Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பொது சிவில் சட்டம் – PJ (2)

Posted on March 28, 2010 by admin

MUST READ

முஸ்லிம்களுக்கு, கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் இ.பி.கோ. பிரகாரமும், சிவில் சட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய சட்டப் பிரகாரமும் அமைந்திருப்பது போல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் தவறாகும்.

கிரிமினல் விவகாரங்கள் எவ்வாறு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் பொதுவாக உள்ளனவோ அது போல் தான் சிவில் விவாகரங்களும் இந்திய உரிமையியல் சட்டத்தின் பிரகாரம் அனைவருக்கும் பொதுவாக உள்ளன. இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் கடன் கொடுக்கிறான். இது சிவில் விவகாரம். கொடுத்த கடன் திரும்பி வரவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்தும் கடன் வாங்கியவன் திருப்பித் தர மறுக்கிறான்; இழுத்தடிக்கிறான். கடன் கொடுத்தவன் நீதிமன்றத்தை அணுகுகின்றான். இவ்வாறு அணுகும் போது மூன்று ஆண்டுகள் கடந்து விட்டால் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்க முடியாது. மூன்று வருடம் முடியாவிட்டால் தான் கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறு நீதிமன்றம் உத்தரவிடும்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இப்படித் தான் தீர்ப்பு வழங்கப்படும்.

இஸ்லாமியச் சட்டப்படி வாங்கிய கடனை எவ்வளவு நாட்கள் சென்றாலும் கொடுத்துத் தான் தீர வேண்டும். சிவில் சட்டங்கள் முஸ்லிம்களுக்குத் தனியாக உள்ளன என்றால் முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தின்படியே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

எந்தக் கடன் கொடுக்கல் வாங்கலுக்கும் வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இங்கே சட்டம் உள்ளது. முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இவ்வாறு தான் தீர்ப்பு வழங்கப்படும்.

முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனி சிவில் சட்டங்கள் உள்ளன என்றால் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட கடன் கொடுக்கல் வாங்கலுக்கு வட்டி கொடுக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது. ஏனெனில் இஸ்லாத்தில் வட்டி முழுமையாகத் தடுக்கப்பட்டதாகும்.

உதாரணத்திற்குத் தான் இந்த இரண்டை மட்டும் இங்கே எடுத்துக் காட்டியுள்ளோம். சிவில் சட்டங்கள் அனைத்துமே இப்படிப் பொதுவாகத் தான் உள்ளன.

திருமணம், தலாக் (கணவன், மனைவியை விவாகரத்துச் செய்வது), குல்ஆ (மனைவி, கணவனை விவாகரத்துச் செய்வது), பஸக் (முஸ்லிம் தலைவர் ஒருவர் ஒரு திருமணத்தைச் செல்லாது என்று அறிவித்தல்), வாரிசுரிமை, வக்ஃபுச் சட்டங்கள் ஆகியவற்றில் மட்டுமே முஸ்லிம்கள் தம் மார்க்கத்தின்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமறிந்த வரையில் இவற்றைத் தவிர மற்ற சிவில் விவகாரங்களில் பொது சிவில் சட்டமே முஸ்லிம்களுக்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

பார்ப்பன ஏடுகளும், அறிவுஜீவிகள் என்று கூறிக் கொள்ளும் மேல் ஜாதியினரும் எல்லா விஷயங்களிலும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சிவில் சட்டம் வழங்கப்பட்டுள்ளது போலப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்பிரச்சாரம் விஷமத்தனமானது; பொய்யானது என்பதைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.

நாம் சுட்டிக் காட்டிய திருமணம் முதலான விவகாரங்கள், முஸ்லிம்கள் தங்களுக்கிடையே அமல்படுத்திக் கொள்ளக் கூடியவை. மற்ற சமுதாயத்திற்கோ, நாட்டுக்கோ இதனால் எந்தப் பாதிப்பும் கேடும் ஏற்படப் போவதில்லை. இந்தச் சட்டங்களை அமல் செய்வதால் முஸ்லிம்களில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டால் கூட அதை சிரமப்படுபவன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறான். அறிவுஜீவிகள் இதை உணர வேண்டும். இனி அவர்களின் கேள்விக்கு வருவோம்.

கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய – மதம் சம்பந்தப்பட்ட – மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.

இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள் தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.

கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களை, முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்படும் கிரிமினல் விவகாரங்களில் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களால் தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்பதை அறிவுஜீவிகள் உணரட்டும்.

இன்னொன்றையும் அறிவுஜீவிகள் கவனிக்க வேண்டும். ஓரிரண்டு விஷயங்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கத்தின்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது போலவே மற்ற மதத்தவர்களுக்கும் சில தனிச் சட்டங்கள் உள்ளன.

ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்குக் குடிமக்களுக்கு உரிமை இருக்கின்றது.

(அரசியல் சாசனம் 19வது பிரிவு (1) ஆ)

ஆயுதங்களின்றி கூடுவதற்குத் தான் குடிமக்களுக்கு உரிமை உண்டு என்று அரசியல் சாசனம் கூறுகின்றது. கிர்பான் (குறுவாள்) வைத்திருப்பதும், அணிந்திருப்பதும் சீக்கிய மதத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும்.

(அரசியல் சாசனம் 25வது பிரிவு, விளக்கம் 1)

குறுவாள்களை வைத்துக் கொண்டு சீக்கியர்கள் மட்டும் நடமாடலாம்; கூடலாம் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது.

முஸ்லிம்கள் தமக்கிடையே செய்து கொள்ளும் திருமணம், பாகப்பிரிவினை போன்றவை பிற சமுதாயத்தினருக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதில்லை. குறுவாள்களுடன் ஒருவர் நடமாடுவதும், அவ்வாறு பலர் ஒன்று கூடுவதும் ஏனைய மக்களுக்குப் பீதியை ஏற்படுத்தும். அப்படி இருந்தும் அது சீக்கிய மதத்தின் ஓர் அம்சமாக இருப்பதால் அரசியல் சாசனம் அவர்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது.

பஞ்சாப் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பகுதியினரின் மத வழிபாட்டில் குறுக்கிடக் கூடாது என்பதே இதன் காரணம்.

அது போல் ராணுவம், காவல்துறைகளுக்குச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தச் சீருடைகள் தான் அவர்கள் அணிய வேண்டும். ஆனால் சீக்கியர்கள் தலைப்பாகையுடனும், தாடியுடனும் ராணுவம் மற்றும் காவல்துறையில் பணி புரியலாம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிர்வாணச் சாமியார்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நிர்வாணமாகக் காட்சி தருவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.

அது போன்று இந்துக் கூட்டுக் குடும்பங்களுக்கு வரி விலக்கு, தத்து எடுத்தல், திருமண விதிகள் போன்றவற்றில் இந்துக்களுக்கு தனிச் சிவில் சட்டம் உள்ளது. அது போன்றே கிறித்தவர்கள், பார்ஸிகள் போன்றோருக்கும் மற்றும் பல சிறுபான்மை மதப் பிரிவுகளுக்கும் தனிச் சிவில் சட்டங்கள் உள்ளன.

நாட்டு ஒற்றுமையில் அக்கறை உள்ளவர்கள், மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது தான் முக்கியமே தவிர சட்டத்தை அமல் செய்கிறேன் என்ற பெயரில் நாட்டில் இரத்தக் களரி ஏற்படுத்துவதை அரசியல் சாசனமே விரும்பவில்லை என்பதற்கு இவை ஆதாரங்களாகும்.

‘நாடு ஒற்றுமையாகவும், கட்டுக் கோப்பாகவும் இருக்க வேண்டுமானால் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருப்பதே பொருத்தமானது’ இதுவும் அறிவுஜீவிகளின் வாதமாகும்.

சிவில் சட்டங்கள் ஒரு புறமிருக்கட்டும்! முதலில் கிரிமினல் சட்டங்களில் கட்டுக் கோப்பைக் குலைக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்திக் காட்டட்டும் என்று அறிவுஜீவிகளை நாம் கேட்கிறோம்.

ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இதனால் கட்டுக்கோப்பு குலைந்து விடாது போலும். மதுவைத் தடை செய்த மாநிலத்திலும் பெர்மிட் உள்ளவர்கள் மது குடிக்கத் தடை இல்லை. இது பாரபட்சம் இல்லை போலும்.

விபச்சாரமும், சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆடை அவிழ்ப்பு நடனங்களும் ஒரு மாநிலத்தில் தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கூட, நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றுக்கு அனுமதியும் பிற இடங்களில் தடையும் உள்ளது.

சைக்கிளில் இருவர் செல்வது, இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள்.

மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள். ஒரு மாநிலத்தின் உணவுப் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் தடை! நாட்டில் ஓடும் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு! இவற்றால் எல்லாம் கட்டுக்கோப்பு குலையாதாம். இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக்கூடியவர்கள் தான் அறிவுஜீவிகளாம்.

முஸ்லிம்கள் நான்கே நான்கு விஷயங்களில் தமது மார்க்கப்படி நடந்து கொண்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எத்தனை? இதன் காரணமாகப் பிரிந்து போன நாடுகள் எத்தனை? கூறுவார்களா?

மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட போது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத் தான் மாறின. இது தான் உண்மை.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

வெள்ளையர்களும், மொகலாய (முஸ்லிம்) மன்னர்களும் வழங்கிய தனி சிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்படும். இதைத் தான் சில விஷம சக்திகள் விரும்புகின்றன. இதற்காகவே பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகின்றன.

புத்த மதத்தவர்கள் பெரும் பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்த மத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.

அறிவுஜீவிகள் என்போர், இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் சிறுபான்மையினருக்குத் தனி சிவில் சட்டம் உண்டா?’ என சிறுபிள்ளைத் தனமான கேள்வி கேட்கின்றனர்.

சவூதி அரேபியா முழுக்க முழுக்க முஸ்லிம்களை மட்டுமே குடிமக்களாகக் கொண்ட நாடு. இங்கு பிற சமய மக்கள் குடிமக்களாக இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ எட்டு சமயத்தவர்கள் குடிமக்களாகவும் மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்கின்றனர்.

நாட்டில் குடிமக்களாக உள்ளவர்கள் மத அடிப்படையிலான தனி சிவில் சட்டத்தின்படி வாழ்வதற்கும், பிழைப்புக்காக அயல்நாடு சென்று அந்நாட்டுக் குடிமக்களாக ஆக முடியாதவர்கள் தனி சிவில் சட்டம் கோருவதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. இது கூடத் தெரியாத இவர்கள் தாம் அறிவுஜீவிகளாம்.

முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அதை மாற்ற வேண்டும் என்பது அறிவுஜீவிகளின் கடைசி அஸ்திரம்.

சிந்திக்கும் திறன் சிறிதுமற்ற இவர்களின் வாதம் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இந்தச் சட்டம் இறைவன் வழங்கிய சட்டமாகும் என்று நம்பி, அதனால் ஏற்படும் சிரமங்களை மனப்பூர்வமாக விரும்பியே முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்றனர். இதையாவது இந்த அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது என்ற கூற்றில் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.

ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு மனைவியைத் திருமணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்; இது கொடுமை என்கின்றனர்.

இன்னொருத்தியை மணந்து கொள்வது கொடுமை! ஆனால் வைப்பாட்டியாக வைத்துக் கொள்வது கொடுமை இல்லை. என்னே அறிவுஜீவித்தனம் இது!

திருமணம் செய்து மனைவியுடன் வாழ்பவர் விபச்சாரம் செய்யலாம்; சிவப்பு விளக்குப் பகுதியில் சல்லாபம் செய்யலாம்;

எத்தனை பெண்களையும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எந்தத் தண்டனையும் கிடையாது.

இதனால் எல்லாம் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள்.

இவர்களின் அறிவு எவ்வளவு விசாலமானது என்பது தெரிகின்றதல்லவா?

முதல் மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை மனைவி என்று பிரகடனம் செய்வது தான் தவறு! மற்றபடி மனைவியிடம் அனுபவிப்பது போன்ற இன்பத்தை அனுபவிக்கலாம். அது தவறில்லை என்பது பொது சிவில் சட்டம்.

வைப்பாட்டிகளின் குழந்தைகளுக்கு சொத்துரிமை உள்ளதாக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.

இப்போது நாம் கேட்கிறோம்.

எதற்காக இன்னொருத்தியைத் திருமணம் செய்கிறானோ அவை அனைத்தையும் இன்னொரு பெண்ணிடம் அனுபவிக்கலாம். வசதிகள் செய்து கொடுக்கலாம். மனைவி என்று மட்டும் சொல்லக் கூடாது. இது தான் பொது சிவில் சட்டம்.

இதற்கும் பலதார மணத்திற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? பொது சிவில் சட்டமும் (மனைவி என்று பிரகடனம் செய்யாமல்) வைப்பாட்டி வைத்துக் கொள்ளவும், விரும்பி விபச்சாரம் செய்யவும் அனுமதித்து முதல் மனைவியைத் துன்புறுத்தத் தான் செய்கிறது.

ஒரு பெண்ணுடைய அழகை, இளமையை அனுபவிக்கக்கூடியவன், அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தை அளித்து விட்டு அனுபவிக்கட்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுவது இவர்கள் ஆதரிக்கும் சட்டத்தை விட எந்த விதத்தில் குறைவானது? விளக்குவார்களா?

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதி தான். அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதியே! வைப்பாட்டிகளை வைத்துள்ள மற்ற சமுதாயத்தவரை விட இரண்டு மனைவியரை மணந்த முஸ்லிம்களின் சதவிகிதம் மிகவும் குறைவானது என்பதையும் இவர்கள் உணர வேண்டும்.

கண்ட பெண்களுடன் கூடி விட்டுப் பெருநோய்க்கு ஆளாகி, மனைவிக்கு அந்த நோயைப் பரிசாகக் கொடுப்பதை விட, இன்னொருத்திக்குச் சட்டப் பூர்வமான மதிப்பு அளித்து, மணந்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது என்பதில் ஐயமில்லை.

நீதிமன்றத்தை அணுகாமல் முஸ்லிம் கணவன் தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்யலாம் என்பது கொடுமையில்லையா? இதனால் பெண்களுக்குப் பாதிப்பில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் மற்றொரு அபத்தக் கேள்வி!

நிச்சயமாகக் கொடுமை இல்லை. பெண்களுக்கு இதை விடப் பாதுகாப்பான சட்டம் வேறு இருக்க முடியாது என்பது தான் உண்மை.

நீதிமன்றத்தை அணுகித் தான் விவாகரத்துப் பெற முடியும் என்ற சட்டத்திற்கு உட்பட்ட பிற சமுதாயத்தில் தான் பெண்கள் கொடுமைப்படுத்தப் படுகின்றனர்.

நீதிமன்றத்தில் தான் விவாகரத்துப் பெற வேண்டும் என்றால் விவாகரத்துப் பெறுவதற்காக மனைவியின் மேல் கணவன் பகிரங்கமாக அவதூறு கூறுகின்றான். அல்லது தீயிட்டுக் கொளுத்தி விட்டு, ஸ்டவ் வெடித்து விட்டது என்று கூறுகின்றான். இதற்குக் காரணம் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள கடுமை தான்.

எந்த முஸ்லிம் கணவனும் தன் மனைவியை தீயிட்டுக் கொளுத்தியதாக வரலாறு இல்லை. காரணம், மனைவியைப் பிடிக்காவிட்டால் எளிதாக அவன் விவாகரத்துச் செய்ய முடியும் என்பது தான்.

மேலும் மனைவிக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவளும் கணவனை விவாகரத்துச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. இந்த அறிவுஜீவிகள் எதிர்க்கக் கூடிய முஸ்லிம் தனியார் சட்டத்திலேயே இது கூறப்பட்டுள்ளது. அறியாமைக்கு மறு பெயர் தான் அறிவுஜீவித்தனமோ!

விவாகரத்துச் செய்யும் உரிமையை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இஸ்லாம் வழங்கி இருப்பதாலும், விவாகரத்துச் செய்த பின் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதித்து ஆர்வமூட்டுவதாலும், விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருந்தால் ஏற்படும் தீய விளைவுகள் இஸ்லாமிய சட்டத்தில் இல்லாததாலும் இதில் பெண்களுக்கு எந்தக் கொடுமையும் இல்லை. மாறாக அவர்களுக்கு இதில் பாதுகாப்பே இருக்கின்றது என்பது தான் உண்மை.

விவாகரத்துச் செய்த பின் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்பது கொடுமையில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் கேள்வி!

ஆணும் பெண்ணும் எல்லா வகையிலும் சமமானவர்கள் எனக் கூறுவோர் ஆண் மட்டும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோருவது குழப்பத்தின் உச்சக்கட்டமாகும்.

விவாகரத்துச் செய்யப்பட்டவள் மறுமணம் செய்யும் வரை அல்லது மரணிக்கும் வரை ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் கோருகிறார்கள்.

இப்படி ஒரு சட்டம் இருந்தால் எந்தப் பெண்ணும் பெரும்பாலும் மறுமணம் செய்ய மாட்டாள். மாறாகக் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு, மற்ற ஆண்களுடன் சல்லாபம் நடத்தத் துணிவாள். ஜீவனாம்சம் இல்லை என்றால் தான் தனது வாழ்க்கையின் பாதுகாப்புக்காகப் பொருத்தமான துணையைத் தேடிக் கொள்வாள். இரண்டில் எது சரியானது என்று அறிவுஜீவிகள் சிந்திக்கட்டும்.

நாடு சுதந்திரம் பெற்றது முதல், படிப்படியாக முஸ்லிம்கள் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, அரசுப் பதவிகள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டனர். கலவரங்களால் அவர்களின் உயிர், உடைமைகள், கற்பு ஆகிய அனைத்தும் பறிக்கப் படுகின்றன. ஆள்வோரின் துணையுடன் இந்து வெறி சக்திகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. ஆட்சியாளர்களே ஒரு பள்ளியைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். தடா எனும் பெயரில் ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு, அனைத்துச் சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளனர். பருந்தின் வாயில் சிக்கிய கோழிக்குஞ்சு போன்ற நிலையில் நொந்து போயிருக்கின்றது முஸ்லிம் சமுதாயம்! எத்தனை உரிமைகள் மறுக்கப்பட்டாலும் முஸ்லிம்களாக வாழும் உரிமையாவது இங்கு இருக்கின்றது என்பது மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்!

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களாக வாழும் உரிமையும் பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள். முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது என்று ஆட்சியாளர்களை எச்சரித்து வைக்கிறோம்.

கொள்ளிக் கட்டையால் முதுகைச் சொறிந்து கொள்ளும் வேண்டாத வேலையில் ஈடுபட்டு, நாட்டின் அமைதியை ஆட்சியாளர்கள் குலைக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

அல்ஜன்னத், ஜூலை 1995 இதழில் பி.ஜே. எழுதிய தலையங்கம்

source: http://kadayanalluraqsha.com/?p=3067

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

59 − = 49

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb