முஸ்லிம் வேட்பாளர் எப்படி நடக்க வேண்டும்?
இன்றைய வேட்பாளர்களின் நிலை!
இன்று நடைமுறையில் என்ன நடக்கிறது? வேட்பாளர் தொகுதியில் வசிப்பவராகவும் இருக்க மாட்டார். அந்த மக்களுக்கு எவ்விதத் தொண்டும் செய்திருக்க மாட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் அத்தொகுதியில் தலையைக் காட்டுவார். காணும் மக்களுக்கெல்லாம் கூழைக்கும்பிடு போடுவார். அங்குள்ள சிலைகளுக்கெல்லாம் மாலையிட்டு மரியாதையுடன் கும்பிடுவார். கோவில், சர்ச், தர்கா, பள்ளிவாசல் என ஏறி இறங்குவார். அப்போது மட்டுமே. அந்த வேட்பாளருக்கு அங்குள்ள மக்கள் எல்லாம் மக்களாகத் தெரிவார்கள்.
கூலிக்கு ஆட்களைப் பிடித்து மாலைகள் வாங்கிக் கொடுத்து மக்கள் முன் தனக்கு மாலையிடச் செய்து, ஆகா, ஓகோ என புகழச்செய்து தான் மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றவர் என நடிப்பார். தேர்தல் வேலை செய்கிறவர்களுக்கு பணம் கொடுத்து, சாராயமும் வாங்கிக் கொடுத்து பெருங்கூட்டத்துடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு வேட்டையாடுவார்.
தேர்தலுக்கு முதல் நாள் வீடு வீடாக ஏற இறங்கி 500/-, 100/- எனக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றி வாகை சூடுவார். அதன் பின்னர் அந்தத் தொகுதிப் பக்கம் அவர் தலைகாட்டுவது அரிதிலும் அரிது. தேர்தல் சமயம் செலவிட்ட பணத்தை வட்டியும் முதலுமாக அதைவிட பன்மடங்காகச் சுருட்டுவதிலேயே குறியாக இருப்பார். இன்றைய வேட்பாளர்களின் நிலை இதுதான்.
ஆனால் வருதப்பட வேண்டியது என்ன தெரியுமா? இன்று இந்திய அரசியல் களத்தில் இறங்கும் முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸ் போதிக்கும் அழகிய நடைமுறைகளைக் கைகழுவி விட்டு, மாற்றார்கள் கடைபிடிக்கும் தேர்தல் அசிங்கங்களையே இவர்களும் பின்பற்றி நடப்பதாகும். இப்படி மாற்றாரின் நடைமுறைகளைப் பின்பற்றி, இறை நம்பிக்கை(ஈமான்) இழந்து நாளை மறுமையில் நரகம் புகுவதைவிட அரசியலில் ஈடுபடாமல் இருப்பதே அவர்களுக்கு மிக நல்லதாகும்.
முஸ்லிம் வேட்பாளர் எப்படி நடக்க வேண்டும்?
முஸ்லிம்கள் இன்றைய ஜனநாயக அரசியலில் ஈடுபட விரும்பினால், முதலில் மக்களுக்கு தொண்டு செய்து அதன் மூலம் மக்களுக்கு அறிமுகமாக வேண்டும். அவர்களே விரும்பி இவர்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும். அவர்களே தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டும். தேர்தல் அல்லாத காலங்களில் மக்கள் சேவைக்காக வீடுவீடாக ஏறி இறங்குகிறவர்கள் தேர்தல் நேரத்தில் வீடுவீடாக ஏறி இறங்கி வாக்கு வேட்டையாடவோ, வாக்குகளை விலைக்கு வாங்கவோ முற்படக்கூடாது.
கோவில், சர்ச், தர்கா, பள்ளிவாசல் என ஏறி இறங்கி வாக்குகளைக் கேட்கக் கூடாது. சிலைகளுக்கு, சமாதிகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்து கும்பிடக்கூடாது. பணியாளர்களுக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து வேலை வாங்கும் கேவல நிலைக்கு ஆளாகக் கூடாது. போலியாக மக்களைக் கவரும் எவ்வித நடிப்பிலும் ஈடுபடக் கூடாது. தொண்டை முறை தவறி தொழிலாக்கியுள்ள மாற்றாரின் அநீதமான தேர்தல் யுக்கிகளைக் கையாளக் கூடாது.
ஆலிம்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் உண்டு. களத்தில் மக்களைவிட்டு தூரமாக இருக்கும் ஒரு கட்சிக்கு “தாய்ச்சபை… தாய்ச்சபை…” என்று ஆதரவாக, அரசியல் ஞானம் இல்லாமலேயே சில ஆலிம்கள் ஆதரவு தேடுவது இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல அக்கட்சி ஒரு திராவிட கட்சிக்கு கட்டுப்பட்டு அடிமைப்பட்டு அவர்கள் ஆளாகவே அதிகாரப்பூர்வமாக தேர்தலில் போட்டியிடுவதும்… அதே சமயம் முஸ்லிம் மக்களிடம் தங்களை ஒரு முஸ்லிம் கட்சியாக காட்டி பகிரங்கமாக ஏமாற்றுவதும், அவர்களை முன்னிலைப் படுத்தும் ஆலிம்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவையெல்லாம் தவறான வழிகாட்டுதல்கள்.
வாக்களிப்பது ஹராம் – ஷிர்க் எனத் தீர்ப்புக் கொடுப்பதும் (ஃபத்வா) ஒரு சில ஆலிம்களே!
வாக்களிக்கலாம்; ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் போட்டியிடுவது ஹராம்; ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரித்து உயிரைக் கொடுத்தேனும் வேலை செய்து அவர்களை வெற்றிபெறச் செய்வது நமது கடமை எனத் தீர்ப்பு சொல்லும் ஆலிம்களும் உண்டு.
தேர்தலில் ஹராம், ஹலால், ஷிர்க், பித்அத் இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எப்பாடுபட்டாவது அரசியலில் ஈடுபடுவதே இந்திய முஸ்லிம்களுக்கு நன்மை என்று சொல்லும் ஆலிம்களும் உண்டு.
இன, மொழி, ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என பேதம் பாராது மனித நேயத்துடன் சமூகத் தொண்டு செய்து அதன் மூலம் மட்டுமே தொகுதி மக்களுக்கு அறிமுகமாகி, அந்த மக்களே இவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி, வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்த அழகிய இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள் தாராளமாக அரசியலில் ஈடுபடலாம். தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கலாம். எம்.எல்.சி., எம்.எல்.ஏ., எம்.பி. மந்திரி என மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்றுவதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்காது.
அல்லாஹ்மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லிம், மக்களுக்கு உண்மையிலேயே தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம், மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகளை எடுத்து நடப்பதில் ஒருபோதும் பின்வாங்க முடியாது.
ஆனால் போலியான ஒரு முஸ்லிம், மக்களுக்குத் தொண்டு செய்கிறேன் பேர்வழி என கிளம்பி, தொண்டை தொழிலாக்கி அநீதமான முறைகளில் மக்கள் பணத்தைச் சுருட்டவும், பொது மக்களை ஏமாற்றி வஞ்சிக்கவும் முற்பட முடியும். அப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளுக்கே மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகள் வேம்பாகக் கசக்கும். நடைமுறை சாத்தியமில்லை என பிதற்றுவர். அவர்கள் மட்டுமே இஸ்லாம் கூறும் இந்த விதிமுறைகளைப் புறக்கணித்துவிட்டு மாற்றார்களின் அநீதமான, சுயநலமிக்க, மக்களை வஞ்சிக்கும் நடைமுறைகளைப் பின்பற்ற முடியும். அப்படிப்பட்டவர்கள் இன்றைய அரசியலில் ஈடுபடாமல் இருப்பதே அவர்கள் தங்களை மறுமையின் வேதனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.