உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) ‘நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், ‘நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான்விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது);
ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்)விட்டுச் சென்றிருக்கிறார்கள்’ என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பாராட்டினார்கள்.
அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன்.
நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி எண் 7218)
பதவிக்கு வருபவர்கள் அந்த பதவியை இந்த உலகில் சுகவாழ்க்கை வாழ்வதற்கான கருவியாக பயன்படுத்திவரும் நிலையை பார்க்கிறோம்.
ஆனால் சுவனம் வாக்களிக்கப்பட்ட உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இந்த பதவி எனக்கு மறுமையில் பாதகத்தை ஏற்படுத்தாமல் நான் தப்பித்தாலே போதும் என்று கூறியதோடு, அடுத்த ஆட்சி தலைவராக நான் யாரையாவது தேர்ந்தெடுத்து அதற்காகவும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்ற ரீதியில் பதிலளித்ததை பார்க்கும்போது, அந்த நல்லற தோழர்கள் பதவியை முள் படுக்கையாகவே கருதிவந்துள்ளனர்.
நம்மைபோல் சுகம்தரும் மஞ்சமாக அதை கருதவில்லை என்பதை உணரவேண்டும். ‘உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான்’ என்று நபியவர்களால் சிலாகித்து சொல்லப்பட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி குறிப்பிடும்போது, ‘என்னை விட சிறந்தவர்’ என்று கூறி தன்னுடைய சக தோழரை கண்ணியப்படுத்திய உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த வாழ்க்கையில், ‘தலைக்கனம்’ பிடித்து திரிபவர்களுக்கு தக்க படிப்பினை உள்ளது. அல்லாஹ் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பொருந்திக்கொள்வானாக!