ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்…
உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்.
அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா..?
பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்….
நீ
தூக்கவே
முடியாதளவுக்கு.
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்…
தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு.
ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்…
நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது.
எல்லாம் சேலைதான்
எனினும்…
நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது.
என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட…
நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்.
மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்.
‘குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே’
என்றான் அண்ணன்
‘எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே’
என்றாள் அக்கா
‘சளி பிடுச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு’
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல:
மழையை!”
”Jazaakallaahu khairan”
MAIS, Abdur Rahman