பெண் குழந்தைகள் மீதான அன்பை அர்த்தப்படுத்துவோம்!
DR. சித்ரா சுந்தர்ராஜன்
பெண்கள் எளிதில் நோய்வாய்ப்பட அவர்களது உடலமைப்பே காரணமாக அமைகிறது. ஆண்களை விடவும் பெண்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகவும் நேரிடுகிறது.
ஒருசில நோய்கள் வெளிப்படையாகப் பேசிச் சரிசெய்துகொள்ள முடிகின்ற அதேநேரத்தில், ஒரு சில நோய்கள் அறியாத் தன்மையாலும், வெட்கம், கூச்சம் போன்ற மனோவியல் காரணிகளாலும் வெளிச் சொல்லப்படுவதில்லை. ஆயினும் இதுபோன்ற நோய்கள் காலக்கிரமத்தில் சரிசெய்யப்படாவிட்டால் அவை உண்டாக்கும் தீங்குகள் மட்டற்றவை.
அவ்வகையில், கருப்பைவாய் புற்றுநோய் எவ்வாறு தோன்றுகிறது என்று பார்க்கலாம். கருப்பைவாய் குழாய் உட்புறம் வரிசையான தோல் இழைமங்களால் ஆனது. இந்தப் பகுதிக்கு மாறுதல் மண்டலம் என்றும் பெயர். இந்த மண்டலத்தில் ஏராளமான உயிரணுக்களின் பழுது பார்க்கும் பணி நடைபெறும்.
புணர்புழை அமிலங்கள் காரணமாக வரிசை தோல் இழைமங்கள் தகடு இழைமங்களாக மாறும். புற்றுநோயைப் பரப்பும் கிருமிகள் செய்முறையின் போது உயிரணுக்களில் சிக்கிக்கொள்வதால் இயல்பான உயிரணுக்கள் புற்றுநோய் உயிரணுக்களாக மாறுகின்றன.
உடலுறவின் போது ஏற்படும் சிறு காயங்கள் மூலம் ஹெச்.பி. வைரஸ் உயிரணுக்களின் ஊடே புகுந்து விடுகின்றன. அதிக நபர்களுடன் உடலுறவு கொள்வதால் நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கும். முதல் முறை உடலுறவின் போது மாறுதல் மண்டலத்தில் மாற்றங்கள் தீவிரமாக செயல்படுவதனாலும் இது ஏற்பட இடமுண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் பாலுறவில் ஈடுபடும் ஆண்களாலும் இந்த வைரஸின் தாக்குதல் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இவை தவிர தொடர்ந்து புகை பிடித்தலும் இந்த நோய் ஏற்பட ஏதுவாகின்றது. ஆயினும் ஆண் குறி முனைத் தோலை வெட்டிக் கொள்ளும் ஆண்கள் குடும்பத்தில் இந்நோய்க்கான வாய்ப்பு குறைவு.
கருப்பைவாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் அதிக அளவு புணர்புழை கசிவு, உடலுறவுக்கு பின் ரத்தக் கசிவு, மாதவிலக்கு நின்ற பிறகும் ரத்தப் போக்கு, இடுப்புப் பகுதியில் கடுமையான வலி என்பனவற்றைக் கொண்டு கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை உணரலாம். இதுபோன்ற அறிகுறிகள் தோன்றுமிடத்து எவ்விதத் தயக்கமும் இன்றி பெண்நோயியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறவேண்டும்.
கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படுத்தும் கடுமையான பாதிப்புகள் என்ன என்று பார்க்கலாம். இந்த நோய் பாதிப்புக்கு உட்பட்ட பெண்ணாலேயே தாங்கிக் கொள்ள முடியாத அளவில் புணர்புழைக் கசிவு துர்நாற்றத்தைத் தரும். பாதிக் கப்பட்ட பெண்ணின் தாய், மகள் போன்ற நெருங்கிய உறவினர்கள்கூட அருகில் இருக்க சங்கடப்படும் அளவுக்கு இந்தத் துர்நாற்றம் தொல்லை தரும். சிறுநீரக வாய்க்கு அருகேயும் ஆசன வாய்க்கு அருகேயும் கருப்பைவாய் இருப்பதால் இதன் பாதிப்பு சில சமயம் தொடர் சிறுநீர் மற்றும் தொடர் மலம் கழித்தல்களுக்கு வழிவகுக்கும்.
இவை போன்ற காரணங்களால் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் அதேசமயம், சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயக்கம், அலட்சியம் போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட பெண் இறக்கவும் நேரிடும். வெட்கத்தின் காரணமாக பெண்கள் தனக்கு கருப்பைவாய் புற்றுநோய் இருப்பதை வெளியே தெரிவிப்பதில்லை. ஆண்களுக்கு இந் நோயின் கொடுமைகள் தெரிவதில்லை ஆதலால், பெண்களே தம் உடல்நிலை குறித்து மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதைக் கண்டுபிடிப்பது எப்படி?
கருப்பைவாய் புற்றுநோய் இருப்பதை பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுவதும் குணப்படுத்த லாம். பேப்ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கருப்பைவாய் புற்றுநோய் இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். கருப்பைவாயில் இருந்து நீல உயிரணுக்களை எடுத்து மைக்ரோஸ் கோப் மூலம் பரிசோதிக்க ஆய்வகத்திற்கு அனுப் புவார்கள். ஐம்பது வயதுவரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் இந்த பரிசோதனையை கண்டிப் பாக மேற்கொள்ள வேண்டும். பேப்ஸ்மியர் பரிசோதனையின்போது புணர் புழைக் கசிவுகளில் ஹெச்.பி.வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படவேண்டும். திரவ அடிப்படையி லான சைடாலஜி பரிசோதனைக்கான செலவுகள் அதிகம் தான் என்றாலும் இந்தப் பரிசோதனை சரியான முடிவுகளைத் தரும்.
கோல்போஸ்கோபி என்றால் என்ன?
புணர்புழையை மைக்ரோஸ்கோப் மூலம் பரிசோதிக்கும் முறையே கோல்போஸ்கோபி எனப்படும். பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களில் சில மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பலாம். இந்நோயைக் குணப்படுத்த அதிக அளவு நிதி ஆதாரங்களும் மனித நிபுணத்துவமும் தேவைப்படும் என்பதைப் பெண்களாகிய நீங்கள் கவனத்தில் கொள்வது நல்லது. கருப்பைவாய் புற்றுநோய் காரணமாக ஏற்படும் உலகளாவிய மரணங்களில் நாற்பத்து ஏழு சதவீதமானவர்கள் தெற்காசியப் பெண்களாவர் என்பது, இந்நோய் குறித்த விழிப்புணர்வு நம் மத்தியில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணவில்லை என்பதையே உணர்த்துகிறது. இதில் பணக்காரர் மற்றும் ஏழைகள் என்ற வேறுபாடு இல்லாமல் நோய் முற்றிய பிறகே பெரும்பாலான பெண்கள் பரிசோதனைக்கு வருகின்றனர்.
நம்மிடம் உள்ள இதற்கான மாற்று என்ன?
ஹெச்.பி.வைரஸுக்கு எதிராகக் கண்டுபிடிக் கப்பட்ட தடுப்பூசி மேற்கூறப்பட்ட கொடுமைக ளில் இருந்து விடுதலை அளிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைக் கட்டாயம் போட வேண்டும். எதிர்காலத்தில் இந்நோய் ஏற் படாமல் இது தடுக்கும். கருப்பைவாய் புற்று நோய்க்கான தடுப்பூசி விலை சற்று அதிகம்தான். ஆயினும் பெண்குழந்தைகளுக்கு பட்டுப் புடவை, பொன்னாபரணங்கள் வாங்கிச் சேர்ப்பதற்காக எவ்வளவோ செலவு செய்யும் நீங்கள், அவர்களது வாழ்நாள் முழுதுமான சந்தோஷத்திற்காக இந்தத் தடுப்பூசியைப் போடுவிப்பது அவர்கள் மேல் நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அர்த்தமுள்ளதாக்கும்.
source: http://chenaitamilulaa.bigforumpro.com/t2504-topic