அந்த ஏழுபேரில் நாமும் ஒருவராக…
கீழ்காணும் ”ஹதீஸை” நாம் ஒவ்வொருவரும் மனதில் இருத்திக்கொள்வோம். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏழு பேரில் ஒருவராகவாவது நாம் இருக்க வேண்டும் என்று முயற்சி எடுப்போம், ”அர்ஷின் நிழல்” நமக்கும் வேண்டுமே. மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்; அவர்களுக்கும் ‘அந்த அர்ஷின் நிழல்’ கிடைக்க வேண்டுமல்லவா?
இதோ அந்த ஏழுபேர்;
அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஏழுபேர், இவர்களுக்கு தன் நிழலைத்தவிர வேறு நிழல் இல்லாத அந்த (மறுமை நாளில்) தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் தருவான்.
(1) நீதமான அரசன்.
(2) அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபடும் வாலிபர்.
(3) பள்ளிவாசல்களில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்த மனிதர்.
(4) அல்லாஹ்வுக்காக பிரியம் கொண்டு, அவனுக்காகவே ஒன்று சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்தும் நிற்கின்ற இருவர்.
(5) அழகும், குடும்பப் பெருமையும் நிறைந்தப் பெண் விபச்சாரத்திற்கு அழைத்தும், ”நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்” என்று கூறும் நபர்.
(6) தன் வலது கை செய்யும் செலவை இடது கைக்குத் தெரியாமல் அதை மறைத்துக் கொண்டு தர்மம் செய்கின்ற ஒருவர்.
(7) கலப்பற்ற நிலையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, இதனால் கண்கள் கண்ணீரைச்சிந்தும் ஒருவர்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)