கள் தாய்..!’ பிறகு யார்? ‘உங்கள் தாய்..!’ பிறகு யார்? ‘உங்கள் தந்தை..!!!’
“…மனிதனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கற்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்கு பாலருந்தும் பருவம் இரண்டு வருடங்கள். ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக..! என்னிடமே உன் மீளுதல் உள்ளது” —என்று அல்லாஹ் தன் திருமறையில்(31:14) தெரிவிக்கிறான்.
ஆக, தந்தையைவிட தாய்க்கே இஸ்லாத்தில் முதல் மரியாதை. அதாவது பெற்றோரில் ஆணைவிட பெண்ணுக்கே முன்னுரிமை. “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!”
ஆண்குழந்தை பிறந்தால் இரண்டு ஆடு அறுக்க வேண்டும். ஆனால், பெண்குழந்தை பிறந்தால் ஒரு ஆடு மட்டும் அறுத்து ‘அகீகா’ கொடுத்தால் போதும். மேலும், எவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்து அவர்களை அன்புகாட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சொர்க்கம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே தோழர்கள் ‘இரண்டு பெண்மக்கள் இருந்தாலுமா? ‘ஆம்..! இரண்டு இருந்தாலும்’ என்றார்கள். உடனே ஒரு தோழர் ‘ஒரு பெண் பிள்ளை இருந்தால்?’ என்றவுடன், ‘ஆம்..! ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்..!’ என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். ஆக, இதுவரை பெண்களுக்கான சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை மட்டுமே கண்டோம். இப்போதோ, பெண்குழந்தை பெற்றவர்களுக்கும் சலுகைகள்..!!! “இஸ்லாத்தில் என்னே ஒரு ஆண்குழந்தையடிமைத்தனம் மற்றும் பெண்குழந்தையாதிக்கம்…!”.
முக்கியமான பின்குறிப்பு :
போதுங்க…! மாசத்துக்கு பத்து பகுத்தறிவு(?)பதிவர்கள் ‘இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் (?) பொங்கி வழிகிறது’ என்றும் ‘ஆணாதிக்கம் (?) ஆட்டிப்படைக்கிறது’ என்றும் கூப்பாடு போடுவார்கள். அவர்கள் பல வருடங்களாய் சொல்வதெல்லாம் எதைப்பற்றி என்றால்… பெண்களின் பர்தாவை பெண்ணடிமைத்தனம் என்றும், ஆண்களின் நான்கு திருமண அனுமதியை ஆணாதிக்கம் எனவும் பல பல முறை எழுதி எழுதி அலுத்து விட்டார்கள். அவர்களுக்கு பல பல பல முறை சரியான தெளிவான நியாயமான நெத்தியடி பதில்களை முஸ்லிம் பெண் பதிவர்கள் உட்பட எண்ணற்றோர் எழுதி எழுதி எழுதி அலுத்து விட்டோம். இப்போது ஒரு சேஞ்சுக்கு மேற்படி பகுத்தறிவு(?)பதிவர்களுக்காக… இந்த பதிவு..!
இன்னும் ஏகப்பட்டவை இருந்தாலும் பதிவு நீ……ண்டுவிட்டதால்…. சாம்பிளுக்கு சிலவற்றை மட்டும் சொல்லியுள்ளேன்..!!! ஆனாலும், கொஞ்சம் ஓவராய் போய்ட்டேன். ஸாரி…!
source: http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post.html