பறப்பதற்கே சிறகுகள்! – 1
MUST READ
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
[ இன்றோ நிலைமை படுமோசம். திரை அரங்குகளிலும், பத்திரிக்கை படங்களிலும், மேடைகளிலும் நாம் முன்பு பார்த்து வந்த கண்றாவி கலைக் காட்சிகளையெல்லாம் இன்று வீதிகளிலும், கடைகளிலும் ஏன், காய்கறி வாங்கும் போதும் காண முடிகின்றது இந்தக் கரையான் வெகு வேகமாக நம் சமூகத்தின் உயிர் வலிமையை தின்று கொண்டுள்ளது. இக்கரையான் பிடித்த சமூகங்கள் ஒன்று கூட இன்று வரை மிஞ்சியதில்லை.]
அறிவின் சிகரங்களையெல்லாம் எட்டிப் பிடித்து விட்டதாக என்னதான் மனிதன் மார்தட்டிக் கொண்டாலும், தன்னைப் பற்றிய பௌதிக உண்மைகளைக் கூட அவன் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மையாகும். மனித மூளை எவ்வாறு இயங்குகின்றது? என்பதைக்கூட அவனால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. மரபணுக்களின் செய்திப்பதிவை வெறுமனே வாசித்துப் பார்க்கும் முயற்சிகள் தாம் நடைபெற்று வருகின்றன.
அப்படி இருக்கும் போது ஆன்மிக இருப்பையும் அதன் நோக்கங்கள், தேவைகளையும் அவனால் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும்? வரையறுக்கப்பட்ட, குறுகிய, குறைபாடுகள் கொண்ட மனித அறிவின் மூலம் தன்னிடம் உள்ள மிகக் குறைவான கல்வியின் மூலம் ஆன்மிக, ஒழுக்க நிலை குறித்த போதுமான ஞானத்தைப் பெற்றுக் கொள்வது சாத்தியமே இல்லை. வழி காட்டுதல், மறைக்கல்வி கண்டிப்பாக அதற்குத் தேவை.
மானுட சமூகத்தில் ஆண்பெண் இரு பாலரின் நிலை என்ன? அவர்களுக்கிடையேயான உறவு என்ன? என்பது தொடர்பான சிக்கல் இப்பேருண்மைக்கான எடுத்துக்காட்டு ஆகும், சமூக வாழ்வின் அடிப்படை ஆதாரமாக ஆண்பெண் உறவே அமைந்துள்ளது. சற்றேனும் விரிசல் இதில் ஏற்பட்டால் கூட எல்லாமே அடியோடு நிலைகுலைந்து விடும்.
ஆண்பெண் உறவு மனித வாழ்வில் எவ்வாறு அமைந்து வந்துள்ளது என்பதை நாம் வரலாற்றில் ஆராய்ந்து பார்த்தோமானால் ஒன்று அது முற்றலட்சியப் (Negligence) படுத்தப்பட்டு வந்துள்ளது. இல்லையென்றால் அதிதீவிர பக்கச் சார்பு (Exaggeration) உடையதாக இருந்துள்ளது, ஒரு பக்கம் எந்த பெண் தாயாக இருந்து மனிதனைப் பெற்றெடுத்து ஆளாக்குகிறாளோ மனைவியாக இருந்து களிப்பையும் மகிழ்வையும் அவனுக்கு அளிக்கிறாளோ, அதே பெண், பணிப்பெண்ணாக அல்ல, அடிமையாக ஆக்கப்படுகிறாள். விற்கவும் வாங்கவும் செய்யப்படுகிறாள். சொத்துரிமையும் வாரிசுரிமையும் அவளுக்கு அறவே தரப்படுவதில்லை, குற்றத்தின் வடிவாக, அவமானத்தின் உருவமாக அவள் கருதப்படுகிறாள்.
அவளுடைய தனித்துவமும் ஆளுமையும் வளர்ந்தோங்க எந்த விதமான விதமான வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னோரு புறம், அதே பெண் மேலுயர்த்தப்படுவதையும், ஊக்கப்படுத்தப்படுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், தீயொழுக்கமும் முயைறகேடுகளும் சேர்ந்தே உயர்கின்றன. மிருக இச்சைகளின் போகப்பொருளாக அவள் ஆக்கப்படுகிறாள். உண்மையிலேயே அவள் ஷைத்தானுடைய ஏஜெண்ட் ஆக ஆக்கப்படுகிறாள். அவளுடைய உயர்வோடு மானுடத்தின் வீழ்ச்சியும் தொடங்கிவிடுகின்றது. கிரேக்க நாகரீகத்திலும், ரோமானியப் பேரரசிலும், பண்டைக்கால இந்தியாவிலும் பெண்கள் எப்படி எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டார்கள், அவமானப்படுத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றின் பக்கங்களில் விரிவாகவே நாம் காணலாம்,
கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய தத்துவயியலாளர்கள் சமூகத்தை எதிர்த்து தனிமனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கலாயினர். மனித ஆன்மாவை இயற்கைக்கு முரணான தளைகளால் இறுகிப்பிணைத்து, வளர்ச்சிக்கான அனைத்து கதவுகளையும் ஓங்கியறைந்து சாத்திவிட்டிருந்த கிறிஸ்துவ ஒழுக்கவியல், தத்துவம் மற்றும் பிற்போக்கு நிலமானிய முறை Fendel System அடிப்படையிலான ஒரு தவறான சமூக அமைப்பையே அவர்கள் எதிர்கொண்டனர். இவ்வமைப்பைத் தகர்த்து புதியதோர் அமைப்பைத் தோற்றுவிக்க நவீன ஐரோப்பிய சிற்பிகள் முன்வைத்த கோட்பாடுகளின் விளைவாக பிரெஞ்சுப் புரட்சி தோன்றியது. அதன்பின்பு மேற்குலகின் பண்பாடும் நாகரீகமும் தொடர் வளர்ச்சி கண்டு இன்று நாம் காணும் நிலையை அடைந்துள்ளது. அதன் அப்பட்டமான பிரதிபலிப்பை நம்முடைய இந்திய சமூக வாழ்விலும் நாம் கண்டு வருகிறோம்.
இந்நவீன யுகத்தின் தொடக்கத்தில் பெண்ணினத்தை முன்னேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாக, சமூக அரங்கில் நல்ல பல விளைவுகள் தோன்றின. திருமணம், விவாக முறிவு போன்றவற்றில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழைய கடுமை குறைந்து போனது. ஒட்டு மொத்தமாக பறிக்கப்பட்டிருந்த பெண்களுக்கான பொருளியல் உரிமை திரும்ப வழங்கப்பட்டது. பெண்ணை இழிவான, கீழ்த்தரமான பிறவியாகக் கருதக் காரணமாயிருந்த ஒழுக்கவியல் கோட்பாடுகள் சீர்திருத்தப்பட்டன. பெண்கள் பணிப்பெண்களாக, அடிமைகளாக நடத்தப்படுவதற்குத் தூண்டுதலாயிருந்த சமூக நியதிகள் மாற்றம் பெற்றன.
ஆண்களைப் போன்றே பெண்களும் உயர் கல்வி, பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இத்தகு முயற்சிகளின் விளைவாக தவறான சமூக சட்டங்கள், அறியாமை மிகுந்த ஒழுக்கவியல் மரபுகளின் கீழ் அடங்கியொடுங்கிக் கிடந்த பெண்களின் திறமைகள் ஊக்கம் பெற்று எழுச்சியடைந்து வெளிப்படலாயின.
அவர்களால் இல்லங்கள் பொலிவடைந்தன. சமூகத்திற்கு சிறப்பையும் பொதுநலன்களுக்கான செயல்களில் தங்களுடைய பங்களிப்பையும் அவர்கள் வழங்கினர்.
நவீன பண்பாட்டின் விளைவாக ஆரோக்கியமான பொது நலனில் முன்னேற்றம், இளந்தலைமுறையினருக்கு சிறப்பான அருமையான பயிற்சி, நோயுற்றோருக்கான மருத்துவ சேவை, இல்லறக் கலையில் நுணுக்கம் போன்றவை துவக்க காலத்து பெண்களிடையே ஏற்றம் பெற்றன. ஆனால், இம்மாற்றங்களுக்கு எல்லாம் காரணமாயிருந்த கோட்பாடுகளில் ஆரம்பத்திலிருந்தே அதி தீவிரத்தன்மை (Exaggeration) காணப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தன்மை வெகுவேகமாக வளர்ச்சி கண்டு இருபதாம் நூற்றாண்டை அடையும் போதே நடுநிலைமையைத் தாண்டி இன்னொரு மறுகோடி எல்லையை அடைந்து விட்டது.
மேலைச் சமூகத்தில் நிலை கொண்டுள்ள கோட்பாடுகளை மூன்று தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.
1. பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமை Equal Rights
2. பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம். Economic Independence
3. இருபாலருக்கிடையிலான தடையற்ற கலப்பு.
இம்மூன்று அடிப்படைகளின் மீது சமூகத்தை கட்டமைப்பதால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படவேண்டுமோ, அவை அப்படியே ஏற்பட்டது.
முதலாவது
ஒழுக்க மதிப்பிலும், மனித உரிமைகளிலும் சமத்துவம் என்பதோடு சமூக வாழ்விலும் ஆணுக்கு நிகராக ஆணுக்கு உரிய வேலைகளை பெண்ணும் செய்ய வேண்டும் என்பதே சம உரிமை என்று புரிந்து கொள்ளப்பட்டது. எவ்வாறு ஒழுக்க விஷயங்களில் ஆண் மீதான கட்டுப்பாடுகள் முன்பிருந்தே தளர்த்தப்பட்டு வந்துள்ளனவோ, அவ்வாறே பெண்களுக்கும் தளர்த்தப்பட வேண்டும்.
சம உரிமை என்பது இவ்வாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் பெண்களுக்குரிய இயற்தன்மைகள் எத்தன்மைகளின் மீது சமூகத்தின் இருப்பும், மனித இனத்தின் இருப்பும் நிலை கொண்டுள்ளனவோ அவை அலட்சியப்படுத்தப்பட்டன. புறக்கணிக்கப்பட்டன. பொருளாதர, அரசியல் மற்றும் சமூக வேலைப் பளுவானது அவளுடைய தனித்தன்மையை முழுமையாக உறிஞ்சிக் கொண்டது.
தேர்தல்களில் பங்கேற்பு, தொழிற்சாலை, அலுவலகங்களின் பணி, வணிகத்துறை, தொழிற்துறைகளில் தனித்து ஆண்களோடு போட்டி, விளையாட்டு, உடற்பயிற்சிகளில் கடும் முயற்சி, சமூகத்தின் மன மகிழ் நிகழ்வுகளில் மென்மையான பங்களிப்பு, கிளப்புகளிலும், மேடைகளிலும் நடனமும் நாட்டியமும், கல்லுர்ரிகளிலும் காம்ளெக்ஸ்களிலும் அழகு அணிவகுப்புகள், இன்னும் இவை போன்ற பல விஷயங்கள் சொல்ல இயலாத பல விஷயங்கள் அவள் மீது எந்த அளவு குவிந்து போயின என்றால் இல்லறக் கடமைகள், குழந்தை வளர்ப்பு, அவர்களுக்குரிய பயிற்சியளிப்பு, குடும்ப பராமரிப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற பல விஷயங்கள் அவளுடைய செயல் திட்டத்திலிருந்தே வெளியேறி விட்டன. சிந்தையளவில் இவற்றை வெறுக்கக்கூடியவளாகவும் அவள் மாறிவிட்டாள்.
சமூகத்தின் அஸ்திவாரமாகக் திகழ வேண்டிய குடும்ப அமைப்பு மேலைநாடுகளில் இன்று சிதறி சின்னாபின்னமாகி விட்டது. இந்தியாவிலும் சிறுகச் சிறுக சீர்குலைந்து வருகின்றது. எங்கு அமைதி கொண்டால் மனித ஆற்றல் ஓய்வு பெற்று வளர்ச்சிக்கான வலிமையை திரட்டிக் கொள்ளுமோ அந்த குடும்ப வாழ்க்கை செயலளவில் செத்து விட்டது.
இன்ஷா அல்லாஹ், தொடரும்…