இகாமத்துஸ் ஸலாத்தும் – இகாமத்துத் தீனும்
முஸ்லிம் உம்மாவின் கடமை
அல்லாஹுத்தஆலா முஸ்லிம் உம்மாவை சிறந்த சமூகமாக படைத்துள்ளான். உம்மத்தே முஸ்லிமாவைக் கொண்டு ஓர் உன்னதமான காரியத்தைச் செயற்படுத்த நினைத்துள்ளான். ஒரு சிறந்த சமூகத்தின் பணி என்னவாக இருக்க முடியும்?
மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள். தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். (ஆல இம்ரான் 110)
நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது சுருக்கமாகச் சொல்வதென்றால் ஷரீஅத்தை நிலைநாட்டுவது, தீனை நிலை நாட்டுவது. உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று தீனைப் பரப்புவது, உலகின் ஏதேனும் ஒருபகுதியிலும் இறைவனுக்கு எதிரான அமைப்பு நிலவுகின்றது. இறைவனின் மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்றால் அதனைக் கண்டு கொதித்து எழுவது. அங்கும் சென்று இறைவனுடைய தூயதீனை எடுத்துரைப்பது.
இதையே நாம் இகாமத்துத் தீன் – தீனை நிலைநாட்டுவது – என்று சொல்கின்றோம். இந்த இகாமத்துத் தீன் பணியை செய்வதற்குத் தான் அல்லாஹ் நம்மை, உம்மத்தன்வஸத் ஆக நடுநிலை சமுதாயமாக ஆக்கியுள்ளான்.
இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும் இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (பகறா – 143)
இன்றைக்கு உலகில் உள்ள முஸ்லிம் சமுதாயம் தன்மீது சுமக்கப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றுகின்றதா? என்று கேட்டால் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம்.
இன்றைக்கு முஸ்லிம்களுக்கு வருகின்ற வேதனைகள், அவமானம், கஷ்டம், இழிவு அனைத்துக்கும் இதுதான் காரணம்ஸ நாம் நம்முடைய பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று சொல்லுவதோடு, நாம் நம்முடைய பொறுப்பு என்ன? என்பதைக் கூட சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பது தான் உண்மையாகும்.
உயர்ந்த ஓர் இலட்சியத்துக்காக படைக்கப்பட்ட சமுதாயம் தன்னுடைய பொறுப்பை மறந்துவிட்டால், தன்னடைய கடமையை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்தால் அச்சமுதாயம் வீழ்ச்சி அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுஸ நமக்கு முந்தைய சமுதாயங்களின் வீழ்ச்சிகளில் இருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை இதுவே!
செயல் அளவில் நீர்த்துப் போன ஒரு சமுதாயத்தை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால் குறைந்தபட்சம் சொல் அளவில் கடமையுணர்வு இருந்தால் காப்பாற்றலாம். அதாவது செயல் அளவில் தன்னுடைய கடமையைச் செய்யாமல் அலட்சியமாக உள்ள ஒரு சமுதாயத்தில் அதனுடைய உண்மையான குறிக்கோள் என்ன? எந்த நோக்கத்திற்காக அது தோற்றுவிக்கப்பட்டது. என்பதை ஓயாமல் பிரச்சாரம் செய்யும் அழைப்பாளர்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
இத்தகைய அழைப்பாளர்கள் இருக்கும் வலை அச்சமுதாயத்தின் குறிக்கோள் குறைந்தபட்சம் பேச்சுக்களாக, எழுத்துக்களாக அங்கே வலம் வந்து கொண்டிருக்கும். இந்த குறைந்தபட்ச அளவும் இல்லை என்றால் அந்த சமுதாயம் அழிந்து போய்விடும். அதன் அழிவைப் பற்றி அல்லாஹ் கொஞ்சம் கூடக் கவலைப்படமாட்டான் என்பதையே குர்ஆன், சுன்னாவிலிருந்து நாம் அறிகின்றோம்.
இத்தகைய ஒரு மோசமான சூழ்நிலையை விட்டு இகாமத்துஸ் சலாத் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுக்கின்றதுஸ நாம் ஏற்கனவே சலாத் என்பது ஈமானுக்கும், அமலுக்கும் இடைப்பட்ட கவ்ல் (சொல்) என்பதைப் பார்த்துள்ளோம். ஓர் இறை நம்பிக்கையாளன் உண்மையான இறையச்சத்தோடும், பயபக்தியோடும் தொழுது வந்தால் தொழுகையை நிலை நாட்டினால் அது அவனுடைய வாழ்க்கைக் குறிக்கோளை நினைவு படுத்துகின்றது. அவன் செய்ய வேண்டிய பணி என்ன? செல்ல வேண்டிய பாதை என்ன? என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
ஒரு மனிதன் தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதுகின்றான். குர்ஆனில் அல்லாஹ் ஆணையிட்டுள்ளான் என்பதற்காகத்தான் அவன் தொழுகவே வந்துள்ளான். குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஆறாயிரத்து அறுறூற்றுச் சொச்சம் வசனங்களையும் மாறி மாறி அவன் தொழுகையில் ஓதுகின்றான். ஓர் இறையடியானைப் பொறுத்தவரையிலும் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் சமமானவையே! அனைத்துமே கடைப்பிடிக்க வேண்டியவையே! ஒரு சிலதை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒரு சிலதைப் புறக்கணிக்க ஓர் இறை நம்பிக்கையாளனால் இயலாது.
குர்ஆனில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான வசனங்களைத் தன்னால் நடைமுறைப்படுத்த இயலாத நிர்க்கதியான நிலையை அவன் உணருகின்றான். ஆறாயிரம் வசனங்களில் ஏறத்தாழ பெரும்பாலானவற்றை விட்டும் தான் வெகு தொலைவில் நின்று கொண்டிருப்பதை அவன் நினைத்துப் பார்க்கின்றான்.
ஐவேளை தொழுக வேண்டும் என்பது எப்படி அல்லாஹ்வின் கடமையோ அது போன்று தானே, திருடனின் கையைத் துண்டிக்க வேண்டும் என்பதும் அல்லாய்வின் கடமைஸ தொழும் முன்னால் ஒழு செய்து தூய்மையாகிக் கொள்ளுங்கள் என்பது எவ்வாறு இறை ஆணையோ, அது போன்று தானே விபச்சாரம் செய்பவரைத் தண்டிப்பதும் இறை ஆணை!
தன்னால் நடைமுறைப்படுத்த இயலாத ஏராளமான இறை ஆணைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்க இஸ்லாமிய சமூக அமைப்பு அவசியம் தேவை என்பதை அவன் புரிந்து கொள்கின்றான்.
குர்ஆனைப் பின்பற்றுகின்ற அமைப்பில் தான் தன்னால் முழுமையான முஃமினாக வாழ இயலும் என்பதை அவன் ஏற்றுக் கொள்கின்றான். அத்தகையதொரு சமூக அமைப்பு உருவாகத் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியாக வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றான். அதாவது இகாமத்துத் தீனுக்காக பாடுபடவும், பணியாற்றவும் அவன் தயாராகிவிடுகின்றான். அவனுடைய தொழுகை அவனைத் தயார்படுத்தி விடுகின்றது.
ஆபாசமான காரியங்களை விட்டும், தீய செயல்களை விட்டும் தொழுகை தடுக்கின்றது, இல்லையா? அநீதியும், அராஜகமும், அக்கிரமும், கொடுங்கோன்மையும் அநியாயம் இல்லையா? தீய செயல்கள் இல்லையா? இவற்றை எவ்வாறு தொழுகை தடுக்கும்? தன்னுடைய தொழுகையாளியை தயார்படுத்துவதன் மூலம்!
திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைவு கூரத்தானே ஓர் இறை நம்பிக்கையாளன் தொழுகின்றான். பள்ளிவாசலில் இறைவனை திக்ரு செய்தால் மட்டும் போதுமா? கடைவீதிகளில், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில், தொழிற்சாலைகளில் நினைவு கூர வேண்டாமா? பொருளாதாரத் துறைகளில், சமூக அமைப்புகளில், சட்டசபைகளில் திக்ரு செய்ய வேண்டாமா? அங்கேயெல்லாம் இறைவனுக்கு எதிரான, மாற்றமான வழிமுறைகளைப் பின்பற்றும் ஒருவனால் பள்ளிவாசல் சுவர்களுக்குள் மட்டும் எப்படி மனப்பூர்வமாக திக்ருல்லாஹ்வில் ஈடுபட இயலும்?
ஆக, ஒரு மனிதன் உண்மையாகவே இஃக்ளாஸாக தொழுது வந்தால் அந்தத் தொழுகை சமூகக் கொடுமைகளுக்கெதிரான அவனது குரலை உயர்த்தும். சமூக மாற்றத்தில் அவனுடைய பங்களிப்பை முன்னிறுத்தும்.
“ஷுஐபே! எங்கள் மூதாதையர் வணங்கி வந்தவற்றை நாங்கள் விட்டுவிட வேண்டும் என்றா – அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றா – உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகின்றது?” (ஹூத் – 87)
ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தொழுகையை, பிரச்சாரத்தைக் கண்டு அவருடைய சமூக மக்கள் கூறிய கூற்று இதுஸ இறைவனை அலட்சியப்படுத்திவிட்டு தம் மனம் போன போக்கில் உல்லாசமாக, தீய வழிமுறைகளில் வாழ நினைக்கும் சமூகங்களில் இன்றைக்கும் இந்தக் குரலை நம்மால் கேட்க முடியும்.
நாம் ஏற்கனவே கண்டது போல ‘தொழுகை’ என்பது தீனுடைய தலைவாசல். மனோ இச்சைகளின்படி வாழ விரும்புபவர்கள், மார்க்க நெறிமுறைகளை எப்படி சகித்துக் கொள்வார்கள்? எனவே, மார்க்கத்தின் தலையாய அமலும், தலைசிறந்த அமலுமான தொழுகையை அவர்கள் ஒரு ‘தீராப் பெருநோய்’ ஆகவே பார்ப்பார்கள். தொழுபவனைப் பார்த்து ஙமார்க்க வியாதிங இவனைப் பிடித்துக் கொண்டது என்று கிண்டல் அடிப்பார்கள்.
ஏனென்றால் எவன் தொழுகும் தன்மையை வளர்த்துக் கொள்கிறானோ, அவன் தன்னளவில் அதை நிறுத்திக் கொள்வதில்லை. நாலு பேருக்கு சொல்லிக் கொடுப்பான். நாலாபுறமும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான். தான் சீரடைந்ததோடு நின்று விடாமல் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் சீர்திருக்கும் முயற்சிகளில் இறங்கிவிடுவான். ஒழுக்கச் சீர்கேடுகளை தட்டிக் கேட்பான்.
தனக்குள் ஒருவன் தொழத் துவங்கிவிட்டானே என்பதற்காக அல்ல, இவன் வெகுவிரைவில் ஒழுக்கப் போதனையை துவக்கிவிடுவானே, தன்னையே விமர்சனம் செய்ய ஆரம்பித்து, தலைவலியாய் மாறிவிடுவானே என்பதை எண்ணித்தான், அவனை அச்சமூகம் எதிர்க்கின்றது. எனவே தான் அத்தகைய சமூகம் எல்லாவற்றுக்கும் மேலாக தொழுகையை, தொழுகையாளிகளை எதிர்க்கின்றது.
எனவே, தொழுகை எனும் தலைவாசலுக்குள் நுழைந்து தீனைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கின்றவன் சமுதாயச் சீர்கேடுகளைக் கண்டும் காணாதவனைப் போல இருக்க மாட்டான். துணிந்து நின்று எதிர்ப்பான் என்பதை நாம் உணர்ந்து கொள்கின்றோம்.
இகாமத்துஸ் ஸலாத்தை ஒழுங்காக முறைப்படி நிறைவேற்றுகின்றவன் கண்டிப்பாக இகாமத்துத் தீனில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வான்.
இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் இகாமத்துத் தீனில் முழு மூச்சோடு ஈடுபடுகின்றவன் மட்டுமே இகாமத்துஸ் சலாத்தை முறைப்படி செய்ய இயலும்.
இன்னல்களுக்கான அருமருந்து
இகாமத்துத் தீன் எனும் கடமையில் ஈடுபடச் சொல்லி தொழுகை நம்மைத் தூண்டுகிறது. வலியுறுத்துகிறது. இகாமத்துத் தீன் என்பது ஏதோ சாதாரணபாதை அல்லவேஸ முற்களும் கற்களும் இடையூறுகளும் இடர்ப்பாடுகளும் நிரம்பிய துன்பப் பாதை ஆயிற்றே அதுஸ எனவே, எந்தத் தொழுகை ஊக்கமூட்டுகின்றதோ அதே தொழுகை பாதையில் படுகின்ற காயங்களுக்கு மருந்தாகவும், மனவலிகளுக்கு ஒத்தடமாகவும் ஆகின்றது.
குஃப்பார்களுக்கு எதிராக உறுதியுடன் நில்லுங்கள் என்று எங்கேயெல்லாம் குர்ஆன் கற்றுத் தருகின்றதோ, அங்கேயெல்லாம், தொழுகையையும் திக்ருல்லாஹ்வையும் கடைபிடிக்கச் சொல்லி வலியுறுத்துகின்றது. பாத்திலை முறியடித்து, தீனை நிலை நாட்டுவதற்குத் தேவையான துணிச்சல், வலிமை தொழுகையின் மூலமாகத் தான் கிடைக்கும் என்பதை அது உணர்த்துகின்றது.
குர்ஆன் கற்றுக் கொடுக்கின்றது
“எனவே, நீர் உம் அதிபதியின் கட்டளைப்படி பொறுமையை மேற்கொள்ளும்! இவர்களில் தீய செயல் செய்பவனுக்கோ – சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர்! உன் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் (தொழுது) நினைவு கூரும்!” (தஹ்ர் – 24,25)
தொடர்ந்து வரும் துன்பங்கள், இன்னல்களைக் கண்டு வருத்தம் அடையாதீர்கள். உங்கள் இறைவனின் வாக்கு ஒரு நாள் வென்றே தீரும் என்று திடமாக நம்புங்கள். தளராமல் கொள்கையில் குன்றாமல் தொடர்ந்து பேராடுங்கள். அதற்குத் தேவையான வலிமையைத் தொழுகைகையின் மூலம் திரட்டிக் கொள்ளுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது.
“எனவே, நீர் பொறுமையாய் இரும்! அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும் (இலக்கை அடைய அவசரப்படும்) உம்முடைய தவறுக்காக மன்னிப்புக் கோரும்ஸ காலையிலும், மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் தொழுது அவனைத் துதித்துக் கொண்டுமிரும்!” (முஃமின் -55)
“ஈமான் கொண்ட நம்பிக்கையாளர்களே! (பொறுமை) நிலை குலையாமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுவீர்களாக!” (பகறா – 153) (மேலும் காண்க – 50 – 39,40) (52-48)
துன்பங்களைப் போக்க வல்லது
தொழுகையின் தன்மை, பயன்களை அறிந்து கொண்ட பின்பு அது துன்பங்களைத் தீர்க்க வல்லது என்பதைத் தயக்கமின்றி ஒப்புக் கொண்டிருப்பீர்கள். அண்ணலெம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) ஏதேனும் வருத்தமான செயல், சிக்கல் ஏற்பட்டுவிட்டால் உடனே தொழுவார்கள் என்பதை ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.
அண்ணலாருக்கு ஆரம்ப காலத்தில் நபிப்பட்டம் அருளப்பட்ட போதே, இது சாதாரண வேலையல்ல, முதுகெலும்பை முறித்துவிடும். எனவே நீங்கள் தொழுது உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்! என்று கூறப்பட்டது.
“நாம் உம்மீது கனமாகதொரு வாக்கை விரைவில் இறக்கப் போகின்றோம். இரவில் எழுந்திருப்பதோ, மனதிக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.” (முஸ்ஸம்மில் – 5,6)
தொழுகை எவ்வாறு துன்பங்களைப் போக்கும்? இன்னல்களை நீக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்! அதற்கும் முன்பாக துன்பம், கவலை என்றால் என்ன? என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்!
வருத்தம், கவலை, துன்பம், துயரம் இவை எல்லாமே நம் சிந்தையில் உண்டாகுபவைகளே! எண்ணங்கள் தாம் உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுக்கின்றன. அவற்றுக்குப் பெயரும் சூட்டுகின்றன. இவை அனைத்தும் ‘சிந்தனை’யின் விளைவுகளே என்பதை உணர்ந்து கொள்ளும் மனிதன் உணர்ச்சிகளின் சிக்கல்களுக்குள் அகப்படுவதில்லை.
ஒரே விஷயம் ஒருவனுக்கு சந்தோஷமாகவும், இன்னொருவனுக்கு வருத்தமாகவும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். ஒரே பொருள் ஒருவனுக்கு நன்றாகவும் மற்றவனுக்கு கெட்டதாகவும் இருக்கின்றது. ஒரே வேலையை இருவர் செய்கின்றார்கள். ஒருவன் விருப்பத்தோடு செய்கின்றான். நேரம் போவதே அவனுக்குத் தெரிவதில்லை. இன்னொருவன் வேண்டா வெறுப்பாக செய்கின்றான். அவனுக்கு நேரம் நகரவே மாட்டேன் என்கிறது.
வேண்டா வெறுப்போடு சாப்பிட்டால் தேனும் கசக்கும். விரும்பித் தின்றால் பாகலும் இனிக்கும். ஆக, நம்முடைய ‘சிந்தனை’யைப் பொறுத்துத் தான் உணர்ச்சிகள் வடிவங்கொள்கின்றன. எனவே தான், நன்கு உணர்ந்த இறைநம்பிக்கையாளன் செல்வம் கொழித்து சந்தோஷம் மிகைக்கும் போது துள்ளிக் குதியாட்டம் போடுவதுமில்லை. வறுமை மிகைத்துவிடும் போது வருத்தம் தொண்டைணை அடைக்க வானத்தை வெறித்தப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விடுவதுமில்லை.
வான்மறை திருக்குர்ஆன் இதனையே வெகு அழகாகக் கூறுகின்றது
“பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்கள் மீது இறங்குகின்ற எந்தத் துன்பமானாலும் – அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதைக் குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். (இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும், நீங்கள் மனம் துவண்டுவிடக் கூடாது. மேலும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கி இருப்பவற்றைக் கொண்ட நீங்கள் பூரித்துப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்! தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமையடித்துத் திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை!” (ஹதீத் – 22,23)
தெளிவான ஈமானைப் பெற்றவர்கள் எத்தகைய பொருளாதார இழப்புகள், உயிர் இழப்புகள் ஏற்பட்டாலும், அவை ஏற்கனவே தமது இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை ஏட்டில் எழுதப்பட்டவை என்பதைப் புரிந்து கொண்டு வருத்தம் அடைவதுமில்லை, கலங்கிப் போவதுமில்லை என்பதையே இவ்வசனம் நமக்கு உணர்த்துகின்றது. அவ்வாறே, அவர்கள் நிஃமத்துகள், அருட்கொடைகளைப் பெறும்போது அளவுக்கதிகமான மகிழ்ச்சியினால் குதூகலம் அடைவதுமில்லை.
அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். எந்த துன்பத்தையும் அது என்னதான் மலை போன்று இருப்பினும் கண்டு கலங்கிவிடுவதில்லை.
நீர் கூறுவீராக – “(நன்மையோ, தீமையே) அல்லாஹ் எங்களுக்காக விதித்து வைத்திருப்பவற்றைத் தவிர வேறெதுவும் எங்களை அடையாது. அவன்தான் எங்களின் பாதுகாவலன். ஈமான் கொண்டோர் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்.” (தவ்பா – 51)
துன்பங்கள், துயரங்களை எதிர்கொள்ளும் போது மனித மனம் விநோதமாகத் தான் நடந்து கொள்கின்றது. மலை போன்ற துன்பங்களையும் ஒரு மனிதன் தாங்கிக் கொள்கின்றான். அதே மனிதனால் ஒரு சாதாரண இழப்பை சமயங்களில் சகித்துக் கொள்ள இயலாமல் போய்விடுகின்றது.
மனிதர்களுள் ஒரு பிரிவினரைப் பற்றி குர்ஆன் இவ்விதம் கூறுகிறது
“அல்லாஹ் முஃமின்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும், பொருள்களையும் சொர்க்கத்திற்குப் பதிலாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள். கொல்கின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள்.” (தவ்பா – 111)
இதே மனிதர்களில் தாம் இப்படியும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள்
“ஒவ்வொரு உரத்த சப்தத்தையும் இவர்கள் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர் தாம் கடும் பகைவர்கள் ஆவர். எனவே இவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இரும்!” (முனாஃபிக்கூன் – 4)
ஒரே மனித இனத்தில் துருவங்களுக்கு இணையான இந்த வேறுபாடு ஏன் ஏற்படுகின்றது என்றால், சரியான, முழுமையான அறிவு இல்லாததினால் தான்ஸ முழுமையான, உண்மையான அறிவைப் பெற்றவர்கள் கடுகை மலையாக என்றும் நினைப்பதில்லை. அவர்கள் நஃப்ஸுல் முத்ம இன்னாவைப் பெற்றவர்கள். கொள்கையுறுதியில் மலைபோல் உயர்ந்தவர்கள். இந்த சிறப்பிடத்தை அவர்கள் தொழுகையைக் கொண்டே அடைந்தார்கள். உண்மையான அறிவிற்கான ஆதார சுனை தொழுகைதான் என்பதை நாம் ஏற்கனவே கண்டுள்ளோமே!
இதை நாம் இன்னொரு கோணத்தில் அணுகலாம். வருத்தமும், துயரமும் அல்லாஹ்வை விட்டு நம்மை தூர அழைத்துச் செல்கின்றன. அல்லது அல்லாஹ்வை விட்டு தூர விலகுவதால் அவை ஏற்படுகின்றன. அல்லாஹ்வின் அருகாமை இருந்தால் வருத்தமோ, கவலையோ நம்மை அடைவதில்லை. இதே போன்ற ஒரு நேரத்தில் தாம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
“வருத்தமடையாதே! அல்லாஹ் நம்மோடு உள்ளான்!” (தவ்பா – 40)
அல்லாஹ்வுக்கு அருகில் இருந்தால் நம்மை கவலையோ, வருத்தமோ, துன்பமோ எதுவுமே அணுகாது. சொர்க்கவாசிகளைப் பற்றிக் கூறும் போது,
“அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்!”(பகறா-ள112)
ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வுக்கு அருகில் உள்ளார்கள். இப்பூவுலகில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற வேண்டுமானால் என்ன வழி? தொழுகை ஒன்றே வழி!
“ஸஜ்தா செய்வீராக! (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!” (அலக் – 19)
துன்ப, துயர காலங்களில் தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்று அல்பகறாவில் அல்லாஹ் கூறுகிறான்.
அதே கருத்தை அஃராபில் சொல்லும்போது,
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையை மேற்கொள்ளுங்கள்!” (128)
என்று கூறுகிறான். இவ்விரு வசனங்களையும் கவனமாகப் பார்த்தால் முதல் வசனத்தில் ‘சலாத்’என்ற சொல் உள்ளது. இரண்டாவது வசனத்தில் அதே இடத்தில் ‘அல்லாஹ்’ என்ற சொல் உள்ளது. அதாவது எந்த அளவு தொழுகை அல்லாஹ்வுக்கு நெருக்கமானதாய் உள்ளது என்றால், இவ்வுலகில் இறை நெருக்கத்தின் மாற்று வடிவமாய் உள்ளது. இதையே அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லிம்) தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.
“தொழுகை இறைவனை நெருங்கச் செய்கின்றது!” (தர்கீப்)
இறைவனை நெருங்கி விட்டால் அன்பு, பாசம், அபயம் எல்லாமே கிடைத்துவிடுகின்றன.
“உம் இறைவன் பெயரை நினைவு கூறுவீராக! எல்லாவற்றையும் விட்டு அவனையே தஞ்சம் அடைந்து அவனுக்காகவே ஆகி விடுவீராக!” (முஸ்ஸம்மில் -8)
அன்பு உள்ள இடத்தில் தான் ஆறுதல் இருக்கும். அரவணைப்பும் இருக்கும். அன்பையும், ஆறுதலையம் அரவணைப்பையும் தானே மனித மனம் தேடி அலைகின்றது. இதைத்தான் அண்ணலார் கூறுகின்றார்கள்.
“என் கண்களின் குளிர்ச்சி தொழுகையில் உள்ளது.”
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து “ஆறுதலைத் தரமாட்டாயா?” என்றும் கேட்டுள்ளார்கள்.
இன்னொரு கோணத்தில் பார்த்தாலும், ஏற்கனவே கண்டது போல தொழுகை திக்ருல்லாஹ் ஆகும். திக்ருல்லாஹ்வில் மனம் பூரண அமைதியை, முழு நிம்மதியை அடைந்து விடுகின்றதே
முழு ஹதீஸ் வருமாறு
“இறைவனின் நினைவில் உள்ளங்கள் அமைதி அடைவதில்லையா?” (ரஃது -28)
நிம்மதி என்பது எப்போது கிடைக்கும்? அறிவும், சிந்தனையும் தெளிவடைந்து விட்டால் அமைதி கிடைக்கும். நிம்மதி பிறக்கும். முழுமையான அறிவு கிடைத்துவிட்டால் உள்ளத்தில் பேரொளி பிறக்கும். வருத்தம் மகிழ்ச்சி, இன்பம், துன்பம் அனைத்தையும் ஒன்றாகப் பாவிக்கும் மனப்பான்மை தோன்றிவிடும்.
இது தான்,
நிலை ஆகும்!
இன்னும், இதுவே தான்.
இந்த நிலை தொழுகையாளிகளுக்கு மட்டுமே சொந்தமானதாகும். அவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.
மனிதன் பதற்றக்காரனாய் படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமையிழந்து போகின்றான். வசதி வாய்ப்புகள் அவனுக்கு வரும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான், தொழுகையாளிகளைத் தவிர! (அவர்கள் இத்தகைய தன்மைகளிலிருந்து தூரவிலகி உள்ளார்கள்). அவர்களோ தொழுகையை நிரந்தரமாக தொடர்ந்து நிறைவேற்றுகிறார்கள். (மஆரிஜ் – 19-23)
posted by : Feroz Khan