பெரியார்தாசன் உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாக இருந்தவர்.
தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத்தரும் தாசன் என்றவார்த்தையை இணைத்துக்கொண்டவர்.தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
தனது பெயரை அப்துல்லாஹ் (அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக்கொண்டார்.
இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக்குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது:
இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக்கொண்டுள்ளது.நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச்செய்தேன்.அதில் இஸ்லாத்தைத்தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல.
குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது.
நான் நாத்திகக்கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்.” என்றார்.
டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச்செயல்களை பொருந்திக்கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.
தகவல் ஆதாரம்: அரப் நியூஸ், மார்ச் 12, 2010.