ஏன் இந்த பிடிவாத போக்கு? (1)
[ சமுதாய அக்கரை கொண்ட ஒவ்வொரு முஸ்லீமும் படிக்க வேண்டிய கட்டுரை ]
முஸ்லிம் சமுதாயம் இன்று முழுக்க முழுக்க தங்களை மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் – மவ்லவிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த மவ்லவிகளின் தாக்கமும், ஆதிக்கமும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிறது.
அவர்களின் பிடியிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை விடுவிப்பது நடக்கக்கூடிய காரியமல்ல. எனவே உங்களின் இந்த முயற்சி வீண் முயற்சி. இதை விடுத்து வேறு உருப்படியான காரியங்களைச் செய்துவிட்டுப் போகலாம் என்று பலர் (அவர்களில் மெத்தப்படித்த அறிவு ஜீவிகளும் அடக்கம்) எமக்கு அறிவுரை கூறிவருகிறார்கள்.
அவர்களில் சிலருக்கு இந்த மவ்லவிகள் மீதுள்ள அபாரமான நன்னம்பிக்கையால் மவ்லவிகளை இவ்வளவு கடுமையாக விமர்சிப்பதை விட்டுவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
அல்குர்ஆனை தன்னம்பிக்கையுடன் பொருள் அறிந்து சிந்தனையுடன் படித்து விளங்குவதற்கு முன்னால், அதாவது 1960லிருந்து 1983வரை நாமும் இந்த மவ்லவிகள்மீது மிகமிக அபார நம்பிக்கை வைத்து அவர்களின் வாக்குகளை வேதவாக்காகக் கொண்டு செயல்படத்தான் செய்தோம்.
அதனால் 1964-ல் துறவு மனப்பான்மையுடன் வீட்டைவிட்டு வெளியேறி இரவு மட்டும் ஒரு வேளை சாப்பிட்டு பல மாதங்களை ஓட்டத்தான் செய்தோம். இமாம் கஸ்ஸாலியின் கீமீயா சஆதத் என்ற நூலை பெரும் பொக்கிஷமாகக் கருதினோம். 1981-ல் ஹஜ்ஜுக்குச் செல்லும்போது அந்த நூலை பெரும் மதிப்புடன் எடுத்துச் சென்றோம். சவூதி கஸ்டம்ஸில் அந்த நூல் என்ன நூல் என்று கேட்டபோது இமாம் கஸ்ஸாலியின் கீமியா சஆதத் என்று பெருமிதத்துடன் சொன்னவுடன் அதை வாங்கி விட்டெறிந்ததைக் கண்டவுடன் எமது இதயமே நின்றுவிட்டது. அந்த பதற்றத்தால் கையில் வைத்திருந்த ஒரு பையையும் அங்கு விட்டுவிட்டு வெளியேற நேரிட்டது.
இந்த அளவு, அளவுக்கு மீறிய முரட்டு பக்தி வைத்திருந்த நாம் எப்போது அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனை நேரடியாக தன்னம்பிக்கையுடன் சுய சிந்தனையுடன் பொருள் அறிந்து படிக்க ஆரம்பித்தோமோ அப்போதே நாம் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பதை அறிய முடிந்தது.
அல்குர்ஆனிலிருந்து நேரடியாகப் புரிந்து கொண்ட உண்மை-நேர்வழி கருத்துக்களை கடிதமாக எழுதி தமிழக அனைத்து அரபி மதரஸாக்களுக்கும் பிரபல மவ்லவிகளுக்கும் விளக்கம் கேட்டு எழுதினோம். அப்போதும் அவர்கள் மீது நல்லெண்ணத்துடனேயே இருந்தோம். அவர்கள் மனமுரணாக, வீம்பாக ஆணவத்துடன் சத்தியத்தை மறைக்க முற்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட பின்னரே மக்கள் மன்றத்தைத் தொடர்பு கொண்டோம்.
அல்குர்ஆன் வசனங்கள் தெள்ளத் தெளிவாக, நேரடி விளக்கமாக அமைந்துள்ளன. அதற்கு மேலும் இறுதித் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி (பார்க்க 7:157, 16:44, 64, 62:2) அல்குர்ஆனை நடைமுறையில் செயல்படுத்தி விளக்கி விட்டார்கள்.
இந்த நிலையில் ‘பாமர மக்களாகிய உங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் விளங்காது அதை நாங்கள்தான் விளக்க வேண்டும்’ என்று இந்த மவ்லவிகள் கூறினால் அதன் பொருள் என்ன? பாமரர்களாகிய உங்களுக்கு மார்க்கத்தை விளக்க அல்லாஹ்வுக்கும் ஆற்றல் இல்லை, அவனது தூதருக்கும் ஆற்றல் இல்லை. (நவூது பில்லாஹ்) அந்த ஆற்றல் எங்களுக்கே இருக்கிறது என்றுதானே கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் யாராக இருக்க முடியும்? நேர்வழியை கோணல் வழியாக ஆக்கும் ஷைத்தானின் ஏஜண்டுகளாகத்தானே அவர்கள் இருக்க முடியும்
அதற்கும் காரணம் இருக்கிறது.
நேர்வழி செல்பவர்கள் மிகமிக சொற்பமானவர்களே. வழிகேட்டில் சென்று நரகில் விழுபவர்களே மிகமிக அதிகம்.
இந்த மவ்லவிகள் அல்குர்ஆனின் சுமார் (50) ஐம்பது இறைவாக்குகளின் எச்சரிக்கைகளுக்கு முரணாக மார்க்கத்தைத் தொழிலாக – வியாபாரமாகக் கொண்டிருப்பதால், நேர்வழி நடக்கும் சொற்பமான வாடிக்கையாளர்களைக் கொண்டு பெருத்த ஆதாயம் அடையமுடியாது. வழிகேட்டில் சென்று நரகில் விழுபவர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டால்தான், அவர்களின் வியாபாரத்தை ஜாம் ஜாம் என்று நடத்த முடியும். வழிகேடர்களை வாடிக்கையாளர்களாக கொள்ள விரும்பினால் அந்த வழிகேடர்கள் விரும்பும் வழிகேட்டுப் போதனைகளை – கோணல் வழிகளை நேர்வழியாக எடுத்துச் சொன்னதால்தான் அது சாத்தியமாகும்.
வழிகேட்டில் சென்று நரகில் விழுபவர்கள் கூட்டம் கூட்டமாக இந்த மவ்லவிகளின் பின்னால் அணி வகுப்பார்கள். இந்த மவ்லவிகளும் தங்கள் ஹறாமான வியாபாரத்தை செழிப்பாக நடத்த முடியும். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டால் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்ல முடியாது என்ற காரணத்தால் அனைத்து நபிமார்களையும் ‘இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் எதிர்பார்க்கவில்லை’ என்று பகிரங்கமாக அறிவிக்கக் கட்டளையிட்டுள்ளான்.
அல்லாஹ் மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்ட, முன்னைய நபிமார்களைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்ட புரோகிதர்கள் எப்படிப்பட்ட தில்லு முல்லுகளைச் செய்தார்கள் என்பதையும் தெள்ளத் தெளிவாக அல்குர்ஆனில் அல்லாஹ் அறிவித்துள்ளான்.
முழுமை பெற்ற இஸ்லாமிய மார்க்கத்தையும் மதமாக்கி அதைப் பிழைப்பாகக் கொண்டுள்ள இந்த மவ்லவிகளும் அப்படிப்பட்ட தில்லுமுல்லுகளையே செய்து வருகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகிறது.
இவை அனைத்தையும் திட்டமாக, தெள்ளத் தெளிவாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெரிந்து கொண்ட பின்னரே துணிந்து செயல்படத் தொடங்கினோம். எம்முடைய இந்த முயற்சி பலன் அளிக்குமா? இல்லையா? பலன் அளித்தால்தான். இந்த முயற்சியில் இறங்க வேண்டும் என்றெல்லாம் நாம் சிந்திக்கவில்லை. அல்குர்ஆன் 5:67-ல் அல்லாஹ் நபிக்கு கட்டளையிட்டுள்ளதை கருத்தில் கொண்டு குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி எடுத்து வைப்பதே எமது கடமை. அனைத்து தீங்குகளிலிருந்தும் அல்லாஹ் எம்மைக் காப்பாற்றப்போதுமானவன் என்ற உறுதியான நம்பிக்கையுடன்தான் செயல்பட்டு வருகிறோம்.
எத்தனையோ நபிமார்கள் தங்களின் பிரசார பணியைக்கொண்டு ஒரு நபரைக் கூட நேர்வழிக்குக் கொண்டு வர முடியாவிட்டாலும், அவர்கள் தங்கள் பணியில் வெற்றியடைந்து சுவர்க்கம் போவதை ஹதீஸ்களில் பார்க்கிறோம். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் 950 வருடங்கள் பாடுபட்டும் சின்னஞ்சிறிய கப்பலில் ஏற்றிக்கொள்ளும் அளவுக்கே வெகு சிலரே நேர்வழிக்கு வந்தனர். அவர்களது மகனே நேர்வழியை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே முஸ்லிம்கள் அனைவருமே இந்த மவ்லவி புரோகிதர்களின் பிடியில் இருக்கின்றார்கள்; அவர்கள அப்பிடியிலிருந்து விடுவிக்க முடியாது என்ற எண்ணத்தில் எமது முயற்சியை கைவிட வேண்டியதில்லை.
மேலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நமது அறிவு ஏற்றுக்கொண்டால்தான், அவை நடைமுறை சாத்தியமாக இருந்தால்தான், அவற்றைச் செயல்படுத்த முற்பட வேண்டும் என்ற போதனை ஷைத்தானின் துர்போதனையாகும்.
இப்றாஹீம்அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, அவரது அருமை மனைவி ஹாஜராஅலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அருமையாக வேண்டிப்பெற்ற ஆசைமகன் இஸ்மாயீல்அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் உயிர் வாழ்வதற்கு வாய்ப்பு அறவே இல்லாத பொட்டல் காட்டில் கொண்டு விடும்படி அல்லாஹ் கட்டளையிட்டபோது இப்றாஹீம்அலைஹிஸ்ஸலாம்அவர்களின் அறிவு அதை ஏற்றுக் கொண்டா செயல்படுத்தினார்கள்? அது நடைமுறை சாத்தியம் என்று எண்ணியா அதைச் செயல்படுத்தினார்கள்.
அல்லாஹ் எஜமானன், நாம் அவனது அடிமைகள். எஜமானனாகிய அல்லாஹ்வின் கட்டளையை அடிமைகளாகிய நாம் மீற முடியாது. அப்படி மீறினால் அது கடும் குற்றம் என்று விளங்கியே செயல் படுத்தினார்கள். பின்னர் அதே மகனை அறுத்துப்பலியிட அல்லாஹ் கனவில் கட்டளையிட்ட போதும், எஜமானனின் கட்டளையை அடிமை நிறைவேற்றுவதைத்தவிர வேறு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்ற தெளிவான விளக்கத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டார்கள்.
இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிந்ததால், மனித அறிவுக்கு எட்டாத, அறிவு ஏற்றுக்கொள்ளாத அளவில் பெரும் மாற்றத்தை அல்லாஹ் உண்டாக்கிக் காட்டினான். பொட்டல்காடு பெரும் நகரமாகிவிட்டது. மனித குலத்திற்கே அபயமளிக்கும் பட்டணமாகிவிட்டது. உலக முஸ்லிம்கள் அனைவரும் அங்கு நோக்கித் தொழவும், உலக மக்கள் அங்கு கூடி, இப்றாஹீம்அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தில் நடந்த அந்த செயல்களை ‘ஹஜ்’ செயல்பாடுகளைக் கொண்டு நினைவு கூறவும் ஏற்பாடு செய்துவிட்டான். அல்லாஹ்வின் முடிவை யாராலும் மாற்ற முடியாது.
ஸலஃபி, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்ல ஹதீஸ் இவற்றிற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் உண்டா?
தர்கா, தரீக்கா, மத்ஹபுகள் பெயரால் ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்களிலிருந்தும், காதியானிகளிலிருந்தும், தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடு தங்களை ஸலஃபி, JAQH, TNTJ, முஜாஹித் அஹ்ல ஹதீஸ் என இவர்களாக தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக் கொண்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
இவர்களிடம் சத்தியத்தை – நேர்வழியை அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்மையிலேயே இருக்குமானால், அவர்கள் ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு கீழ்வரும் செய்திகளைப் படித்துப் பார்த்து எந்தக் கருத்து குர்ஆன், ஹதீஸ்படி இருக்கிறது? குறைந்தபட்சம் குர்ஆன், ஹதீஸ்களுக்கு நெருக்கமாக இருக்கிறது, முரண் இல்லாமல் இருக்கிறது என்ற முடிவுக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
காதியானிகள், தர்கா, தரீக்கா, மத்ஹபுகாரர்கள் போன்ற வழிகெட்ட கூட்டங்கள் எல்லாம் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும்போது, நம்மை வேறுபடுத்திக் காட்ட ‘ஸலஃபி’, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்ல ஹதீஸ் போன்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அவர்கள் கோபப்படாமல் சிறிது சிந்திக்க வேண்டும். அவர்களது பெற்றோர்கள்! அவர்களுக்கு சூட்டிய அப்துஸ்ஸலாம், உமர், முஸ்தஃபா, கமாலுத்தீன், ஜைனுல் ஆபிதீன் போன்ற பெயர்கள் போலவே, இன்று கபுரு வணங்கிகள், அத்துவைதத்தை சரி காணும் சூஃபிகள், காதியானிகள் (ஏன்? சபரி மலைக்கு மாலை போடுகிறவர்களும், திருப்பதிக்கு காவடி தூக்குகிறவர்களும் கூட) இன்னும் அனைத்து வழிகெட்ட கூட்டங்களிலும் அதேபோல் அதே பெயர்களை உடையவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அவர்கள் எல்லாம் தங்களை அப்பெயர்களால் அழைத்துக்கொள்கிறார்கள். எனவே தங்கள் பெயர்களை மாற்றி வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று இப்பிரிவினைவாதிகள் என்றாவது எண்ணியிருக்கிறார்களா? கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தங்களது பெயர்களை சொல்லுவதையே சரி காண்கிறார்கள். இத்தனைக்கும் அவை அவர்கள் பெற்றோர்கள் சூட்டிய பெயர்கள் மட்டுமே.
இப்போது சிந்தியுங்கள், ‘முஸ்லிம்’ என்ற பெயர் அல்லாஹ் இந்த உம்மத்திற்குச் சூட்டிய பெயர். (பார்க்க அல்குர்ஆன் 22:78) அல்குர்ஆன் 41:33-ல் அல்லாஹ் தெளிவாக பிரசாரபணி புரிகிறவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்வதையே விரும்புகிறான். ‘முஸ்லிம்’ அல்லாத நிலையில் மரணிக்காதீர்கள் என்றும் கட்டளை யிட்டுள்ளான். (பார்க்க அல்குர்ஆன் 2:132, 3:102)
இது அல்லாமல் ‘முஸ்லிம்’ என்ற பதம் பல திரிபுகளில் சுமார் 42 இடங்களில் வருகிறது. நபிமார்கள் அனைவருமே தங்களை ‘முஸ்லிம்’ என்றே சொல்லிக் கொண்டார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க.2:131,132,10:72,84, 12:101, 5:44,111) அல்குர்ஆன் 22:78-ல் அல்லாஹ் முஹம்மது(ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொண்ட இந்த உம்மத்திற்கு இந்த அல்குர்ஆன் என்ற வழிகாட்டல் நூலிலும், இதற்கு முன்னர் இறக்கப்பட்ட வழிகாட்டல் நூல்களிலும் (இன்ஜீல், தவ்றாத், ஜபூர் போன்றவை) ‘முஸ்லிம்’ என்றே பெயர் சூட்டியுள்ளதாகக் கூறுகிறான்.
“அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான், இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். (அல்லாஹ்வாகிய) அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என பெயர் சூட்டினான். இதிலும், (அவ்வாறே) கூறப் பெற்றுள்ளது.” (அல்குர்ஆன் 22:78)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்