ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்! ஏன்? எதனால்?
அறிவியலாலளர்கள், ஆண்களுக்கில்லாத பல சிறப்புத் திறமைகள் பெண்களிடம் தென்படுவதைக் கண்டறிந்திருக்கிறார்கள். எல்லா உயிரினங்களிலும் ஆண் உயிரி தன் விந்தணுக்களைப் பரவலாக விதைப்பதற்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
உயிரினத்தின் உருவாக்கமும் பராமரிப்பும் முழுக்க முழுக்கப் பெண்ணினத்தின் கையில்தான் இருக்கிறது. சில அம்சங்களில் ஆணின் திறமை ஓங்கியிருப்பது உயிரினத்தின் பாதுகாப்புத் தேவைகளை முன்னிட்டு இயற்கை கொடுத்துள்ள சலுகை.
மனம், மூளை ஆகியவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இயற்கை ஆணையும் பெண்ணையும் சமமான நிலையிலேயே வைத்திருக்கிறது. ஆண்களுக்கு இல்லாத பல சிறப்புத் தன்மைகளையும் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறது.
அடுக்களையில் ஆழ்ந்திருக்கும் தாய்க்குத் தன் கைக்குழந்தை படுக்கையறையில் லேசாகச் சிணுங்குகிற ஒலிகூடக் கேட்டுவிடும். கல்யாணக் கூட்டத்தில் குழந்தையின் சிரிப்பு அல்லது அழுகையின் ஒலி கேட்டால் அதன் தாய் அந்த ஒலியின் திசையறிந்து குழந்தையை நோக்கி விரைவாள். இது ஆண்களுக்கு இயலாது.
ஏனெனில், உயிரினம் தொடங்கிய காலத்திலிருந்தே பசி அல்லது பயத்தால் வீறிடும் குட்டியின் குரலைக் கேட்டு அதன் உதவிக்கு விரையும் உள்ளுணர்வு எல்லாப் பாலூட்டி விலங்கினத் தாய்மார்களின் மரபணுக்களில் பதியப்பட்டுள்ளது.
“முதலைத் தாய்மார்கள்’கூட மண்ணில் புதைத்த தமது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிப்படும் நேரத்தில் குரல் கொடுப்பதைக் கேட்டு விரைந்தோடி வந்து மண்ணுக்குள்ளிருந்து அவற்றை விடுவிக்கின்றன. பெண்களின் உட்காதிலுள்ள நத்தைக் கூடு உறுப்பில் உணர்வு இழைகள் ஆண்களுக்கு இருப்பதைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளன. வயதாவது மற்றும் நோய்வாய்ப்படுவது போன்ற காரணங்களால் அவை வலுவிழப்பதுகூடப் பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான அளவிலேயே நேர்கிறது.
பெண்களுக்குள்ள மோப்ப சக்தியும் ஆண்களினுடையதைவிட அதிகக் கூர்மையானது. அபாயகரமான வாயுக்கள் அல்லது நச்சுப்பொருள்களின் வாசனைகள் போன்றவற்றை உடனடியாக உணர்ந்து தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்றிக்கொள்ள வேகமாக விலகிச் செல்லும் உந்துதலைப் பெண் விலங்குகள் பெற்றிருக்கின்றன.
அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி,
மொழியைக் கையாளுவதில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகத் திறமை பெற்றிருப்பது நிரூபணமாயுள்ளது. ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகள் சீக்கிரமாகப் பேசக் கற்றுக்கொண்டு விடுகின்றன. அவர்களின் சொல் வளமும் விரைவாக அதிகரிக்கிறது. அவர்களுடைய பேச்சில் புதிதாகக் கற்றுக்கொண்ட சொற்கள் அதிகமாயிருக்கும்.
மொழித் திறமை பற்றிச் சம வயதுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளை வைத்துச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகள் ஒன்றரை மடங்கு அதிகமான லாகவத்துடன் மொழிகளைக் கையாளுவதாகத் தெரிய வந்துள்ளது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பல கோணங்களில் வர்ணிப்பதையும், வேகமான சம்பாஷணைகளையும், சூசகமான செய்திப் பரிமாற்றங்களையும், இரட்டை அர்த்தமுள்ள கூற்றுகளையும் பெண்கள் அதிக அளவில் புரிந்து கொள்கிறார்கள்.
இத்தகைய மொழித்திறமை வளர்ந்த பின்னரும், பெண்களிடம் நீடிக்கிறது. ஒரே பொருளுள்ள பல சொற்கள், ஒரு சொல்லின் பல்வேறு பொருள்கள் போன்றவற்றைக் கையாளுவதில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகத் திறமை பெற்றுள்ளனர். சொல் விளையாட்டுகளிலும், குறுக்கெழுத்துப் போட்டிகளிலும் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள். தாய்மொழி தவிர்த்த மற்ற மொழிகளைப் பயில்வது மற்றும் பயில்விப்பது ஆகியவற்றில் பெண்களே மேலானவர்கள்.
இரு வெவ்வேறு மொழிகளில் மாறி மாறிப் பேசுவதிலும் பெண்களுக்குத் திறமை அதிகம்.
ஆண்களைவிடப் பெண்களே அதிகத் திறமையான மொழிபெயர்ப்பாளர்களாக விளங்குகிறார்கள்.
பெண்களின் கை விரல்களும் ஆண்களின் கை விரல்களைவிட அதிகச் செயல் திறனுள்ளவை. மெலிந்து நீண்டிருக்கும் விரல்கள் பூத்தொடுப்பது, புள்ளி வைத்துக் கோலம் போடுவது, தட்டச்சுச் செய்வது, கணினித் திரையை இயக்குவது, கைக்கடிகாரங்கள் போன்ற சிறு கருவிகளில் உறுப்புகளைப் பொருத்துவது போன்ற நளினமான வேலைகளை அதிக லாகவத்துடன் செய்கின்றன. அதற்குத் தேவையான பொறுமையும் நெடுநேரக் கவனக் குவிப்புத் திறனும் பெண்களிடம் அதிகமாக உள்ளது.
பல வெற்றிகரமான ஆண் நிர்வாகிகளின் சாதனைக்குப் பெருமளவு காரணமாயிருப்பது அவர்களுடைய தனி உதவியாளர்களாகவும் செயலர்களாகவும் திறமைமிக்க பெண்களை நியமித்துக் கொண்டதுதான் என அந்த ஆய்வு கருத்துத் தெரிவிக்கிறது. பல ஆண் நிர்வாகிகள் சிக்கலான சந்தர்ப்பங்களில் தமது மனைவியிடம் கலந்தாலோசிப்பதுண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
பெண் நிர்வாகிகள் சிறப்பாகச் செயல்படப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆண்களைவிடப் பெண்கள் அதிகமான சிநேகபாவத்தைக் காட்டுகிறார்கள். அதிகமாகப் புன்னகை புரிகிறார்கள். எதிரிலிருப்பவரின் கண்களைப் பார்த்துப் பேசுகிறார்கள். எதிரிலிருப்பவர் பேசும்போது குறுக்கீடு செய்யாமல் முழுமையாகக் கேட்டுவிட்டுப் பிறகே தமது கருத்தை வெளியிடுகிறார்கள்.
பெண்களுக்கு மற்றவர் மனதை நோகடிக்க மனம் வராது. ஒருவர் கூறும் தகவல் தவறு என்று தெரிந்தால் அதை இங்கிதமாகவும் நாசூக்காகவும் சொல்லித் திருத்துவார்கள். எதிரிலிருப்பவரின் முகபாவம், உடலசைவுகள், குரல் தன்மை போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அவருடைய மனதில் ஓடும் எண்ணங்களைக் கண்டுபிடிக்கும் திறமை பெண்களுக்கு அதிகம். அதேநேரத்தில், தமது உணர்வுகளை முகத்தில் காட்டாமலிருக்கப் பெண்கள் முயலுவதில்லை.
பெண்கள் பொங்கியெழுந்தால் புரட்சிதான். ஆண்கள் வசனம் எழுதி, இயக்கி வருகிற சினிமாக்களிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் சித்திரிக்கப்படுகிற பெண்கள் உண்மையான பிரதிநிதிகள் அல்ல.
பெண்களின் உயர்வை ஒப்புக்கொண்டு, ஆண்கள் பொறுமையுடனும், பண்புடனும் நடந்துகொண்டு ஆண் வர்க்கத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்
(தினமனியில் வெளியான கே.என். ராமசந்திரன் அவர்களின் “பெண்களே மேலானவர்கள்” கட்டுரையிலிருந்து)