“இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன்.’ எனும் இறைவாக்கை அலட்சியப்படுத்தும் ‘பித்அத்’ வழிகேடர்கள்!
தான் நினைப்பதையெல்லாம் செய்யத் தகுதியுள்ள ஒரேயொரு இறைவனாகிய அல்லாஹ், மனிதர்கள் இவ்வுலகில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக எடுத்து, அல்லாஹ்வை மட்டும் வணங்கி, அவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். அல்லாஹ் நம்மை எதற்காக படைத்திருக்கின்றான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டியது கடமையாகும்.
அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்களை அனுப்பி மக்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டும்தான் வணங்கவேண்டும், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது, அவனுக்கு நிகராக எந்தவொன்றையும் இணையாக்கிவிட வேண்டாம் என்று மனிதர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தை கற்றுக்கொடுக்க வைத்தான். ஒவ்வொரு காலத்திற்கும் தூதர்களை அனுப்பி இறுதியாக ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை இறுதி நபியாக அனுப்பினான்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 23 வருடங்களாக இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக எடுத்து வாழ்ந்து, அதைப் பிறருக்கும் எத்திவைத்து வந்தார்கள். பின்னர் அவர்களின் இறுதிக்கால கட்டத்தில், அதாவது அவர்கள் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் அரபா மைதானத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்த அனைத்து மக்களையும் அழைத்து இறுதியாக பெரிய உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அந்தப் பேருரையில் 23 வருடகாலமும் இஸ்லாத்தைப்பற்றி கூறிய அனைத்தையும் ஒரு சுருக்கமாக கூறிவிட்டு, இன்றைய தினத்தோடு இஸ்லாம் மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்கள்.
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன். எனது அருளை உங்களுக்காக முழுமைப்படுத்திவிட்டேன். இஸ்லாத்தை உங்களின் வாழ்க்கை நெறியாக பொருந்திக்கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையோன்.’ (அல் மாயிதா 5:3)
மார்க்கத்தை அறைகுறையாக படித்த சிலர் தங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ளவும், சுகம் அனுபவிக்கவும், கௌரவத்தை வளர்த்துக்கொள்ளவும் இதுபோன்ற சுயநலத்திற்காக அல்லாஹ்வுக்கு அச்சப்படாதவர்களாக மார்க்கத்தில் இல்லாதவைகளை புதிதாக உண்டாக்கினார்கள், இன்னும் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக மார்க்கத்தில் வரம்புமீறிச்சென்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் கற்றுக்கொடுத்த இபாதத்கள் போதாது என்று சொல்லிக்கொண்டு, இன்னும் பல இபாதத்களை(?) உருவாக்கிக்கொண்டார்கள். ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது போல் இவர்களின் போக்கு மாறிவிட்டது.
யாராவது புதிதாக ஒன்றை இஸ்லாம் மார்க்கத்தில் உண்டாக்கினால் அது நிராகரிக்கப்படும், அதுமட்டுமல்லாமல் அதை உருவாக்கியவர்கள் செல்லும் இடம் நரகம்தான் என்று மிக கடுமையான எச்சரிக்கையை இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு ஏவியிருக்கின்றது. இருந்தும் கூட இம்மார்க்கத்தை படித்தவர்கள் எந்தவிதமான பயமும் இல்லாதவர்களாக இம்மார்க்கத்தில் புதியவைகளை புகுத்திவிட்டார்கள், இவர்கள் அல்லாஹ்விடத்தில் என்ன சொல்லி தப்பப்போகின்றார்கள்.
‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி-2697)
இன்று நமக்கு மத்தியில் நடைபெறும் மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட பித்அத்கள் மவ்லிது, கத்தம், ஃபாத்திஹா, கந்தூரி, கொடியேற்றம், ராத்திபு, திக்ர், பைத், தரீக்கா வழிபாடு, கப்ர் வழிபாடு, அவ்லியா வழிபாடு, தட்டு, தகடு, தாயத்து, முஹர்ரம் முதலாம் நாள் தொடக்கம் பத்தாம் நாள் ஹஸன், ஹுஸைன் ஞாபகார்த்தம், ஸஃபர் மாதம் ஒடுக்கத்துப் புதன், பராஅத் நோன்பு என்றும் அதற்குமேல் மிதமிஞ்சிப்போய் தொழுகை, நோன்பு, போன்ற இபாதத்களிலும், ஒருவர் மரணித்தால் மையத்து குளிபாட்டுவதிலிருந்து அடக்கம் செய்யும் வரை நடைபெறும் பித்அத்கள் போன்றவைகளை மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு நடைமுறைப் படுத்திக்கொண்டு வழிகேட்டில் சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட பித்அத்கள் பற்றி எழுதப்போனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தலைப்பிட்டு எழுதிக்கொண்டே செல்லலாம், இவ்விடத்தில் பித்அத் என்றால் என்ன? அது எவ்வாறு உருவானது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பவற்றை ஒரு குறும்பார்வையாக மட்டும்தான் எடுத்துக்காட்டியிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் தனி தலைப்பில் ஒவ்வொரு பித்அத்களையும் விரிவாக எழுதி மக்களுக்கு தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.
இஸ்லாமியர்களே! இஸ்லாம் மார்க்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோடு முழுமைப்படுத்தபட்டுவிட்டது என்பதை நாம் உணர்ந்து குர்ஆனையும், ஸுன்னாவையும் மட்டும் பின்பற்றியவர்களாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
அன்புச் சகோதரன்
S.L.முஹம்மது நிக்றாஸ்
source: http://aalamulislam.webs.com/articles.htm