ஜமாஅத் சபைகளில் பெண்கள்!
முஸ்தபா காஸிமி
[ பள்ளிவாசல்களை நிர்வாகிப்பவர்களாக பெண்கள் இருக்க வேண்டமென்பதல்ல நமது வாதம், குறைந்த பட்சம் நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்படும் போது அவர்களுக்கு வாக்குரிமையாவது வழங்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக ஜமாஅத் பஞ்சாயத்து சபைகளில் சமூகப் பிரச்சனைகளில் அக்கறையும் கல்வியாற்றலும், மார்க்க அறிவும் படைத்த பெண்கள் பிரதிநிதித்துவம் வகிக்க வேண்டும். ]
இரண்டாம் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ பேருரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ‘திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கான (மஹரை) மணக்கொடையை அளவுக்கதிகமாக கோராதீர்கள்’ என்ற போது உடனடியாக சபையிலிருந்த பெண் ஒருவர் “நாங்கள் உமது சொல்லைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது அல்லாஹ்வின் சொல்லைப் பின்பற்ற வேண்டுமா? திருக்குர் ஆனில் அல்லாஹ் உங்கள் மனைவியின் இடத்தில் (அவளை மண முறிவு செய்துவிட்டு வேறொரு) மனைவியை மாற்ற நீங்கள் நாடினால் (முதல் மனைவிக்கு) எவ்வளவு அதிகமான (மணக்கொடைப்) பொருளை நீங்கள் வழங்கியிருந்தாலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் (4:20) என்று கூறியுள்ளான். அவ்வசனத்தில் அளவுக்கதிகமாக மணக் கொடை வழங்குவதற்கும் அனுமதி உள்ளதே!” என்று கேட்கிறார்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு “அந்தப் பெண் சரியாகச் சுட்டிகாட்டினார், ஒவ்வொருவருமே உமரைவிட அதிகம் அறிந்துள்ளனர்” என தன் கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். (நூல் : மதாரிக்).
மேற்கண்ட வரலாற்று நிகழ்ச்சி தான் நினைவுக்கு வந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு தினமணி பத்திரிகையில் வெளிவந்த இராமநாதபுரத்தில் நடந்த முஸ்லிம் பெண்கள் உரிமைகள் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தபோது.
பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி-அவை எந்தச் சபையின் மூலம் பிறப்பிக்கப்படும் சட்டத்தின் மூலமாக ஏற்ப்பட்டாலும் – பெண்களே உணரவும் உணர்த்தவும் முடியும் என்பதற்கு மேற் சொன்ன நிகழ்ச்சியே சான்றாகும். பெண்கள் பாதிக்கப்படப்போகும் ஒரு கட்டளை பற்றி அந்த அவையில் இருந்த ஆண்கள் எவரும் ஆட்சேபம் தெரிவித்த பெண்மணியை கலீஃபா உட்பட எவரும் கண்டிக்கவுமில்லை. மாறாக அவரது கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய நிலையில் ஜமாஅத் சபைகளுக்கும் முஸ்லிம் பெண்களுக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை உணர்த்த பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.
தென் மாவட்டங்களின் தலைநகர் போன்ற ஊரின் பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் தேர்தல் நடைபெற்ற போது பள்ளி சார்ந்த பகுதிவாசிகள் சிலர் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் பல மாதங்களாக வாசம் செய்வதால் அவர்களின் வாக்கை அவர்களின் மனைவியர் அளிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. வாக்கெடுப்பபு முடிந்து நல்லதொரு நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிர்வாகம் சீரிய முறையில் நடந்து வரும்போது தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட அணியினர் வித்தியாசமான காரணத்தோடு வழக்குத் தொடுத்தனர்.
“ஜமாஅத் நிர்வாகத் தேர்தலில் பெண்கள் வாக்களித்தது செல்லாது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தைக் கலைக்க வேண்டும்”என்பதே அவர்களின் வாதம். அதை ஏற்று நிர்வாகக்குழு கலைப்பு ஆணையை வக்ஃபு வாரியத்திற்கு பிறப்பித்தது நீதிமன்றம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் அன்சாரி இனப்பெண் ஒருவர் மாதவிடாயிலிருந்து விடுபட்டபின் குளிக்கும் விதம் பற்றி மார்க்கச் சட்டம் கேட்கிறார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், உடல் முழுவதும் சிறிதளவும் விடுபடாமல் குளிக்கும்படி கூறினார்கள். பின்பு, வாசனைத் திரவியம் கொஞ்சம் எடுத்து அதன் மூலமும் சுத்தம் செய்து கொள்! என்றார்கள். “வாசனைத்திரவியத்தை வைத்து எப்படிச் சுத்தம் செய்வது” என்று கேள்வி எழுப்பினார் அப்பெண். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்வெட்கவுணர்வுடன் “அதனைக் கொண்டுதான் சுத்தம் செய்!” என்று திரும்பச் சொல்ல, அப்பெண் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்கிறார். பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கும் அப்பெண்மணிக்குமிடையில் பால் ரீதியிலான இடைவெளி மார்க்க அறிவைப் பெற அவ்விடத்தில் தடையாகிறது. அப்பொழுது தான் ஒரு சமுதாயத் தேவை நிறைவடையும் விதம் வெளிப்படுகிறது. அருகிலிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் மனைவி அன்னை ஆயிஷாரளியல்லாஹு அன்ஹாஅப்பெண்ணை தன் பக்கம் இழுத்து சுத்தம் செய்யும் விதத்தை சொல்லிக் கொடுத்தார்கள்.(நூல்: புகாரி)
ஒரு பெண்ணுக்கு, ஆண்களின் பால் உள்ள இடைவெளிகள் அவள் மார்க்கத்தீர்ப்புகளை, சட்டங்களைப் பெறுவதில் தடையாக இருந்தால் அங்கு ஒரு பெண் பிரதிநிதி நிச்சயம் தேவைப்படுகிறார்.
“தலாக்”(விவாகரத்து) சம்பந்தமான ஒரு வழக்கு பஞ்சாயத்து சபைக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். மாதவிடாய் இல்லாத, உறவு கொள்ளாத தூய்மையான நாட்களிலேயே இஸ்லாம் அம்முடிவை ஏற்கிறது. ஒரு பெண்ணிடமிருந்து பஞ்சாயத்து சபையிலுள்ள ஆண்கள் மேற்படி தகவல்களை எவ்விடம் பெறுவது? அங்கு ஒரு பெண் பிரதிநிதி தேவைப்படுகிறார் அல்லவா? அப்பெண்ணுக்காகப் பரிந்து பேச, உரிமைகள் பறிக்கப்படாவண்ணம் பாதுகாக்க இன்னும் எண்ணற்ற அம்சங்களின் அடிப்படையில் பெண் பிரதிநிதியின் தேவை விரிகிறது.
பெண்கள் உணர்வு ரீதியான பிரச்சினைகளில் சமயோசதமாகத் தீர்வு காண்பார்கள் என்பதற்கு சரித்திச்சான்று உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஹிஜ்ரி 6-ல் மதீனாவிலிருந்து மக்காவுக்கு “உம்ரா” வழிபாடு செய்வதற்காகச் சென்ற போது மக்கா மக்கள் அவர்களை வழிபாட்டிற்கு அனுமதிக்காமல் தடை செய்தனர். அப்பொழுது அமைந்த உஷ்ணமான சூழ்நிலையால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் தோழர்கள், மக்காவாசிகளோடு போர் புரிந்து மாள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் களத்திலிருந்து பின்வாங்குவதில்லை என்ற உறுதிப்பாட்டை சத்தியப்பிரமாணமாக ஏற்றனர்.
இஸ்லாமியர்களின் உறுதி கண்டு அதிர்ச்சியடைந்த மக்காவாசிகள் சமாதான உடன்படிக்கை காண முன்வந்தனர். அதனடிப்படையில் இவ்வருடம் “உம்ரா” செய்யாமல் திரும்பி விடுவதென்றும் மறுவருடம் செய்து கொள்வதென்றும் இன்ன பிறதீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட்டது. ஆனால் பண வசதியில்லா கால கட்டத்தில் வழிபாட்டிற்கென இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஊருக்குள் நுழையாமலே திரும்பிப் போவதால் நபித் தோழர்கள் அதிரப்தியடைந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தமது தோழர்களிடம் அடையாள வழிபாடாக பிராணிகளைப் பலியிட்டு தலைமுடிகளை மழித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்ட போதும் அவர்கள் தத் தமது இடங்களிலிருந்து அசையவில்லை.
தமது மனைவி உம்மு சல்மாரளியல்லாஹு அன்ஹாஅவர்களின் இருப்பிடம் வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தோழர்களின் நிலையைப் பற்றி மனைவியிடம் கூறினார்கள். அப்பொழுது உம்மு சல்மா ரளியல்லாஹு அன்ஹாஅவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் அது தானே உங்கள் விருப்பம்! இப்பொழுது செல்லுங்கள்! தோழர்கள் எவரிடமும் பேசாதீர்கள். உங்களின் பிராணியைப் பலியிட்டு தலைமுடியையும் மழித்துக் கொள்ளுங்கள்.” உம்மு சல்மா ரளியல்லாஹு அன்ஹாஅவர்களின் ஆலோசனையை ஏற்று அவ்வாறே செயல்படுத்திய போது, அச்செயலின் தாக்கம் தோழர்களையும் தொற்றிக் கொண்டது. உடனடியாக அடித்துப் பிடித்துக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் கட்டளையை அவர்கள் நிறைவேற்றினர். (நூல் : புகாரி 1ஃ380)
உம்முசல்மா ரளியல்லாஹு அன்ஹா,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் மறைவுக்குப் பின் மாபெரும் மார்க்கச் சட்ட ஆலோசகராக மதிக்கப்பட்டார்கள். அன்றைய ஆட்சியாளர் மர்வான்பின்ஹகம்”நமக்கு மத்தியில் நபிகளாரின் மனைவி இருக்கும்போது நாம் ஏன் மற்றவர்களிடம் சட்ட விளக்கம் கேட்க வேண்டும்”என்று கூறுபவராகவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்களிடமே விளக்கம் கேட்பவராகவும் திகழ்ந்தார். (நூல் : அஹ்மது)
இன்றைய நிலையில் சமூகத்தில் செல்வாக்கும், பொருளாதார பலமும், கட்டைப் பஞ்சாயத்து நெளிவு சுழிவும் நிறைந்தவர்களால் பெரும்பாலும் ஜமாஅத் சபைகள் நிர்வாகிக்கப்படுவதால் அப்பாவிகள், குறிப்பாக பெண்கள் அநீதிக்குள்ளாகும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடலோரப் பகுதியிலுள்ள ஊர்களில் பெரும்பாலும் ஆண்கள் வெளிநாடுகளில் இருக்கும் போது பெண்கள் மட்டுமே வசிக்கும் நிலையிருப்பினும் அந்த ஊர்களில் இருக்கும் சொற்ப ஆண்களால் ஜமாஅத் சபைகள் நிர்வாகிக்கப்படுவதும் அது போன்ற சபைகளால் வரதட்சணை போன்ற கொடுமைகள் அங்கீகரிக்கப்படுவதும் சமூக அவலத்தின் சாட்சிகளாய் நிற்கின்றன.
இங்கே பள்ளிவாசல்களை நிர்வாகிப்பவர்களாக பெண்கள் இருக்க வேண்டமென்பதல்ல நமது வாதம், குறைந்த பட்சம் நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்படும் போது அவர்களுக்கு வாக்குரிமையாவது வழங்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக ஜமாஅத் பஞ்சாயத்து சபைகளில் சமூகப் பிரச்சனைகளில் அக்கறையும் கல்வியாற்றலும், மார்க்க அறிவும் படைத்த பெண்கள் பிரதிநிதித்துவம் வகிக்க வேண்டும்.
காலம் கடந்தாவது இவற்றை நாம் நிறைவேற்றவில்லையென்றால் ஜமாஅத் சபைகளின் செயல்பாடுகளே சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடக்கூடும்.
“Jazaakallaahu khairan” சிந்தனை