கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவதை தவிர்த்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்
இஸ்லாம் ஒரு மனிதனின் எல்லா விடயங்களிலும் தலையிட்டு தீர்வு சொல்லக்கூடிய மார்க்கமாக இருப்பதால் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் எப்படி அமையவேண்டும் என சொல்லித் தருகிறது அதனடிப்படையில் ஒரு முஃமினின் ஆடை எப்படி இருக்;க வேண்டும். எவ்வாறான ஆடையை அணிய வேண்டும் என்ன நிற ஆடையை அணியக்கூடாது, என்பன போன்ற விடயங்களை வலியுறுத்துவது போல் ஒரு முஃமின் ஆடை அணியும் போது அவனுடைய கீழாடை எந்தளவு இருக்க வேண்டும். என்பதையும் சொல்லித்தந்துள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக கரண்டைக்கு மேல்தான் இருக்க வேண்டும் என பல செய்திகளில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். என்றாலும் சில சகோதரர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய சில ஹதீஸ்களை தவறுதலாக விளங்கியதன் காரணமாக பெருமை இல்லா விட்டால் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாம் என்று தீர்ப்புக் கூறி வருகிறார்கள்.
இதற்கு பின்வரும் நபி மொழிகளை பிரதானமான ஆதாரமாக முன்வைக்கிறார்கள் எனவே அந்த நபி மொழிகளையும் அதன் உண்மையான விளக்கத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த விடயம் பற்றிக் கூறிய ஏனைய நபிமொழிகளையும் பார்ப்போம்.
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: “எவன் தன் ஆடையை பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்க விட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகின்றது என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் அதைப் பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் மூஸா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள். நான் சாலிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவன் தன் கீழங்கியை இழுத்துக் கொண்டு செல்கிறானோ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகவா சொன்னார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் (எவன்) தன் ஆடையை என்று அறிவித்ததைத் தான் நான் கேட்டேன் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரி 3665)
அப்துர்ரஹ்மான் என்பவர் நபித் தோழரான அபூ ஸஈத் என்பவரிடம் கீழாடை தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதாவது கூற நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா? என வினவினார்கள். அதற்கவர் “ஆம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விசுவாசிகளின் கீழாடை கெண்டைக்காலின் அரைவாசியாக (முழங்காலுக்கும் கரண்டைகாலுக்கும் இடையில் நடுவில்) இருக்க வேண்டும். எனினும் நடுவிலிருந்து கரண்டைக்கால் வரை இறங்கியிருந்தாலும் குற்றமில்லை. ஆனால் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை இறங்கியிருந்தால் அது நரகத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் எனக்கூறிய பின் யார் பெருமைக்காக தரையில் கீழ் ஆடையை நிலத்தில் இழுபடச் செய்கிறாரோ அவரை அல்லாஹ் மறுமையில் பார்க்கமாட்டான்” என மூன்று முறை கூறுவதைக் கேட்டேன் என்றார்கள். (அறிப்பாளர்: அபூ ஸஈத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜாஹ் 3563)
மேலே உள்ள இரண்டு ஹதீஸ்களும்தான் பெருமையில்லாமல் கரண்டைக்காலின் கீழ் உடுத்தலாம் என்பதற்கு பிரதானமான முக்கிய ஆதாரமாக முன்வைக்கப் படுகிறது. இந்த ஹதீதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருமைக்காக தனது ஆடையை தரையில் படுமாறு எவர் அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்ற வாசகத்தை வைத்து பெருமைக்காகத்தான் கரண்டைக்கு கீழே அணியக் கூடாது சாதாரணமாக எல்லோரும் அப்படி அணியும் போது பெருமை ஏற்படாது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முஃமின் ஆடை அணியும் இடத்தைக் குறிப்பிட்டு பல செய்திகளில் தெளிவாக தெளிவுபடுத்துகிறார்கள்.
ஹ{தைபா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ” “ஆடை அணிவதன் இடம் கெண்டைக்காலின் அரைவாசியாக (முழங்காலுக்கும் கரண்டைக் காலுக்கும் இடைநடுவில்) இருக்கவேண்டும் அப்படி அணிவதற்கு மறுத்தால் அதை கொஞ்சம் இறக்கிக் கொள்ளுங்கள். ஆனால் கரண்டைக்கு கீழ் அணிவதற்கு எந்தவித உரிமையும் இல்லை” (ஆதாரம்: நஸயி, இப்னுஹிப்பான்)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “”ஆடை அணிவதன் இடம் கெண்டைக்காலின் அரைவாசியாக (முழங்காலுக்கும் கரண்டைக் காலுக்கும் இடைநடுவில்) இருக்கவேண்டும் அதை விட கீழே அணிவதில் எந்தவித நன்மையும் இல்லை” (ஆதாரம்: அஹ்மத்)
இந்த இரண்டு ஹதீஸ்களும் ஒரு முஃமின் தனது ஆடையை கரண்டைக் காலுக்கு மேல் அணிய வேண்டும் என்ற விடயத்தை தெளிவாக விளக்குகிறது. இதன் அடிப்படையில்தான் அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தனது ஆடையை அணிந்தார்கள். இன்று சிலர் கூறுவதைப் போன்று அவர்கள் அடிப்படையிலேயே தனது ஆடையை கரண்டைக்கு கீழ் அணியவில்லை அவர்களே கூறுகிறார்கள்:
நான் கவனமாக இல்லா விட்டால் ஆடையின் ஒரு பகுதி கீழே தொங்கிவிடுகிறது. இந்த வார்த்தை அவர்கள் ஆடையின் இரண்டு பகுதிகளையும் தொங்க விடவும் இல்லை என்பதும் சில வேளை கீழே தொங்குவது அவர்கள் வேண்டும் என்று செய்யவில்லை என்பதையும் தெளிவு படுத்துவதை நியாய உணர்வுள்ளவர்கள் புரிந்து கொள்வர்.
அதேபோல் இந்த ஹதீஸை வைத்து தீர்ப்புச் சொல்லக்கூடிய ஒரு அறிஞன் இந்த ஹதீதைவைத்து தீர்ப்பு கூறுவதாக இருந்தால்கூட எப்படி தீர்பளிக்க வேண்டும். ஆடை கரண்டைக்கு மேல்தான் அணியவேண்டும்இ ஆனால் எமது கவனக்குறைவால் சற்று கீழே இறங்கினால் குற்றமில்லை என்றுதானே கூறவேண்டும். அதற்கு மாற்றமாக ஆடை அணியும்போதே கரண்டைக்கு கீழ் அணிவதற்கு எப்படி தீர்ப்புக் கூற முடியும்?
அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆடையின் ஒரு பகுதி கரண்டைக் காலைவிட கீழே இறங்கிய போது நபியவர்கள் நீங்கள் பெருமைக்காக செய்வதில்லையே என்று கூறினார்கள். இந்த விடயத்தை வைத்து சிலர் எமக்கும் பெருமை இல்லாவிட்டால் அப்படி அணியலாம்தானே என்றவாதத்தை முன்வைக்கின்றனர். இதில் நபியவர்கள் அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தூய்மைப்படுத்தினார்கள் என்ற விடயம்இ அவர்களுக்கு மாத்திரம் உரியது. இதனை வைத்து எம்மை நாம் சுத்தப்படுத்த நினைப்பது குர்ஆனுக்கு மாற்றமான செயலாகும்.
ஏன் என்றால் அல்லாஹ்; தனது திருமறையில் “நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கூறாதீர்கள் – “யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.” (53;.32)
அதேபோல் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதே பெருமை எனக் கூறப்பட்டுள்ளது. எமது உள்ளத்தில் இல்லை என நாம் வாதிட்டாலும் அது பெருமையான செயல்தான் என்பதை நபியவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்கள்.
அபூஜரா அல்குஜைமி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்ற ஓர் நீளமான ஹதீஸில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு கூறினார்கள் உன் ஆடையை கரண்டைக்கு கீழ்அணிவதை விட்டும் எச்சரிக்கிறேன். ஏன் என்றால் அது பெருமையின் செயற்பாடாகும். பெருமையை அல்லாஹ் விரும்புவதில்லை. (ஆதாரம் அஹ்மத்)
அதேபோல் கறண்டைக்கு கீழ் ஆடை அணிவது நரகத்துக்கு இட்டுச்செல்லும் செயல் என்பதை நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் “கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது நரகத்திற்க்கு இட்டுச்செல்லக்கூடிய செயலாகும்” (ஆதாரம்: புகாரி)
பெருமைக்காகத்தான் அணிவது கூடாது என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஆடையை கரண்டைக்கு கீழ் அணிந்த நேரத்தில் நீங்கள் பெருமைக்காக அணிந்தீர்களா இல்லையா என விசாரிக்காமல் ஆடையை கரண்டைக்கு மேல் உயர்துமாறு கூறிய செய்தியை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.
“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கடந்து சென்றேன் அப்போது எனது கீழாடை கரண்டையை விட இறங்கி இருந்தது இதனைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ்வே ஆடையை உயர்த்து எனச் சொன்னார்கள் அப்போது ஆடையை (சற்று) உயர்த்தினேன். அப்போது (நீர் உயர்த்தியது போதாது) இன்னும் உயர்த்துவாயாக என கட்டளை இட நான்மேலும் உயர்த்திக்கொண்டேன். நான் அதன்பின் இதனைத் தொடர்ந்து பேணிவந்தேன்.சமுகத்தில் உள்ள சிலர் எதுவரையும் உயர்த்தினார்கள் எனக்கேட்டதற்கு கெண்டைக்காலின் அரைவாசிவரை எனக்கூறினார்கள்” (ஆதாரம்: முஸ்லிம் )
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு உமர் அவர்களை பொதுவாகவே ஆடையை கரண்டைக்கு மேல் உயர்த்துமாறு கூறினார்கள், என்பது கண்டிப்பாக ஆடை கரண்டைக்கு மேல்தான் இருக்க வேண்டும் என்பதை விளங்குவதற்கு போதுமான சான்றாகும்.
அதேபோல் அப்துர்ரஹ்மான் பின் யஃகூப் அவரது தந்தையைத் தொட்டும் அறிவிக்கிறார்கள் நான் அபூ ஸயீதிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆடை பற்றிக் கூற ஏதாவது செவியுற்றிருக்கிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர் ஆம் என கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘ஒரு முஃமினின் கீழாடை கெண்டைக்காலின் அரைவாசிதான் இருக்க வேண்டும் கரண்டைக் கால்வரை இறங்கி இருப்பது குற்றமில்லை ஆனால் கரண்டையைவிட கீழ் இருந்தால் அவர் நரகத்தில் இருப்பார்’ என மூன்றுமுறை நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத்)
ஒருவர் தனது ஆடையை தற்பெருமைக்காகவே கரண்டைக்கு கீழ் அணிவாராக இருந்தால் அது மிகப் பெரியபாவமாகும் அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் ஏறிட்டும் பார்க்கமாட்டான் என்ற இந்த வார்த்தையை இந்த பாவத்தின் கடுமையை சுட்டிக்காட்டுவதற்கு பாவித்துள்ளார்கள்.
எப்படி என்றால் விபசாரம் பாவமாக இருந்தாலும் ஒரு முதியவர் செய்யும் போது அல்லது பக்கத்து வீட்டுக்காரியுடன் விபச்சாரம் புரியும் போது அது பெரிய பாவத்திலும் கொடியதாகும்.
அதேபோல்தான் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதே பெருமை. அணிபவன் பெருமையை நாடி அணிந்தால் மிகப்பெரும் பாவமாகும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகளை வைத்து தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
எனவே ஒரு முஃமின் கெண்டைக்காலின் அரைவாசிவரை ஆடை அணிவதே சுன்னாவாகும்.
அது மனதிற்கு கஷ்டமாகவிருந்தால் கரண்டைவரை அணிவதற்கு அனுமதியுண்டு.
கரண்டையைவிட கீழ் அணிவது அணிபவரிடம் பெருமை இல்லாவிட்டாலும் அது பெருமையின் செயற்பாடாகும்.
அதையே பெருமையாக நாடிச் செய்தால் அது பெரும் பாவமாகும். அவர்களை அல்லாஹ் மறுமையில் பார்க்கமாட்டான்.
இதே வேளை நம்மை அறியாமல் ஆடை கரண்டையை விட கீழிறங்கினால் அது குற்றமில்லை. என்றாலும் அதையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.நாமாக ஆரம்பத்திலிருந்து அவ்வாறு கீழிறக்கக் கூடாது. எனவே கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதை தவிர்த்து நபியவர்கள் காட்டித்தந்த பிரகாரம் ஆடை அணிந்து நரகத்தில் இருந்து பாதுகாப்பு பெறுவோமாக.
-அமீருல் அன்சார் (மக்கி)
source: http://www.srilankamoors.com