Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தும்மலின் ஒழுங்குகள்

Posted on February 20, 2010 by admin

MUST READ

அபூஜமீலா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

حَدثنا مالك بن إسماعيل حدثنا عبد العزيز بن أبي سلمة أخبرنا عبد الله بن دينار عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا عطس أحدكم فليقل الحمد لله وليقل له أخوه أو صاحبه يرحمك الله فإذا قال له يرحمك الله فليقل يهديكم الله ويصلح بالكم

நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள், (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும்.

அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6224)



அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நன்மைகளை தமது உம்மத்தினர் பரிசாக பெற வேண்டும் என்பதிலும், முஸ்லிம் சமுதாயத்தில் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளவு கடந்த அக்கறை காட்டினார்கள்.

ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி எது நடந்தாலும் அத்தனையும் நன்மைகளாக பதிவு செய்யப்படுகின்றது, அவனுக்கு நல்லது நடந்தால் அதை பொருந்திக் கொண்டு அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், ஒரு தீயது நடந்தால் அதையும் பொறுந்திக் கொண்டு பொறுமையோடு இருக்கின்றான், இந்த இரண்டு விஷயங்களும் முஃமினுக்கு நன்மைகளாகவே அமைகின்றன.

சர்வசாதாரண நிகழ்வுகளான, தும்மும் போதும் கொட்டாவி விடும் போதும் கூட எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்கள் நம்மிடம் உள்ளன. இவையும் அல்லாஹ்விடம் நன்மைகளை பெற்றுத் தருவதோடு மற்றவர்களோடு உறவுகளை பலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கின்றன.

நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள், (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ் என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6224.)

இந்த ஹதீஸில் ஒருவர் தும்மும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற நாகரீகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

நட்பையும் பிறர் நலம் நாடும் குணத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு நல்வாழ்த்து தான் இது. இது இவ்வுலகுக்கும் மறுமைக்கும் உரிய சிறந்ததைத் தருகின்றது, அல்லாஹவின் அருளை இது ஊர்ஜிதம் செய்கிறது. அதற்கு பதிலாக நாம் அதையே திருப்பிச் சொல்ல வேண்டும்.

இவ்வுலகத்தில் ஒருவர் இறைவனின் வழிகாட்டுதலைப் பெற்றால் அவர் தவறுகளிலிருந்து விலகி இருப்பார். மனம் திருப்திப்படுவதையும் ஆறுதல் அடைவதையும் அவர் உணருவார்.

இப்படிப்பட்ட பரிமாற்றம் நிகழும் போது அதாவது இயல்பாகவே மனதோடு தொடர்புள்ள தும்மல் போன்ற நிகழ்வுகள் நிகழும் போது சமூகத்திற்குள் நல்லுறவுகள் ஏற்பட வழி பிறக்கும்.

இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது முக்கியமாகும். அதாவது இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சொல்வதற்கான வாசகங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமையில் கற்றுத் தந்துள்ளார்கள், இந்த முறை தான் அம்மக்களிடையே மிகவும் பிரபல்யமான நடைமுறையாகும். மற்றொரு ஹதீஸில் அவ்வாசகங்கள் பன்மையில் இடம் பெற்றுள்ளன, இது மொழி அடிப்படையில் மிகப் பொருத்தமானதாகும்.

பன்மையில் வாசகங்களை உபயோகிக்கும் போது நம்மைக் கண்காணிக்கும் வானவர்களையும் உள்ளடக்கிக் கொள்வதாக இதைச் சொல்ல இயலும்.

இவ்வாறு தும்மும் ஒருவரிடம் ‘அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும்’ என்று சொல்லும் போது, அது அவரையும் அவரோடு இருக்கும் வானவர்களையும் சேர்த்தே சொல்கிறார் என்பது பொருள். அதோடு அதற்கான பதிலும் வானவர்களையும் அதோடு தொடர்புள்ளவர்களையும் உள்ளடக்கிய வகையில் பன்மையில் இருக்கும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வேறொரு அறிவிப்பில், ‘உங்களில் ஒருவர் தும்மும் போது, ‘அல்ஹம்துலில்லாஹ்’  (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மலக்குகள், ரப்பில் ஆலமீன் ((அவன்) அகில உலகத்தின் இரட்சகன்) என்று கூறுவார்கள். ரப்புல் ஆலமீன் என்பதை தனது முந்தைய வாசகத்தோடு இணைத்துக் கூறினால் மலக்குகள், ‘அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக!’ என்று கூறுவார்கள்’. (ஆதாரம்: புகாரியின் அதபுல் முஃப்ரத், தப்ரானி)

இதில் மலக்குகள் முதன் முதலில் சொல்லும் வாசகம் தும்மலுக்குப் பிறகு ஒருவர் சொல்ல வேண்டிய வார்த்தையை முழுமைப்படுத்துவதற்காக ஆகும்.

இந்த ஹதீஸ் அல்லாஹ்வை புகழும் போது முழுமையாக புகழ வேண்டியதன் அவசியத்தை சொல்கிறது. அகில உலகத்திற்கும் அல்லாஹ்வே இறைவன் என்பதை ஒத்துக் கொண்டு அவ்வாறே புகழ வேண்டும் என்பதைச் சொல்கிறது. அவ்வாறு புகழ்ந்தால் தான் மலக்குகள் அவருக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்.

இது கேட்கக் கூடியவர்களின் கவனத்தைக் கவருவதோடு தொடர்பு கொண்டது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல சமயங்களில் விளக்கம் தந்துள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து இன்னொரு தும்மல் ஒழுங்கையும் நாம் கற்றுக் கொள்கிறோம்.

அதாவது தும்மலுக்குப் பிறகு அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லாதவருக்கு அல்லாஹ்வின் அருளை பிரார்த்திக்க வேண்டியதில்லை. இதை கீழ் வரும் ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என) மறுமொழி கூறினார்கள். இன்னொருவருக்கு மறுமொழி கூற வில்லை. அப்போது அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு மறுமொழி கூறினீர்கள். எனக்கு மறுமொழி கூறவில்லையே! என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவர் (தும்மியவுடன்) (அல்ஹம்துலில்லாஹ் என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி) இறைவனைப் புகழவில்லை. எனவே இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை என்று பதிலளித்தார்கள். (புகாரி – 6225)மற்றொரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: தும்மலை அல்லாஹ் விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான்.

ஒருவர் தும்மியதும் இறைவனைப் புகழ்ந்தால் அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் அருளை வழங்குமாறு அவனை பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அந்த ஹதீஸின் தொடர்ச்சியாக, ‘கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வெளிப்படுவதாகும். ஆகவே முடிந்த வரை அடக்கிக் கொள்ள வேண்டும். ஹா! என்று ஒருவர் சப்தம் செய்தால் அவரைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்’ (புகாரி – 6226, அஹ்மது)

அல்லாஹ் எதை விரும்புகிறான் எதை வெறுக்கிறான் என்பது செயல்களை வைத்து அல்ல, அது ஏற்படுத்தும் விளைவுகளை பொருத்தது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தும்மல் என்பது ஒருவரை எந்நேரமும் தயாராக இருக்கச் செய்கிறது. தும்மியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையான அல்லாஹ்வைப் புகழச் செய்கிறது, அதோடு மற்றவர்களின் துஆவையும் பெற்றுக் கொள்ளச் செய்கிறது. இவை அனைத்தும் நல்லதும் நன்மையை அடைந்து கொள்வதுமாகும்.

அதனால் அதை அல்லாஹ் விரும்புகிறான். அதோடு கொட்டாவி சோம்பலையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. கொட்டாவி விடும் போது அம்மனிதனின் மானம் கப்பலேற்றப்படுவதோடு, இது அவரைப் பார்த்து ஷைத்தானை சிரிக்க வைக்கிறது.

அதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொட்டாவியை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியாத போது வாயை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும்.இங்கே ஒரு கேள்வி எழுகிறது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த ஹதீஸை நடைமுறைப்படுத்துவது நம் மீது கடமையா? அல்லது பரிந்துரையா?

பல மார்க்க அறிஞர்கள் இதை கடமையாகவே கருதுகிறார்கள், ஏனென்றால் அந்த ஹதீஸ், அதை வலியுறுத்தக்கூடிய விதத்தில் சொல்கிறது. மற்ற அறிஞர்கள் கூறும் போது, நம்மைச் சுற்றி இருப்பவர்களோ அல்லது ஒருவரோ இதை நிறைவேற்றினால் போதுமானது, இந்த கடமையை நிறைவேற்றியதாக கருதப்படும்;, யாருமே இதை செய்யாது விட்டால் நாம் அனைவரும் அந்த குற்றத்திற்காக அல்லாஹ்வால் தண்டிக்கப்படுவோம் என்று கூறுகிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்தவைகள்,

பொதுவாக அன்றாடம் நிகழக்கூடியவைகளாகும், அவை ஒவ்வொரு முந்தைய முஸ்லிமாலும் கடைப்பிடிக்கப்பட்டது,

அதோடு அவர்களின் நடைமுறை பழக்கவழக்கமாகவும் மாறியது.

எவர்கள் மார்க்க கல்வியைப் பெற்றார்களோ அல்லது தும்மிய பிறகு அல்லாஹ்வை புகழ கற்றுக் கொண்டார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்காக அவனைப் புகழ்கிறார்கள், மற்றவர்கள் அல்லாஹ்வின் அருளை அவருக்காக பெற்றுத்தருகிறார்கள்.

முந்தைய முஸ்லிம் சமுதாயத்திலிருந்து சில உதாரணங்களை சொல்வதானால்,

முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியின் போது கடல் பயணம் மேற்கொண்ட சில முஸ்லிம்களின் சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.படகுகள் கடல் கரையை வந்தடைந்தன.

ஒரு படகில் இருந்தோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழரான அபூ அய்யூப் அல்அன்சாரி அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். அவர் அழைப்பை ஏற்று வருகையும் தந்தார், அவர் மேலும் சொன்னார், ‘விருந்துக்கு என்னை அழைத்தீர்கள், ஆனால் நான் நோன்பு வைத்திருக்கிறேன். இருந்தாலும் நான் இங்கே வந்திருக்கிறேன் ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், ‘ஆறு விஷயங்களில் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு பதிலளிக்க வேண்டும்.

அதில் எதையேனும் விட்டுவிட்டால் அவர் தனது சகோதரனுக்கு செய்யும் கடமையை விட்டுவிட்டார். அவைகளாவன, அவரை சந்திக்கும் போது அவருக்கு ஸலாம் சொல்வது, விருந்துக்கு அழைக்கும் போது பதிலளிப்பது, தும்மும் போது அவருக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்வை பிரார்த்திப்பது, நோய்வாய்ப்பட்டிருப்பின் சென்று அவரை சந்திப்பது, அவர் இறக்கும் போது அவரது ஜனாஸாவின் அடக்கத்தில் கலந்து கொள்வது, ஆலோசனைகள் தேவைப்படும் போது தனது சரியான ஆலோசனையை வழங்குவது’.

மற்றுமொரு அறிவிப்பில், ‘எங்களிடம் நல்ல நகைச்சுவையாக பேசும் ஒருவர் இருந்தார், அவர் எம்மோடு சேர்ந்து உணவருந்தும் ஒருவரை நோக்கி, ‘அல்லாஹ் உமக்கு நன்மையை தருவானாக!’ என்று பலதடவை கூறியதும் அவர் கோபமடைந்தார். நகைச்சுவை மன்னன், அபூ அய்யூப் அவர்களை சந்தித்து, நன்மைகளை அதிகம் அவர் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தித்ததால் கோபமடையும் ஒருவரிடம் நான் எவ்வாறு நடந்து கொள்வது? என்று கேட்டார்.

அதற்கு அபூ அய்யூப் அவர்கள் கூறினார்கள், நல்ல விஷயத்தை ஏற்றுக் கொள்ளாதவரிடம் அதற்கு எதிர்மறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்வதுண்டு, அதனால் நீங்கள் எதிர்மறையாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். வெளியூர் சென்று விட்டு திரும்பிய அம்மனிதரிடம் நகைச்சுவையாக பேசக்கூடியவர் சென்று, ‘அல்லாஹ் உமக்கு கெட்டதை பரிசாக தருவானாக!’ என்றார். அதற்கு அவர் சிரித்துக் கொண்டு, ‘உம்முடைய தந்திரங்களை விட்டுவிட மாட்டீரா?’ என்று கூறினார். (அல்புகாரியின் அதபுல் முஃப்ரத்)

”Jazaakallaahu khairan” http://www.islamiyadawa.com/women/angry_woman.htm

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

43 − = 34

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb