தம்பதிகள் தொலைத்த உணர்ச்சி!
ஒரு மனநல மருத்துவர் கூறுகிறார்:-
கணவனும் மனைவியும் ஒன்றாக வருவார்கள்.. ஏராளமான தம்பதிகளை சில ஆண்டுகளாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டுக்கொண்டிருப்பேன். உற்று கவனித்தவாறு இருப்பேன். இரண்டு பேரையும் யாரோ கயிறு கொண்டு கட்டிப் போட்டது போல எனக்கு தோன்றும். பெரும்பாலான தம்பதிகள் இந்த எண்ணத்தை என்னிடம் தோற்றுவித்தார்கள்.
திருமணம் என்ற நிறுவனம் இன்று ஆட்டம் கண்டு வருகிறது. கூட்டுக் குடும்பம் சிதறி தனிக்குடித்தனமாகி அதுவும் காணாமல் போய்விடுமோ என்ற எண்ணம் முளை விடுகிறது.
இன்றைய தம்பதிகள் பிணைக்கும் எதையோ தொலைத்து விட்டார்களா? அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறினார்கள். இவர் செய்வது சரியில்லை என்றார்கள். பதிலுக்கு கணவன் இவளுக்கு என்ன தெரியும்? உலகம் தெரியாது என்றார். வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொண்டு சமையல் செய்து கொண்டு டி.வி பார்த்துக் கொன்டிருந்தால் எல்லாம் தெரிந்து விடுமா? மனைவி பதிலுக்கு சொன்னார், “நீங்க கிழிச்சது ஒண்ணுமில்ல! எங்க தங்கச்சி வீட்டுக்காரரு இவர விட சின்னவரு வீடு கட்டிட்டாரு!”
அவர்கள் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்தவர் பேசுவதை தடுக்க முயற்சித்தார்கள். அப்போது குரல் உயரும்.அவர் பேசட்டும் கேட்போம் இருங்கள்! பிறகு நீங்கள் பேசலாம் என்று குறுக்கிட வேண்டியிருக்கும். தன் வீட்டு உறவுகளை மதிப்பதில்லை என்பது பெரும்பாலானவர்களின் ஆதங்கம். “என் மாமா உடல் நிலை சரியில்லாதபோது போய் பார்க்கலாம் என்றால் வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டார். நான் மட்டும் அவருடைய உறவினர்கள் என்றால் கவனிக்கவேண்டுமா?
அவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள் ஒரே பையனை ஒழுங்கா வளர்க்க முடியல, அவன் ஒழுங்காக படிப்பதில்லை. எனக்கு எங்கே நேரம் இருக்கிறது என்றார் கணவர்.” ”நான் என்னமோ அவன படிக்காதன்னு சொன்ன மாதிரி ” என்கிறார் பதிலுக்கு மனைவி. தன்னை குறை சொல்லும்போது, குடும்பத்தினர் பற்றி பேசும்போது மனைவிக்கு ஆத்திரம் பொங்கியது.வேதனையாக உணர்வதாக பட்டது. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கணவனுக்கு கண்ணில் ரத்தம் பாய்ந்தது.
அவர்கள் ஒவ்வொருவரும் தான் சொல்வது மட்டுமே சரியானது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளுக்காக பார்க்கிறேன் என்று சிலர் சொன்னார்கள். சில பெண்கள்” நான் அப்போதே என் பெற்றோரிடம் மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்று சொன்னேன். ஆனால் என் பேச்சை கேட்காமல் கட்டி வைத்து விட்டார்கள்” என்றார்கள்.
கணவர்களின் பெரும்பாலான கூற்று இது “வீட்டில் எல்லாமும் வாங்கி போட்டிருக்கிறேன் இல்லாத பொருள் எதுவுமில்லை. வாசிங் மெஷின், கிரைண்டர், டி.வி., வருஷமானால் பட்டுப்புடவை. எதுவும் செய்யாமல் இல்லை. ஆனால் வீட்டில் இல்லாத ஒன்று இருந்தது. எனக்கு அவர்கள் ஒரு உணர்ச்சியை தொலைத்து வருவதாக தோன்றுகிறது. அந்த உணர்ச்சி அன்பு.