மரணத்தை விரும்பிய மேன்மக்கள்
மவ்லவி, லியாகத் அலீ மன்பஈ, பேட்டை.
ஒருவரல்ல, இருவரல்ல! 70,000 பேர்!
நமக்கு முன்னர் இவ்வலகில் வாழ்ந்து மறைந்த சமுதாயங்களில் ஒரு சமுதாயம் அது. எண்ணிக்கையில் மிகுந்து காணப்பட்ட அந்த சமூகத்தைக் கண்டு பெருமிதம் கொண்ட அவர்களின் நபிக்கு திடீரெனத் தோன்றிய ஒரு எண்ணத்தின் காரணமாக அந்த உம்மத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய நிலை தோன்றகிறது.
அதற்கு இறைவன் வகுத்துத்தந்த மூன்று வழிகளின் ஒன்றை அவரும் அந்த சமுதாயமும் தேர்ந்தெடுத்த பாதை, மரணம்! இந்நிகழ்ச்சியை முதலில் படித்துவிட்டு நம் சிந்தனைக்குச் சிறகு முளைக்கட்டும்.
இமாம் அஹமது இப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்துள்ள இந்த ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமிலும், ஜாமிஉத் திர்மிதீ-யிலும், வேறுபல நூல்களிலும் பதிவாகியுள்ளது.
நபித்தோழர் ஷுஹைப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதை நாம் இப்பொழுது கேட்போம். ‘அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்பொழுது திடீரென முனகுவது போன்று எங்களுக்குக் கேட்டது. அந்த முனக்கத்தின் வார்த்தைகளும் புரியவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. தொழுது முடிந்ததும் இதைப்பற்றி நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபொழுது ‘நீங்கள் அதை உணர்ந்தீர்களா?’ என்று அவர்கள் வினவ, ‘ஆம்’ என்று நாங்கள் சொன்னதும் அதைப்பற்றி பின் வருமாறு விளக்கினார்கள்.
“நமக்கு முன்னர் இவ்வலகில் வாழ்ந்த ஒரு நபி தமது உம்மத் பெரும் எண்ணிக்கையிலும், பெரும்பான்மை பலத்திலும் உலகில் யாராலும் அசைக்க முடியாத நிலையில் வாழ்ந்து வருவதை எண்ணி பெருமிதம் கொண்டார். இதுபற்றி அவருக்கு அறிவுருத்த எண்ணிய அல்லாஹ்! ‘நபியே! உமது சமுதாயம் இப்பொழுது தமது பெரும்பான்மையை இழக்க வேண்டிய நிலைக்கு வந்த விட்டது. அவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பின்வரும் மூன்று வழிகளில் ஒன்றை அவர்களும் நீரும் ஆலோசித்து செய்ய வேண்டும்.
1. அவர்களின் மீது நான் எதிரிகளை ஏவி விடுவேன்.
2. பஞ்சத்தாலும், பட்டினியாலும் அவர்களை சோதித்து விடுவேன்.
3. இவ்விரண்டும் இன்றி இயற்கையான மரணத்தைக் கொண்டு அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்திடுவேன்.
இம்மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பீராக!’ என்று இறைவன் கூறினான். இப்பொழுது அந்த நபி தம் சமூகத்தாரிடம் இச்செய்தியைக் கூறி ‘மூன்றில் ஒன்றை முடிவு செய்யுங்கள்’ என்றார்.
இதைக்கேட்ட அம்மக்கள், ‘நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதர், எங்களுககு எது தேவை என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நாங்கள் அதை விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்’ என்றார்கள். உடனே அந்த நபி தொழுகையின்பால் கவனம் செலுத்தினார். ஏனெனில், அந்த மக்கள் தங்களுக்கு எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் தொழுகையின் பக்கமே கவனம் செலுத்துவது வழக்கம். அதன்படி அந்த நபி அல்லாஹ் நாடிய அளவுக்கு தொழுதார்.
தொழுத பிறகு அவருக்கு தெளிவு பிறந்தது. ஒரு முடிவுக்கு வந்து, அல்லாஹ்விடம் அதை தெரிவித்தார். ‘யா அல்லாஹ்! என் சமுதாய மக்களின் மீது எதிரிகளை ஏவி விட்டால் அவர்கள் எங்களை இழிவு படுத்துவார்கள். பஞ்சத்தையும், பட்டினியையும் நீ கொடுத்தால் அதை தாங்கிக் கொள்ள இயலாமல் அவர்களின் இறை நம்பிக்கை ஆட்டம் கண்டு விடும். எனவே எங்கள் இரட்சகனே! மரணம்தான் இந்த மூன்றிலும் சிறந்ததாக படுகின்றது. அதையே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்.
இவ்வாறு அந்த நபி பிரார்த்தனை செய்தார்.அது உடனே ஏற்றக் கொள்ளப்பட்டது. அந்த நாளிலேயே அவர்களில் 70,000 பேர் இறந்து போனார்கள். இச்செய்தியை அல்லாஹ்விடமிருந்து நான் அறிந்தேன். உடனே நான் அவ்வாஹ்விடம் மன்றாடினேன். ‘யா அல்லாஹ்! உன் அருளாலே நான் சன்மார்க்கப்பணி புரிகின்றேன். உன் பலத்தாலேயே நான் எதிரிகளுடன் போர் செய்கின்றேன். உன்னையன்றி எனக்கோ என் சமூகத்திற்கோ எந்த சக்தியம், பலமும் இல்லவே இல்லை’ என்று கெஞ்சினேன். அதுதான் நீங்கள் கேட்ட அந்த முனகல்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளித்தார்கள்.
ஹிஜ்ரீ 9 ஆம் ஆண்டு ஹ{னைன் போர் நடந்த பொழுது ஒரு ஸுபுஹுத் தொழுகைக்குப்பின் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக மற்றொரு அறிவிப்பில் இமாம் அஹமது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியிருப்பதன் மூலம் ஹுனைன் போரின் பொழுது நபித்தோழர்களின் உள்ளங்களில் தங்களின் பெரும்பான்மை குறித்து ஏற்பட்ட தற்பெருமையை அகற்றவே இந்த நிகழ்ச்சியை இறைவன் அறிவித்திருக்கக்கூடும் என்று யூகிக்க முடிகின்றது.
அந்த வசனம்: (”நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்;) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்”.(9:25))
இந்நிகழ்ச்சியின் மூலம் நமது சிந்தனையில் பிறக்கும் சில கருத்துக்கள்;
1. எந்த ஒரு நபியும் தமது சமுதாயம் பல்கிப்பெருவதைத்தான் விரும்புவார்கள். நீங்கள் அதிகம் குழந்தைப் பெறக்கூடிய, மிகவும் நேசிக்கக்கூடிய பெண்ணை திருமணம் செய்யுங்கள். நிச்சயமாக நான் உங்கள் மூலம் மற்ற நபிமார்களின் சமுதாயங்களைவிட என் சமுதாயமே அதிகம் என்ற பெருமை அடைவேன். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது இதற்குச் சான்றாகும்.
2. அந்த நபி, தமது சமுதாயம் பெருகியிருப்பதைக் கண்டு உள்ளத்தில் சற்று மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார். (தற்பெருமை என்றோ, கர்வம் என்றோ இதை நாம் எண்ணி விடக்கூடாது. நபிமார்களின் இயல்புக்கு அது அப்பார்பட்டதாகும்). எனினும் இவ்வாறு அவர்கள் அடைந்த மகிழ்ச்சி, தம் சமுதாயத்தை எதிர்த்திட இனி யாருமில்லை என்று தூண்டிவிடக்கூடும் என்பதால் நபிமார்களின் உள்ளத்தில் கடுகளவுகூட அப்படிப்பட்ட எண்ணம் துளிர்த்துவிடக்கூடாது என்று கருதிய அல்லாஹ் அந்த நபியிடம் ‘உமது சமுதாயம் இனி பெரும்பான்மையாக இருக்கக்கூடாது, அதற்கு மூன்று வழிகளில் ஒன்றை முடிவு செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்கின்றான். ஏனெனில், எந்த ஒரு மனிதரும் தம் சமுதாயத்தின் மீதோ, பிள்ளைகள் மீதோ நம்பிக்கை வைத்துவிடக் கூடாதல்லவா? அதற்காகவே இந்த பரிசோதனை.
3. அல்லாஹ், அந்த நபியிடம் இம்மூன்று வழிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறியவுடன் அதுபற்றி அந்த மனிதப்புனிதர் தம் சமூகத்தாரிடம் எடுத்துக்கூறியபோது அவர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல், அல்லாஹ்வின் சோதனைகளைத் தாங்கிக் கொள்ள முன் வந்திருப்பது நமக்கெல்லாம் பாடமாக அமைந்துள்ளது. ஒரு சிறு சோதனை வந்து விட்டால் அதற்காக ஊரையே கூட்டி ஒப்பாரி வைத்து அல்லாஹ்வைப்பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி அழுவது மனிதர்களின் இயல்பு. ஆனால், எவ்வித பாவமும் தாங்கள் செய்யாமல் இருக்கும்பொழுது, நபியின் உள்ளத்தில் ஏற்பட்ட எண்ணத்திற்காக தங்களை கண்டிப்பது நியாயமா? என்றெல்லாம் கேள்வி கேட்காமல், அல்லாஹ்வின் விருப்பத்திற்காக எவ்வித தியாகத்திற்கும் தாங்கள் தயார் என்று அவர்கள் கூறியது இறைநேசத்தின் உச்ச நிலையாகும்.
நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களை அறுத்து குர்பான் செய்ய தந்தை அனுமதி அளித்தது போல் அந்த நன்மக்கள் ‘எங்களுக்கு எது தேவை என்பதை தாங்களே முடிவு செய்யுங்கள்’ என்று நபியிடம் கூறியிருப்பது நம்மை பிரமிக்க வைக்கின்றது. நபியின் மீது எத்துனை நேசமும், பாசமும் இருந்தால் தங்கள் மரணத்தைப் பற்றி முடிவு செய்யும் அதிகாரத்தை அந்த நபிக்கு அளித்திருப்பார்கள்? இதுவன்றோ உண்மையான விசுவாசத்தின் உரைகல்.
4. மூன்று வழிகளில் மற்ற இரண்டையும் விட்டுவிட்டு அவர்கள் மரணத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்று சிந்திக்கும்பொழுது அந்த நபிக்கு தம் சமுதாயத்தின் மீது இருந்த உண்மையான தாயன்பு வெளிப்படுகிறது. எதிரிகள் சாட்டப்பட்டால் அதன்மூலம் தம் உம்மத்துக்கு இழிவு ஏற்படும் என்றும், பஞ்சமும் பட்டினியும் தம் சமூகத்தை வாட்டி வதைத்தால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் உணர்ந்த அந்த நபி அவர்கள் மரணமே சிறந்த மருந்து என முடிவு செய்கிறார்கள். ஏனென்றால் மரணம் என்பது எப்பொழுதோ ஒரு முறை வரத்தான் போகின்றது. அது யாருக்கு எந்த இடத்தில், எந்த சூழ்நிலையில் வரும் என்று தெரியாது. ஆனால் இப்போதே மரணத்தை வேண்டினால், தம் கண் முன்னால் ஈமான் சலாமத்துடன், யாருக்கும் எந்த நோயும், முதுமையும், தள்ளாத வயதும் தோன்றாமல் அவர்கள் மரணத்து விடுவார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்கள் அனைவரும் மறுமையில் நல்லடியார்கள் கூட்டத்தில் எழுப்பப்படுவார்கள் அல்லவா? எனவேதான், மரணத்தையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
5. இந்நிகழ்ச்சியின் மூலமாக தம் சமுதாயம் பற்றி தமக்கு எவ்வித மகிழ்ச்சியும் வந்துவிடக்கூடாது என்று பயந்த உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்காக அல்லாஹ்விடம் மன்றாடியிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் முனகலாக ஸஹாபாக்களுக்குக் கேட்டிருக்கின்றது. நமது உள்ளத்தில் கர்வமும், தற்புகழ்ச்சியும் தோன்றி விடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்.