மனைவியைப் பிரியாதே – குறுந்தொகை!
[ இயன்றவரை உள்நாட்டில் தொழில், வியாபாரம் செய்து பிழைக்கவும் குடும்பத்தோடு வாழவும் வழி தேடவேண்டும். இயலாது போனால் அதிக பட்சம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன ஆறுமாத காலத்திற்குள்ளாக மனைவியிடம் திரும்ப வேண்டும்.
நேற்றைய பதிவுகள் சங்க கால வாழ்வை நமக்கு முன்னிறுத்துவது போல் நாளைய பதிவுகள் இன்றைய சமூக வாழ்வை முன்னிறுத்தும். குடும்பத்தின் நீட்சியும், கௌரவமும் மனைவியிடம் உள்ளதை உணரவேண்டும். அதற்காகவே இந்த பதிவு.]
சங்க இலக்கியம் எட்டுத் தொகையில் குறுகிய அடிகளையுடையதால், ‘‘குறுந்தொகை’’ என்றழைக்கப்படுவது, 206 புலவர்கள் பாடிய 401 பாடல்கள், இளம்பூரணார் உள்ளிட்ட உரையாசிரியர்கள் குறுந்தொகைப் பாடல்களிலிருந்து மேற்கோள்காட்டியிருப்பதே அதன் தனிச் சிறப்பு.
பொருள் தேடச் செல்வதற்காக தலைவியை பிரிய நினைக்கிறான் தலைவன். அன்பு, ஆசை துறந்து, பொருள் தேடுவதற்காகப் துணையை பிரிவது அறிவுடைய செயலாகாது என்று தலைவனுக்குத் தலைவி எடுத்துரைப்பதாக கோப்பெருஞ்சோழன் பாடும் பாடல்
(20) அருளும் அன்பும் நீக்கித்துணை துறந்து / பொருள் வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் / உரவோர் உரவோர் ஆக / மடவம் ஆக மடந்தை நாமே.
அருள் – இரக்கம்.
அன்பு – பிரியம்.
துணை துறந்து – மனைவியை விட்டு.
பொருள் வயிற் பிரிவோர் – பொருள் தேடுவதற்காக கணவன் மனைவியைப் பிரிவோர்.
உரவோர் ஆயின் – வலியோர் ஆனால்.
மடவம் – பேதமை.
மடந்தை நாமே – பெண் நாமே.
பொருள் தேடச் சென்ற தலைவன் கிடைத்த பொருளைக் கொண்டு திரும்புவேன் என்று கூறிச் சென்று நீண்ட நாட்களாகியும் திரும்பாமலிருப்பது நல்ல செயல் அல்ல. எனது துயரை அவர் அறியவில்லையே என்று மனம் பேதலிக்கும் தலைவிக்கு தோழி ஆறுதல்வார்த்தை கூறுகிறாள்;
துணைவன் பிரிவால் வாடும் தலைவியே கூடிய விரைவில் உன் துணைவர் உன்னிடம் வந்து சேர்வார் என்பதாக மோசிகீரனார் பாடும் பாடல்
(59) பதலைப் பாணிப்பரிசிலர் கோமான் / அதலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டு சுனைக் / குவளையடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் / தவ்வென மறப்பரோ மற்றே முயலவும் / கரம் பல விலங்கிய அரும் பொருள் / நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.
பதலைப் பாணி – வாய் அகன்ற பறை ஒலி.
பரிசிலர் கோமான் – அரசனிடத்தில் நன்கொடை கேட்டு நிற்பவர்.
அதலைக் குன்றம் – கீழுலகில் சிறுமலை.
அகல்வாய்க் குண்டு சுனை – அகன்ற வாயுடைய உருண்டை வடிவப் பாத்திரத்தில் மலை ஊற்று.
குவளையடு பொதிந்த – செங்கழு நீர்ப்பூ நிறைந்த.
குளவி நாறு நறு நுதல் – மலை மல்லிகை நாற்று மணம் மேலிட.
தவ்வென மறப்பரோ – குவிதலை மறந்து விடுவாரோ.
கரம் பல விலங்கிய – கை கலங்கிய.
அரும்பொருள் – செல்வம் பெற.
நிரம்பா ஆகலின் நீடலோ – நிறைதல் ஆகாமல் முழுவதும் நீளுதலோ.
கணவன் நுகர்ந்து சென்ற என் பெண்மை பெரிய யானையால் ஒடிக்கப்பட்ட மரக்கிளைபோல் கிழேயும் விழாமல் வாடியும் உலராமல் நாரின் தொடர்பினால் தலைக்கும் நிலைபோல் உள்ளது. ஊரார் தூற்றுதலுக்கு பயந்து என் ஆசை, உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தாமல் இருக்கிறேன் என்று தனது நிலைப்பாட்டை தோழிக்கு தலைவி எடுத்துரைப்பதாக ஆலந்தூர் கிழார் பாடல்
(112) கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் / எள் அற விடினே உள்ளது நாணே / பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ / நாருடை ஓசியல் அற்றே / கண்டிசின் தோழி அவர் உண்டான் நலனே.
கௌவை அஞ்சின் – பிறர் கூறும் மொழிக்கு பயந்தால்.
காமம் எய்க்கும் – ஆசை அம்பு செலுத்தும்.
எள் அறவிடினே – சிறியது முற்றிபெரிதாக உதயமானால்.
நாணே – வெட்கமே.
பெருங் களிறு – பெரிய ஆண்யானை.
வாங்க – அழைக்க.
முரிந்து படா – பெருங்கொடி நீங்கியது.
நாருடை ஓசியல் அற்றே – கிளையின் நரம்பு பெறுவது அவ்வளவே.
கண்டிசின் தோழி – கண்டேன் தோழி.
அவர் உண்ட – அவர் நன்றி.
சங்க காலப் பெண்கள் கணவனைப் பிரிந்து கைசேதப்பட்ட நிலை பிரிவால் எழும் துயரைப் பார்த்தோம். அதே நிலை இன்றைய பெண்களின் வாழ்விலும் நேற்றும் தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது. மணம் செய்த மனைவியை உள்-ளூரில் விட்டு பொருளீட்டுவதற்காக ஆண் அயல் தேசம் செல்வது பெண்கள் வாழ்வை பாலைவனம் ஆக்குவதோடு சமூகச் சீரழிவிற்கு வித்திடுகிறது.
இயன்றவரை உள்நாட்டில் தொழில், வியாபாரம் செய்து பிழைக்கவும் குடும்பத்தோடு வாழவும் வழி தேடவேண்டும். இயலாது போனால் அதிக பட்சம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன ஆறுமாத காலத்திற்குள்ளாக மனைவியிடம் திரும்ப வேண்டும்.
நேற்றைய பதிவுகள் சங்க கால வாழ்வை நமக்கு முன்னிறுத்துவது போல் நாளைய பதிவுகள் இன்றைய சமூக வாழ்வை முன்னிறுத்தும். குடும்பத்தின் நீட்சியும், கௌரவமும் மனைவியிடம் உள்ளதை உணரவேண்டும். அதுவே சங்க இலக்கியம் சொல்லும் பாடம்.
-சோதுகுடியான், நவம்பர் 2010 முஸ்லிம் முரசு,
source: http://jahangeer.in/?paged=7