சுவனத்துத் தடாகம் ”ஹவ்ளுல் கவ்ஸர்”
ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி
அல்லாஹு ஸுப்ஹானஹுதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான நற்பாக்கியங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். அவற்றில் ஒன்று, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக சுவர்க்கத்தில் கவ்ஸர் என்னும் நதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது.
இது குறித்து திருக்குர்ஆனில், “(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக் கின்றோம்.” என்று கூறப்பட்டுள்ளது. (ஸூரத்துல் கவ்ஸர், வசனம் – 1.)
“கவ்ஸர் என்றால் என்ன?” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(அது) சுவர்க்கத்திலுள்ள ஓர் ஆறாகும். அதனை என் இறைவன் எனக்காக கொடுத்திருக்கிறான்.
அதன் தண்ணீர் பாலைவிட அதிக வெண்மையானதாக இருக்கும்.
அதன் சுவையோ தேனைவிட அதிக இனிப்பானதாக இருக்கும்.
அதில் பறவைகளும் இருக்கின்றன. அவற்றின் கழுத்துகள் ஒட்டகத்தின் கழுத்துகளைப் போல் இருக்கும்” என்று கூறினார்கள்.
அப்போது உமர் ரலியல்லாஹுதஆலா அன்ஹு அவர்கள், “இந்தப் பறவைகள் மிகவும் உல்லாசமாக இருக்கும்” என்று கூறினார்கள்.
அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவற்றை உண்பவர்கள் அவற்றை விட உல்லாசமாக இருப்பார்கள்”
என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹுதஆலா அன்ஹு, நூல்: திர்மிதீ)
அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும்,
அதனுடைய இரு ஓரங்களும் தங்கமாகும்.
முத்து பவளத்தின் மீது அது ஓடுகின்றது.
அதனுடைய மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது.
அதனுடைய தண்ணீர் தேனைவிடவும் இனிமையானது,
ஐஸ் கட்டியை விடவும் வெண்மையானது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
கவ்ஸர் நதியின் பரப்பு, ஒரு மாத நடை தூரமுடையதாக இருக்கும். அதன் இரு மருங்குகளிலும் விலை உயர்ந்த கற்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் இருக்கும். அதன் நீர் பாலைவிட அதிக வெண்மை யானதாகவும், கஸ்தூரியை விட அதிக வாசமுள்ளதாகவும் இருக்கும். அதன் நீரை அருந்தியவர்கள் பின்னர் ஒருபோதும் தாகிக்க மாட்டார்கள். அங்கு நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமான பாத்திரங்கள் இருக்கும். இவ்விவரங்களைக் கூறும் ஹதீஸ்களில் சில:
‘நிச்சயமாக நாம் உமக்குக் கவ்ஸரைக் கொடுத்திருக்கிறோம்’ என்பதைக் குறித்து அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹுதஆலா அன்ஹா அவர்கள் வினவப்பட்டார்கள். (அதற்கவர்) “அது ஒரு நதி. உங்களுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அது கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனுடைய இரு மருங்குகளிலும் துவாரமிடப்பட்ட மாணிக்கம் இருக்கிறது. அதனுடைய பாத்திரங்கள் நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமானவை” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹுதஆலா அன்ஹா, நூல்: புகாரீ)
“என்னுடைய ஹெளல் ஒரு மாதத் தூரமு(பரப்பளவு)ள்ளது. அதன் தண்ணீர் பாலினும் வெண்மையானது. அதன் வாடை கஸ்தூரியினும் அதிக வாசனையுள்ளது. அதன் கோப்பைகள் வானின் நட்சத்திரங்கள் போன்றவை. அதிலிருந்து அருந்தியவர் (பின்னர்) ஒரு போதும் தாகிக்க மாட்டார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியலலாஹுதஆலா அன்ஹு, நூல்: புகாரீ. )
“நாயகமே! ஹவ்ளுல் கவ்ஸரின் பாத்திரங்கள் எத்தனை உள்ளன?” என்று நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எவன் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அதன் பாத்திரங்கள் இருள் நிறைந்த இரவில் வானத்தின் சிறிய, பெரிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கின்றன.
சுவர்க்கத்தின் பாத்திரங்களில் எவர் தண்ணீர் அருந்துகிறாரோ அவருக்கு அவருடைய இறுதிநாள் வரை தாகமெடுக்காது. சுவர்க்கத்திலிருந்து இரண்டு ஆறுகள் வருகின்றன. அதன் அகலமோ சிரியா (ஷாம்) தேசத்திலுள்ள அம்மான், ஈலா ஆகிய ஊர்களுக்கிடையே உள்ள தூரத்திற்குச் சமமாக இருக்கும்.
அதன் தண்ணீரோ பாலைவிட அதிக வெண்மையாய் இருக்கும். அதன் சுவையோ தேனைவிட அதிக இனிமையாக இருக்கும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசர் ரலியல்லாஹூதஆலா அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதீ)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தில் கவ்ஸர் நதியைக் கண்டிருக்கிறார்கள். இது குறித்த ஹதீஸ்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜூக்கு சென்ற போது (கூறிய விவரங்களில்) “நான் ஒரு நதியின் பக்கமாக அழைத்து வரப்பட்டேன். அதன் இரு மருங்குகளிலும் துவாரமுள்ள முத்துக் கூடாரங்களிருந்தன. ‘இது என்ன, ஜிப்ரயீல்?’ என்று கேட்டேன். ‘இது கவ்ஸர்’ என்று (அவர்) கூறினார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹுதஆலா அன்ஹு, நூல்: புகாரீ)
கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினருக்குக் கிடைக்கும். அவர்களின் எண்ணிக்கையும் மிகவும் கூடுதலாக இருக்கும்.
இது குறித்த ஹதீஸ்: “நிச்சயமாக எல்லா நபிமார்களுக்கும் ஒவ்வொரு ஹவ்ளு உண்டு. அங்கு அவரவரின் சமூகத்தினர் வருவார்கள். அன்றி, நிச்சயமாக அவர்கள் தங்களுக்குள் அவர்களில் எவர் (அதாவது எந்தச் சமூகத்தினர்) அதிகமாக வருகிறார்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்வார்கள். மேலும், நிச்சயமாக நான் என்னுடைய ஹவ்ளில் அவர்களை விட அதிகமான பேர் வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரதுப்னு ஜுன்துப் ரலியல்லாஹுதஆலா அன்ஹு அவர்கள். நூல்: திர்மிதீ. )
கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியமுடைய உம்மத்தினருக்கு விருந்தோம்புபவராக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இருப்பார்கள்! ஆயினும், இஸ்லாம் மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்தி, மாற்றங்களை உண்டு பண்ணியவர்கள் கவ்ஸர் நதியை விட்டும் அப்புறப்படுத்தப் படுவார்கள்! இது குறித்த ஹதீஸ்கள்:
“ஹவ்ளுல் கவ்ஸரில் நான்தான் உங்களுக்கு விருந்தோம்புபவனாக இருப்பேன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜுன்துப் ரலியல்லாஹுதஆலா அன்ஹு, நூல்: புகாரீ, முஸ்லிம்)
“ஹவ்ளுல் கவ்ஸரில் நான்தான் உங்களுக்கு விருந்தோம்புபவனாக இருப்பேன். அப்பொழுது உங்களில் சிலர் என்னிடம் கொணரப்படுவீர்கள்.
நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க அவர்களின் பக்கம் குனியும் போது, அவர்கள் என்னை விட்டும் அப்புறப்படுத்தப் படுவார்கள்.
அப்பொழுது நான், “இறைவனே! இவர்கள் என் தோழர்களாயிற்றே!” என்று கூறுவேன்.
அதற்கு, “நிச்சயமாக, இவர்கள் தங்களுக்குப் பின் என்னவென்ன புதுமைகளை மார்க்கத்தில் உண்டுபண்ணினார்கள் என்று தாங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறப்படும்.
எனவே நான், “தூரமாகிவிடுங்கள்: தூரமாகிவிடுங்கள். எனக்குப் பின் (என் மார்க்கத்தை) மாற்றியவர்கள் (நீங்கள்) எனக் கூறுவேன்” எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்)
அல்லாஹு ஸுப்ஹானஹுதஆலா, தன்னுடைய ஹபீபு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் நம் அனைவருக்கும் கவ்ஸர் நதியில் பிரவேசிக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக! ஆமீன்.
source: ‘‘அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள்” என்ற நூலில் இருந்து.