அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், சென்ற பதிவில் சகோதரர் தஸ்தகீர் (crown) சொனதுபோல் இந்தத் தொடர் நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கும் என்று நம்பலாம்.அல்லாஹ்வுக்காவும், அவனின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காகவும் கண்ணீர் சிந்திய மக்களின் வரலாறுகளை அதிகமதிகம் படித்து நாமெல்லாம் படிப்பினை பெற வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் சிறு வயதில் தன் தந்தையை இழந்து, பிறகு தன் தாயையும் இழந்து, அனாதையாகி யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக ஆடு மேய்த்து, குரைசிகளிடம் காய்ந்த பேரித்தம்பழங்களுக்காக(உணவுக்காக) வேலைபார்த்து அப்துல் முத்தலீப் அவர்களுடன் 8 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அப்துல் முத்தலீப் அவர்களையும் இழந்து. அந்த 8 வயது காலகட்டத்திலிருந்து அபூதாலிப் அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிபுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அபூதாலிப் எல்லா உபகாரமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்தார், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் போது எல்லாவிதமான உதவிகளும் செய்தார். ஆனால் தன்னுடைய மரண நேரத்தில் இஸ்லாத்தை தழுவாமல் இறந்துவிட்டார்.
அபூதாலிப் வாழ்நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்த உபகாரம் நபி அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. கலிமா சொல்லாமல் மரணிக்கப்போகிறாறே தன்னுடைய பெரிய தந்தை. லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை மட்டும் சொன்னால் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக மன்றாடுவேனே என் பெரிய தந்தையே என்று அழுது அழுது கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிபின் மரண நேரத்தில்.
அந்த நேரத்தில் அல்லாஹ் பின் வரும் இறைவசனம் அல்லாஹ்விடமிருந்து இறங்கும் அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுதார்கள் என்று (புகாரி 1360) ஹதீஸ் தொகுப்புகளில் காண்கிறோம்.
”முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.” (அல் குர் ஆன் 9:113)
கலிமா சொல்லாமல் ஒருவர் மரணித்தால், அவர் எங்கு செல்வார் என்பதை அல்லாஹ் தன் தூதர்களுக்கு விளக்கியிருந்தான், அந்த கொடிய நிலை தன்னை வளர்த்து, பாசம் காட்டி, வாழ்வில் பேருதவியாக இருந்த தன்னுடைய பெரிய தந்தைக்கு வரப்போகிறதே என்று நினைத்து நினைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுதுள்ளார்கள் என்பதை நாம் வரலாறுகளில் காணமுடிகிறது.
இது போல் மற்றுமொரு உருக்கமான சம்பவம் நம் இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தவை.
மக்கா வெற்றிக்கு பிறகு நபித்தோழர்கள் ஆனந்தக் கண்ணீருடன் உற்சாகமாக இருந்த காலகட்டத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபைக்கு வயது முதிர்ந்த ஒரு பெரியவரை இருவர் அழைத்து வருகிறார்கள். “யார் அந்த பெரியவர்?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க கேட்டார்கள், அவர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தகப்பனார் என்று கூறப்பட்டது.
நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பண்பை பாருங்கள், அபூபக்கர் தன்னுடைய பாசமான மாமனார் அல்லவா, தன்னுடைய மூத்த தோழர் அல்லவா. அந்த முதியவர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தையாவார்.
“இந்த வயது முதிர்ந்த முதியவரை இவ்வளவு சிரமப்பட்டு இங்கு ஏன் கொண்டுவந்தீர்கள், சொல்லியனுப்பிருந்தால் நான் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்திருப்பேனே” என்று அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அன்பாக வினவினார்கள்.
“யா ரசூலுல்லாஹ் எனது தந்தைக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுங்கள்” என்று அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தைக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுக்க, அவரும் இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கையை நீட்ட சொல்லி தன்னுடைய கையை நபியவர்களின் கையின் மேல் வைத்தார்.
உடனே அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்கள். “தந்தை இஸ்லாத்தை தழுவிய இந்த சந்தோசமான தருணத்தில் ஏன் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுகிறார்கள்” என்று அருகில் இருந்த தோழர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து ” யா ரஸூலுல்லாஹ் நான் ஏன் அழுகிறேன் தெரியுமா? உங்களுடைய கைக்கு மேல் இப்போது என்னுடைய தந்தையுடைய கை இருக்கிறது இஸ்லாத்தை தழுவுவதற்காக, ஆனால் உங்களுடைய கைக்கு மேல் உங்களை வளர்த்து ஆளாக்கி, வாழ்நாட்களில் எல்லா வகையான உதவிகள் செய்த உங்கள் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுடைய கை இருந்து, அதை பார்த்து உங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வருமே அதை பார்க்கிற வாய்ப்பு எனக்கு இல்லாமல் போயிவிட்டதை நினைத்து அழுகிறேன் யா ரஸூலுல்லாஹ், என்னுடைய தந்தை இஸ்லாத்தை தழுவுவதை காட்டிலும் உங்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்க வேண்டும் யா ரஸூலுல்லாஹ்” என்று சொன்னார்கள் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்க வேண்டுமே என்று அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அழுதிருக்கிறார்கள், ஆனால் எவ்வளவு தான் இஸ்லாத்திற்காக என்னற்ற உதவிகள் பல செய்தாலும் அல்லாஹ் இணைவைப்புடன் யார் மரணித்தாலும் அவர்களுக்கு நிரந்தர நரகம், அவர்களுக்காக நாம் பாவமன்னிப்பு கேட்பதை அல்லாஹ் தடுத்துள்ளான்.
மேல் சொன்ன வரலாற்று சம்பவங்களிலிருந்து நாம் படிப்பினைபெற வேண்டியது என்னவென்றால், அல்லாஹ் தான் மன்னிக்க மாட்டேன் என்று சொல்லும் பாவம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலேயே அவர்களை வளர்த்து ஆளாக்கி இஸ்லாத்திற்காகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏகத்துவ பிரச்சாரத்திற்காகவும் எண்ணிலடங்கா உதவிகள் செய்த தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு மன்னிப்பு வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கான காரணம் அல்லாஹ்வுக்கு அபூதாலிப் அவர்கள் இணைவைத்தது மட்டுமே.
நம்முடைய சொந்தங்கள் எத்தனையோ பேர் உயிரோடு இருக்கும்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றார்களே, அவர்களை அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காக என்றைக்காவது நாம் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்திருக்கிறோமா?
இணைவைப்பில் ஈடுபடும், பெற்றோர்கள், பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்களை அக்காரியங்களிலிருந்து விடுபட வைக்கும் வேலைகளை கவலையுடன் நாம் செய்திருக்கிறோமா? அதற்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுதிருக்கிறோமா?
நம்மோடு பாசமாக இருக்கும் சொந்தங்கள் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லும் இணைவைப்பு பாவத்துடன் மரணித்தால் அவர்களுக்காக நாம் என்ன துஆ செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதற்கு மேல் சொன்ன குர் ஆன் வசனம் (9:113) சாட்சியாக உள்ளதே அதை நினைத்து அழுதிருக்கிறோமா?
நம்முடைய தாய், தந்தை, மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள் தொழாவிட்டால் அழுதிருக்கிறோமா?
நம்முடைய தாய், தந்தை, மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள் இணை வைப்போடு மரணித்தால், நரகத்தின் அடித்தட்டிற்கு தள்ளப்படுவார்களே என்று நினைத்து அழுதிருக்கிறோமா?
M.தாஜுதீன்
source: http://adirainirubar.blogspot.in/2013/04/4.html