வாழ்கையை புரிந்துகொண்டால் வாழ்வது இனிதாக அமையும். எளிதாக இருக்கும். ஆனால் வாழ்க்கையை புரிவது அவ்வளவு சுலபமானதல்ல. அப்படியே புரிந்துகொண்டு நெஞ்சில் பதிவு செய்து பண்படுத்திக்கொண்டாலும் அதன் அடிப்படையில் மனம் தளராமல், சிதையாமல், உடைந்து நொறுங்கிப்போகாமல் எதையும் தாங்கும் இதயத்துடன் சீராகச் செல்லுதல் பெரும் சிரமம் ஆகும்.
ஆம்! நமது உள்ளத்திற்கு எப்படி எப்படியெல்லாமோ என்னென்னவோ கூறி அறிவுறுத்தி, பக்குவப்படுத்தி, பதியம் பொட்டு வைத்திருந்தாலும் நம்மை சுற்றி நடக்கும் சில அநியாயச்செயல்களும் அறனுக்கு முரணான போக்குகளும் சிலரது அடாதுடித்தனமான வக்கிர எரிச்சல் அழுக்காறுச் சிறுமைக் கயமைகளும், வதைக்கும் வார்த்தை, கொடூர கீழறுப்பு பேச்சுகளும் சில வேலைகளில் தடுமாறச்செய்துவிடும். நமது மன உறுதி சங்கல்பத்தை உடைத்துவிடும். எனினும் நாம் வாழ்ந்தாக வேண்டும்.
வாழ்வதென்பது இறைவன் நமக்கு தந்த உரிமை,
இம் மண்ணுலகில் ஒரேயொரு முறை மட்டும் கிடைத்திருக்கும் இந்த அரிய உரிமையை எதற்காகவும் நாம் அழித்துக்கொள்ளக்கூடாது.
எவர்க்காகவும் நாம் சிதைந்து கொள்ளக்கூடாது.
எத்தகு சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நெருக்கடியிலும் நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். நாம் வாழப்பிறந்தவர்கள்.
நமக்கு கவலை இருக்கும். கடன் இருக்கும். ஏமாற்றும் எத்தர்கள் இருப்பார்கள். அவதூறு பழி்கூறி அவமானப்படுத்த துடிக்கும் அநியாயக்காரர்கள் இருப்பார்கள். கூட இருந்து கொண்டே கீழறுப்புச்செய்து குழிபறிக்கும் கயவர்கள் இருப்பர். நட்பெனும் பெயரில் உறவாடி கெடுக்கும் உத்தமர்களும் நம்மோடு இருப்பார்கள். எல்லாம் பெற்றுக்கொண்டும் அனுபவித்துக்கொண்டும் பொல்லாங்கு கூறித்திரியும் உறவினர்கள் இருப்பார்கள்.
வணிகம், தொழில்-உழைப்பு, கொடுக்கல்-வாங்கல், பொதுவாழ்கை ஈடுபாடுகளில் உங்களை பின்னுக்கு தள்ளி வீழ்ச்சியடைவதை பெரிதும் எதிர்பார்த்து சொற்ப மகிழ்சியுறும் அற்பமானவர்களும் இருப்பர். போற்றுவது போல் போற்றி, புகழ்வது போல் புகழ்ந்துகொண்டு நெஞ்சில் நஞ்சை வைத்து பொருமிப்பொங்கிக்கொண்டிருக்கும் வஞ்சப் புகழ்ச்சிக்காரர்கள் இருப்பார்கள்.
அப்போதும் நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். நாம் யாராக இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நம் வாழ்க்கை யாராக இருக்கிறது என்பதுதான் முக்கியம். நமது வாழ்கையை நாம் எப்படி அமைத்திருக்கிறோம் என்பதை பொறுத்துத்தான் நாம் மதிப்பிடப்படுகிறோம். மதிக்கப்படுகிறோம். மனிதரில் பெரும்பாலோரின் மதிப்பீடும் மதிப்பும் சரியானதாக இருக்காது. நிரந்தரமானதாக, ஒரே மாதிரியானதாக இருக்காது. ஏனெனில் நண்பனை பற்றி நல்லெண்ணம் கொண்டிருப்பவரின் உள்ளத்தில் பொறாமைத்தீ மூண்டு விட்டால் அந்த நல்லெண்ணம் அப்படியே பொசுங்கி போய்விடுகிறது.
ஒருவர் பற்றிய மதிப்பு ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் போது அவரது உள்ளத்தில் அழுக்காறு கிளர்ந்து கொதிப்பாகிப்போனால் அவர் பற்றிய அனைத்து மதிப்பையும் அவரே புதைத்து அவர் பற்றி குறை பேச ஆரம்பித்து விடுகின்றார். குற்றம் சொல்லத் தொடங்கி விடுகிறார்.
எவர் எப்படி புறம் கூறித்திரிந்தாலும் நாம் வழ்ந்துதான் ஆகவேண்டும். இந்த வாழ்க்கை எவரும் நமக்கு தரவில்லை. பெற்றோர் இன்பத்தில் இனைந்தனர். இறைவன் உருவாக்கினான், இது இறைவன் தந்த அழகிய வாழ்க்கை. நான் எந்தத்துறையை சேர்ந்தவராயினும் நாம் வாழப்பிறந்தவர்கள். நமக்குக் நம்மை சார்ந்தோருக்கும் மறுமைக்கும் பயந்தர தக்க நிறைவான வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். நம்மைப் படைத்தவனை மறக்காது அவனது கடமைகளை துறக்காது தீதில்லா எண்ணம், பேச்சுடன் வாழ வேண்டும்.
வாய்த்தவர்களுக்குத்தான் வாழ்க்கை என பலர் வரட்டுக் கௌரவம் பேசுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, நம்முடைய மனம்தான் காரணம். அது தான் ஆணிவேர், பிரச்சினைகள் விருட்சமான பின் ஆணிவேரைத் தேடுவதில் அர்த்தமில்லை. வாழ்க்கையின் தாத்பரியமே நல்லெண்ணங்கள் தான். நல்லெண்ணம் இல்லாமல் ஆரம்பிக்கும் எந்தவொரு செயற்பாடுமே இறுதியில் பிரச்சினை என்ற வட்டத்திற்குள்தான் சிக்குண்டு போகும். பின்னர் அந்த சிக்கல்களை சமாளிப்பதிலேயே காலமும் காணாமல் போய்விடும்.
காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை. பயம், கவலை, வெறுப்பு, காமம் போன்ற குப்பைகளை எம் மன வீட்டிலிருந்து எறியாவிட்டால் வாழ்க்கை சுபீட்சம் பெறாது. பிரச்சினைகள் ஆரம்பமான மனதை விடுத்து பல நேரங்களில் நாம் தீர்வுகளைத் தெருவில் தேடுகின்றோம்.
முல்லா நஸ்ருதீன் எதையோ தொலைத்துவிட்டுத் தரையில் தேடிக்கொண்டிருந்தார். எதைத் தொலைத்துவிட்டீர்கள் முல்லா? என்று வழியில் போனவர் கேட்டார். “எனது சாவியை” என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து தேடினார் முல்லா. மற்றவரும் சேர்ந்து தேடத் தொடங்கினார். சிறிது நேரத் தேடலின் பின் வழிப்போக்கர் முல்லாவிடம் கேட்டார், “எங்கே சாவியைத் தொலைத்தீர்கள்?” என்று, முல்லா, “என் வீட்டில் தான் தொலைத்தேன்,” என்றார். வழிப்போக்கருக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு, “வீட்டில் தொலைத்ததை ஏன் தெருவில் தேடுகின்றீர்கள்?” என்று கடுகடுத்தார். முல்லா அமைதியாக சொன்னார், “இங்கே தான் வெளிச்சம் இருக்கிறது” என்று!
இப்படித்தான் நாமும் பிரச்சினைகளுக்கான தீர்வை எம்மிடமே தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம்? எதனால் இப்பிரச்சினை நேர்ந்தது? என்று சிந்தித்து தெளிவு பெறுவதில்லை. சரி, நாம்தான் பிரச்சினைகளுக்கு சூத்திரதாரியாக இருந்துவிட்டோம், பிரச்சினைகள் நேர்ந்தவுடன் அதை தைரியமாக எதிர்கொள்கிறோமா? அதுவும் இல்லை!
பிரச்சினைகளுக்குள்ளேயே வியாபித்திருப்பதை சிலர் பெருமையாக எண்ணிக்கொண்டு அதனை, “நான் பார்க்காத பிரச்சினையா? எல்லாம் பழகிப்போச்சு” என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்வார்கள். அதிலிருந்து வெளியேறுவதற்கு சிறிதும் முயற்சிக்க மாட்டார்கள். பிரச்சினைகளுக்குள் வீழ்வது மனித பலவீனம், அதற்குள் வீழ்ந்தே கிடப்பது மதியீனம், வீழ்ந்தும் எழுவதுதான் மனிதம்! எல்லாம் விதியென்று நோவதை விட, சதியென்று பழிப்பதை விட, மதியென்ற ஒன்றினால் சமாளிப்பதே சாலச் சிறந்தது. அடிப்படையில் வாழ்வு என்பதே எம்முடைய சுய தேவைக்கான போராட்டம் தான்.
போராடித்தான் பலவற்றைப் பெறவேண்டியிருக்கிறது. சோர்ந்துவிட்ட மனிதன் தனக்குத்தானே பகைவன், துணிந்துவிட்ட மனிதன் சாவுக்கும் பகைவன், ஆகவே துணிந்து போராடினால் தீர்வை எளிதில் பெற்றுவிடலாம். சிக்கல் இல்லாத வாழ்வுடன்தான் நாம் பிறந்தோம். பிறகு நாமாகவே சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்கிறோம். சரியாகக் கவனித்து சிக்கல்களை அவிழ்த்தால்தான் வாழ்க்கை இனிதாகும்.
வாழ்க்கையை வாழப்பார் அல்லது வாழ்க்கைக்கேற்ப உன்னை வார்க்கப்பார் என்றார் ஒரு கவிஞர். உண்மைதான் வாழ்க்கை வாழ்வதற்குத்தான், அழுதுவடிப்பதற்கல்ல, அத்தகைய வாழ்க்கையை பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும், பிரச்சினைகள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் எமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும்.
நம்மிடம் உறுதியான இறை நம்பிக்கையும் உண்மையும் நற்பண்பும் மனித நேய உணர்வுகளும் இருக்குமாயின் இந்த பொல்லாங்கு, குறைகூறல், பொறாமை சொற்களெல்லாம் காணாமல் போகும் கதிரின் முன் பனிபோல. வாழ நினைத்தால் வாழலாம், அர்த்தம் செறிந்த சிந்தனை வரிகள் அசைபோட்டு பார்ப்போம். வாழ்க்கை வாழ்வதற்கே!