கற்பைக் காத்துக்கொள்ள சிறந்தவழி எது?
[ மனித வாழ்வில் பெண்மை, சுவனத்து ரோஜா மலர்களைப் பின்னிப் பிணைந்து தொடுக்கின்றது. பெண்மைதான் நம்மை அன்புத்தலைகளால் பிணைக்கிறது.
ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அணுகுவது பஞ்சும் நெருப்பும்… இல்லையில்லை… பெட்ரோலும் நெருப்பும் ஒன்றையொன்று அணுகுவதற்கு ஒப்பாகுமேயன்றி வேறில்லை.
கற்பிற்கு மதிப்பளிக்காது தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ள பல்லைக்காட்டி பசப்பித் திரியும் ஆண்களிடத்தில் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், ஆண்களின் இதயத்தைவிடப் பெண்களின் இதயம் காதலால் அதிகம் பாதிக்கப்பெறுகிறது.
ஒருபெண் தன்னுடைய புனிதமான கற்பை இழந்து விடுவாளாயின் மீண்டும் அவளை கற்புடையவளாக்க உலகில் எந்த ஆற்றலினாலும் முடியாது.]
தன்னுடைய மேலான படைப்பாக மனிதனைப் படைத்த அல்லாஹ் இம்மண்ணுலகில் பல்வேறு படைப்பினங்களை படைத்ததோடு மனம் நிறைவுறவில்லை. மனிதகுலத்தை படைத்து, அவனுடைய இன்ப துன்பங்களில் பங்கு பெறுவதற்காக, அவனுக்கு துணை நிற்பதற்காகப் பெண்ணையும் படைத்தான். அவ்வாறு படைக்கும்போது பெண்ணினத்தை அழகின் திருவுருவமாக, அன்பின் இருப்பிடமாக, தன் படைப்புகளிலெல்லாம் மேலானதாக படைத்தான். ‘பெண்’ என்பதற்கு ‘அழகு’ என்னும் பொருளும் உண்டு.
ஆண் – ஆண்மை, வீரம், துணிவு ஆகியவற்றின் பிரதிபிம்பம் என்றால், பெண் – மென்மை, இரக்கம், அன்பு ஆகியவற்றின் திருவுருவமாக விளங்குகிறாள். ஆண் இல்லாமல் பெண்ணில்லை, பெண்ணில்லாதபோது ஆண் மென்மை பெறமாட்டான்.
பெண்ணைப்பற்றி ஒரு அறிஞன் குறிப்பிடும்போது,
பெண்மையே!
அழகுருவாகிய பெண்மையே!!
மனிதனை மேன்மைப் படுத்துவதற்காக இறைவன்
உன்னைப் படைத்திருக்காவிட்டால்
நாங்களெல்லாம் விலங்கினங்களாக
அல்லவோ இருந்திருப்போம்!
சுவர்க்கத்தைப்பற்றி நாங்கள்
எண்ணிக்கொண்டு இருக்கும்
வியத்தகு அழகு,
தூய்மை,
உண்மை,
அழியா மகிழ்ச்சி,
அணையா அன்பு
ஆகியவையெல்லாம்
உன்னிடமன்றோ
காணப்படுகின்றன’
என்று சுவர்க்கம் என்றால் அது பெண்தான் என்று அங்கலாய்க்கின்றான்.
மற்றோர் அறிஞனோ, ‘மனிதன் வாழ்வில் பெண்மை, சுவனத்து ரோஜா மலர்களைப் பின்னிப் பிணைந்து தொடுக்கின்றது. பெண்மைதான் நம்மை அன்புத்தலைகளால் பிணைக்கிறது. திரைக்குள் மறைந்து கிடக்கும் பெண்மை தன்னுடைய தூய கைகளால் மென்மையான உணர்வுகளைக் கொழுந்துவிட்டு எரியச் செய்கின்றது’ என்று முழங்குகின்றான்.
மனித வாழ்வின் துவக்க காலத்தில் பெண்மை தன் பலவீன நிலையை உணர்ந்து தனக்குப் பாதுகாப்புத்தர தகுதி வாய்ந்தவன் என்று தான் கருதிய ஆடவனை அடைந்தது என்றும், போர்க்காலத்தில் வலிமை மிகுந்து வீரனை அது பாதுகாப்புப் பெற நாடியது என்றும், அமைதிக் காலத்தில் அறிவும் ஆற்றலும் செல்வமும் பெற்றவனை அது அணைந்து நின்றது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
தானே தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது (அதாவது காதலித்து திருமணம் முடித்துக்கொள்வது) என்பதை தற்காலத்தில் சிலர் நாகரிகமாக எண்ணிக்கொண்டாலும் அதிக வெப்பத்தின் காரணமாக அதிகமான உணர்ச்சியை விரைவில் பெற்றுவிடுகின்ற நம் கீழை நாட்டு மக்களுக்கு அது ஒருக்காலும் பொருந்தாது என்பதே உண்மை. (இப்படிச்சொல்வதால் குளிர்ப்பிரதேச மக்களுக்கு பொருந்தும் என்பதல்ல!)
ஏனெனில் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அணுகுவது பஞ்சும் நெருப்பும் … இல்லையில்லை … பெட்ரோலும் நெருப்பும் ஒன்றையொன்று அணுகுவதற்கு ஒப்பாகுமேயன்றி வேறில்லை.
எனவே தான் இறைவனால் அகிலத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஒரு பெண்ணும் ஓர் ஆணும் தனித்திருப்பார்களாயின் அவர்கள் இருவர் மட்டும் அங்கு இருக்கவில்லை, அவர்களுடன் ஷைத்தானும் இருக்கின்றான்’ என்று எச்சரித்துளார்கள். ஷைத்தான் இருக்கும்போது கற்பு என்னாவது?
பெண்களின் கற்பைப் போற்றாதோர் உலகில் எவரும் இல்லை. ஒரு ஆங்கிலக் கவிஞன் கற்புடைய பெண்ணைப்பற்றி கூறும்போது ‘தங்கத்தைவிட மேலானது சூரியகாந்தம், அதைவிட மேலானது அறிவு. அறிவைவிட மேலானது எது? என்று கேட்டுவிட்டு அது பெண்தான்’ என்கிறான். அதோடு விட்டானா! கற்புடைய பெண்ணைவிட மேலானது எது என்று கேள்வி எழுப்பும் அவன் அதற்கு (கற்புடைய பெண்ணுக்கு) மேல் சிறந்தது எதுவுமில்லை’ என்கிறான். கற்பை இழந்தவள் வேறு எந்த இழி செயலையும் செய்யத் தயங்க மாட்டாள் என்கிறான் மற்றோர் அறிஞன்.
கற்பு என்பதை எவ்வளவு விலை மதிக்க முடியாத ஆபரணமாக இறைவன் தங்களுக்கு அளித்துள்ளான என்பதை ஒவ்வொரு பெண்ணும் அறிந்து செயலாற்ற வேண்டும்.
கற்பிற்கு மதிப்பளிக்காது தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ள பல்லைக்காட்டி பசப்பித் திரியும் ஆண்களிடத்தில் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், ஆண்களின் இதயத்தைவிடப் பெண்களின் இதயம் காதலால் அதிகம் பாதிக்கப்பெறுகிறது. ஆனால் கவுரவம் என்பது அந்த காதல் வேகத்தைத் தணிக்கிறது. காரணம், பெண்ணினத்திற்கு இறைவன் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு தன்மைகளை நல்கினான்.
ஒருபெண் தன்னுடைய புனிதமான கற்பை இழந்து விடுவாளாயின் மீண்டும் அவளை கற்புடையவளாக்க உலகில் எந்த ஆற்றலினாலும் முடியாது.
எனவே ஒருபெண் தன்னுடைய கவுரவத்தை, தன் குடும்ப கவுரவத்தை மனத்திற்கொண்டு மனஅடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அதுவே அவளுக்கு மாபெரும் அரணாகும்.
கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதன்று, ஆணுக்கும் உரியதேயாகும். எனவே தான் தவறிழைக்கும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரே விதமான தண்டனையை இறைவன் வழங்கச் சொல்கிறான்.
சிங்காரித்துக்கொண்டு சுற்றித்திரிவதிலும், ஆண் இனத்துடன் கலந்துறவாடுவதிலும் சில பெண்கள் இன்பம் காண்கின்றனர். அவ்விதம் செய்வதால் எத்தனை இளைஞர்களின் உள்ளங்களை கெடுக்க ஏதுவாவதோடு, தாங்களும் கெட்டுத்தொலைய வழி ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
இறைவன் எங்களுக்கு அழகைத் தந்துள்ளான். அதை ஆண்கள் பார்த்து ரசிக்குமாறு அரைகுறை உடையுடுத்தி ஒய்யாரமாகத் திரிந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று சொல்லக்கூடிய பெண்களும் இருக்கிறார்கள். கேபிள் டி.வி. வந்தபிறகு இவர்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது.
“அகில உலகத்திலும் ஆண்களை வேட்டையாட பெண்களால் கண்ணிகள், பொறிகள், படுகுழிகள் ஆகியவை நிரப்பி வைக்கப்பட்டுள்ளன” என்கிறார் பெர்னாட்ஷா.
ஒரு வேடன் ஒரு மங்கையுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பெரியார் ஒருவர், “வேடனே! ஜாக்கிரதை, நீயே வேட்டைப்பொருளாக ஆகிவிடாதே!” என்று வேடனை எச்சரிக்கை செய்தார் என்பது பழங்காலக் கதை.
ஆண்களிலும் இதுபோன்று இருக்கிறார்கள்.
ஆம்! பெண்களை தங்கள் மாயவலையில் சிக்கவைக்க ஆண் இனமும் வேலை செய்கிறது. பஸ்களிலும், பீச்சுகளிலும், கூட்டங்களிலும், கடைத்தெருக்களிலும் பெண்களைப்பார்த்து கேளிச்சிரிப்புச் சிரித்து, நையாண்டி செய்துகொள்வதற்காக ஆண்கள் கூட்டம் அலங்காரமாக உடை உடுத்திக்கொண்டும், சீட்டியடித்துக் கொண்டும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருப்பது பழைய ஸ்டைல் என்றால் இன்று செல்ஃபோன் மூலம் காதல்வலை வீசுவதைக்கண்டு நெஞ்சம் பதறுகின்றது.
இதற்கெல்லாம் முடிவான தீர்வு தான் என்ன?
ஆணும் பெண்ணும் தங்களுக்கு உரிய காலத்தில், இறைவன் தங்களுக்கு அளிக்கும் இன்பக்கிளர்ச்சியை கட்டுப்படுத்திச் செயலாற்ற சிறந்தவழி திருமணம் முடித்து இல்லற வாழ்வில் புகுவதுதேயாகும்.
– அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை)