பயங்கர நிலநடுக்கம் – சுனாமி தாக்கி ஜப்பானில் பெரும் நாசம்
டோக்கியோ: ஜப்பானில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜப்பானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவை (250 கி.மீட்டர் தொலைவில் ) ஒட்டிய பகுதிகளில் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஜப்பானின் வட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இன்று ( ஜப்பான் நேரப்படி மதியம் 2. 48 மணி அளவில்) 8. 8 ரிக்டர் அளவாக பதிவாகியிருக்கிறது. இந்த நடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் குலுங்கி தரைமட்டமாகின. சில இடங்களில் இடிந்த கட்டடங்கள் தீப்பற்றியும் எரிகிறது. எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிந்தன.
மியாகி தீவு பகுதியில் ராட்சத அலை ( 13 அடி உயரத்தில் ) காரணமாக தண்ணீர் வீடுகளில் புகுந்து மூழ்கின. இதனால் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
அணுசக்தி மையங்களில் எந்த வித கசிவும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். புகுசிமா அணு மின் நிலையத்தில் குளிருட்டும் சாதனம் பழுதடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார். இதனையடுத்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சுனாமி இப்போதுதான் முதல் கட்டமாகக் கிளம்பியுள்ளது. மேலும் அது புறப்படலாம் என்பதை மறுக்க இயலாது என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உயர்ந்த பட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சுமார் 6 மீட்டர் (20 அடி உயரத்திற்கு) ராட்சத அலை இருக்கும் என்றும் இதன் காரணமாக ஜப்பானில் மியாகி தீவின் கடலோர பகுதிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்றும் முன்னதாக விடப்பட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இந்த ஒரு வார காலத்திற்குள் இது 2 வது பெரிய நிலநடுக்கம் ஆகும். இன்றைய நடுக்கம் – சுனாமியால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த முழு விவரங்கள் இன்னும் வரப்படவில்லை. 30 பேர் இறந்து விட்டனர் என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கிறது உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக போன், மின்சாரம் அனைத்தும் தடை பட்டு விட்டன. கடலோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான கார்கள் , வீடுகள் மிதந்து சென்ற வண்ணம் உள்ளது. 1923 டோக்கியோ அருகே காண்டோ பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் . கடந்த 13 ஆண்டு காலத்தில் இன்று நடந்த பூகம்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜப்பான் பார்லி., யில்இருந்து அனைவரும் வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். அணு உலைகள் எவ்வித பாதிப்பும் ஏற்படவி்ல்லை.
அழிவை சந்திக்க அனைத்து மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும் என ஜப்பான் பிரதமர் நாட்டுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த பூகம்பத்தை அடுத்து ரஷ்யா, சிலி, பிஜூ , இந்தோனேசியா , தைவான், மெக்சிகோ, பெரு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ், அமெரிக்காவில் ஹூவாய் தீவு உள்பட 10 நாடுகளில் , கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை இதுவரை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பான் நடுக்க எதிரொலி இந்தியாவிற்கு இருக்காது என புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
100 பேருடன் வந்த கப்பல் சிக்குப்பட்டு காணாமல் போய்விட்டதா…?
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குள் சுமார் 100 பேருடன் வந்த கப்பல் சிக்குப்பட்டு காணாமல் போய்விட்டதாக அடுத்த செய்தி வந்துள்ளது. இவர்களை தேடுவதற்கான வழி முறைகள் தற்போதைக்கு சிரமானவையே.
இப்போது கிடைத்த தகவல்களின் படி இதுவரை ஊர்ஜிதம் செய்யப்பட்ட இறந்தவர்கள் தொகை 40 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க மேற்கு டென்மார்க் நேரம் 16. 45 ற்கு சுனாமியின் தாக்குதல் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.
ஜப்பான் அணுசக்தி நிலையத்தில் இருந்து சுமார் 2000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அணுசக்தி நிலைய இடமாற்று வேலைகளும் அவசரமாக நடைபெறுகின்றன.
ஜப்பானின் அணு சக்தி நிலையம் தீப்பற்றியது
பொதுவாக சுனாமி வரும்போது தீப்பிடிக்கும் காட்சிகளை காண முடிவதில்லை. ஆனால் இந்தச் சுனாமி பெரும் தீப்பிடிப்புக்களையும், கட்டிடங்களின் தீப்பிடிப்புக்களையும் ஏற்படுத்திச் செல்கிறது.
இதில் முக்கியமானது ஜப்பானின் அணுசக்தி சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஒனாகாவா அணுசக்தி நிலையம் சற்றுமுன் தீப்பிடித்துள்ளது.
இருந்தாலும் றேடியோ கதிர்களின் தாக்கம் இல்லை என்று ஜப்பானிய பிரதமர் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டால் அணுக்கதிர் தாக்கும் இடங்கள் இயல்பாகவே மூடிக்கொள்ளும் என்றும் பிரதமர் காரியாலயம் தெரிவிக்கிறது.
ஆனால் அணுசக்தி உள்ள இடம் எரியும் படத்தை இங்கே நீங்கள் காண்கிறீர்கள். சுனாமி இப்போதுதான் முதல் கட்டமாகக் கிளம்பியுள்ளது. மேலும் அது புறப்படலாம் என்பதை மறுக்க இயலாது என்கிறார்கள் நிபுணர்கள்.
ஜப்பானின் கடலடியில் கண்டத்தகடுகளுக்குள் ஏற்பட்ட முறிவும், மோதலும் 8.9 ரிக்டர் அளவில் மோசமாகச் செயற்பட்டுள்ளன. எனவே மேலும் பல முறிவுகள் ஏற்படலாம்.
கடல் அலை வெளியில் ஆரவாரம் இல்லாமலே சுமார் 500 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். ஜப்பானில் சுனாமி மட்டுமல்லமல் பெரும் புகை மூட்டமும் காணப்படுகிறது.
அமெரிக்காவிலும் சுனாமி எச்சரிக்கை
ஹொனோலுலு: ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் மற்றும் பசிபிக் கடல் சார்ந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
சைரன்கள் மூலம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஹவாயில் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கிழக்கு ஆசியாவுடன் ஹவாய், ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி, மெக்ஸிகோ, மற்றும் மத்திய, தென் அமெரிக்க பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்பகுதிகளில் உள்ளவர்கள் சுனாமி ஏற்படுவதை உணர்ந்தால் சைரனுக்காக காத்திருக்காமல் அங்கிருந்து சென்றுவிடுமாறு அலாஸ்கா பகுதியின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மை இயக்குநர் ஜான் மேடன் தெரிவித்தார்.
ஹவாயில் இருந்து கயாம் வரை பசிபிக் கடலோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள், தங்கள் வீடுகளைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கும், உயரமான மைதானங்களுக்கும் சென்றுவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஹவாயின் சுற்றுலா மாவட்டமான வைகிகியில் பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் ஹோட்டல்களின் மேல்தளங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.