திருக்குர்ஆனில் இறைவன் உண்மைச் சம்பவங்களாக இரண்டு வரலாற்று நிகழ்வுகளை – அதுவும் விரசம் இல்லாமல், கொச்சைப்படுத்தாமல் சொல்லியிருப்பது நவீன இலக்கியத்திற்கு மிகப்பெரிய கதைக்களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது
தப்பித்த சொற்கள்!
அந்த நகரில் பாலுறவு முழுமையாகத் தடை செய்யப்பட்டிருந்தது. கணவன் – மனைவி ஒருபால், இருபால் என்று எல்லாவிதமான பாலுறவுகளும் தடை செய்யப்பட்டிருந்ததுடன் அதை மீறிச் செயல்பட நினைப்போருக்குக் கடுமையான தண்டனை தரப்ப்பட்டன.
இந்த நடைமுறையை ஒப்புக்கொள்ள மறுத்து ஆரம்பத்தில் சில எதிர்ப்புக் குரல்கள் ஒளித்தாலும், அந்தக்குரல்கள் அதிகாரத்தின் வன்முறையால் அடக்கப்பட்டன.
பாலுறவு தடை செய்யப்பட்டதால் குழந்தைகள் பிறக்காது என்று அந்த நகரவாசிகள் புகார் தெரிவித்தார்கள். அரசோ, “குழந்தைகள் வேண்டும் என்பவர்கள் அந்த நகரிலிருந்து வெளியேறிப் போய்விடுங்கள்” என்றது. நாளடைவில் நகரவாசிகளுக்குக் கிடைக்கும் விசேஷ சலுகைகள் மற்றும் கேளிக்கைகளுக்காகப் பாலுறவை விட்டுத் தருவதில் தப்பில்லை என்ற எண்ணம் சில வாரங்களிலேயே பெரும்பான்மையோருக்கு வரத்துவங்கியது.
…இப்படியாக பாலுறவு தடை செய்யப்பட்ட நகரில் பாலுறவின் இடத்தை சொற்கள் பிடித்துக் கொண்டு விட்டன.
காமம் கொள்ளும் தருணங்களில் ஆண் பெண்ணை நோக்கி விசேஷமான சொல்லொன்றினை வீசி எறியத் துவங்கினான். அவளும் பதிலுக்கு உரத்த சப்தத்துடன் ஆணை நோக்கி புதிய சொல் ஒன்றினை வீசி எறிந்தாள்.
சொற்கள் வழியாக காமம் சிதறுண்டது. இந்தச் சொற்களை ஆண்களும் பெண்களுமாக உருவாக்கிக் கொண்டார்கள். அதை ரகசியமாகவும் பாதுகாத்தார்கள்.
மிக நெருக்கமான நண்பர்களுக்குள் இந்தச் சொற்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆனால், புதிது புதிதாக சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அரசாங்கம் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் விழித்தது. பொது இடங்களில், அலுவலகங்களில், ரயில் பயணங்களில் கூட ஆணும் பெண்ணும் ரகசியமாக சொற்களை வீசி எறிந்து தங்கள் காமத்தைத் தனித்துக் கொள்ளத் துவங்கினர்.
நகரில் சில மாதங்களில் முன்னில்லாதபடி பல்லாயிரம் சொற்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அரசாங்கம் அந்தச் சொற்களைக் கண்டு முதலில் திகைத்தபோதும் இப்போது அதைத் தனது அரசாங்க தனித்துவமிக்க வணிகப்பொருளாக மாற்றி உலகெங்கும் பரப்ப ஆரம்பித்துள்ளது.
பிற நகரங்களும் அவசர அவசரமாக பாலுறவைத் தடை செய்யத் துவங்கின.
– இப்படி ஒரு குறுங்கதையை தற்போதைய நவீன இலக்கியத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் அமைத்திருக்கிறார். இதில் ஒரே கதையில் இரண்டு களத்தை அமைத்திருக்கிறார். ஒன்று; பாலுறவைத் தடை செய்வதால் மக்கள் தங்கள் காம இச்சையை சொற்களால் பேசியே தணித்துக் கொள்வது.
திருக்குர்ஆனில் இறைவன் உண்மைச் சம்பவங்களாக இரண்டு வரலாற்று நிகழ்வுகளை – அதுவும் விரசம் இல்லாமல், கொச்சைப்படுத்தாமல் சொல்லியிருப்பது நவீன இலக்கியத்திற்கு மிகப்பெரிய கதைக்களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
நவீன இலக்கியவாதிகள் சற்று உற்று நோக்கினால் ஆயிரமாயிரம் கதைக்களங்கள் ஏராளமாய் எஞ்சி இருப்பதைக் காண முடியும். குர்ஆனின் இலக்கியத் தளங்கள் கதை போன்று கற்பனை கலக்காத உண்மை வரலாற்றுச் சான்றுகள். இது ஒன்று போதாதா இலக்கியவாதிகல் இறக்கை கட்டிப்பறக்க!
சரி, குர்ஆனுக்குள் வருவோம். எகிப்து நாட்டை ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஓர் இரவில், பெரும் நெருப்பு எகிப்து நாட்டின் மீது படர்ந்து, அவனுடைய ஆட்சியை சுட்டெரித்தது போல கனவு ஒன்று கண்டான்.
இக்கனவிற்கு அரண்மனை ஜோதிடரிடம் விளக்கம் கேட்டதற்கு “இனிமேல் பிறக்கப்போகும் பனீஇஸ்ரவேலர்களில் ஓர் ஆண் குழந்தை உங்களையும், உங்கள் ஆட்சியையும் அழித்தொழிக்கும்” என்றனர்.
அந்தக் குழந்தை எப்போது பிறக்கப் போகிறது? என்று ஃபிர்அவ்ன் அவர்களிடம் கேட்டதற்கு, “வானில் ஒரு ஜென்ம நட்சத்திரம் தோன்றும். அந்த நட்சத்திரம் தோன்றி விட்டால், அந்த அக்குழந்தை நிச்சயம் இப்பூமியில் பிறக்கும்” என்றனர்.
அதன்பிறகு அந்த ஜென்ம நட்சத்திரம் வானில் தோன்றியது. அன்றிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலை வெட்டி வீசப்பட்டது. இப்படி பல்லாயிரக்கணக்கான ஆண் குழந்தைகள் பிறந்து கண் திறப்பதற்குள் கொலை செய்யப்பட்டன.
பெண் குழந்தை பெற்றெடுத்த தம்பதிகளும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் திருமணம் செய்ய எந்த ஆணும் இல்லாமல் போகும் என்ற பயம் வரத் தொடங்கியது.
இந்த பயத்தினால் நாளடைவில் பனீஇஸ்ரவேலர்கள் ஆண்-பெண் பாலுறவு கொள்வதைக் கூட நிரந்தரமாகத் தவிர்த்ததாக அறியப்படுகிறது. இது மாபெரும் சோதனையாக அவர்களுக்கு இருந்தது.
இது பற்றி குர்ஆனில் இறைவன், “இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு மிகக்கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தரிடமிருந்து நாம் உங்களைப் பாதுகாத்துக்கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைட்க் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகள் மட்டும் உயிருடன் வாழ விட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கல் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.” (அல்குர்ஆன் 7:141)
அந்த நவீன எழுத்தாளர் தன் கதைக் களத்தில். பாலுறவை முழுமையாகத் தடை செய்து குழந்தை பிறப்பை இல்லாமல் ஆக்குவதாகக் கதையின் முதல் களம் அமைத்திருந்தார். ஆனால், குர்ஆனோ பாலுறவு கொள்வதை பனீ இஸ்ரவேலர்கள் தவிர்க்கும்படியான ஒரு சோதனை ஏற்பட்டாலும் அதற்குறிய தீர்வைத் தேடி குர்ஆன் அடுத்த கட்டத்திற்குள் தாவி மிக எளிதாக்குகிறது.
எந்த ஆண் குழந்தை பிறக்கக்கூடாது என்று ஃபிர்அவ்ன் எண்ணினானோ அதே ஆண் குழந்தையை அந்த எகிப்தில் பிறக்கச் செய்து அக்குழந்தையை மரப் பெட்டியில் வைத்து நைல் நதியில் மிதக்க விடப்படுகின்றது. அந்தக் குழந்தையை ஃபிர்அவ்னின் மனைவி எடுத்து தத்துக் குழந்தையாக வளர்க்கிறாள். சாவு மணி அடித்தது அவன் தத்தெடுத்த அதே ஆண் குழந்தைதான் என்பது இறுதியில் அவனுக்குத் தெரிகிறது.
இப்படி ஒரு சோதனைக்குத் தீர்வான களத்தை சுவாரசியம் குன்றாமல் குர்ஆன் சரித்திரச் சான்றுகளாக இலக்கியத்திற்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. இலக்கியவாதிகள் இந்த ஒரு களத்திலிருந்து எத்தனையோ விஷயங்களை தங்களின் இலக்கியத்தளத்திற்குக் கருவாக எடுத்துக்கொள்ள முடியும். இது போன்று வற்றாத ஆச்சரியங்களும் எதிர்பாராத திருப்புமுனைகளும் எத்தனை எத்தனையோ இன்னு இன்னும் குர்ஆனில் மிச்சமிருக்கிறது.
அடுத்து, நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் திருமணமாகாத பரிசுத்தமான கன்னிப்பெண்ணாக இருந்தார்.
ஒரு சமயம் குளிப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் திரையிட்ட போது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் எனும் வானவரை இறைவன் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பி வைத்தான்.
“ஜிப்ரயீலைக் கண்டதும், “நிச்சயமாக நான் உங்களிடமிருந்து என்னைப் பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீங்கள் பரிசுத்தமானவராக இருந்தால் இங்கிருந்து அப்புறப்பட்டு விடுங்கள்” என்றார் மர்யம். அதற்கவர், “பரிசுத்தமான ஒரு மகனை உங்களிக்கப்படும் என்பதை உங்களுக்கு அறிவிப்பதற்க்கக நான் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மலக்காகிய ஒரு தூதர்தான்” என்றார் ஜிப்ரயீல். அதற்கு மர்யம், “எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எந்த மனிதரும் என்னை தீண்டியிருக்க வில்லையே! நான் கெட்ட நடத்தை உள்ளவளும் அல்லவே!” என்று கூறினார்.
அதற்கு ஜிப்ரயீல், “அவ்வாறெ நடைபெறும் என்று உங்கள் இறைவன் வார்த்தையைக் கொண்டு கூறுகின்றான் என்றும் அது தனக்கு எளிது என்றும், அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம் என்றும், இது முடிவாக உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம் என்றும் கூறுகின்றான்” என்றார் ஜிப்ரயீல். (அல்குர்ஆன் 19 : 18 – 21)
அந்த நவீன எழுத்தாளர் மேற்கண்ட கதையில் பாலுறவுக்குப் பதில் பல்லாயிரக்கணக்கான சொற்களை அந்நாட்டு மக்கள் புதிது புதிதாகக் கண்டுபிடித்தனர். பொது இடங்களில்….. ரகசியமாக சொற்களை வீசி எறிந்து தங்கள் காமத்தைத் தணித்துக் கொண்டனர் என்பதாக கதை அமைத்திருந்தார்.
ஆனால், குர்ஆனோ இந்த விஷயத்தை விரசப்படுத்தாமல், கொச்சைப்படுத்தாமல், இறைவன் தன் வார்த்தையை “குன்” (ஆகுக) என்ற ஒற்றை சொல்லைக் கொண்டு கன்னிப்பெண் கர்ப்பமடைகிறாள். இது நவீன இலக்கியங்களையெல்லாம் தாண்டிச் சிந்திக்கத் தூண்டும் கற்பனை கலக்காத உண்மை வரலாற்றுச் சம்பவம்.
வார்த்தையைக்கொண்டு காமத்தை தணித்துக்கொள்வது மனித அறிவுக்கு உட்பட்ட விஷயம். ஒரே சொல்லைக் கொண்டு கர்ப்பம் ஏற்படுவது இறைவனின் வல்லமைக்கு உட்பட்ட விஷயம்.
ஆக, இலக்கியவாதிகளுக்கு குர் ஆனில் எராளமான கருத்து காத்த்கிருக்கிறது.
“அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களுடைய இதயங்கள் மீது பூட்டு போடப்பட்டிருக்கின்றனவா?” (அல்குர்ஆன் 47 : 24)
– சிந்தனை சரம். டிஸம்பர் 2011 டிஸம்பர்
www.nidur.info