கேள்வி 1: கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படியும் நடக்க வேண்டுமா?
கேள்வி 2 : நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். இதன் விளக்கம் என்ன?
கேள்வி 3: முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
கேள்வி 4: மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?
கேள்வி 5: கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா?
கேள்வி: 1. கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படியும் நடக்க வேண்டுமா?
பதில்: நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்று நடக்க வேண்டியது ஒவ்வொரு முஃமினிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும்.
யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். அல்குர்ஆன் 37:17,18
மாமியார் ஆகட்டும்; அல்லது மருமகள் ஆகட்டும்; நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்று நடக்கும் பண்பாடு நம்மிடம் வர வேண்டும். தான் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தாள் பொன் குடம் என்று மாமியார் நடக்கக் கூடாது. இதைப் போன்று வயதில் மூத்த மாமனார், மாமியாரை அவமதிக்கும் விதமாகவும், அவர்களின் நல்ல கருத்துக்களைக் கூட அவமதிக்கும் விதமாகவும் மருமகள் நடக்கக் கூடாது. குறிப்பாக தாய், தந்தையிடமிருந்து மகனைப் பிரிக்கும் மாபாதகமான காரியத்தைச் செய்யக் கூடாது. மேலும் பெற்றோரின் பேச்சைக் கேட்க விடாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும்படி கணவனை மாற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மிகப் பெரிய தீமை செய்யத் தூண்டியவராக கருதப்படுவார்.
இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரைப் புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6675)
பெற்றோரைப் புண்படுத்தும் காரியத்தைத் தம் கணவர் செய்து பெரும் பாவியாக மாற மனைவியே காரணமாக இருக்கக் கூடாது. கணவனே பெற்றோர்களிடம் கடினமாக நடந்தாலும் நபிமொழியை எடுத்துக் கூறி அவரைத் திருத்த முன்வர வேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையைச் செய்யக் கூடாது.
கேள்வி: 2. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர்?
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன?
பதில்: நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 64:14)
ஒரு நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது அவரது மனைவி, மக்கள் அவரைத் தடுத்ததாகவும், அதைக் குறிப்பிட்டே இந்த வசனம் அருளப்பட்டதாகவும் திர்மிதி என்ற நூலில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.
இறை நினைவில் ஈடுபடுவதை விட்டும் தடுப்பதில் மனைவி, மக்கள், செல்வம் போன்ற அருட்கொடைகள் முன்னிலை வகிக்கின்றன. எனவே தான் இவற்றைச் சோதனை என்று மேற்கண்ட வசனத்திற்கு அடுத்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)
உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!(அல்குர்ஆன் 8:28)
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63:9)
மனைவி, மக்களில் இறை நினைவை விட்டுத் தடுப்பவர்கள் எதிரிகள் என்பதையே அந்த வசனம் குறிப்பிடுகின்றது என்பதை இங்கு நாம் எடுத்துக் காட்டியிருக்கும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
கேள்வி: 3. முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
பதில்: முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3971)
கேள்வி: 4. மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?
பதில்: பொதுவாக மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் யாருக்கும் விருந்தளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. மார்க்கத்திற்கு முரணில்லாத விருந்துகளில் கலந்து கொள்வதிலும் தவறில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் முடித்த போது உம்மு சுலைம் என்ற பெண்மணி விருந்தளித்ததாகவும் அதில் பல நபித்தோழர்கள் கலந்து கொண்டதாகவும் ஹதீஸ் உள்ளது.
(இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம்) “அவர்கள் எத்தனை பேர்?” என்று அபூ உஸ்மான் கேட்டார். “முன்னூறு பேர்” என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள். (நூல்: நஸயீ 3334 )
கேள்வி: 5. கணவனை இழந்த பெண்கள் ஆபரணங்களை அணியலாமா?
பதில்: கணவனை இழந்த பெண்கள் காலமெல்லாம் வெள்ளை ஆடையுடனும் ஆபரணங்கள் அணியாமலும் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. ஆயினும் நான்கு மாதமும் பத்து நாட்களும் மட்டும் அவர்கள் அலங்காரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளை இடுகிறது. அந்தக் கெடு முடிந்த பின் அவர்கள் மற்ற பெண்களைப் போல் நடந்து கொள்ளலாம்.
கணவனை இழந்த பெண்கள் தமது இத்தா காலம் முடியும் வரை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. ஆபரணங்கள் அணிவதும் இதில் அடங்கும்.
உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: இறந்ததவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப் பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டோம்.
ஆனால் (கணவன் இறந்த பின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைப்பிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணியவோ கூடாது.
ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.) எங்களில் ஒரு பெண் மாதவிடாயிலிருந்து நீங்குவதற்காகக் குளிக்கும் போது ளிஃபார்’ நகரத்து குஸ்த் (கோஷ்டம் அல்லது அகில்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நாங்கள் ஜனாஸாவைத் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்றும் தடை விதிக்கப்பட்டிருந்தோம். (நூல்: புகாரி 313, 5341, 5343 )
இந்த ஹதீஸ் பொதுவாக அலங்காரங்கள் கூடாது என்று கூறினாலும் அபூதாவூதில் இடம் பெறும் மற்றொரு ஹதீஸில் நகை அணியக் கூடாது என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
‘கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிகப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூதாவூத் 1960 )
நன்றி: ஏகத்துவம்,www.onlinepj.com