Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பின் தங்கிய சிறுமியிடமிருந்து…

Posted on November 21, 2011 by admin

ஃபஹீமாஜஹான்

பின் தங்கிய சிறுமியிடமிருந்து…

  

மேசைமீது உருண்டோடும் பென்சிலை

“ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி

என்னுலகத்தைச் சரிசெய்தபின்

எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை

எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்

உங்களால் முன்வைக்கப் படுகின்ற

வினாக்களைச் செவியுற்று

வெகுவாகக் குழம்புகிறேன்

கரும்பலகையின் இருண்மைக்குள்

கண்ணெறிந்து தோற்கிறேன்

நான்,

பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

  

ஆசிரியரே..

உங்கள் உயர்மட்ட

அறிவு நிலைகளிலிருந்து

கீழிறங்கி வந்து

எனது இருக்கைதனில் அமருங்கள்

தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை

தூர எறிந்துவிட்டுத்

திக்கித் திணறுகின்ற குரலொன்றினை

வழிகூட்டிச் செல்லுங்கள்

வளராப் பிள்ளை நான்

 

வகுப்பறையினுள்

வந்து விழுந்த நட்சத்திரங்கள்

உங்களைச் சூழவே இருப்பதனால்

இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்

வீழ்வதேயில்லை

உம் கிரணங்கள்

 

எனது குறைபாடுகளை நீங்கள்

முன்வைக்கும் வேளை

தூக்கிவிடும் கரமொன்றையிழந்து

வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்

ஏறமுனைகையில்

படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு

எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்

புறந்தள்ளிவிட்டு

எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்

பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்

 

நான் என்ன செய்ய வேண்டுமென்றோ

எப்படி உருவாக வேண்டுமென்றோ

அல்லது

உங்களைச் சுற்றிவரும்

ஒரு பிரகாசமான தாரகையாக

மாறுவதெவ்விதமென்றோ தெரியவே இல்லை

 

கற்றுத் தாருங்களெனக்கு

 

கொம்புகளும் விசிறிகளுமாகப்

பயங்காட்டுகின்ற சொற்களுக்கும்

பெருக்கலும் வகுத்தலுமாக

இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள்

வீற்றிருந்தவாறு

தீராச் சிக்கல் தரும்

எண்களுக்கும் மத்தியில்

முடங்கிக் கிடக்கிறதென்னுலகம்

 

எனக்கான கெளரவத்தையும்

என் விழிகளுக்கான ஒளியையும்

கண்டடைந்து கொள்ளவே

ஒவ்வொரு காலையிலும் வருகிறேன்

எனினும்

முதுகின் பின்னால் கிடந்த இருளை

என் முன்னே நடக்கவிட்டுப்

பயனேதுமற்ற

பளுமிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு

நிமிர முடியாப் பாதைகளினூடாகத்

தினந்தோறும் திரும்பிச் செல்கிறேன்

 

நீங்களும் ஒரு தேரோட்டி தான்

விபத்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்

ஆனால்

மீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?

 

என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து

தினமும் தண்டனை வழங்கும்

சிறைக்கூடமே எனது வகுப்பறையெனின்

மன்னித்துக் கொள்ளுங்கள்

எப்போது மாறப்போகிறீர்கள் –

நீங்களும் ஒரு ஆசிரியராக ?

 

(நன்றி:கலைமுகம் இதழ் 51)

source: http://faheemapoems.blogspot.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb