[ இஸ்லாமிய நோக்கில் அறிவானது கூறுபோடப்படுவதில்லை. இந்த வகையில் பயனுள்ள, ஆக்கப் பயிற்சிக்கு உதவும் அனைத்துக் கலைகளையும் இஸ்லாம் வரவேற்கத் தக்க அறிவாகக் கொள்கின்றது. இந்த அடிப்படையில் இறைவனது ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் இஸ்லாம், அறிவின் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துகின்றது.
இலட்சியமற்ற கல்வியை இஸ்லாம் கண்டிக்கின்றது. தார்மீக மதிப்பீடுகளும், ஆத்மீகப் பரிமாணமும் அற்ற கல்வி அர்த்தமற்றது என்கிறது. புகழ், கீர்த்தி போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளல், அறிஞர்களை விவாதத்தில் வெற்றி கொள்ளல், மடையர்களை மட்டந்தட்டல், சபைகளில் முன்னுரிமையைப் பெறல் போன்ற உலோகாயத நோக்கங்களுக்காகக் கல்வியைத் தேடுவது பிழையானது எனக் கூறும் இஸ்லாம், அத்தகைய நோக்கங்களுடன் அறிவைத் தேடுபவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரும் வாய்ப்பைப் பெறப் போவதில்லை என்றும் கூறிக் கண்டிக்கின்றது.]
அறிவின் சிறப்பைப்பற்றி நம் முன்னோர்களின் கருத்து
முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:
”அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை அல்லாஹ்வுக்காகக் கற்பது இறையச்சமாகும்.
அதனைத் தேடுவது இபாதத்தாகும்.
அதனை மீட்டுவது தஸ்பீஹாகும்.
அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாதாகும்.
அறியாதவருக்கு அதனைக்கற்பிப்பது ஸதக்காவாகும்.
அதனை அதற்குரியவர்களுக்கு அளிப்பது நற்கருமமாகும்.
அது (அறிவு) தனிமையின் தோழன், மார்க்கத்தின் வழிகாட்டி, இன்ப துன்பத்தின் போது உதவியாளன், நண்பர்க்கு மத்தியில் மந்திரி, நெருக்கமானவர்களுக்கு மத்தியில் நெருங்கியவன், சுவனப் பாதையின் ஒளிவிளக்கு;
இதனைக் கொண்டு அல்லாஹ் சிலரை உயர்த்தி, அவர்களை நன்மையான விடயங்களுக்கு முன்னோடிகளாகவும் ஆக்கிவிடுகின்றான்.
அவர்களின் அடிச்சுவட்டில் பலர் செல்வர்.
அவர்களின் தோழமையை மலக்குகளும் விரும்புவர்.
மலக்குகள் அவர்களைத் தங்களது இறக்கைகளினால் தடவிடுவர்.
கடலில் உள்ள மீன்கள், ஏனைய ஜீவராசிகள், கரையில் உள்ள மிருகங்கள், கால்நடைகள், வானம், நட்சத்திரங்கள் உட்பட பசுமையான, காய்ந்த, உலர்ந்த அனைத்தும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றன……….”
அல் ஹஸனுல் பஸரி கூறுகின்றார் : ”அறிஞர்கள் இல்லாதிருந்தால் மனிதர்கள் மிருகங்களைப் போன்றிருப்பர்”. ”அறிஞர்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர் மீது அவர்களின் பெற்றோரைவிட அன்பு கொண்டவர்கள்” என்று யஹ்யா இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். இதனைக் கேட்ட சிலர் ‘அது எப்படி’ என்று வினவினர். அதற்கு யஹ்யா இப்னு முஆத், ”அவர்களின் பெற்றோர் உலக நெருப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கின்றனர். அறிஞர்களோ அவர்களை மறுமையின் நெருப்பிலிருந்து பாதுகாக்கின்றனர்” என்றார்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ”மனிதர்கள் யார்” என்று வினவப்பட்டது. அதற்கு அவர் ”அறிஞர்கள்” என்று கூறினார். ”மனிதனுக்கு உணவு, பானம் ஆகியவற்றின்பால் உள்ள தேவையை விட, அறிவின் பால் உள்ள தேவையே மிகவும் அதிகம்” என்றார்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி.
ஸுன்னத்தான வணக்க வழிபாடுகளைவிடக் கல்வி கற்பதிலும், அறிவைத் தேடுவதிலும் ஈடுபடுவது சிறந்தது என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.
ஏனெனில், அறிவின்றி வணக்கத்தில் ஈடுபடுவது அத்திவாரமின்றி ஒரு கட்டடத்தை எழுப்புவது போலாகும். அறிவின் மூலமே ஒருவனால் வணங்கங்களின் முறைகள், ஒழுங்குகள், நிபந்தனைகள் போன்றவற்றையெல்லாம் அறியமுடிகின்றது. எனவேதான் அறிவைத் தேடுவதை மிகச் சிறந்ததொரு வணக்கமாக இமாம்கள் கருதுகின்றனர். இதனை விளக்கும் சில பெரியார்களின் கருத்துக்களைக் கீழே தெரிந்துகொள்வோம்:
”கல்வி கற்பது ஒரு வணக்கமாகும்” (இப்னு மஸ்ஊத்). ”சிறிது நேரம் கல்வி கற்பது ஓர் இரவு நின்று வணங்குவதை விட மேலானதாகும்” (அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு) ”சிறிது நேரம் இருந்து எனது மார்க்கத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது ஓர் இரவு முழுவதும் விடியும் வரை நின்று வணங்குவதை விட எனக்கு விருப்பமானதாகும்” (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)
”கடமையான பர்ளு‘வை அடுத்து அறிவைத் தேடுவதைவிடச் சிறந்ததோர் அமல் இல்லை” (இமாம் அஸ்ஸெளரி ரஹ்மதுல்லாஹி அலைஹி) ”நபீலான தொழுகையை விட அறிவைப் பெறுவது சிறந்தது” (இமாம் அஷ்ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி)
அறிவைத் தேடுவது அடிப்படையான, கடமையான வணக்க வழிபாடுகளுக்குத் தடையாக அமைவது கூடாது என்பதை நாம் மனதிற் கொள்ளல் வேண்டும்.
அறிவைப் பெறுவது இஸ்லாத்தில் மிக மேலான அமலாகக் கருதப்படும் ஜிஹாதைவிடச் சிறந்தது என்றும் கருதப்படுகின்றது. ஏனெனில் ஜிஹாதின் சிறப்பு, அதன் வரையறைகள், நிபந்தனைகள் போன்றவற்றையும் அறிவைக்கொண்டே விளங்க முடியும்.
அறிவைப் பெறுவது ஜிஹாதை விடச் சிறந்தது என்ற கருத்தைக் கீழ்வரும் வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
”எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்ட ஷஹீதுகள் மறுமையில் அறிஞர்களின் அந்தஸ்தைக் கண்டு, தாங்களும் அறிஞர்களாக எழுப்பப்பட்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்.” (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு)
”அறிஞனின் மையையும் ஷஹீதுளின் இரத்தத்தையும் நிறுத்தால், அறிஞர்களின் மையே கனமாக இருக்கும்.” (அல் ஹஸனுல் பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி)
அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும் போது உலக வாழ்வு நிலைப்பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத்தரும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது.
”அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்” என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)
இதிலிருந்து இந்த உலகமும் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்கமுடிகின்றது.
முதற்பகுதியில் இஸ்லாம் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விளங்கிக் கொண்ட நீங்கள், இப்பகுதியில் கல்வி பற்றி இஸ்லாத்தின் கண்ணோட்டத்தையும், அறிவு பற்றிய அதன் கோட்பாட்டையும் விளங்கிக் கொள்ளப் போகின்றீர்கள்.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அனைத்து விடயங்கள் பற்றியதுமான பூரண அறிவு அவனிடமே உள்ளது. அறிவு பற்றிய இஸ்லாத்தின் இந்த நோக்கைக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் அழகாக விளக்குகின்றது.
”மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறியமாட்டார்கள். தரையிலும் கடலிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் எந்தவொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் அடர்ந்த இருளில் கிடக்கும் வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான புத்தகத்தில் இல்லாமலில்லை”. (6:59)
இவ்வாறு கூறும் போது இயற்கையைப் பற்றியும், அதன் நிகழ்வுகளைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில் பொதிந்து கிடக்கும் இரகசியங்களைப் பற்றியும் ஆராய்வதை இஸ்லாம் வரவேற்கவில்லை என்பது கருத்தல்ல. இஸ்லாம் அறிவு, ஆராய்ச்சி, சிந்தனை போன்றவற்றிற்கு எந்தளவு அழுத்தம் கொடுக்கின்றது என்பதை முன்னைய பகுதியில் கண்டோம். உண்மையில், குறித்த அம்சங்கள் பற்றிய மனிதனது ஆய்வானது, பிரபஞ்சத்தில் தொழிற்படும் விதிகளுக்குப் பின்னால் செயற்படும் அல்லாஹ்வின் வல்லமையையும் ஞானத்தையும் கண்டறிவதையே நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.
இதனால்தான் மனிதனது அறிவும் ஆராய்ச்சியும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இறை விசுவாசத்தின் அடிப்படையில் அமையாத கல்வி, ஆக்கத்திற்குப் பதிலாக அழிவிற்கே இட்டுச் செல்லும் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும். இவ்வுண்மையை இன்றைய உலகம் நிதர்சனமாகக் காண்கின்றதல்லவா?.
‘‘படைத்த இறைவனது நாமத்தைக்கொண்டு வாசிப்பீராக” என்று அல்குர்ஆன் கூறுவதன் மூலம், அறிவும் ஆராய்ச்சியும் ஈமானின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.
இறைநம்பிக்கையில்லாத அறிஞர்களிடம் தமது அறிவில் கொண்ட மதிமயக்கத்தையும், மமதையையுமே காணமுடியும். தமது மூளையையும், அறிவாற்றலையும் பூஜித்து வணங்கும் நிலையிலேயே அத்தகையோர் இருப்பர். ஆனால், இறை நம்பிக்கை கொண்ட நல்லடியார்களான அறிஞர்களோ தமது அறிவாற்றலைக் கொண்டு எத்தனை சாதனைகளைப் படைத்தாலும் இறுமாப்படையாதுஇ தமது திறமைக்கான காரணம் இறை கருணையே என்று நம்புவர். இத்தகைய அறிஞர்களைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
உலகின் ஆட்சி அதிகாரமும், மற்றும் பல ஆற்றல்களும், சக்திகளும் கொடுக்கப் பெற்றிருந்த நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் நிலை கண்டு மதிமயங்கவில்லை. அவர்களது மனோநிலை எப்படி இருந்தது என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
1. ”இது, எனது இறைவன் நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா?, இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக எனக்குப் புரிந்த பேரருளாகும்” (27:40) உலகில் பல அற்புதமான சாதனைகளை நிலைநாட்டிய துல்கர்னைன் என்பார் இறுதியில் ஒரு பெரும் மதிலைக் கட்டிவிட்டு, அதற்காக அவர் பாராட்டப்பட்டபோது மொழிந்த ஈமானின் ஒளி சிந்தும் அடக்கமான வசனங்களையும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
2. ”இது என்னுடைய இறைவனின் அருள்தான். எனது இறைவனின் வாக்குறுதி (யாகிய யுகமுடிவு) வரும்போது தூள் தூளாக்கிவிடுவான். எனது இறைவனின் வாக்குறுதி உண்மையானதே” என்று கூறினார்கள். (18:98)
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அறிவு இறைநம்பிக்கைக்கு (ஈமான்) முரணானதல்ல. மதம் என்பது, அறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரானது, மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது, அறிவாராய்ச்சியையும் சிந்தனையையும் மட்டம் தட்டுவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளதென்பது போன்ற கருத்துக்கள், இஸ்லாத்தைப் பொறுத்தளவில் பொருந்தாது.
இஸ்லாமிய வரலாற்றில் அறிவுக்கும் இறைவிசுவாசத்திற்குமிடையில் எத்தகைய முரண்பாடும் இருந்ததாகக் காணமுடியாது. ஏனெனில். ”கண்ணை மூடிக்கொண்டு என்னைப் பின்பற்று” என்பது இஸ்லாத்தின் போதனையல்ல.
”எமது மூதாதையர் எதில் இருக்கக் கண்டோமோ அதுவே எமக்குப் போதுமானது”. ”நாம் எமது தலைவர்களையும் பெரியோர்களையும் பின்பற்றுபவர்கள்” என்று கூறிச் செயற்படுவோரை இஸ்லாம் மூடர்கள் என்று கண்டிக்கின்றது.
மேலும், இஸ்லாம் அறிவியலுக்கு முரணான யுகங்களை மறுத்துரைக்கிறது. அனைத்து நம்பிக்கைகளும், மார்க்க நம்பிக்கைகள் உட்பட உறுதியான அறிவின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. முஷ்ரிகீன்களைப் பற்றியும் அவர்களது கற்பனையான தெய்வங்களைப் பற்றியும் கூற வந்த அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.:
”இவைகளெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயன்றி வேறில்லை. அதற்காக அல்லாஹ் (உங்களுக்கு) எவ்வித ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. அவர்கள் சந்தேகத்தையும் மனோ இச்சையையுமே பின்பற்றுகின்றனரேயன்றி வேறில்லை”. (53:23)
நம்பிக்கைகள் அனைத்தும் ஆதாரத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எனவேதான் அல்குர்ஆன் பிழையான நம்பிக்கைகளைக் கொண்ட மனிதர்களை விளித்து, கீழ்வருமாறு கோரும்படி நபியை வேண்டுகின்றது.
”நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உங்களது ஆதாரத்தை கொண்டுவாருங்கள் என்று (நபியே) கூறுங்கள்”(2:111)
உண்மையான அறிவு ஈமானுக்கு அழைப்பு விடுப்பதாகவே இருக்கும் என்பது அல்குர்ஆனின் கருத்தாகும்.
”எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கின்றதோ, அவர்கள் நிச்சயமாக, இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, இதை விசுவாசித்து மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்” (22:54)
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அறிவை அறிவுக்காகத் தேடுவது பிழையானதாகும். அறிவும், நம்பிக்கையும், செயலும் இணைந்து தொழிற்பட வேண்டும். செயலற்ற அறிவு பயனற்றது. மேலே நாம் கண்ட அல்குர்ஆன் வசனம், ஒருவனது அறிவு அவனை இறைநம்பிக்கையின் பால் இட்டுச் செல்கின்றது; அந்த இறைநம்பிக்கையின் அடியாக அவனில் இறையச்சம் தோன்றுகின்றது; இதனால் இறைவனை அஞ்சிப் பயந்து அவனுக்கு அடிபணிந்து வழிபடும் நிலை அவனில் உருவாகின்றது என்ற கருத்தைக் கூறுகின்றது. இது அறிவுக்கும் நடத்தைக்கும் இடையிலான இறுக்கமான உறவை அழகாக எடுத்துக் காட்டுகின்றதல்லவா?.
இலட்சியமற்ற கல்வியை இஸ்லாம் கண்டிக்கின்றது. தார்மீக மதிப்பீடுகளும், ஆத்மீகப் பரிமாணமும் அற்ற கல்வி அர்த்தமற்றது என்கிறது. புகழ், கீர்த்தி போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளல், அறிஞர்களை விவாதத்தில் வெற்றி கொள்ளல், மடையர்களை மட்டந்தட்டல், சபைகளில் முன்னுரிமையைப் பெறல் போன்ற உலோகாயத நோக்கங்களுக்காகக் கல்வியைத் தேடுவது பிழையானது எனக் கூறும் இஸ்லாம், அத்தகைய நோக்கங்களுடன் அறிவைத் தேடுபவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரும் வாய்ப்பைப் பெறப் போவதில்லை என்றும் கூறிக் கண்டிக்கின்றது.
இஸ்லாத்தின் பார்வையில் அறிவு என்பது இரு வகைப்படும்
1. மனிதனது ஆன்மீக, தார்மீக மேம்பாட்டுக்கு உதவும் அறிவு
2. உலக வாழ்வில் மனித சுபீட்சத்திற்குத் துணைபுரியும் அறிவு.
முதல்வகை அறிவு இறைவனால் இறைதூது மூலம் வழங்கப்படுகின்றது. அல்குர்ஆனும், அல்ஹதீஸும் இந்த அறிவின் மூலாதாரங்களாக விளங்குகின்றன. இரண்டாம் வகை அறிவு மனிதனது அவதானம், ஆராய்ச்சி போன்ற பகுத்தறிவின் மூலம் பெறப்படுவதாகும்.
இவ்விருவகை அறிவுக்கும் இடையில் இஸ்லாமிய நோக்கில் முரண்பாடு இல்லை. மாறாக, இவையிரண்டினதும் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவேதான் ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற ஆன்மீகத் துறைசார்ந்த கலைகளில் மாத்திரமின்றி, வானவியல், கணிதம் மருத்துவம் தத்துவம்-போன்ற துறைகளிலும் ஈடுபட்டு, அவற்றில் முன்னோடிகளாகவும் விளங்கினார்கள்.
இஸ்லாமிய நோக்கில் அறிவானது கூறுபோடப்படுவதில்லை. இந்த வகையில் பயனுள்ள, ஆக்கப் பயிற்சிக்கு உதவும் அனைத்துக் கலைகளையும் இஸ்லாம் வரவேற்கத் தக்க அறிவாகக் கொள்கின்றது. இந்த அடிப்படையில் இறைவனது ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் இஸ்லாம், அறிவின் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துகின்றது எனலாம். ஏனெனில், பயனுள்ள எல்லா வகையான அறிவினதும் மூலமாக இருப்பவன் அந்த ஏக இறைவனே.
இஸ்லாமிய நோக்கில் கல்வி என்பது பாடபோதனையுடன் மட்டுப்படத்தப்பட்ட ஒன்றல்ல. மாணவனது மூளையில் தகவல்களைத் திணிப்பது அதன் நோக்கமல்ல. அது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுமல்ல. மாறாக, அது தனிமனிதனது ஆளுமையின் பரிபூரண வளர்ச்சிக்குத் துணை புரியக் கூடியதாக அமைய வேண்டும்.
ஆளுமை என்பது மனிதனது உடல், உள்ளம், உணர்வு, சிந்தனை, அறிவு, ஆன்மா, நடத்தை, பண்பாடு போன்ற அனைத்துடனும் தொடர்புள்ளது என்பது இஸ்லாத்தின் கருத்து. இஸ்லாமிய கல்வியின் நோக்கம், மனிதனது ஆளுமை முழுமையாக வளர்ந்து, ஓர் உன்னதமான மனிதனை உருவாக்குவதாகும்.
குறிப்பாக இஸ்லாமிய கல்வியின் ஆன்மாவாக அமைவது பண்பாட்டுப் பயிற்சியாகும். மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டுக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் துணைபுரிவதாகக் கல்விப் போதனை அமைய வேண்டும் என்பதில் இஸ்லாம் கண்டிப்பாக உள்ளது.
கல்வித் துறையில் பூரண சுதந்திரம் பேணப்படல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். கல்வித் துறையில் சமத்துவம் பேணப்படுவதுடன் அனைவருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. இந்த வகையில், இஸ்லாமிய கல்விமுறை அமுலில் இருந்த இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் கல்வி நிலையங்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டன.
அங்கு தரவேறுபாடு கருத்திற் கொள்ளப்படவில்லை. வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கவில்லை. சான்றிதழ்கள், புள்ளிகள் போன்றன பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளப்படவுமில்லை. கல்வி, கேள்வி, ஆய்வு போன்றவற்றில் ஆர்வமும், ஈடுபாடுமே பிரவேசத்திற்கான தகைமைகளாகக் கொள்ளப்பட்டன.
இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
”Jazaakallaahu khairan”