கலையரசன்
[ மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் இப்போதும் ”கலாச்சார மோதல்” பற்றி கற்பிக்கப்படுகின்றது. அதாவது நாகரீகமடைந்த மேற்கத்திய கலாச்சாரம், உலகின் பிற காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் இறுதியில் மேற்கத்திய கலாச்சாரம் வெற்றி பெறும். ஏனெனில் இது தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம். கறுப்பர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள், இவர்களுடன் ரஷ்யர்கள் கூட ”பல குறைபாடுகளைக் கொண்ட சமூகங்களாக” சித்தரிக்கப்படுகின்றனர்.
மேற்கு ஐரோப்பிய நாட்டு மாணவர்களுக்கு வரலாறு ஒரு கட்டாய பாடம். அந்தப் பாடத்தில் சித்தி அடையாமல், பல்கலைக்கழகம் செல்ல முடியாது. வரலாற்றுப் பாடத்தில், ஐரோப்பிய சரித்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஐரோப்பாவின் சரித்திரம் கிரேக்கத்தில் இருந்து தொடங்குவதாக அனைத்து நூல்களும் போதிக்கின்றன. நோர்வே முதல் இத்தாலி வரை பல்வேறு மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஐரோப்பிய சரித்திரம் ஒரே மாதிரித் தான் எழுதப்பட்டுள்ளது.
பண்டைய கிரேக்கத்தில் ஜனநாயகம் நிலவியது உண்மை தான். ஆனால் அந்த ஜனநாயகம் நமக்கெல்லாம் தெரிந்த ”பல கட்சி அரசியல் முறை” அல்ல. ஆனால் அந்த ”சர்வசன வாக்குரிமை” ஆண்களுக்கு மட்டுமே இருந்த சுதந்திரம். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. தனி மனித சுதந்திரம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப் பட்டே இருந்தது. ]
”அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்? நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம். எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்”.
”நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்”.
”தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்”.
மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவும், அதன் மேற்குலக கூட்டாளிகளும், கூறிவரும் நியாயங்கள். ”நாகரீக உலகம்”, ”காட்டுமிராண்டிகளின் உலகம்” இந்த சொற்பதங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். அமெரிக்காவின் தீமைக்கெதிரான, அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆப்கானிஸ்தான் படையெடுப்போடு மட்டும் நின்றிருந்தால், ”ஒரு வல்லரசின் பழிவாங்கல்” என்பதோடு பிரச்சினை முடிந்திருக்கும்.ஈராக், வட–கொரியா என்று ஒன்றோடொன்று சம்பந்தப்படாத நாடுகள் மீதும் ”நாகரிக உலகம்” போர் தொடுத்தது, அல்லது திட்டமிடுகிறது. மேற்குலக மக்கள் ஆதரவு ”நாலாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கொள்கை” அடிப்படையில் ஒன்று திரட்டப்படுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்த எட்டு வருடங்களில் உலகம் அடியோடு மாறி விட்டது. ”புஷ் ஆட்சிகாலம் மறைந்தாலும், அதன் தாக்கம் இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்” என்று புஷ்சின் சுயசரிதையை திரைப்படமாக்கிய ஒலிவர் ஸ்டோன். அமெரிக்கா மட்டும் தனது சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை மீளக் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவிலும் ”கிறிஸ்தவ கலாச்சாரப் பெருமை” பேசும் வலதுசாரி சக்திகள் தலையெடுத்தன.
சில நேரம் ஆட்சியில் இருப்பவர்களே, ”பண்பாடு” ”வாழும் நெறி” பற்றி தமது பிரசைகளுக்கும், குடியேறிய வெளிநாட்டவர்களுக்கும் வகுப்பெடுத்தனர். வந்தேறுகுடிகள் ஐரோப்பிய கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நம் நாட்டு மக்களில் பலர் தமது (இந்தியக்) கலாச்சாரமே உயர்ந்தது என்றும், ஐரோப்பியர்கள் தம்மை விடக் கீழான சீரழிவுக் கலாச்சாரம் கொண்டவர்கள் என்றும் ஒரு தலைப்பட்சமாக கருதுகின்றனர். மறு பக்கத்தில் ஐரோப்பியர்கள் தமது கலாச்சாரமே உலகில் சிறந்தது, மற்றவை எல்லாம் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று கருதுகின்றனர்.
மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் இப்போதும் ”கலாச்சார மோதல்” பற்றி கற்பிக்கப்படுகின்றது. அதாவது நாகரீகமடைந்த மேற்கத்திய கலாச்சாரம், உலகின் பிற காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் இறுதியில் மேற்கத்திய கலாச்சாரம் வெற்றி பெறும். ஏனெனில் இது தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம். கறுப்பர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள், இவர்களுடன் ரஷ்யர்கள் கூட ”பல குறைபாடுகளைக் கொண்ட சமூகங்களாக” சித்தரிக்கப்படுகின்றனர்.
அரசுகள், பல்கலைக் கழகங்கள், ஊடகங்கள், இப்படி மக்களை வழிநடத்தும் கருவிகள் யாவும் ”காட்டுமிராண்டிகளை நாகரீகப்படுத்தும் தேவையை” சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரமின்மை, ஊழல், போர்க் காலக் குற்றங்கள், சித்திரவதை, சர்வாதிகாரம், பயங்கரவாதம்…. இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் குறிப்பிடப்படும் எதிர்மறையான விடயங்கள் யாவும், காட்டுமிராண்டி நாடுகளின் விசேட குணங்கள். இந்த நாடுகளைச் சேர்ந்த நாம் அப்படி நினைக்காமல் விடலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்படும் அப்பாவி மக்கள், அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கு ஐரோப்பிய நாட்டு மாணவர்களுக்கு வரலாறு ஒரு கட்டாய பாடம். அந்தப் பாடத்தில் சித்தி அடையாமல், பல்கலைக்கழகம் செல்ல முடியாது. வரலாற்றுப் பாடத்தில், ஐரோப்பிய சரித்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஐரோப்பாவின் சரித்திரம் கிரேக்கத்தில் இருந்து தொடங்குவதாக அனைத்து நூல்களும் போதிக்கின்றன. நோர்வே முதல் இத்தாலி வரை பல்வேறு மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஐரோப்பிய சரித்திரம் ஒரே மாதிரித் தான் எழுதப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் மறைந்த பிறகு, அங்கே எப்படி ”நடுநிலை வரலாற்றுப் பாடம்” எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். சந்தேகத்திற்கிடமின்றி மேற்குலக கண்ணோட்டத்தில் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டிருக்கும். ஐரோப்பிய நாடுகள், அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தற்போது தாம் முன்பு ஒரே வரலாற்றைக் கொண்டிருந்ததாக சொல்வதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அமெரிக்காவில் சென்று குடியேறிய ஐரோப்பிய வம்சாவழியினரே, அங்கே அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் அமெரிக்க நாகரீகமும் கிரேக்கத்தில் இருந்தே ஆரம்பமாவது தவிர்க்க முடியாதது.
அடிக்கடி ”கிரேக்கதைப் பாருங்கள்” என்று சுட்டிக் காட்டுகிறார்களே, அங்கே அப்படி என்ன இருந்தது? ”ஜனநாயகம்”, ”தனி மனித சுதந்திரம்” இந்த வார்த்தைகள் இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் பயன்படுத்தினர். கிரேக்க மொழியில் Demos என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே ”Democracy” என்ற மக்கள் ஆட்சி அங்கே நிலவியது. குறிப்பாக ஏதென்ஸ் என்ற நகர–தேசம் மன்னர் ஆட்சியற்ற குடியரசாக இருந்தது.
அங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தது. தனி மனித சுதந்திரம் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாக சொன்னால், இன்றுள்ள மேற்கத்திய நாடுகளைப் போல பண்டைய கிரேக்கம் காட்சியளித்தது. இவையெல்லாம் சரித்திர பாடப் புத்தகங்களில் எழுதப் பட்டிருப்பதின் சாராம்சம். மேல்நிலைப் பள்ளியில் போதிக்கப்படும் ”ஜனநாயக சித்தாந்தம்”, பெரியவர்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. இந்நாடுகளில் ஆசிரியர்கள் இப்படித்தான் கற்பிக்க வேண்டுமென்று, கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப் படுகின்றனர்.
2001 ம் ஆண்டு, நியூ யார்க் தாக்குதலின் பின்னர், அன்றைய ஜனாதிபதி புஷ் ஆற்றிய உரை, பல உலக நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அமெரிக்க–ஐரோப்பிய மக்கள் மட்டும் தமது ”ஜனநாயகப் பாரம்பரியம்” தாக்கப் பட்டதாகவும், தமது பழம் பெருமையை மீட்க வேண்டும் என்றும் சபதமெடுத்தனர். புஷ்ஷின் உரை, பண்டைய கிரேக்கத்தின் அறைகூவலை மீண்டுமொரு முறை எதிரொலித்தது.
2500 வருடங்களுக்கு முன்னர், கிரேக்கம் மீது ஈரானில் இருந்த பாரசீகப் பேரரசு படையெடுக்க எத்தனித்தது. கிழக்கே இருந்த பாரசீக நாட்டை சேர்ந்தவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து தான், கிரேக்கம் தனது மக்களை அணி திரட்டியது. ”அவர்கள் ஏன் எம்மை தாக்குகிறார்கள்? எமது சிறந்த நாகரீகமான ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டுள்ளனர்”. போருக்காக ஏதென்ஸ் அரசு கூறிய காரணங்கள் அவை. ஆமாம், பண்டைய கிரேக்கர்களும், நம் காலத்து அமெரிக்கர்களைப் போல, தமது ஜனநாயகம், சுதந்திரம் குறித்து பெருமை கொண்டிருந்தனர்.
பண்டைய கிரேக்கத்தில் ஜனநாயகம் நிலவியது உண்மை தான். ஆனால் அந்த ஜனநாயகம் நமக்கெல்லாம் தெரிந்த ”பல கட்சி அரசியல் முறை” அல்ல. கட்சி என்றால் என்னவென்று அறிந்திராத காலம் அது. ஏதென்ஸ் பிரசைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து வாக்களிக்கும் உரிமை இருந்தது. ஆனால் அந்த ”சர்வசன வாக்குரிமை” ஆண்களுக்கு மட்டுமே இருந்த சுதந்திரம். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. தனி மனித சுதந்திரம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப் பட்டே இருந்தது.
பண்டைய கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடுதுஸ் (கி.மு. 484-420) எகிப்தில் தான் கண்டவற்றை பற்றி எழுதிய குறிப்புகளில் இருந்து: ”எகிப்தியப் பெண்களுக்கு சந்தைக்கு சென்று வரவும், கடைகளை நடத்தவும் சுதந்திரம் இருந்தது. அதற்கு மாறாக கிரேக்கப் பெண்கள், கணவனில் தங்கியிருந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்தனர்.”
பண்டைய கிரேக்கத்தில் அடிமைகள், எஜமானின் சொத்தாக பார்க்கப்பட்டனர். ஒரு சில இடங்களில், பணம் சேர்க்க முடிந்த அடிமைகள் சுதந்திரம் வாங்கிக் கொண்டனர். அப்போது கூட உள்ளூர் பிரசைகள் செய்ய விரும்பாத (உதாரணம்: துறைமுகத்தில் மூட்டை சுமத்தல்) வேலைகளை மட்டுமே செய்தனர். இவர்களுக்கும், வேலைக்காக புலம்பெயர்ந்து வந்து குடியேறிய மக்களுக்கும், ஏதென்ஸ் நாட்டு பிரசாவுரிமை கொடுக்கப்படவில்லை. அந்த மக்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் என்பன அர்த்தமற்ற வார்த்தைகள்.
சில வருடங்களுக்கு முன்னர் ஹாலிவுட் எடுத்த ”300” என்ற தலைப்பிலான படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஒரு சரித்திரக் கதையை மையமாக வைத்து வரையப்பட்ட சித்திரக்கதையை தழுவி அந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தது. ”300” திரைப்படம் ஈரானியர்களை வில்லன்களாக சித்தரிப்பதாக விமர்சனங்கள் வந்தன. அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்றது ஈரான். அப்படி என்ன அந்தப் படத்தில் இருக்கிறது?
தொடரும்…