[”ஜின்னா ஒரு பிரிவினைவாதி” என்று சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் வாய் கிழியக் கத்தினார்களே தவிர யாருமே ஜின்னாவை அணுகவில்லை.. லாஹூர் மாநாட்டுக்கு முன்னால், ஜின்னா கேட்டதெல்லாம் ஆட்சியதிகாரத்தில் பங்குதானேதவிர, தனிநாடோ பிரிவினையோ அல்ல. ஜின்னாவையும், அவரது பிறந்த மண் மோகத்தையும் காந்திஜியுடன் அவர் கொண்டிருந்த ஆழமான நட்புறவையும் கலப்படமில்லாமல் அறிந்தவர்கள், பிரிவினையைத் தவிர்த்திருக்க முடியும் என்றுதான் நம்புகிறார்கள். தேசம் துண்டாடப்பட்டதற்கு ஜின்னா மட்டுமே காரணமென்று கூறுபவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது.
இந்தியாவுக்கு விடுதலை அளிப்பது குறித்த பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதற்காக வின்ஸ்டன் சர்ச்சிலால் சிபாரிசு செய்யப்பட்டு, இங்கிலாந்து பிரதமர் அட்லி அவர்களால் அனுப்பப்பட்ட மவுண்ட் பாட்டன் ஜின்னாவைப் பற்றி கூறுகிறார்: ”அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டதையும் மற்றவர்கள் சொன்னதையும் வைத்து ஜின்னா ஒரு கடினமான மனிதர் என்று எண்ணியிருந்தேன். அவரிடம் எப்படிப் பேசி சுமுக முடிவுக்கு வரப் போகிறோம் என்ற தயக்கம் என்னிடம் இருந்தது. ”நோ” என்ற ஒரேயொரு வார்ததையை வைத்துக்கொண்டு உலகப் புகழ் அடையக்கூடிய அவரிடம் நான் நடத்திய முதற் பேச்சு மிகவும் இனிமையாக அமைந்தது.”]
1933ம் ஆண்டு. லண்டன். ஹம்பர்ஸ்டோனில் அமைந்திருந்த ஒரு மாளிகை. அதில் மிக விசாலமான ஆடம்பர அறை.. கறுப்புக்காபி நிரம்பிய பளிங்குக் கோப்பையை நெடு நேரமாக கையில் தாங்கிப் பிடித்திருந்த ஜின்னா, பைப்பை நிதானமாக இழுத்துப் புகையை மெல்ல வெளியேற்றிக்கொண்டிருந்தார். நீண்ட நேர மௌனத்துக்குப்பின் மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்: ”பாபுஜி (காந்தி) யிடம் இதை நான் எப்படிச் சொல்வேன்?”
ரஹ்மத் அலி வினயமாகச் சொன்னார்: ”விட்டுக் கொடுப்பதற்கும் அலட்சியம் காட்டுவதற்கும் இது உங்கள் சொந்தப் பிரச்னையோ அல்லது சொத்துப் பிரச்னையோ அல்ல. பத்துக் கோடி முஸ்லிம்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேசப்பிரச்னை. வீணாகத் தயக்கம் காட்டி அவர்களின் தலையில் மண்ணை வாரிப் போட்டுவிடாதீர்கள்.”
”ஏன் இப்போது முஸ்லிம்கள் ஒன்றாக வாழவில்லையா? காலம் காலமாக ஒற்றுமையாகத்தானே வசித்துக் கொண்டிருக்கிறார்கள்?” இது ஜின்னாவின் கேள்வி.
”உண்மைதான். ஓர் அன்னியர் ஆட்சியின்கீழ் ஒற்றுமையாக வாழ்வதில் எவ்வித பிரச்னையுமில்லை. அவன் இந்து-முஸ்லிம் என்று வித்தியாசம் பார்க்கமாட்டான். அடிப்பதிலும் உதைப்பதிலும்கூட அவன் பாரபட்சம் காட்டமாட்டான். ஆனால் இந்துக்கள் முஸ்லிம்களை நடத்துவதில் நேர்மையும் நியாயமும் இருக்குமென்று நம்புகிறீர்களா? ஏன் ரொம்பத்தூரம் போக வேண்டும்? காங்கிரஸிலுள்ள உங்கள் நண்பர்கள் உங்களையே இப்போது எப்படி நடத்துகிறார்கள் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள். நீங்கள் ஒரு முழுமையான தேசியவாதியாக இருந்தும், காங்கிரஸுக்காகப் போராடியும், நாட்டுக்காகத் தியாகம் செய்து இருந்தும்கூட உங்களை நம்புகிறார்களா? அவர்கள் உங்களை அரசியல் சிரச்சேதம் செய்வதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கையில் உங்களுக்கே நியாயம் வழங்காதவர்களின் கைகளில் பத்துக் கோடி அப்பாவி முஸ்லிம்களின் தலைவிதியை ஒப்படைப்பது சரிதானா?” என்று ரஹ்மத் அலி மூச்சுரைக்கப் பேசினார்.
ஜின்னாவிடம் அசாதாரண மௌனம். ஆழமான குழப்பம் என்றுகூடச் சொல்லலாம். ”இப்படிப்பட்ட முயற்சிகள் நம்மை நாமே சித்திரவதை செய்து கொள்வது ஆகாதோ?” என்று முனகினார்.
”ஆகாது. நிச்சயமாக ஆகாது. இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்தில் முஸ்லிம்களூக்கென்று ஒரு தனிநாடு நிறுவாமல் போனால், அதுதான் தற்கொலைக்குச்சமம். சரித்திரம் உங்களை மன்னிக்காது” எனக் கூறி ஒரு வரைப்படத்தை ஜின்னாவிடம் காட்டினார் ரஹ்மத் அலி. ஜின்னா அதை உற்று நோக்கத் துவங்கியதும் ”வட மேற்கு இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் அதிகம். அத்துடன் பஞ்சாப்,காஷ்மீர்,சிந்து, பலூசிஸ்தான்,அதைச் சேர்ந்த எல்லைப்பகுதி-இதுதான் உதயமாகப் போகிற இஸ்லாமிய நாடு. பெயர்கூடச் சூட்டியாயிற்று- பாகிஸ்தான்” என்றார் ரஹ்மத் சிரித்துக்கொண்டே..
”மக்கள் ஏற்பார்களா?” ‘அப்போதும் ஜின்னாவிடம் ஐயம்; அச்சம். மக்கள் நிராகரித்துவிட்டால் ஜின்னாவின் முழு அரசியல் வாழ்வும் அஸ்தமனமாகிவிடும். இது ஒரு போராட்டமல்ல; சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் சகஜம்; சாஸ்வதம்.
ஆனால் ரஹ்மத் அலிதான் உற்சாகமூட்டினார்: ”உங்களைப்ப்ற்றி உங்களுக்கே தெரியாது. ‘பாகிஸ்தான்’ என்று ஓர் அழைப்பு விடுத்துப் பாருங்கள். அப்புறம் அற்புதம்தான்”.
இதுதான் பாகிஸ்தான் உருவான கரு. கதை. ”இது ஒரு சதி” என்று வைத்துக்கொண்டால், அதில் ஜின்னாவுக்கும் ரஹ்மத் அலிக்கும் மட்டும் பங்கில்லை.
இந்தியாவில் முஸ்லிம்கள் சம அளவு பலத்துடன் திகழ்வதை விரும்பாத அத்தனை இந்திய அரசியல்வாதிகளுக்கும் இதில் தொடர்புண்டு.
தேசம் உடைந்தாலும் ஜின்னாவின் கை ஓங்குவதைப் பொறுத்துக் கொள்ளாத அத்தனை பேருமே நாடு சிதறியதில் பங்கு கொண்டவர்களே என்பதில் சந்தேகமில்லை.
அதிகாரப் பகிர்வில் ”இந்திய அன்னியர்”களின் பங்களிப்பு அறவே கூடாதென்ற ஜனநாயக சர்வாதிகாரிகளின் நரித்தனமே நாடு உடைந்ததற்கு முழு முக்கியக் காரணம்.
1933ல் பாகிஸ்தான் தியரி கண்டெடுக்கப்பட்டாலும், நீண்ட இடைவெளிக்கும் நெடிய பரிசோதனைக்கும் பின்னரே ”தனிநாடு” என வாய் திறந்தார் ஜின்னா. 1940ல் லாஹூர் பிரகடனத்தில் ”பாகிஸ்தான்” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது- பிரிவினையைத் தடுக்கும் நோக்கத்துடன் காந்திஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் சமரசத் திட்டத்துடன் வர மாட்டார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன், ஏக்கத்துடன்.
யாரும் வரவில்லை.
”ஜின்னா ஒரு பிரிவினைவாதி” என்று சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் வாய் கிழியக் கத்தினார்களே தவிர யாருமே ஜின்னாவை அணுகவில்லை.. லாஹூர் மாநாட்டுக்கு முன்னால், ஜின்னா கேட்டதெல்லாம் ஆட்சியதிகாரத்தில் பங்குதானேதவிர, தனிநாடோ பிரிவினையோ அல்ல. ஜின்னாவையும், அவரது பிறந்த மண் மோகத்தையும் காந்திஜியுடன் அவர் கொண்டிருந்த ஆழமான நட்புறவையும் கலப்படமில்லாமல் அறிந்தவர்கள், பிரிவினையைத் தவிர்த்திருக்க முடியும் என்றுதான் நம்புகிறார்கள். தேசம் துண்டாடப்பட்டதற்கு ஜின்னா மட்டுமே காரணமென்று கூறுபவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது.
இந்தியாவுக்கு விடுதலை அளிப்பது குறித்த பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதற்காக வின்ஸ்டன் சர்ச்சிலால் சிபாரிசு செய்யப்பட்டு, இங்கிலாந்து பிரதமர் அட்லி அவர்களால் அனுப்பப்பட்ட மவுண்ட் பாட்டன் ஜின்னாவைப் பற்றி கூறுகிறார்: ”அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டதையும் மற்றவர்கள் சொன்னதையும் வைத்து ஜின்னா ஒரு கடினமான மனிதர் என்று எண்ணியிருந்தேன்.அவரிடம் எப்படிப் பேசி சுமுக முடிவுக்கு வரப் போகிறோம் என்ற தயக்கம் என்னிடம் இருந்தது. ”நோ” என்ற ஒரேயொரு வார்ததையை வைத்துக்கொண்டு உலகப் புகழ் அடையக்கூடிய அவரிடம் நான் நடத்திய முதற் பேச்சு மிகவும் இனிமையாக அமைந்தது.”
வட்டமேஜை மாநாட்டில் ஜின்னா முன்னிறுத்திய வாதம்: ”இந்துக்கள் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் தெய்வத்தை வணங்கலாம். ஆனால் முஸ்லிம்கள் படைப்புக்களை வணங்க முடியாது. முஸ்லிம்களுக்கு ஒரே இறைவன். இந்துகளுக்கோ பல தெய்வ வழிபாடு. நாட்காட்டியிலும் கலாச்சாரத்திலும் நாங்கள் எதிரும் புதிருமானவர்கள். அவர்கள் பசுவை வணங்குபவர்கள். நாங்கள் அதையே உண்பவர்கள். இனிமேல் சகிப்புக்கு வழியில்லை. எனவே பாகிஸ்தான்.”
மவுண்ட் பாட்டன் கேட்டார்: ”சுயாட்சிக் கோரிக்கைக்கு முன்னால், இங்கே பல மதங்கள், பல இனங்கள் இருந்தும் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே வாழ்ந்துகொண்டிருந்தீர்கள்? இப்போது மட்டும் ஏன் பாகிஸ்தான்?”
”தனிநாட்டுக்குத்தேவையான காரணங்களை முன்னரே கூறியாயிற்று….”
”தனிநாடு மறுத்தால்?”
”நேரடி நடவடிக்கை.”
”அப்படியென்றால்?”
”உள்நாட்டுப்போர்.”
மவுண்ட்பாட்டன் புன்னகைத்துக்கொண்டே, ”பாகிஸ்தான் எப்போது வேண்டும்?” என்றார்.
”இப்போதே. அல்லது இரண்டு மாதம் கழித்து. ஆனால் இந்திய விடுதலைக்கு ஒரு நாளைக்கு முன்னால்” என்றார் ஜின்னா.
”அதென்ன ஒரு நாளைக்கு முன்னால்?”
”சுதந்திர இந்தியாவிலிருந்து ஜின்னா நாட்டைப் பிரித்துவிட்டான் என்று சரித்திரம் என்னைப் பழிக்கக்கூடாது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்துதான் எனக்கு பாகிஸ்தான் வேண்டும்” என்று ஜின்னா கூறியபோது தீவிர கங்கிரஸ்காரர்களோ அல்லது இந்து மகாசபை தீவிரவாதிகளோ ஏன் வாயைத் திறக்கவில்லை என்பதுதான் மர்மம். புதிர். பூடகம். பாகிஸ்தான் துண்டாடப் பட்டிருக்காவிடில் நவகாளி படுகொலை, கல்கத்தா கலவரம், குஜராத் வன்கொடுமை, அயோத்திக் கலகம் ஆகியவற்றை ஒருவேளை தவிர்த்திருக்கலாமோ? அல்லது தடுத்திருக்கலாமோ?
பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அத்வானி அவர்கள் பாகிஸ்தான் சென்றிருந்தபோது ” ஜின்னா ஓர் அப்பழுக்கற்ற தேசியவாதி ” என்று மனம் திறந்தார். அவரது சீடர்கள் வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் குதித்தார்கள். பாவம், அவர்களுக்கென்ன தெரியும்? சுதந்திரத்தையும் தெரியாது; போராட்டத்தையும் தெரியாது. ‘பாகிஸ்தான் என்றாலோ ஜின்னா என்றாலோ வெறு‘ என்று மட்டும் அரசியல் காரணங்களுக்காகத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கப்பட்டவர்கள்.
ஒருவனைக் காரணமில்லாமல் வெறுத்தவர்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் அவனை மீண்டும் விரும்புவது மகா அபூர்வம். தேசப்பக்தி என்பது இந்தியாவில் ஒரு கும்பலுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பிரத்தியேக சாஸனம் என்று அவர்கள் நினக்கக்கூடும்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் நாள். பாகிஸ்தான் விடுதலைக்கு இரு தினங்களுக்கு முன்னால். ஜின்னா, பாகிஸ்தான் அரசியலமைப்புப் பேரவையில் நிகழ்த்திய உரை: “இந்த உன்னததேசத்தை மகிழ்ச்சியும் சுபிட்சமும் மிக்கதாக மாற்ற வேண்டுமானால் நாமனைவரும் ஒரு நல்ல குடிமகனாக, ஓர் உண்மையான தேசியவாதியாக வாழ வேண்டுமென்று உறுதி எடுத்தாக வேண்டும்.
இப்போது நீங்கள் முற்றிலும் விடுதலை பெற்றவர்கள். நீங்கள் மசூதிக்குச் செல்லலாம். கோயிலுக்குச் செல்லலாம். குருத்வாராவுக்குச் செல்லலாம். நீங்கள் விரும்பும் எந்த வழிபட்டு இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
பாகிஸ்தான் அரசைப் பொறுத்தவரை, நீங்கள் எந்த மதத்தை, இனத்தை,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி- உங்களுக்குள் வேற்றுமை இல்லை. வித்தியாசம் இல்லை. பாரபட்சம் இல்லை.
ஆனால் நீங்கள் அனைவரும் தேச விசுவாசியாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது ஆத்மார்த்த விருப்பம்.”
காயிதே ஆஸாம் ஜின்னாவின் அடக்கத்தலம்
குறிப்பு: அறுபதாவது சுதந்திரப் பொன்னாளைக் கொண்டாடும் வேளையில், அதற்காக இரத்தம் சிந்திய உத்தமர்களை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இந்தியா என்றால் பாகிஸ்தானும், காந்தி என்றால் ஜின்னாவும் பிரித்தெடுக்க முடியாத உன்னதங்கள். இந்த நேரத்தில் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வதுதான் கொண்டாட்டம். நல்வாழ்த்துக்கள்.
(”இந்திய விடுதலையில் ஜின்னா” ஏ. ஹெச். ஹத்தீப் 2008-ஆம் ஆண்டைய ”சமநிலைச் சமுதாயம்” சுதந்திர தினச் சிறப்பிதலிருந்து.)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.