மாயையில் பேதலிக்கும் மனிதம்!
ஃபாத்திமா நளீரா
காலையில் – நீ
முஸ்லிமாக
வெளியே செல்கிறாய்
மாலையில்
முனாஃபிக்காக
வீட்டில் விழுகிறாய்.
உன்…
ஆன்மீக சிந்தனையை
புழுக்கள் கூட்டம்
புசித்து விட்டனவா?
மாயைகளின்
புகைக்குள் மிதக்கிறாயே..
கலாசாரத்தைத்
தாண்டிய
கால்களுக்கு
மண்ணறை வேதனையின்
“நாகரீக”த் தீர்ப்பு
எப்படியிருக்கும்
தெரியுமா?
போதைக்கும்
மாதுவுக்கும்
பொற்கிழி கொடுக்கிறாயா?
கவனம்…
மரண வேதனைக்கு
மருத்துவம் இல்லை
இறுதி வரை – உன்
ஆன்மாவின்
மன்றாட்டம்
மறுமை வரை
மிதிபட்டுக் கொண்டே
இருக்கும்…
அன்னிய மோகத்தில்
முகம் கழுவி
குர்ஆனை விட்டு
வெளியேற – எத்தனை
விருதுகள் – உனக்கு
விருந்து படைத்தன…
ஹராமுடன்
படுக்கை அமைத்து
இசையுடன் உறங்கி
நெருப்பைத் தின்று
சடலமாக வாழ
உனக்கு – என்ன
‘பட்டம்’ தேவை?
மரணம்
பின்னால் இருப்பதாக
நினைக்கிறாயா? அது
உன் முன்னால்தான்
சிரித்துச் சிரித்து
சீற்றமாகச் சீறுகிறது..
உன் இளமைக்கு
விருந்து கொடுக்கும்
படிதாண்டிய
எண்ணங்களை
பட்டியலிட்டுப் பார்
அடுத்த தலைமுறை கூட
தலைகுனிந்த
பரம்பரையாக
கண்ணீர் விடும்..
நன்றி: விடி வெள்ளி 03-01-2013
source:http://fathimanaleera.blogspot.in/2013/01/blog-post.html#more