ஆண் பெண் பற்றிய அணிமொழிகள் (1)
1. கணவனும் மனைவியும் எவரும் எவருக்கும் கீழில்லை; மேலில்லை, இருவரும் சராசரி சரிசமமானவர்கள்.
2. இல்லத்தை ஆள்பவள் இல்லாள். இல்லத்து ஆளின் இதயத்தை ஆள்பவளாக அவள் இருத்தல் வேண்டும். இல்லாதவளாக அவள் போய்விடக் கூடாது.
3. ‘பெண் தாதி’ என்பதே ‘பெண்டாட்டி’ ஆகியது கணவன். பிள்ளைகள், பெற்றோர், உறவினர் ஆகியவர்களை தாதி (செவிலி) போல் போற்றிப் பாதுகாக்க வேண்டியவளாதலின் இப்பெயர் பெற்றனள்.
4. கல்யாணக் கன்னியர்கள் கண்ணாடிப் பாத்திரங்கள், கை நழுவி விடாமல் கவனமாகப் புழங்குங்கள்.
5. வேறொரு வீட்டுச் சோலையிலிருந்து கணவன் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த இள மூங்கிலே புது மங்கை, கணவன் நினைத்தால் இவளைக் குடும்பப் புகழ்பாடும் புல்லாங்குழலாக மாற்றலாம்; அடுப்பூதும் ஊது குழலாகவும் மாற்றலாம்.
6. வருவாய், வெளியுறவுத் துறைகள், பொறுப்புடைய, குடும்ப தேசத்தின் பிரதமர் கணவன், உள்துறை குடும்ப நலத்துறை அமைச்சரே மனைவி.
7. புது மனைவி புருஷன் வீட்டிற்கு புகுத்த புத்தழகு ஓவியம். கணவன் அதை கட்டிலறையில் மாட்டி அழகு பார்க்கலாம். சமையல் அட்டிலறையில் பூட்டி வைத்து கரியும் புகையும் படியவும் செய்யலாம்.
8. கல்யாணம் செய்து வந்த கன்னியர்களை மனம் கன்னிப் போகாமல் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது கணவர்களின் கடமையாகும். அவர்கள் உரிமையில் ஒருபோதும் ‘கன்னம்’ வைக்கக் கூடாது.
9. மனைவியர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கள்வர்களாக கணவர்கள் இருக்கலாம். உள்ளதைக் கொள்ளையிடும் ‘கள்வர்கள்’ ஆகிவிடக் கூடாது.
10. மனைக்கு தலைவி மனைவி, அவள் என்றும் தன் தலைவனான கணவனுக்கும் தம் பிள்ளைகளுக்கும் தலைவியாக இருத்தல் வேண்டும். தலைவலி ஆகிவிடக் கூடாது.
11. கணவனும் மனைவியும் இல்லறக் கல்லூரியின் மாணவர்கள்; மா ஆண்வர்கல் அல்லர்.
12. கணவனும் மனைவியும் இல்லற வாழ்வில் சரிசமம் ஆனவர்கள்; தன் மானம் உடையாத மானவர்கள்.
13. கட்டிலறையிலும் அட்டிலறையிலும் விதவிதமான சுவையுடன் உணர்வும் உணவும் படைப்பவள் மனைவி.
14. சமையல் என்பது ‘சமைந்த்’ ஆண் பெண் இருவருக்கும் உரியதாகும். கட்டிலறையும் அட்டிலறையும் இருவருக்கும் உரிய செயற்களமாகும்; வேலைத் தளமாகும்.
15. வீணையாய் வந்த வனப்பான வனிதையை தாம்பத்ய விரல்களால் மீட்டி இல்லற இசை எழுப்புங்கள்; எரிந்து எரிந்து விழுந்து வீணாய் விறகாய் கொழுந்து விட்டு எரிய வைத்து விடாதீர்கள்.
16. பிள்ளைகள், பெற்றோர், உறவினர் ஆகியவர்களுக்காக ஓடாய் துரும்பாய் உழைத்து, மெழுகாய் உருகி ஒளி பாய்ச்சுபவர்களே உண்மையான தம்பதியர்.
17. குடும்பப் பக்தியுள்ள தம்பதியினர் ஊதுபத்தியாக உழைத்துருகி நாட்டுக்கும் வீட்டுக்கும் மணம் சேர்ப்பார்கள்.
18. ஏக இறைவனை நம்பும் ஆண் பெண்கள் ஏகபத்தினி விரதத்தையும் ஏகபர்த்தா விரதத்தையும் இறுகப் பற்றுவார்கள்.
19. திருமணமான தம்பதியருக்கு தம் பதியான ஊரும் வீடுமே என்றும் திருப்தியான திருப்பதி.
20. சந்தனம் அரைக்க அரைக்க மணம் பெறும் ‘தந்தனம்’ என குடும்பத்திற்கு தம்மை தானம் செய்யும் தம்பதியர் இரைக்க இரைக்க உழைத்து புகழ் மணம் பெறுவர்.
21. குடும்ப ஆலமரத்தின் ஆணிவேர் ஆடவன்; தாய் மரம் மனைவி, விழுதுகள் பிள்ளைகள் இணைந்து செயல்பட்டால் ஆலமரம் தழைத்து வளரும்.
22. ஊதாரிகளான கணவன் – மனைவியர் குடும்பத்தின் உதவாக்கரைகளாக ஊராரால் ஊதிப்பறக்க விடப்படுவர்.
23. உடல்நலக் குறைவில் ஒருவருக்கொருவர் தாங்கலாகவும் நிழலாகவும் தங்களை குறைவின்றி அர்ப்பணிப்பவர்களே தகைமையுடைய தம்பதியினராவர்.
24. மேலாடை என்பது உடல்மேல் அணிவதற்காக; மேனியை மேதினியாரிடமிருந்து மறைப்பதற்காக. துணிந்து உரிந்து உடலை வெளிக்காட்டுவதற்கு துணை செய்வதற்கல்ல துணி.
25. உறுப்புகளை மூடினால் அழகு; மூடாமல் விட்டால் அழுக்கு.
26. அங்கங்களை அங்கங்கே திறந்து காட்டி பங்கத்துடன் நடப்பவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம் போன்றவர்கள். பலரும் இதில் பதிவு செய்ய முயலலாம்.
27. மயிலுக்கு முழுத்தோகை அழகு; மங்கைக்கு முழு ஆடை அழகு.
28. பாலுக்கு மூடி பாலாடை; பருவப் பெண்பாலுக்கு மூடி மேலாடை.
29. விழியாலும் விளியாலும் வலை மீசி தூண்டில் போடும் காமுக வேடர்கள் ஆண்களிலும் உண்டு; பெண்களிலும் உண்டு.
30. ஆபாசமாக ஆயாசமாக ஆடையணிந்து குலுக்கித் தளுக்கி நடப்பவர்கள் மறைமுகமாக பாலியல் வன்முறையை தூண்டுபவர்களாவர்.
31. ஆண்-பெண் இருபாலாரும் பண்பாட்டின் பெருமாதிரியான கல்விக்கூடங்களாக நடத்தல் வேண்டும். ஒரு மாதிரியாக நடமாடும் கலவிக் கூடமாக நடமாடிவிடக்கூடாது.
32. பெண்கள் அளவோடு நகையணிந்து நடந்தால் அழகான கலை. அளவின்றி நகை சுமந்து நடந்தால் பிறர் நகைப்பிற்குரிய அழுக்கான களை.
33. அளவற்ற ஆடை யணி அலங்காரங்களை பாரமாகக் கொண்ட பாவைகள் கணவர்களுக்கு பாரமாவார்கள். அகங்கார பாவத்தின் பாரத்தையும் அவர்கள் சுமக்க நேரிடும்.
34. உணர்ச்சியால் தூண்டப்பட்டு காமப் பாசத்துடன் ஆ வென வாய் திறக்க வைப்பதே ஆபாசம்.
35. பெண்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் மட்டுமல்ல கணவர்களுக்கும் கண்கள் தான். எவராவது தம் கண்களைக் குத்திக் கிழிப்பார்களா? பார்வையிழக்கத் துணிவார்களா?
36. மனைவிக்கு ‘கண் அவன்’ கணவன் இமைப் பொழுதும் தூசி விழாமல் அவனைக் காக்கும் இமைகளாக இமைக்காமல் அவர்கள் செயல்பட வேண்டும்.
37. நல்ல பொண்ணுக்கு வல்ல அழகு பொன் நகையல்ல; புன்னகையே.
38. நிறம், மணம், மென்மை, என்பன மலரின் குணங்கள் அழகு, அறிவு, ஒழுக்கம் என்பன பூவையின் குணங்கள்.
39. அழகு என்பது கறுப்பு, வெளுப்பு, சிவப்பு வண்ணத்தில் வருவது அல்ல, நெஞ்சின் நல்ல எண்ணத்தில் உருவாவது.
40. புற அழகு வயது ஏற ஏற இறங்கத் தொடங்கும். தோல் சுருங்க சுருங்க தேக்கங்கொண்டு போய் விடும். அக அழகு வயது ஆக ஆக ஆக்கங்கொண்டு ஆகிவரும்.
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் முனைவர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை
இன்ஷா அல்லாஹ் ”அணிமொழிகள்” தொடரும்