ஆவி அடங்கிவிட்டால்….
சுகம் தரும் சுவனமா? கொதிக்கும் நரகமா?
ஆவி அடங்கிவிட்டால் எவ்வளவு பெரிய நபராயிருந்தாலும், அவனுடைய புகழோ, செல்வமோ, சந்ததிகளோ எந்த பயனும் அளிக்காது. அவனுடைய உடலை மூட கஃபன் துணி தயாராக இருக்கும். புதை குழியில் வைத்துவிட்டு அனைவரும் போய் விடுவார்கள். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லியாக வேண்டும்.
இறைக்கட்டளைக்கு அடி பணிந்து உண்மை முஸ்லிமாக வாழ்ந்தவன் தக்க பதிலைக் கூறி புது மாப்பிள்ளை போல கியாம நாள்வரை நித்திரையில் மூழ்கிடுவான். இறைக்கட்டளையை நிராகரித்து வாழ்ந்தவனோ பதிலளிக்க முடியாமல் கப்ரின் வேதையில் மூழ்கி துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்.
இன்றைய முஸ்லிம்கள் உலக வாழ்வில் மூழ்கிப்போய் உதட்டில் கலிமா – உள்ளத்தில் ஹராமாக; கடமைகளை பேணி நடக்காமல், ஃபாத்திஹாக்களை நம்பி திசை மாறி கிடக்கின்றனர். அல்லாஹ், உணவுக்கும், உடைக்கும், இடத்திற்கும் கணக்கு கேட்பதுடன், தவறான செயல்களுக்கும் விசாரணை செய்வான் என்பதை உணர வேண்டும்.
மனிதனுடைய இன்றைய வாழ்வின் முழு நோக்கம் பணம் மட்டுமே. இதன் கேட்டை உணராமல், தன் உயிரின் இரகசியத்தைக் கூட எண்ணிப்பார்க்காமல், உலக வாழ்வின் ஆடம்பரத்தில் சிக்கி நிராகரிப்பின் பாதையில் தோல்வி நடை போடுகிறான். இத்தகைய நிராகரிப்பாளர்களை அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
“நாம் அவர்களுக்கு செல்வத்தையும், மக்களையும் கொடுத்திருப்பதைப்பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? நாம் அவர்களுக்கு அதிவேகமாக நன்மைகளை வழங்குவதாக நினைத்தார்களா? உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 23:55)
மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்; ”எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் – நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.” (அல்குர்ஆன் 8 : 50, 51)
“…அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.” (அல்குர்ஆன் 18 : 29)
‘பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். ”நீ (இதைச்) சவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்! நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்”” (என்று அவர்களிடம் சொல்லப்படும்). (அல்குர்ஆன் 44 : 48-50)
“அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு; கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 40 : 71, 72)
பல தேசங்களை ஆண்ட நம்ரூத் என்பவன் உலகில் நான் சுவர்க்கத்தை உண்டாக்குகிறேன் என்று சவால் விட்டு, ஏராளமான செல்வத்தைக் கொட்டி பெரிய மாளிகைகளை அமைத்தான். ஆனால், அவன் அதில் நுழையும்போதே அவனது உயிரை மலக்குகள் கைப்பற்றிவிட்டனர். அதாவது ஆடம்பரத்தின் ஆணிவேரே பறிக்கப்பட்டு மாண்டுபோனான்.
அதுபோல நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தில், காரூன் என்பவன் பெரும் செல்வந்தனாக கர்வம் கொண்டு அட்டூழியம் புரிந்து வந்தான். சமூக மக்கள் அவனை பெரிய அதிர்ஷ்டசால் என்று கூறினர். ஆனால், அல்லா ஹ்வின் வேதையில் அகப்பட்டு அவனும் இருப்பிடமும் சொத்த்குக்களும் பாதாளத்தில் சொருகப்பட்டு மாண்டு போனான். அவனின் பேரழிவைக் கண்டு “அல்லா ஹ்வின் கருணை இல்லாமலிருந்தால் இவ்வாறே நாமும் அழிந்திருப்போம்” என்று மக்கள் கூறினர்.
உலக வாழ்வின் வெறித்தனமான உவப்பை தடுக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “இப்னு உமரே! நீ காலையில் எழுந்திருக்கும்போது உன் மனதில் மாலை வரை உயிரோடு இருப்பேன் என்று எண்ணாதே! மாலையானால் நான் காலையில் உயிரோடு இருப்பேன் என்று எண்ணாதே! வாழ்வின்போது மரணத்திற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து கொள். நாளை மறுமையில் அல்லா ஹ்விடத்தில் உன் நிலைமை எப்படி இருக்குமோ என்பதை நீ அறிய மாட்டாய்!” என்று அறிவுரை கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் :
“பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹ_ருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும். (அல்குர்ஆன் 44:51-57)
“…பயபக்தி உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 3 : 15)
“அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.” (அல்குர்ஆன் 52 : 20)
“பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹ_ருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும். (அல்குர்ஆன் 44:51-57)
அல்லாஹ், முஃமீன்களுக்கு வாக்களித்துள்ள அந்த இனிமையான சுவனபதியின் பாக்கியம் நம் அனைவருக்கும் கிட்ட உண்மையான ஈமான்தாரிகளாக நாம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.