o ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால்… ?!
o ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ போன்ற வாசகங்களைப் பொறித்துள்ள நகை அணிந்து இல்லறம்….
o அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா?
ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால்… ?! .
கேள்வி : புகாரி, பாகம் 1, அத்தியாயம் 8, எண் 423 ஸஹ்ல் இப்னு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள், ”/இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?/’ என்று ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். (“அது கூடாது! மாறாக இருவரும் ”லிஆன்” செய்ய வேண்டும்\” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே ”லிஆன்” செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்….”
இது எனக்கு சரியாகப்படவில்லை. ஏன் இப்படியுள்ளது என்பதை விளக்குங்கள்.
பதில் : இறைவன் அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளனாக இருக்கிறான். அவன் வகுத்த சட்டங்கள் சில நேரம் நமது சிற்றறிவிற்கு சரியாக படாவிட்டாலும் கூட அவன் வகுத்துள்ள சட்டங்கள் குறைவில்லாததுதான்.
நமது அறிவின் தரம் கூடும் போது அந்த சட்டங்களில் விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரை நமது தேடலை நாம் தொடரத்தான் வேண்டும்.
ஆண் பெண்ணுக்கு மத்தியிலான உறவுமுறையை – பிரிவை தீர்மானிக்கும் எந்த சட்டமாக இருந்தாலும் அதில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கத்தான் செய்யும். இதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுள்ளோம்.
லிஆனை சிந்திக்கும் போதும் அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதை உணரலாம்.
ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை அந்தப் பெண்ணின் கணவன் நேரடியாக பார்த்து விடுகிறான். இப்போது அவனது ரத்தம் கொதிக்கும். கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்துக்கு அவன் ஆளாவான். இந்நிலையில் தண்டனைக் கொடுக்கும் சட்டத்தை அவன் கையில் கொடுத்தால் உடனடியாக அந்கு ஒரு அல்லது இரு கொலை நடக்கும். அவன் தரப்பிலும் ரோஷமுள்ளவர்கள் தரப்பிலும் இது நியாயம் தான் என்றாலும், இஸ்லாம் இத்தகைய உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு சட்டம் வகுக்காது. வகுக்கப்படும் சட்டங்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதிலும் இஸ்லாம் அக்கறைக் கொள்ளும்.
விபச்சாரம் செய்யும் மனைவியை கணவன் கொல்லலாம் என்ற சட்டத்தை இஸ்லாம் கணவன் கரங்களில் கொடுத்திருந்தால் கணவனால் கொல்லப்படும் மனைவிகள் அனைவருமே விபச்சாரிகளாக சித்தரிக்கப்பட்டு விடுவார்கள். ஆம், பல குடும்பங்களில் கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் மத்தியில் தீராத சண்டைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம். பெண்கள் வாய் விட்டு கத்தி தீர்த்து விடுவார்கள். ஆண்களால் அப்படி முடியாது. மனைவி கணவனை வாயால் அடித்தால், கணவன் மனைவியை கையால் அடிப்பான்.
போதை – வரதட்சனை – மாமியார் மருமகள்கள் சண்டைப் பிரச்சனை போன்றவற்றால் முரட்டு கணவன்மார்களால் பெண்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் வரதட்சனைப் போன்ற காரணத்துக்காக குடும்பத்தார் சேர்ந்து தன் வீட்டுக்கு வந்த மருமகளை தீர்த்துக் கட்டுகிறார்கள்.
கணவனின் முரட்டு, மடத்தனமான சுபாவத்தை எதிர்கொள்ள முடியாத பெண்கள் தங்கள் உயிரை விடுகிறார்கள். இது பரவலான நடைமுறையாகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பெண்ணை இழந்தவர்கள் நீதித் தேடி நீதிமன்றங்கள் செல்கிறார்கள்.
கணவனுக்கென்று இருக்கும் உரிமைகளை அவன் மீறும்போது தான் அங்கு நீதி தலையிடும். அவன் உரிமைக்குட்பட்டதை அவன் செய்யும் போது அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு தொடருங்கள்.
விபச்சாரும் செய்யும் பெண்ணை கொல்லும் உரிமையை கணவன் கையில் கொடுத்தால், வரதட்சனைப் போன்ற பொருளாதாரத்திற்காக கொலைச் செய்யப்படும் மனைவி விபச்சாரத்திற்காகத்தான் கொல்லப்பட்டாள் என்று ஆகிவிடும்.
போதையால் கணவன் மனைவியை கொலை செய்தால் விபச்சாரத்திற்காக கொலை செய்தேன் என்று சொல்லி தப்பிக்க முடியும்.
இன்னப்பிற ஏதோ காரணத்துக்காக சாகடிக்கப்படும் பெண்கள் அனைவரும் கணவனின் வாக்கு மூலத்தால் விபச்சாரிகளாவார்கள். உயிரை விட்டது மட்டுமின்றி சமூகத்தில் இழிபெயரும் நிலைக்கும். நியாயம் கிடைக்க வழியில்லாமல் போகும். இன்னும் நாம் அறியாத பல நுணுக்கங்களுக்காக கூட இறைவன் கணவர்கள் கைகளில் அந்த சட்டத்தை கொடுக்காமல் தடுத்திருக்கலாம்.
பெண்களுக்கு சாதகமா..?
விபச்சாரம் செய்யும் பெண் கணவனால் நேரடியாக பிடிக்கப்பட்ட பிறகும் அவளை தண்டிக்காமலிருப்பது பெண்களுக்கு சாதகமாக – தவற வழி வகுப்பதாக ஆகாதா..? என்ற சிந்தனை எழலாம்.
ஒரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் மரண தண்டனை கொடுத்து கதையை முடிப்பதை விட தன்னை தானே சபித்துக் கொண்டு சமுதாய மத்தியில் இழி நிலையில் வாழ்வது அதை விட பெரிய தண்டனையாகும். தன் மனைவி விபச்சாரம் செய்துவிட்டால் என்று கணவன் குற்றம் சுமத்துகிறான். அதை நிரூபிக்க அவனிடம் நான்கு சாட்சிகள் இல்லை. சாட்சிகளில்லாத நிலையில் குற்றத்தை நிரூபிக்க முடியாது. உலக நீதிமன்றங்கள் என்றால் சாட்சிகள் இல்லாததால் கணவனை எச்சரித்து அவனோடு மனைவி சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கும். உண்மையில் மனைவி தவறியதை நேரடியாக கண்ட கணவன் நீதிமன்ற உத்திரவால் மீண்டும் அவளோடு சேர்ந்து வாழ முடியுமா…? அது பல்வேறு சிக்கல்களை இருவருக்கும் மத்தியில் ஏற்படுத்தி விடும். அதனால் தான் இஸ்லாம் மாற்று வழியை முன் வைத்துள்ளது.
சாட்சிகள் இல்லாத நிலையில் கணவனால் குற்றம் சுமத்தப்பட்டால் அவ்விருவரும் மக்கள் மன்றத்தில் தன்னைத் தானே சபித்துக் கொண்டு கணவன் – மனைவி உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டியதுதான். இது அவர்களிருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடியாத அளவிற்குள்ள நிரந்தர பிரிவாகும்.
இதில் யாரொருவர் பொய் சொல்லி இருந்தாலும் அவர்கள் இறைவனிடம் குற்றவாளியாகி நிற்பார்கள். இந்த விபரம் குர்ஆனில் 24வது அத்தியாயத்தின் 5 முதல் 9 வரையுள்ள வசனங்களில் காணலாம்.
இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில்,
இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்களும் ஊரிலுள்ள பொதுஜமாஅத்கள் முன்னிலையில் தன்னை சாபமிட்டுக் கொண்டு பிரியலாம்.
நான்கு முறை ‘தாம் உண்மைச் சொல்வதாக சத்தியமும், ஐந்தாம் முறை தம் மீது தாமே சாபமிட்டுக் கொள்வது என்பதும் அத்துனை சுலபமான விஷயமல்ல. ஒரு பெரும் சக்தியை நம்பி அதற்கு கட்டுப்படும் மனநிலையைப் பெற்றவர்கள் இதில் விளையாட மாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ போன்ற வாசகங்களைப் பொறித்துள்ள நகை அணிந்து இல்லறம்….
கேள்வி : பெண்கள் அணியும் கழுத்துச் செயினுக்கான டாலர் மற்றும் கை விரல்களின் மோதிரம் பிரேஸ்லெட் போன்ற தங்க நகைகளில் ‘அல்லாஹ்’ ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ போன்ற வாசகங்களைப் பொறித்துக்கொள்கிறார்கள். இந்த வாக்கியங்களோடு கழிவறைக்குச் செல்வது – தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கூடுமா..?
பதில் : பொதுவாக நகைகளில் அல்லாஹ் முஹம்மத் போன்ற வாசகங்களைப் பொரித்துக் கொள்வதற்கு எந்த தடையுமில்லை. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் மோதிரத்தில் அல்லாஹ் – முஹம்மத் – ரஸுல் ஆகிய வாசகங்களைப் பதித்திருந்தார்கள்.
அது அவர்களின் முத்திரை மோதிரமாக (பிற நாட்டு மன்னர்களுக்கு இஸ்லாமிய அழைப்பை வைத்து கடிதம் எழுதும் போது அந்த மோதிரத்தின் முத்திரையே கடிதத்தில் வைக்கப்படும்).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மோதிரம் அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் அந்த மோதிரத்தை தம் தேவையை நிறைவேற்ற செல்லும் போது (கழிவறை போன்ற இடங்களுக்கு செல்லும் போது) கழற்றி விட்டு செல்வார்கள் என்று ஹதீஸ்கள் கிடைக்கின்றன.
حدثنا نصر بن علي عن أبي علي الحنفي عن همام عن ابن جريج عن الزهري عن أنس قال
كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء وضع خاتمه
இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்திருந்தால் இதை அடிப்படையாகக் கொண்டு மலஜலம் கழிக்கும் போது – இல்லறத்தில் ஈடுபடும் போது நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வாசகங்கள் பதிந்துள்ளவற்றை கழற்றி விட வேண்டும் என்று முடிவு செய்யலாம். செய்தி பலவீனமாக உள்ளதால் இதை வைத்து சட்டம் எடுக்க முடியவில்லை.
ஆனாலும் அதனால் மன ஊச்சலாட்டம் ஏற்படும் என்றால் கழற்றிக் கொள்ள வேண்டியதுதான். மன ஊச்சலாட்டங்களை விட்டு இஸ்லாம் பாதுகாப்பு தேட சொல்லியுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது மன ஊச்சலாட்டத்தை ஏற்படுத்துவது என்பதால் அதை கழற்றி வைப்பதே பாதுகாப்புக்கு சமம் என்பதால் கழற்றி விடலாம். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? .
கேள்வி : அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? அதே போன்று அண்ணனுடைய மனைவி, மாமாவுடைய மனைவி போன்றோர்களையும் இச்சை இல்லாமல் பார்க்கலாமா? அப்படி பார்க்க அனுமதி இல்லையெனில் யார் யாரை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றது? இது பற்றி நமது மார்க்கம் என்ன கூறுகின்றது?
பதில்: நமக்கு உரிமையுள்ள மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.
இச்சையில்லாமல் பார்ப்பது என்பது பொதுவான அனுமதியாகும்.
அண்ணன், தம்பி மனைவிகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது அவசியம்.
ஏனெனில், முகம் கை தவிர மற்றப் பாகங்கள் முழுதும் மறைந்துள்ள நிலையில் பெண்கள் இருந்தால் அவர்களை தேவைக்காக பார்க்கலாம் என்ற அனுமதி அடங்கியுள்ள வசனம் கீழே!
முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)
வீடுகளில் இருக்கும் போது பெண்கள் சாதாரண உடைகளுடன் இருப்பார்கள். அது அவர்களின் உடலில் முகம் முன் கைகளைத் தவிர மற்றப்பாகங்களை மறைக்காத நிலையில இருந்தால் அவர்கள் மற்ற ஆண்களுக்கு மத்தியில் வெளிவரக் கூடாது. வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டால் மறைத்த நிலையிலேயே வர வேண்டும். முகம், கைகளில் முற்பகுதி தெரியும் நிலையில் வெளிப்படலாம் என்பதிலிருந்தே ஆண்கள் அவசியத் தேவைக்காக பெண்களைப் பார்க்கலாம் என்பது விளங்குகின்றது.
வீட்டில் சாதாரணமாக வீட்டு உடைகளுடன் இருக்கும் போது யார் யார் முன்னிலையில் அந்த உடையுடன் வரலாம் என்பதையும் வசனம் தொடர்ந்து விளக்குகின்றது.
(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
தம் தந்தையர்கள், (பெற்றத் தந்தை – வாப்பா, அத்தா, பெரியத்தா, சின்னத்தா)
தம் கணவர்களின் தந்தையர்கள் (மாமனார்கள், சின்ன பெரிய மாமனார்கள்)
தம் புதல்வர்கள் (மகன்கள்)
தம் கணவர்களின் புதல்வர்கள், (கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குந்தைகள் இருந்தால் அவர்கள்)
தம் சகோதரர்கள் (அண்ணன் தம்பிகள்)
தம் சகோதரர்களின் புதல்வர்கள், (அண்ணன் தம்பிகளின் மகன்கள்)
தம் சகோதரிகளின் புதல்வர்கள், (அக்காள் தங்கைகளின் மகன்கள்)
ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) தளர்ந்து போன முதியவர்கள்.
பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. (அல்குர்ஆன் 24:31)
திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்கள் ஆண்களுக்கு முன் சாதாரண உடையில் காட்சியளிக்கலாம். அதாவது மாமி, சின்னம்மா போன்றவர்கள் (திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்பதை அல்குர்ஆன் 4:23 வசனத்தில் அறியலாம்.
சாதாரண உடையுடன் பார்வையில் படலாம் என்ற பட்டியலில் அண்ணிகள் (அண்ணன் – தம்பி மனைவிகள்) அடங்கவில்லை என்பதால் அவர்கள் முகம் முன்கைகள் தெரியும் நிலையில் மட்டுமே மச்சான்களிடம் (கணவரின் உடன் பிறந்த சகோதரர்களிடம்) இருக்க வேண்டும்.
பெண்களை சாதாரணமாக பார்க்க அனுமதியுள்ளது என்றால் முஃமினான ஆண்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருள் அல்குர்ஆன் 24:30 வசனத்தின் பொருள் என்ன?
இங்கு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது பெண்களை விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் மட்டும் வரவில்லை. பொதுவாகவே தவறான – பாவமான அனைத்தையும் விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் தான் வந்துள்ளது.
பார்வையில் பாவம் உருவாகும் நிலை இருந்தால் பெண்களை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.