‘முத்தலாக்’ உண்மையான மனசாட்சியுடன் ஓர் ஆய்வு (1)
[ தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:226)
இந்த இறைவாக்கு சொல்வதென்ன? மனைவியுடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்தவரே உடனடியாக மனைவியை விரட்டிவிட முடியாது. நான்கு மாதம் பொறுக்கவேண்டும். அதற்குள் சேர்ந்து கொள்ளவும் அல்லாஹ் வாய்ப்புத் தருகிறான்.
இந்த நிலையில் தவணைகளைப் புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று ‘தலாக்’ சொன்னவுடன் மண முறிவு ஏற்பட்டு விடும் என்று சட்டம் வகுப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மதிப்பவர்களா? சொல்லுங்கள்.
முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரிய கைசேதம் என்னவென்றால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தெள்ளத்தெளிவான குர்ஆனையும், ஹதீஸையும் ஏறிட்டுப் பார்க்க அவர்கள் விரும்புவதில்லை; முற்படுவதுமில்லை. மற்ற மதத்தினரைப் போல் இவர்களும் தங்களின் முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கத்தான் முற்படுகிறார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘முத்தலாக்’ குறித்து எடுத்த முடிவு சமூக சூழ்நிலைக்காரணமாக! – அன்றைய ஆண்கள் ‘தலாக்’ சட்டத்தை அலட்சியப்படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காக! ஆனால் அச்சட்டத்தால் இன்று மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகி நிற்பது பெண்ணினம் அல்லவா? இதை எவரேனும் மறுக்க முடியுமா? ஆண்களின் பொறுப்பற்ற தன்மைக்கும் அறியாமைக்கும் பெண்களை பலி கிடா ஆக்குவது எப்படி நியாயமாகும்?]
மனிதனின் குடும்ப வாழ்வு நரக வாழ்வாக நீடிக்க வகையில்லாது ஒரு முடிவுக்கு கொண்டு வர அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள சாதனம் ‘தலாக்’ விவாக விடுதலை. அந்த தலாக் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விதவிதமான பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ் அளித்துள்ள இந்த அனுமதி
‘தலாக்’ – இதன் எதார்த்தமான நிலையை ஆராய்வோம்.
அல்லாஹ்வின் சட்டங்களை ஆராய்வதற்கு சிறந்த உரைகல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதம் அல்குர்ஆன். அடுத்து அந்த அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்துள்ள அல்லாஹ்வின் இறுதித் தூதரின் நடமுறைகள். இதற்குமேல் முடிவு செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு மனித அபிப்பிராயங்களை முன்னோர்களின் பெயரால், இமாம்களின் பெயரால் மார்க்கத்தில் நுழைத்து அதை மதமாக்கியதாகும். அதே வரிசையில் தான் இந்த ‘தலாக்’ பிரச்னையிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பெருந்தொகையினர் மனித சட்டத்தை இறை சட்டமாக ஆக்கியுள்ளனர்.
குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக பெரும்பான்மை முஸ்லிம்களும், அவர்களை வழிநடத்திச் செல்பவர்கள் நடத்தும் வார, மாத இதழ்களிலும் ‘தலாக்’ சட்டம் இறைவனின் தீர்ப்பாகும். இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று ஏகோபித்து எழுதுகிறார்கள். ஆனால் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3 தலாக் ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டது” என்ற உண்மையான சட்டத்தை மாற்றி ‘ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3’தலாக்’ மூன்று தடவையாக கணக்கிடப்பட்டு விவாக முறிவு ஏற்படும்’ என்ற சட்டத்தை அல்லாஹ்வின் சட்டம் என்று சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் சட்டத்தை மாற்ற யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லிக்கொண்டு மனித சட்டங்களை மார்க்கமாக்குவதில்தான் குறியாய் இருக்கிறார்கள். ஏனிந்த முரன்பாடோ தெரியவில்லை. தலாக் விஷயத்தில் மட்டுமல்ல, அவர்களது பெரும்பாலான நிலைகளில், எண்ணற்ற பிரச்னைகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடைமுறைப்படுத்தியதற்கு முரணாக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப்பின் மனிதர்களால் நடமுறைப்படுத்தப்பட்ட மனித நடைமுறைகளையே இவர்களும் பக்தியுடம் கடைபிடிக்கின்றனர்.
இந்த தலாக் விஷயத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடமுறைக்கு முரணாக ‘ஒரே சமயம் சொல்லும் மூன்று தலாக் செல்லும் என்ற தவறான சட்டத்தை பெரும்பான்மையினராக அவர்கள் சொல்லுவதால் அதுதான் சரி, குறைந்த எண்ணிக்கையினரான குர்ஆன், ஹதீஸ் வழியில் நடப்பவர்கள் சொல்லும் ‘ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கணக்கிடப்பட வேண்டும்” என்ற நபியின் நடமுறை ஏற்கத்தக்கதல்ல என்று வாதிடுகிறார்கள். பெரும்பான்மை கொண்டு சட்டம் வகுக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்.
பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (6:116)
நாங்கள் பெரும்பான்மையினர் நாங்கள் கூறுவதுதான் சரி என்று மார்தட்டுகின்றவர்களின் நிலையை உற்று நோக்கும்போது இந்த 6:116 வசனம் அவர்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. எனவே உண்மை முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காரணம் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றும் மாற்று மதத்தினருக்கும், அதே போல் முன்னோர்களைப் கண்மூடிப் பின்பற்றி இஸ்லாமிய மார்க்கத்தையும் மதமாக்கியுள்ள முக்கல்லிதுகளுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. ‘ஒரே சமயத்தில் 3 தலாக் சொன்னால் அது செல்லுபடியாகும் என்ற தவறான சட்டத்தையே பெரும்பான்மையினர் கடைபிடிக்கின்றனர். இதை விரிவாக ஆராய்வோம்.
‘தலாக்’ அல்லாஹ்வின் கட்டளை என்ன?
தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும் ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். (2:228)
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம் அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம் அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது – இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். ஆகையால் அவற்றை மீறாதீர்கள். எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (2:229)
மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (2:230)
(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது (இத்தாவின்) தவணைமுடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள். ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள். இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள். அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:231)
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும் (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள். (2:232)
முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரிய கைசேதம் என்னவென்றால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தெள்ளத்தெளிவான குர்ஆனையும், ஹதீஸையும் ஏறிட்டுப் பார்க்க அவர்கள் விரும்புவதில்லை; முற்படுவதுமில்லை. மற்ற மதத்தினரைப் போல் இவர்களும் தங்களின் முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கத்தான் முற்படுகிறார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு குர்ஆனையும், ஹதீஸையும் நோட்டமிட ஆரம்பித்தால் அவை அவர்களுடம் பேச ஆரம்பித்துவிடும். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் விட தெளிவான விளக்கத்தை மற்றவர்கள் தரமுடியும் என்று நம்புகிறவர்கள் பெரும் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
இப்போது நாம் எடுத்து எழுதியுள்ள இறைவாக்குகளை கவனமாகப் பாருங்கள். இந்த வசனங்களில் தலாக்கினுடைய எண்ணிக்கை சொல்லப்படவில்லை. ஒரு தலாக். இரண்டு தலாக், மூன்று தலாக் என்று சொல்லப்பட்டிருக்கின்றதா அல்லது முதல் தவணை அல்லது இரண்டாவ்து தவணை, மூன்றாவது தவணை என்று முறை, வேளை, சந்தர்ப்பம் என்று அவகாசம் கொடுப்பதையே உள்ளங்கை நெல்லிக்கனியாக எடுத்துக் காட்டுகிறது.
مَرَّتَانِ மர்தானி என்ற அரபி பதம் வெவ்வேறு அவகாசங்கள் இரண்டைக் குறிக்குமேயல்லாமல், ஒரே நேரத்தில் கூறப்படும் இரண்டு எண்ணிக்கையைக் குறிப்பிடாது. மூன்று வேளை சாப்பாடு, மூன்று வேளை மருந்து என்று சொல்லும்போது ஒரே வேளயில் மூன்று வேளை சாப்பாட்டையும், அல்லது மருந்தையும் சாப்பிடுவது என்று பொருள்படும் என்று கூறுபவர்களை அறிவாளிகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
எனவே கணவன் மனைவி என்ற உறவைப் பிரிக்க அல்லாஹ் வெவ்வேறு சந்தர்ப்பத்தை அளித்துள்ளானேயல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று தலாக்கைச் சொல்லி உறவைப் துண்டிக்கச் சொல்லவில்லை. காரணம் நினைத்த மாத்திரத்தில் உடனடியாக மனைவியை விரட்டிவிட மார்க்கம் அனுமதிக்கவில்லை. என்பதற்கு உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (4:21)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்