தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான அருட்கொடை. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.
இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.
குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும். அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.
குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?
குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.
சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.
ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.
குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். தாய்ப்பால் ஊட்டும் காலம் இரண்டரை ஆண்டுகள் என்று திருக்குர்ஆன் இயம்புகிறது.
பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.
தாய்ப்பால் – சில தகவல்கள்…..
பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.
ஊட்டும் போது முதலில் வரும் பால்
பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.
கடைசியில் வரும் பால்
பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.
தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.
உடல்நலம் காக்கும் தாய்ப்பால்
தாய்ப் பாலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்த இரசாயனப் பொருள் இருக்கிறது. அது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. இந்த தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்குச் சுரக்கின்ற சீம்பாலில் மிக அதிக அளவில் இருக் கிறது. இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது. தாய்ப்பால் மற்ற உணவுகளைப் போல் அல்லாமல் முழுவதும் ஜீரணம் ஆகிவிடும்.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்படுகிறது.; மனஅமைதி மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது. குழந்தைகள் தாயின் மார்பில் சப்பி பாலைக் குடிப்பதால் அதன் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால் பல் மற்றும் எலும்பு வளர்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஆகியவை அரிதாகவே ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் தொற்றுநோய்கள் எளிதில் ஏற்படுவதில்லை.
தாய்ப்பாலில் மட்டுமே பொலி அன்சேசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பசும்பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.
தாய்க்கும் நன்மை உண்டு
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது தாய் கருத்தரிப்பதை இயற்கையாக பெரும்பாலானவர்களுக்கு தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் வருவதை தவிர்க்கமுடியும்.
கர்ப்பகாலங்களில் அதிகமாக சாப்பிட்ட தாயின் உடல் பருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்பபையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது.
பசும்பாலைவிட தாய்ப்பால் பலவிதங்களில் சிறந்தது. இதைக் காய்ச்ச வேண்டிய தேவையில்லை. எப்போதும் பயன்படுத்தலாம். குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் சரியான விகிதத்தில் அமைந்திருக்கின்றன. புட்டிப்பாலுக்கு ஆகும் செலவைவிட ஒரு தாய் நல்ல சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு அதன்மூலம் குழந்தைக்குப் பால் கொடுக்கின்றபோது ஆகும் செலவு குறைவானதுதான். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மனவளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கிறது. இவை அனைத்தையும் விட குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் பாசப்பிணைப்பு அதிகமாகிறது.
பால் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் பால் அதிகமாக சுரக்கும். ஒவ்வொரு மாதமும் குழந்தையின் தேவைக்கேற்ப பாலில் சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உற்பத்தியாகின்றன.
தாய்ப்பால் அதிகமாக சுரக்க:
பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர்; அருந்தி விட்டு கொடுக்க வேண்டும்.
இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லதுஸ அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்
வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
மேலும் தாய் தினமும் பசும் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது.
அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.
தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும்!
தாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
குழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது, வைரஸ் பாக்டீரியா தாக்குதலிலிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பாலில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு வடிவங்களில் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
கூடவே தாயின் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது எனவும், தாய்க்கு புற்று நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும், எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும் பாலூட்டுதலின் பயன்களையும் அறிவியல் நிரூபித்துள்ளது.
இப்போது பிரிட்டனில் நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளி செல்லும்போது பதட்டமில்லாமல் செயல்படுவார்கள் எனவும், மன அழுத்தத்தைத் தாங்கும் வலிமை படைத்தவர்களாக இருப்பார்கள் எனவும் புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுமார் 9000 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு தாய்ப்பாலின் தேவையை இன்னொரு பரிமாணத்தில் முக்கியத்துவப் படுத்துகிறது.
சமூகத்தின் சூழலை ஏற்று உள்வாங்கி செயல்படுதலுக்கும், பரிச்சயமற்ற சூழலில் கூட பதட்டமில்லாமல் செயல்படுவதற்கும் வேண்டிய மன தெளிவை குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சக்தி வழங்குகிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இது பாலூட்டும் போது நிகழும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான தொடுதல் உறவினாலோ, அல்லது பாலில் இருக்கும் உன்னத சக்தியினாலோ நிகழ்ந்திருக்கலாம். எப்படியெனினும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளிக்காலங்களில் ஏற்படக் கூடிய பதட்டம், மன அழுத்தம் அனைத்தையும் எளிதில் கடந்து விடுகின்றனர் என்பது மட்டும் திண்ணம்.
தாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழிகாட்டியாய் இருக்கும். இருக்கவேண்டும்.
posted by: Abu Safiyah