பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட எல்லா நற்கிரியைகளிலும் ஓர்மை அவசியம்
ஹஜ்ரத் இப்றாஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒரு குழுவினர் வந்து; “பெரியார் அவர்களே! அல்லாஹ் எல்லாவிஷயத்திற்கும் என்னிடமே பிரார்த்தனை செய்யுங்கள். நான் நிறைவேற்றுவேன் என்று திருக்குர்ஆனில் கூறி இருக்கின்றான். அதற்கேற்ப நாங்கள் எமது கஷ்டங்களைப்போக்க மன்னிப்புக்கோரி காலையிலும், மாலையிலும், இரவினிலும் இறைவனிடன் துஆ கேட்ட வண்ணம் இருக்கின்றோம். ஆனால் ஹக்கன் எங்கள் துஆவை கபூல் ஆக்கவில்லையே. என்ன காரணம்?” என்று கேட்டனர்.
அதற்கு இப்றாஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “உங்கள் கல்பில்(நெஞ்சங்களில்) இருக்கும் ஈமான்(நன்நம்பிகை) பத்து வித காரணங்களால் மரித்துப்போய் விட்டது. உங்களது ஈமான் ஒளி மங்கி இருள் அடைந்து போய் விட்டது. அத்தகைய இருள் நெஞ்சத்தின் பிரார்த்தனைகள் இறைவன் சமூகம் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை” என பதில் அளித்தார்கள்.
நெஞ்சத்தில் மரித்துவிட்ட அந்த பத்துவித செயல்கள்:
1. இறைவன் ஒருவன் தான் என்று நன் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். ஆனால் இறைவனின் ஆணைகளை நிறைவேற்ற மறந்து விடுகின்றீர்கள்.
2. அல்லாஹ்வின் அருளைப்பெற அல்-குர்ஆனை தினமும் ஓதி வருகின்றீர்கள். ஆனால் அதில் உள்ள போதனைப்படி நடக்காமல் இருக்கின்றீர்கள்.
3. ஷைத்தான் (இப்லீஸ்) உங்கள் பகைவன் என்கின்றீர்கள். ஆனால் அவனை பின் பற்றி நடந்து விடுகின்றீர்கள்.
4. நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆழமாக நேசிப்பதாக வாதிக்கின்றீர்கள். ஆனால் அவர்கள் சொன்ன நல்வழியை செயல் படுத்த மறுக்கின்றீர்கள்.
5. சொர்க்கத்தை அடைய ஆசிக்கின்றீர்கள். ஆனால் அதனை அடைவதற்கு செய்ய வேண்டிய நற்கிரியைகளை செய்ய மறுக்கின்றீர்கள்.
6. நரகத்திற்கு அஞ்சுவதாக பகருகின்றீர்கள். ஆனால் பாவச்செயல்கள் செய்வதை விட்டும் விலகாமல் இருக்கின்றீர்கள்.
7. பிறரின் குற்றங்களைத் தேடித்திரிகின்றீர்கள். ஆனால் உங்களிடையே பின்னிக்கிடக்கும் குற்றங்களை சிந்தித்து உணரத்தவறிவிட்டீர்கள்.
8. மரணத்தை நம்புகின்றீர்கள். ஆனால் அதற்கு முன் நற்செயல்களை செயல்கள் புரியத்தயங்குகின்றீர்கள்.
9. அல்லாஹ்வினால் அளிக்கப்படும் ஆகாரங்களை உண்கின்றீர்கள். ஆனால் அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த தவறி விடுகின்றீர்கள்.
10. மரணம் அடைந்தவர்களை நல் அடக்கம் செய்கின்றீர்கள். ஆனால் நீங்களும் இதுபோல் அடக்கப்படுவோம் என்ற பய உணர்வு கொள்ளத் தவறிவிட்டீர்கள்.
இவ்வாறு இப்றாஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மறு மொழி பகர்ந்தார்கள். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஹக்கனையும், அவனது ரசூலையும் ஈமான் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அவர்களின் போதனைப்படி நடக்கவேண்டும். அப்பொழுதுதான் இறைவனின் அருளும் அன்பும் நமக்கு கிட்டும். நம் நியாயமான பிராத்தனைகளுக்கு இறைவன் செவிசாய்ப்பான். நாம் கேட்கும் துஆக்களை இறைவன் அங்கீகரிப்பான். துஆவிலும், அல்லாஹ்வின் பால் உள்ள அச்சத்திலும், வணக்கத்திலும், ஏனைய நற்கிரியைகளிலும் ஓர்மை அவசியம் என்பதினை நாம் மறக்கக்கூடாது.
Posted by ஸாதிகா