‘பித்அத்’தும் அதை களைய வேண்டிய அவசியமும்!
மவ்லவி, அப்துல்கரீம், காஷிஃபுல்ஹுதா, சென்னை
[ மாற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லீம்கள் மிகவும் சொர்ப்ப எண்ணிக்கையிலும் உள்ள எத்தனையோ பகுதிகளில் இஸ்லாமிய போதனைகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமே அவர்களுக்கு சரிவர கிடைப்பதில்லை.
அவர்களது நிலை இவ்வாறெனில் மாற்றாரின் பழக்கங்கள் அவர்களிடம் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அவைகளே அவர்களின் இயற்கை சுபாவமாக மாறிவிடுவதால் உண்மையான மார்க்க நடைமுறைகளை எடுத்துக் கூறும்போது அது அவர்களால் ஜீரணிக்க முடியாத புதிய விஷயமாக ஆகி அதை எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதாவது அன்னியர்களின் மதச்சடங்குகள் அவர்களுக்கு மார்க்கமாகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டுவந்த உண்மையான மார்க்கம் புதிய மார்க்கமாகவும், ஆகி விட்டிருக்கிறது.
மேற்கூறிய இவைகளே இஸ்லாமிய கலாச்சாரத்தில் ‘பித்அத்’ எனும் நூதன பழக்கங்கள் செழித்து வளரக் காரணமாக அமைந்துவிட்டது. இது விஷயத்தில் பாமர மக்களை குறைகூறுவது பிரியோஜனமில்லை.
மாறாக இஸ்லாத்தை பாதுகாக்க கடமைப்பட்ட, தூய இஸ்லாத்தை பித்அத்தை விட்டும் நீக்கி சுத்தப்படுத்த வேண்டிய ‘மார்க்க அறிஞர்கள்’ அந்த பித்அத்களில் மூழ்கி எழுவதை தமது திறமையாக நினைப்பது தான் மிகவும் வருந்தத்தக்கது.
தமது சமுதாயத்தின் பிரத்தியேகத் தன்மையை பேணாதவர்கள் அதன் தனித்தன்மையை இழக்கவே நேரிடும்.
அல்லாமா ஷாமீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுவதாவது, ‘தங்களை வணக்கசாலிகளாக காட்டிக்கொள்ளும் சிலர் ஏற்படுத்திக் கொண்ட ‘ரகாயிப்’ என்னும் தொழுகையை மார்க்க அறிஞர்கள் தடை செய்துள்ளனர். தொழுகை உண்மையில் நல்ல விஷயமாக இருந்தாலும் கூட, குறிப்பிட்ட இரவுகளில் இந்த அமைப்பில் தொழுவதற்காக காணக் கிடைக்கவில்லை. (ரத்துல் முஹதார்: வால்யூம் 2, பக்கம் 234)]
பித்அத்தை ஏற்படுத்துவதற்கு அறியாமையும், ஷைத்தானுடைய ஏமாற்றுதல் மாயையும், பதவிமோகம், பிரபல்யத்தை விரும்புவதும் காரணமாக இருக்கிறது. அத்துடன் மாற்று மதத்தவர்களைப் பின்பற்றுவதும் பித்அத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பல மதத்தவர்கள், பலவித கலாச்சாரங்களைக் கொண்டவர்கள் வாழுமிடத்தில் ஒரு பிரிவினரின் கலாச்சார முறைகள் மற்ற பிரிவினரின் வாழ்க்கை முறையில் நம்மை அறியாமலே தாக்கத்தை ஏற்படுத்துமென்பது இயற்கை. தமது சமுதாயத்தின் பிரத்தியேகத் தன்மையை பேணாதவர்கள் அதன் தனித்தன்மையை இழக்கவே நேரிடும்.
மக்களைக் கவர்ந்திழுக்கும் நாகரீகம் மற்ற நடைமுறைகளை மிகைத்தே தீரும். முஸ்லீம்கள் மற்றவர்களை மிகைத்தவர்களாக தமது கலாச்சாரத்தின் தனித்தனமையை பேணுவதில் அக்கரையும் முக்கியத்துவமும் அளித்து வந்தவரை மற்ற கலாச்சாரங்களின் மீது இஸ்லாமிய நடைமுறைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனினும் ஈமானின் உத்வேகம் அவர்களிடமிருந்து குறைய ஆரம்பித்ததும், தமது தனித்தன்மைகளைப் பாதுகாக்கும் வேகமும் குறைந்து, மற்றவர்களின் நாகரீகத்தைக் கண்டு வியந்து அதில் மனதைப் பறிகொடுக்க ஆரம்பித்தனர். தற்காலத்தில் மேற்கத்திய நாகரீகத்தை முஸ்லீம்களில் சிலர் விரும்புவது அதற்கு மிகப்பெரிய சான்று.
இவ்வாறு அந்நிய நடைமுறைகளின் தாக்கத்திற்குட்பட்டதன் விளைவாக மாற்று மதத்தவர்களாகிய அவர்களின் சம்பிரதாய சடங்குகள் சில சமயங்களில், மார்க்கரீதியான செயலாக அங்கீகாரம் பெருமளவிற்கு சென்று விட்டது. இது அறியாமை மற்றும் கவர்ச்சியின் உச்சநிலையை எடுத்துக் காட்டுகிறது. அதற்கு சட்டரீதியான ஆதாரங்களை முன் வைக்கவும் தயங்குவதில்லை.
பித்அத்துகள் என்பது அந்தந்தப் பகுதியின் மாற்று கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதால் தான் முஸ்லீம்களுக்கு மத்தியில் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு பித்அத்துகள் வெவ்வேறு வண்ணங்களில் பரிணமளிக்கிறது. இந்தியாவில் காணப்படும் பல நூதன பழக்கங்கள் அரபு தேசத்தில் காணப்படுவதில்லை. அதுபோன்று எகிப்து, சிரியா போன்ற அரபு நாடுகளிலுள்ள அநேக நவீன நடைமுறை பித்அத்துகளை இந்திய நாட்டில் பார்க்க முடிவதில்லை.
மாற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லீம்கள் மிகவும் சொர்ப்பமாகவும் உள்ள எத்தனையோ பகுதிகளில் இஸ்லாமிய போதனைகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமே அவர்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. அவர்களது நிலை இவ்வாறெனில் மாற்றாரின் பழக்கங்கள் அவர்களிடம் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அவைகளே அவர்களின் இயற்கை சுபாவமாக மாறிவிடுவதால் உண்மையான மார்க்க நடைமுறைகளை எடுத்துக் கூறும்போது அது அவர்களால் ஜீரணிக்க முடியாத புதிய விஷயமாக ஆகி அதை எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதாவது அன்னியர்களின் மதச்சடங்குகள் அவர்களுக்கு மார்க்கமாகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டுவந்த உண்மையான மார்க்கம் புதிய மார்க்கமாகவும், ஆகி விட்டிருக்கிறது.
மேற்கூறிய இவைகளே இஸ்லாமிய கலாச்சாரத்தில் ‘பித்அத்’ எனும் நூதன பழக்கங்கள் செழித்து வளரக் காரணமாக அமைந்துவிட்டது. இது விஷயத்தில் பாமர மக்களை குறைகூறுவது பிரியோஜனமில்லை. மாறாக இஸ்லாத்தை பாதுகாக்க கடமைப்பட்ட, தூய இஸ்லாத்தை பித்அத்தை விட்டும் நீக்கி சுத்தப்படுத்த வேண்டிய மார்க்க அறிஙர்கள் அந்த பித்அத்களில் மூழ்கி எழுவதை தமது திறமையாக நினைப்பது தான் மிகவும் வருந்தத்தக்கது.
ஒரு செயலை குறிப்பிட்டதொரு சந்தர்ப்பத்திற்காக அனுமதித்திருக்க (நாம் நமது சுய விருப்பத்தின்படி) வேறு சந்தர்ப்பத்திலேயும் அதை செய்வது.
இரண்டாவது ஒரு செயலுக்கு மார்க்கம் எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் பொதுவாக வைத்திருக்க நாமாக அதில் சில கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதிப்பது. இவைகள் பித்அத் என்று கூறப்படும்.
மூன்றாவதாக மார்க்கத்தின் ஒரு வழிபாடு எந்த ஒரு அமைப்பில் செய்யப்பட வேண்டமென விவரிக்கப் பட்டுள்ளதோ, அதை அதே விதமாகவே நிறைவேற்றவது அவசியம். அந்த அமைப்பில் மாற்றம் செய்வது ஹராமாகவும், பித்அத் ஆகவும் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, தொழுகை முடிந்தபின்னர், தஸ்பீஹ், திக்ரு போன்றவைகளை ஓதும்படி பல ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது. எனினும் நபிமார்களோ, ஸஹாபாக்களோ இந்த திக்ரு, தஸ்பீஹ் துஆக்களை சப்தமிட்டு ஓதியதாக காணக் கிடைக்கவில்லை. மாறாக ஒவ்வொருவரும் மெதுவாகவே ஓதிக் கொண்டிருந்தள்ளார்கள். அவ்வாறு எனில், இந்த தஸ்பீஹ், திக்ரு, துஆவிற்கு மார்க்கம் சொல்லித் தந்துள்ள இதுதான் எனத் தெரிகிறது. எனவே, இதற்கு மாற்றாக ஒருவர் ஆரம்பித்து வைக்க அனைவரும் கோரஸாக ‘லா இலாஹ இல்லல்லாஹு… ’ என்று முழங்குவது நபிமார்களின் வழிமுறைக்கு மாற்றமானது – ஷரீஅத்திற்கு முரணானது என்பதால் பித்அத் ஆகும்.
(இதைப்பற்றி ஃபிக்ஹு கிரந்தங்களில் கூறப்பட்டுள்ள சட்ட மேற்கோள்களை அடுத்த சிலவரிகளுக்கு பின்னர் கூறப்படும்வரை சற்று பொருத்துக் கொள்க!)
நான்காவதாக, ஒரு வணக்க வழிபாட்டை ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்வதையே மார்க்கம் வகுத்திருக்க அதை கூட்டு வழிபாடாக மாற்றுவது பித்அத் ஆகும். உதாரணமாக ஃபர்ளு தொழுகைகளை கூட்டாகத் தொழும்படி பணிந்த மார்க்கம் நஃபீல் தொழுகைகளை தனித்தனியாகவே நிறைவேற்றும்படி கட்டளையிடுகிறது. எனவே தான், நஃபீல் தொழுகைகளை ஜமாத்தாக தொழுவதை மார்க்க அறிஞர்கள் மக்ரூஹ் என்றும் பித்அத் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாமா ஷாமீரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுவதாவது, ”தங்களை வணக்கசாலிகளாக காட்டிக்கொள்ளும் சிலர் ஏற்படுத்திக் கொண்ட ‘ரகாயிப்’ என்னும் தொழுகையை மார்க்க அறிஞர்கள் தடை செய்துள்ளனர். தொழுகை உண்மையில் நல்ல விஷயமாக இருந்தாலும் கூட, குறிப்பிட்ட இரவுகளில் இந்த அமைப்பில் தொழுவதற்காக காணக் கிடைக்கவில்லை.” (ரத்துல் முஹதார்: வால்யூம் 2, பக்கம் 234)
எனவே. பராஅத், மிஃராஜ், லைலதுல் கத்ர் போன்ற இரவுகளில் ஒன்றுகூடி ஜமாஅத்தாக நஃபீல் தொழுகைகளை தொழுவதின் சட்டம் என்னவென்று நமக்குப் புலப்பட்டிருக்கும் என நம்புகின்றோம். அதாவது பித்அத் ஆகும்.
பதாவா பஜ்ஜாஸிய்யாவில் கூறப்பட்டிருப்பதாவது, ”சப்தமிட்டு திக்ரு செய்வது ஹராமாகும்.” ஹளரத் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து சரியான அறிவிப்பாளர் தொடர்பில் அறிக்கப்பட்டிருப்பதாவது, மஸ்ஜிதில் சிலர் ஒன்றுகூடி ‘லா இலாஹ இல்லல்லாஹு…’ ஸலவாத் போன்றவைகளை இரைந்து சப்தமிட்டு ஓதிக் கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அவர்களுக்கு அருகில் சென்றார்கள். பின்னர், ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இவ்வாறு செய்வதை நாங்கள் கண்டிருக்கவில்லையே! நூதன பழக்கமான பித்அத்தை நீங்கள் செய்கின்றீர்கள் என கருதுகிறேன்’ என திரும்பத்திரும்பக் கூறி அவர்களை மஸ்ஜிதைவிட்டே ஹளரத் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியேற்றிவிட்டார்கள். (ஃபதாவா ஆலம்கீரியின் ஓரக்குறிப்பு – வால்யூம் 6, பக்கம் 378)
ஷாஃபியீ மதஹபின் முக்கிய நூலாகிய ஃபத்ஹுல் முயீனில் எழுதப்பட்டிருப்பதாவது, ‘வயுஸன்னு திக்ருன், வதுஆவுன் ஸிர்ரன் அகிபஹா’ – தொழுகைக்கப் பின்னர் திக்ருவும் துஆவும் மெதுவாக செய்வது சுன்னத் ஆகும்.
ஹளரத் இமாம் ஷாஃபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ‘கிதாபுல் உம்மு’வில் எழுதியிருப்பதாவது, இமாம்/மஃமூம் (பின்னின்று தொழுபவர்) இருவரும் திக்ரு செய்வதையே நான் விரும்பி ஏற்கிறேன். ஆனால் கற்றக்கொடுக்கம் நோக்குடன் இமாம் சற்று இரைந்து கூறலாம். அதுவும் அவர்கள் கற்றுக்கொள்ளும்வரை மட்டுமே. (அவர்கள் கற்றுக்கொண்டு விட்டால்) பின்னர் மெதுவாகச் செய்து கொள்ள வேண்டும். (ஃபத்ஹுல் முயீன்/ஸிஃபதுஸ் ஸலாத்)
இவ்வாறு, துஆ ஓதியதாகவே மார்க்கத்தில் காணப்படாத இடங்களில் நாமாக சுய ஆய்வின்படி துஆவை ஏற்படுத்துவதும் பித்அத் ஆகும்.
உதாரணமாக நமது பகுதியில் ‘மையித்’ தொழுகை முடிந்த பின் இமாம் அல் ஃபாத்திஹா முழங்க அதற்குப் பின் கூட்டாக துஆ நடைபெறுவதைக் காண்கிறோம். ஆனால் மையித்துத் தொழுகைக்குப் பின்னால் துஆ செய்யம்படி எந்த மத்ஹபின் ஃபிக்ஹ் நூலிலும் காணமுடியவில்லை. காரணம் மையித்து தொழுகையே துஆதான். எனவே துஆவிற்கு பிறகு துஆ ஓதுவது மையித்தை அடக்கம் செய்வதில் தாமதத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். மையித்தை விரைவாக அடக்கம் செய்யும்படி மார்க்கம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆகையால் மையித்துத் தொழுகைக்குப் பின் துஆ ஓதுவது சுன்னத்திற்கு மாற்றமான பித்ஆத் ஆகும்.
நன்றி: மனாருல் ஹுதா