Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu
Image result for அபூதல்ஹா அல் அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு

தள்ளாத வயதிலும் போர்க்களம் புகுந்த அபூதல்ஹா அல் அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு

Posted on April 1, 2012 by admin

Image result for அபூதல்ஹா அல் அன்ஸாரீ  ரளியல்லாஹு அன்ஹு

தள்ளாத வயதிலும்   போர்க்களம் புகுந்த

அபூதல்ஹா அல் அன்ஸாரீ   ரளியல்லாஹு அன்ஹு

أَبُـو طَـلْحَةَ أَنْصَـارِيّ

மூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பானின் ஆட்சிக் காலம். கடல் தாண்டி நிகழவிருந்த போர் ஒன்றுக்கு முஸ்லிம் படைகள் தயாராகிக் கொண்டிருந்தன. மிகவும் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருந்தார்.

அவரும் முஸ்லிம் படைகளுடன் கலந்து கொள்ள ஆயத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவருடைய மகன்களுக்கு அதிர்ச்சி! ‘இந்தத் தள்ளாத வயதில் போர்க் களமா? என்ன இது?’ என்று வருத்தமுற்றவர்கள், தந்தையை மரியாதையுடன் அணுகினார்கள். அவரது மனதை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மிகவும் பாந்தமாய்ப் பேசினார்கள்.

“தந்தையே, அல்லாஹ் உங்கள்மேல் இரக்கம் கொள்வானாக! தங்களுக்கோ மிகவும் வயதாகிவிட்டது. நீங்கள் பார்க்காத யுத்தமா, ஈடுபடாத போரா?

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணைந்து போரிட்டிருக்கிறீர்கள். பின்னர் அபூபக்ரு, உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரது படைகளில் போரிட்டிருக்கிறீர்கள். தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும். நாங்கள்தான் போருக்குச் செல்ல வேண்டும். தயவுசெய்து எங்கள் வேண்டுகோளுக்கு உடன்படுங்கள்”

அமைதியாக அதைக் கேட்டுக்கொண்ட அந்த முதியவர் தீர்க்கமாகத் தன் மகன்களிடம் கூறினார்: “அல்லாஹ் என்ன கூறியிருக்கிறான் தெரியுமா?

‘நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.’ (9:41)”.

சிறுவருக்கும் முதியோருக்கும் போரில் ஈடுபடுவதில் விலக்கு இருப்பதை எடுத்துச் சொல்லித் தந்தையைத் தடுத்து நிறுத்த முயன்றனர் பிள்ளைகள். அறப்போரில் பங்கு பெற்று, வீரத்தியாகியாக இறப்பெய்யும் அவரது பேராசைக்கு முன்னால் பிள்ளைகளின் முயற்சிகள் தோல்வியுற்றன.

போர்! அதுவும் நிலத்தில் பயணம் சென்று எதிரியைச் சந்திக்கும் போரல்ல. கடல் தாண்டிய பயணம். அந்தப் போர்ப் பயணத்திற்கு, அளவற்ற மனஉறுதியுடன் அந்தத் தள்ளாத வயதிலும் கிளம்பினார் அந்த வயோதிகர்.அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.

ஸைத் இப்னு சஹ்ல் அந்நஜ்ஜாரீ. அதுதான் கஸ்ரஜ் பெருங்குலத்தின் பிரிவான பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் தலைவர் அபூதல்ஹாவின் இயற்பெயர். யத்ரிப் நகரில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரை ஒரு மரணச் செய்தி வந்தடைந்தது. ஆனால் அவருக்கு அது, சற்று உற்சாகத்தை அளித்த செய்தி!

ருமைஸா பின்த் மில்ஹான் அந்-நஜ்ஜாரிய்யா எனும் பெயருடைய பெண் ஒருவர் யத்ரிபில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரின் கணவன் மாலிக் பின் நாதர். மனமொப்பி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மகன்களும் இருந்தனர். இந்நிலையில் யத்ரிபிலிருந்து மக்காவிற்குச் சென்ற யாத்ரீகர்கள் முஹம்மது நபியைச் சந்தித்து முதல்அகபா உடன்படிக்கை ஏற்பட, அதைத் தொடர்ந்து முஸ்அப் இப்னு உமைர் யத்ரிபில் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருந்தார் என்று ஹபீப் பின் ஸைத் வரலாற்றிலேயே பார்த்தோமல்லவா? அந்தப் பிரச்சாரம் ருமைஸாவின் நெஞ்சக் கதவைத் தட்டியது. இஸ்லாத்தின் சத்தியத்தைப் புரிந்துகொண்ட அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டார். ஆனால் அவருடைய கணவன் மாலிக்கிற்குத் தனது மூதாதையரின் பழைய வாழ்க்கை முறையை விடமுடியவில்லை.

கணவன் மனைவிக்கிடையே அதைத் தொடர்ந்து பிரச்சனை. மாலிக் தன் மனைவியைப் புதிய மார்க்கத்திலிருந்து மீட்டெடுத்துவிட மிகவும் பிரயாசைப்பட்டார். எதுவும் சரிவரவில்லை. ருமைஸா தனது கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். அத்தோடில்லாமல், தன் மகன் அனஸ் இப்னு மாலிக்கையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி போதனை செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்த அனஸ் இப்னு மாலிக், அல்லாஹ்வின் தூதரின் அன்பையும் அணுக்கத்தையும் அதிகம் பெற்றவர். பிற்காலத்தில் மிகவும் அறியப்பட்ட தோழர். அவரைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

மனைவியுடன் சண்டையிட்டார் மாலிக். பொறுத்திருந்து பார்த்தார். கடைசியில் கோபமாய் சிரியா கிளம்பிச் சென்றுவிட்டார். அதென்னவோ மரணம் அவருக்கு அங்குக் காத்திருந்தது. அவருடைய எதிரி யாரோ ஒருவன் அவரைக் கொன்றுவிட்டான். அங்கு அவர் இறந்துபோனார். இங்கு ருமைஸா விதவையானார்.

ருமைஸாவிற்கு வேறு சில பெயர்களும் உண்டு. ஆனால் வரலாற்றில் புகழ்பெற்று நிலைத்துப்போன பெயர், உம்முஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா.

இந்த உம்முஸுலைம் விதவையாகிப்போன செய்திதான் அபூதல்ஹாவை அடைந்தது; அவரை உற்சாகம் தொற்றியது. காரணம் இருந்தது. அப்போதைய யத்ரிபில் உம்முஸுலைம் மிகச் சிறந்த நல்லொழுக்கங்கள் நிறைந்த மாது. அறிவாற்றலில் மிகைத்திருந்தவர். இத்தகைய ஒரு மங்கையை மனைவியாக அடைவது பாக்கியம் என்று நிறைய ஆண்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களை, தான் முந்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார் அபூதல்ஹா.

அபூதல்ஹா அழகானவர் மட்டுமல்ல, அவர் சார்ந்திருந்த இனத்தின் தலைவர். ஏராளமான சொத்து இருந்தது; சமூகத்தில் நல்ல அந்தஸ்து இருந்தது. உம்முஸுலைமின் அதே பனூ நஜ்ஜார் கோத்திரம்தான் இவரும். தவிர அக்கோத்திரத்தின் மிகச் சிறந்த போர் வீரர். யத்ரிப் நகரிலேயே அவர் ஓர் அசாத்திய வில்லாளி.

படைவீரர் என்றாலே பாட்டும் கூடவே இருக்கும் போலும். அவர் பாடுவார் :

أنا أبو طلحة واسمي زيد

أوكل يوم في سلاحي صيد

ஒவ்வொரு நாளும்

எனது வில்லுக்கு

ஓயாத வேட்டையின் வேட்கை!

என் பெயர் ஸைத்;

நான் அபூதல்ஹா!

இத்தகைய தகுதிகள் அமையப்பெற்ற தன்னை மணம் முடிக்க உம்முஸுலைமிற்கு ஆட்சேபம் இருக்க முடியாது என்று அவருக்கு திட்டவட்டமாகத் தோன்றியது. உடனே பெண் கேட்கக் கிளம்பிவிட்டார்.

வழியில்தான் அவருக்கு அந்த எண்ணம் வந்து ஓடியது. ‘மக்காவிலிருந்து வந்திருக்கும் முஸ்அப் பின் உமைர் எனும் முஸ்லிம் பிரச்சாரகர் சொல்கேட்டு, அந்தப் பெண் முஹம்மதை ஏற்றுக்கொண்டு அவரது மார்க்கத்தைத் தழுவியுள்ளாரே! அதனால் தன்னை வேண்டாம் என்று மறுத்து விடுவாரோ?’

‘மறுக்க மாட்டார்! அவருடைய முதல்கணவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லையே! எனவே அது ஒரு பிரச்சனையாக அமைய வாய்ப்பில்லை’ என்று தன்னைத்தானே தோள் குலுக்கித் தேற்றிக் கொண்டார்.

உம்முஸுலைம் வீட்டை அடைந்து, உள்ளே வர அனுமதி கேட்டார். கிடைத்தது. தாயும் அவருடைய மகன் அனஸும் இருந்தார்கள். சுற்றி வளைக்கவில்லை நேரடியாக, தான் வந்த நோக்கத்தைத் தெரிவித்துவிட்டார் அபூதல்ஹா.

“அபூதல்ஹா! உம்மைப் போன்ற ஒரு கண்ணியவானை மணமுடிப்பது நற்பேறு. தட்டிக்கழிக்க முடியாத வரன் நீர். ஆயினும், நான் உம்மை மணந்து கொள்ள முடியாது. ஏனெனில் எனக்கு நீர் வேற்று சமயத்தவராக ஆகிவிட்டீர்”

தன்னுடைய பதிலையும் உடனே நேரடியாகத் தெரிவித்துவிட்டார் உம்முஸுலைம்.

அபூதல்ஹாவிற்கு நம்ப முடியவில்லை. அந்த பதிலில் நம்பிக்கை ஏற்படவில்லை. மதத்தைக் காரணமாகக் கூறுவது ஒரு சாக்குபோக்காகத்தான் இருக்க வேண்டும். அனேகமாய்த் தன்னைவிட செல்வந்தனையோ, தனது கோத்திரத்தைவிட சக்தி வாய்ந்த கோத்திரத்தைச் சார்ந்த வேறு எவரையோ அவர் முன்னரே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

“உண்மையைச் சொல்லுங்கள். ஏன் என்னை மணம் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் உம்முஸுலைம்?”

“வேறு காரணம் ஏதும் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்ன?”

“ஆம். மஞ்சளும் வெள்ளையும்”

“அதாவது?”

“மஞ்சளும் வெள்ளையும். தங்கமும் வெள்ளியும்”

“தங்கமும் வெள்ளியுமா?” ஆச்சரியமாகக் கேட்டார் உம்முஸுலைம்.

“அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது”

“அபூதல்ஹா! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் சாட்சியாகக் கொண்டு பகர்கிறேன். நீங்கள் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நான் உங்களிடமிடமிருந்து ஒரு குன்றுமணி தங்கம், வெள்ளி என்று எதுவும் பெறாமல், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதை மட்டுமே மணக்கொடையாக (மஹ்ராக) ஏற்றுக் கொண்டு நான் உங்களை மணந்து கொள்வேன்”.

இங்கு இதை நன்கு கவனித்தல் நலம். ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றிலும் பார்த்தோம். மணமகன்தான் மணக்கொடை வழங்குவதற்குப் போட்டி போடுகிறார். என்றால், இங்கே மணப்பெண் ஒருபடி மேலே போய், பணமாவது, நகையாவது, என்று இகலோக வஸ்துகளை உதறித் தள்ளிவிட்டு, மணம் புரிய இருவுலகிற்கும் மேன்மை சேர்க்கும் மன மாற்றம் கேட்கிறார். இத்தகைய சரியான புரிதல்களில் அமைந்தன அவர்களது மார்க்க நம்பிக்கையும் குடும்ப வாழ்க்கையும்.

என்னவாகும்? பிற்காலத்தில் அவர்களைத் தானாய் வந்தடைந்தன, புகழும் செல்வமும்.

உம்முஸுலைமின் பதில் அபூதல்ஹாவை மிகவும் யோசிக்க வைத்தது. அவருக்கு அவரது சிலை நினைவிற்கு வந்தது. அரிய, விலையுயர்ந்த மரத்தால் வடிக்கப்பெற்ற கடவுள் சிலை அது. அவருடைய குலமரபுச் சின்னம். அவர் குலத்தின் மேட்டிமையின் அடையாளம். அதை எப்படித் துறப்பது? ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிய அவரை,

“அபூதல்ஹா! நீங்கள் கடவுள் என்று வணங்கும் அந்தச் சிலை பூமியிலிருந்து முளைத்தது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்தானே?” என்று கேட்டார் உம்முஸுலைம்.

“ஆம்”

“ஒரு மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு பகுதியைச் சிலையாக வடித்துத் தாங்கள் கடவுள் என்கிறீர்கள். மீதப் பகுதிகளை எடுத்துச் சென்றவர்கள் அதை நெருப்புக்காகப் பயன்படுத்திக் குளிர்காயவோ, சமையலுக்கோ உபயோகப்படுத்துகிறார்கள். இது தங்களுக்கு விந்தையாகவோ, சங்கடமாகவோ தோன்றவில்லையா?

அபூதல்ஹா! தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், மீண்டும் கூறுகிறேன், அதுவே தாங்கள் எனக்களிக்கும் மணக்கொடை”.

யோசனையின் இறுதியில் இணங்கினார் அபூதல்ஹா. “நான் முஸ்லிம் ஆக வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்?”

“கூறுகிறேன். மிக எளிது. ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்’ என்று சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தாங்கள் வாயால் சாட்சி பகர வேண்டும். அவ்வளவே! வீட்டிற்குச் சென்றதும் தங்களது சிலைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்”.

“வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன்”.

பூரண திருப்தியுடன் இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் அபூதல்ஹா அல்அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு.

அடுத்த சிலநாட்களில் இருவருக்கும் திருமணம் நிகழ்வுற்றது. வியந்தது மதீனா. நகரெங்கும் அதே பேச்சு. அதற்குமுன் யாரும் கேள்விப்பட்டிராத விசித்திரம் அது.

“கேட்டியா செய்தியை! உம்முஸுலைம் அடைந்ததைப்போல் சிறப்பான மணக்கொடையை இதுவரை எந்தப் பெண்ணுமே பெற்றதில்லை. தன்னை மணக்க விரும்பியவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார். என்னே சிறப்பு!”

அன்று வந்து நுழைந்தாரே அபூதல்ஹா? நிரூபித்தார் ஒரு செய்தியை. வெறும் காதல் மயக்கத்திலோ, தான் நாடிய பெண்ணை எப்படியோ மணமகளாய் அடைந்தால் போதும் என்ற குறுகிய நோக்கத்திலோ அவர் நின்றுவிடவில்லை. இஸ்லாத்தை நேசித்தார். உள்ளார்ந்த நேர்மையுடன் பின்பற்ற ஆரம்பித்தார். மணமகனாய் நுழைந்தவர், மாபெரும் இஸ்லாமியச் சேவகனாய் ஆகிப் போனார்.

வரலாற்றுப் புகழ்மிக்க இரண்டாவது அகபா உடன்படிக்கை பற்றி ஹபீப் பின் ஸைத் வரலாற்றில் பார்த்தோமே? நபியவர்களை அகபாவில் சந்தித்து சத்தியப் பிரமாணம் செய்த 75 பேர் கொண்ட குழுவில் முக்கியமானவர்கள் அபூதல்ஹாவும் அவருடைய மனைவி உம்முஸுலைமும். அன்றைய உடன்படிக்கையின் போது யத்ரிபில் ஏற்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு 12 பேர்களைத் தலைவராக நியமித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதில் அபூதல்ஹாவும் ஒருவர்.

நபியே! உமக்காக “உயிர், பொருள், செல்வம்” அனைத்தையும் கொடுப்பேன் என்று, அன்று, மற்றொரு திருப்புமுனையுடன் துவங்கியது அபூதல்ஹாவின் வாழ்க்கை.

நபியவர்கள் மேல் அபூதல்ஹா பாசம் கொள்ள ஆரம்பித்தார். அவரது உள்ளத்தில் ஆழப்பாய்ந்து வேரூன்றி அவரது இரத்த நாளமெல்லாம் ஊடுருவி ஓடியது. இவையெல்லாம் ஏதோ உவமைக்குச் சொல்லும் மிகையான உதாரணங்கள் அல்ல. அவரது வாழ்க்கை சாட்சி கூறுகிறது.

நபியவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் அலாதி ஆனந்தம் அடைந்தார் அபூதல்ஹா! கண்கள் அசதி மறந்தன. நபியவர்களுடன் உரையாடுவது என்பது அவருக்கு அளவிலா இனிமையாய் இருந்தது.

நபியவர்களிடமே ஒருநாள் கூறினார், “உங்களுக்காக நான் என்னுடைய ஆவியைத் தரத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய திருமுகத்திற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாமல் நான் என்னுடைய முகத்தைக் கொண்டு தடுப்பேன்”.

அது கபடமற்ற பேச்சு. விரைவில் நிரூபணம் ஆனது.

அவர் பெண் கேட்கச் சென்று கொண்டிருந்தபோதே அறிமுகப்படுத்திக் கொண்டோம் அபூதல்ஹா ஒரு வீரர் என்று. மாவீரர். நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு வந்தபின் நிகழ்வுற்ற போர்களிலெல்லாம் அவர்களுடன் இணைந்து படுதுணிவாய், வீரமாய்ப் போரிட்டவர் அபூதல்ஹா. அதில் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ஒரு போர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உஹதுப் போர்.

அன்று முஸ்லிம் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டு, குரைஷிகளின் படை முன்னேறி தாக்கிக் கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் அவர்கள் முஸ்லிம்களைச் சூழ ஆரம்பித்திருந்தனர். நிலைமை மிகவும் கடுமையடைந்து, நபிகளாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. அவர்களது நெற்றியில் ஆழமான வெட்டு, உதட்டிலும் வெட்டுக் காயம். அந்தக் களேபரமான சூழ்நிலையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி ஒன்று தீயாய்ப் பரவ ஆரம்பித்தது. அது குரைஷிகள் மத்தியில் அதிக உற்சாகத்தை அளிக்க ஆரம்பித்தது. முஸ்லிம் வீரர்களையோ அது மேலும் பலவீனப்படுத்தி, பலர் செயலிழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட, மிகச் சிறிய அளவிலான படைக்குழு ஒன்று மட்டுமே நபியவர்களை அப்பொழுது சூழ்ந்திருந்தது; எஞ்சியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் அபூதல்ஹா.

‘ஈமான் கொண்டேன், அல்லாஹ்வும் நபியும் என் உயிரினும் மேல்’ என்று சொல்வதெல்லாம் எளிதுதான். ஆனால் தருணங்கள் சில தோன்றும். அதுதான் ஈமானைத் தரம் பிரித்துக் காட்டும்.

அந்தச் சிறிய அளவிலான தோழர்கள் கடும் ஆக்ரோஷத்துடன் முஹம்மது நபியைச் சுற்றி அரண் அமைத்தார்கள். அதுவரை முஸ்லிம் படைகளுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை வலிமையாய் அத்துடன் தடுத்து நிறுத்தினார்கள்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமுன் ஒரு மனிதக் கேடயமாக வந்து குதித்தார் அபூதல்ஹா. நபிகள் நாயகத்தின் மீது மேற்கொண்டு யாரும் எதுவும் தாக்க இயலாவண்ணம் ஒரு மலை போல் நின்று கொண்டார். வில்லைப் பூட்டினார். அம்பெய்ய ஆரம்பித்து விட்டார். குறி தவறாது பாய்ந்து சென்றன அவரது அம்புகள். குரைஷிப் படை வீரர்களைத் தாக்கிச் சாய்க்க ஆரம்பித்தன. அதேநேரத்தில் களத்தில் நபியவர்கள் தாக்கப்படாமலிருக்க, அவர்களின் காப்புக் கேடயமாகச் சுழன்று கொண்டிருந்தார் அபூதல்ஹா. முன்னால் என்ன நடக்கிறது என்பதைக் காண அவரது தோளைத் தாண்டி முஹம்மது நபி காண முற்படும்போதெல்லாம், அவர்களைத் தடுத்து பின்னுக்கு நகர்த்தி,

“அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பெற்றோரை உங்களுக்குப் பகரமாய் இழப்பேன். தயவுசெய்து தாங்கள் எதிரிகளைக் காண முற்பட வேண்டாம். அவர்கள் உங்கள்மீது அம்பெய்தி விடலாம். அதைவிட எனது கழுத்திலும், மார்பிலும் அது தைப்பது எனக்கு மிகவும் உவப்பானது. நான் தங்களுக்காக என்னையே இழக்கத் தயாராயிருக்கிறேன் யா ரஸூலல்லாஹ்!” என்று பதட்டமானார் அபூதல்ஹா..

தெறித்து ஓடிய படையிலிருந்து எஞ்சி நின்று, தனது உடலையும் உயிரையும் பணயமாக வைத்து, கொல்லப்படக்கூடிய அத்துணைச் சாத்தியங்களுடன் சத்தியம் பேசும் அந்தச் சூழ்நிலையையும் ஈமானையும் முதலில் நம்மால் ஆழ்மனதில் உணர முடிந்தால், அது போதும் நமது ஈமானின் வலு உணர!.

அம்பறாவில் அம்புகளுடன் யாரேனும் களத்தில் ஓடிக்கொண்டிருந்தால் அவர்களை நோக்கிக் கூவினார்கள் நபிகளவர்கள், “உங்களது அம்புகளை இங்கே அபூதல்ஹாவிடம் கொட்டுங்கள். அதையும் தூக்கிக் கொண்டு ஓடாதீர்கள்”.

பலத்த ஆக்ரோஷத்துடன், ஒப்பிட இயலாத வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார் அபூதல்ஹா, அம்பெய்து அம்பெய்து, அவருடைய கைகள் களைப்படையவில்லை. ஆனால் மூன்று வில்கள்தான் உடைந்தன. எண்ணற்ற குரைஷி வீரர்கள் அவரால் அன்று கொல்லப்பட்டனர். எண்ணற்றக் காயங்களுடன் வரலாற்றில் தனது அத்தியாயத்தை அன்று பதிவு செய்தார் அபூதல்ஹா.

ஒவ்வொரு நாளும்

எனது வில்லுக்கு

ஓயாத வேட்டையின் வேட்கை!

என் பெயர் ஸைத்;

நான் அபூதல்ஹா!

ரலியல்லாஹு அன்ஹு.

source: சத்தியமார்க்கம்.காம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb