ஓடும் ரயிலில் கிறிஸ்தவப் பாதிரியுடன் ஒரு உரையாடல்…
(சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் நாவலராகவும் ஆலிமாகவும், சிராஜ் மாத இதழின் ஆசிரியராகவும் விளங்கிய கடையநல்லூர் மர்ஹூம் எஸ். யூ. அப்துல் ஹை சாஹிப் அவர்கள் தன்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன் கிறிஸ்தவ மதம் குறித்து கேட்ட சில சிக்கலான கேள்விகள்)
நெல்லை எக்ஸ்ப்ரஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக் கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில் என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் திருமுகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும் அமைதியும்தவழும் களையான முகம். வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார்.
“யாரோ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்” என்று எண்ணிக் கொண்டேன். புகை வண்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அந்த இளைஞர் மேலே அப்பர் பெர்த்தில் படுத்து விட்டார்.
உறங்கும் பயணிகளை தன் கற்பத்தில் சுமந்து கொண்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்தது அந்த நெல்லை விரைவுப் புகை வண்டி.
பலபல என்று விடிந்தபோது விருதுநகரில் அந்த இளைஞர் விழித்தார் கை கால் முகம் கழுவி காப்பியும் அருந்தி விட்டு உடை மாற்றத் தொடங்கினார் . மாற்று உடையில் அவரைக் கண்டதும் ஓரளவு திகைத்துத்தான் போனேன். ஆம்! அத்துணை நேரமும் அவரை செல்வக் குடியில் பிறந்த ஒரு வாலிபர் எனக் கருதியிருந்த என் முன் அவர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் உடையில் காட்சியளித்தார்.
அருகில் அமர்ந்திருந்த அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைப் பார்த்ததும் அவருடன் ஏதாவது பேசவேண்டுமென என் துடுக்கு மனம் துடித்தது. நெல்லை வரை பொழுதும் போகவேண்டுமே!
பேசத் தொடங்கினேன்! சென்னையில் பாதிரியார்களின் மாநாட்டுக்கு சென்று வருவதாகவும், பாளையம்கோட்டையில் வசிப்பதாகவும் அவர் தம்மைப் பற்றிக் கூறினார். அவர்களின் மத குருவாக ஆவதற்குரிய கல்வி, பயிற்சி சடங்குகள் முதலியவைகளையும் இனிமையுடன் விவரித்தார். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அன்புடனும் கனிவுடனும் விளக்கம் கூறினார். அவரது பேச்சும் பதிலளித்த முறையும் சகஜமாகப் பழகிய விதமும் “இன்னும் ஏதாவது கேள்” என்று என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தன. சரி! நாம் என்ன கேட்டாலும் இவர் கோபப் பட மாட்டார்! என்ற தைரியம் வந்து விட்டது எனக்கு!
“சார்! உங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எனக்கு சில சந்தேகங்கள்! உங்களிடம் அதைக் கேட்டு நீக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்! கேட்கலாமா சார்? நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் கேட்கிறேன்” என்று ஆரம்பித்தேன்!
“ஏன்? தாராளமாகக் கேளுங்கள்” எனப் புன் முறுவல் பூத்தார்!
“சார்! எங்களுடைய வேதத்திற்கு “குர்ஆன்” என்று பெயர்! இந்தப் பெயர் அந்த வேதத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது! அதேபோல் உங்களுடைய வேதமாகிய பைபிளில் “பைபிள்” என்று எங்காவது வருகிறதா?
“இல்லை!” – அவரது பதில் .
“அப்படியானால் உங்கள் வேதத்திற்கு “பைபிள்” என்று எப்படிப் பெயர் வந்தது? யாரால் சூட்டப் பட்டது?”
“நல்ல கேள்வி; ஆனால் உடனடியாக என்னால் பதில் சொல்ல முடியவில்லை”
“சார்! வருத்தப் படக் கூடாது! பதினேழு ஆண்டுகள் நீங்கள் பாதிரியார் ஆவதற்குப் பயிற்சி பெற்றும் இந்தச் சந்தேகத்திற்கு யோசித்துத் தான் பதில் சொல்ல வேண்டுமா?”
”………..”
“சார்! இன்னொரு சந்தேகம்! எங்களுடைய வேதமாகிய குர் ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டது. உங்களுடைய பைபிளை எந்த மொழியில் இயேசு கூறினார்?”
“ஹிப்ரூ மொழியில்”
“சரி! நாங்கள் இன்ஜீல் வேதம் ஸுர்யானி மொழியில் அருளப்பட்டதாக நம்புகிறோம்! ஆனால் அந்த மொழி உங்களுக்கு தெரியுமா?”
“தெரியாது!”
“அப்படியானால் நீங்கள் எந்த மொழியில் உங்கள் பைபிளை ஓதுகிறீர்கள்?”
“ஆங்கிலத்திலும் தமிழிலும், பிற மொழிகளிலும்”
“எங்கள் குர் ஆனை எடுத்துக் கொள்ளுங்கள்! அது எந்த அரபு மொழியில் அருளப்பட்டதோ அதே மொழியில் ஒரு புள்ளியும் மாறாமல் இன்றளவும் உயிருடன் இருக்கிறது! எங்களில் சின்னஞ் சிறு வயதினரும் அதை ஓதத் தெரிந்திருக்கின்றனர் ஆனால் உங்களுடைய வேதமாகிய பைபிளோ எந்த மொழியில் இயற்றப் பட்டதோ அந்த ஒரிஜினல் மொழியில் இன்று இல்லை என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இன்று உங்களிடம் இருப்பதெல்லாம் வெறும் மொழிபெயர்ப்புக்கள் மட்டுமே!”
“எந்த மொழியாக இருந்தாலும் அந்தந்த மொழிக்கென்று சில தனித் தன்மைகள் இருக்கும்! ஆங்கிலமோ, தமிழோ அரபியோ எதுவாக இருந்தாலும் சரிதான்! ஒரு மொழியிலுள்ள வேதத்தையோ, இலக்கியங்களையோ எவ்வளவுதான் திறமையுடன் பிற மொழிகளில் பெயர்த்தாலும் மூல நூலின் சாறை யதார்த்தத்தை பிற மொழிகளில் அப்படியே கொண்டு வந்திட முடியாது! எப்படியும் சிறிது கூடவோ குறையவோ தான் மொழி பெயர்க்க முடியும் இல்லையா?”
“ஆம்….உண்மைதான்!”
“அப்படியானால் உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்து விட்டது! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் “ஒரிஜினல்” அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்க முடியும்?”
“………………………” (பதில் இல்லை )
“இரவா வரம் பெற்ற உங்கள் இயேசுவின் வேத மொழி இறந்து விட்டது என்று சொல்வது உங்கள் வேதத்துக்கும் உங்கள் மதத்துக்கும் பெருமையா? உங்கள் பைபிள் எப்படி உயிருள்ளதாக இருக்க முடியும்?
“……………………………”(பதில் இல்லை)
சிறிது நேர மௌன இடைவெளி. எங்களுடன் அதே பெட்டியில் பயணம் செய்த மற்றவர்கள் அனைவரும் இந்து நண்பர்கள் எங்களது உரையாடலை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர்!
மீண்டும் தொடர்ந்தேன்!
“சார்! இன்னும் ஒரு சந்தேகம்! என்னுடைய தகப்பனாரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கொலைகாரனை மட்டுமல்ல அவன் பயன்படுத்திய துப்பாக்கியை எப்போது பார்த்தாலும் எனக்கு என் தந்தையின் நினைவும், இந்தத் துப்பாக்கியால் அல்லவா என் தந்தை கொல்லப்பட்டார் என்ற ஆத்திரமும்தான் எனக்கு ஏற்படும் இல்லையா?”
“துப்பாக்கியைப் பார்க்கும்போதெல்லாம் என் தந்தையைக் கொன்ற கருவி என்ற காரணத்தால் அவைகளின் மீது வெறுப்புதான் ஏற்படுமே தவிர “ஆஹா! என் தந்தையைக் கொன்ற துப்பாக்கியே வா! என் கண்ணே!” என்று அதன் மீது பிரியமோ வாஞ்சையோ ஏற்படுமா? ஏற்படாதே! ஏனெனில் சராசரி மனித இயல்பே அதுதான்! கொலைக் கருவிகள் மீது மனிதனுக்கு நேசம் ஏற்பட எந்த நியாயமும் இல்லை அல்லவா?”
“ஆம்! சொல்லுங்கள்”
“ஆனால் உங்கள் ஏசுவைக் கொன்ற கொலைக் கருவி சிலுவை! அதில் அறைந்து தான் கொன்றார்கள் என்று நீங்கள் சாதிக்கிறீர்கள்! அப்படியானால் உங்களுடைய பிதா -மகன்-பரிசுத்த ஆவியான கடவுளையே கொலை செய்யக் காரணமான அந்தச் சிலுவையின் மீது உங்களுக்கு வெருப்பல்லவா ஏற்படவேண்டும்? மாறாக அதன் மீது அன்பும் பக்தியும் கொள்கிறீர்களே! எப்படி? தமது குருநாதரான கடவுளை கடவுளின் குமாரனை கொலை செய்த கொலைக் கருவியான சிலுவையின் மீது பிரியம் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வருகிறது? இது மனித இயல்புக்கே முரண் அல்லவா?”
“அது மட்டுமல்ல! சாதாரணமாக கொலைக் கருவி யார் கையில் இருக்கிறதோ அவன்தான் கொலைகாரனாய்இருக்க முடியும்! அல்லது அவனுக்கும் கொலைக்கும் எப்படியேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். இல்லையா? சாதரணமாக இந்த முடிவுக்கே எல்லோரும் வருவர்!”
“ஆனால் கிரிஸ்துவர்கலாகிய நீங்கள் உங்கள் இயேசு பெருமானை கொலை செய்த ஆயுதத்தை கையிலும் கழுத்திலும் மாட்டிக் கொண்டு போற்று கிறீர்களே! இதைப் பார்க்கும் எந்த மனிதனுக்கும் ஒருவேளை இயேசுவை நீங்கள் தான் கொலை செய்தீர்களோ என்ற சந்தேகம் வராதா?”
“இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்ற யூதர்களுக்கு வேண்டுமானால் சிலுவை புனிதச் சின்னமாக விளங்கலாமே தவிர கிருஸ்துவர்கலாகிய உங்களுக்கு எப்படி அது புனிதமாக இருக்க முடியும்? “
“………………………………..” (பதில் இல்லை)
“சார் நான் என் மனதில் எழுந்த சில சந்தேகங்களைத்தான் கேட்டேன்! நீங்களோ மௌனம் சாதிக்கிறீர்கள்! ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் உங்களிடம் மறைந்து விட்டது போல் தெரிகிறது ! எனது கேள்விகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமானால் நான் இனி கேட்கவில்லை! சரியா சார் ?”
“இல்லை; வருத்தம் இல்லை! ஆனால் எங்கள் கிருஸ்த்துவ மதத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எப்படியெல்லாம் கருதுகிறார் எனபது குறித்து நேரடியாக அறிந்து கொள்ள இந்த உரையாடல் ஒரு வாய்ப்பு! அதற்காக ரொம்ப தேங்க்ஸ்! நீங்கள் கேட்ட கேள்விகள் எனது சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது! அதற்காகவும் நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்!”
பாதிரியாரான அந்த ரயில் நண்பர் இப்படிக் கூறி முடிப்பதற்கும் ரயில் நெல்லை சந்திப்பை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது, கைலாகு கொடுத்தபடி இருவரும் விடைபெற்றோம்.
source: ”சிலேடைக் கவிஞர் சிராஜ் அப்துல் ஹை” – என்ற நூலிலிருந்து பீ. எம் கமால், கடையநல்லூர்.